Friday, January 30, 2015

ஒரு வித்தியாசமான பராமரிப்பு !!

நாம் ஒரு இடத்தை அணுகும் போது அனேகமாக அங்கு பரவியுள்ள வாசனையை வைத்தே கண்டு பிடித்து விட முடியும், அங்கு என்னென்ன நடவடிக்கைகள் உள்ளன என்று . என் சிறு வயதில் டால்மியாபுரம் வருவதை சில மைல்களுக்கு முன்னாலேயே அதன் இரட்டைக் குழல் புகை போக்கிகளும், அதனூடே வெளியேறும் புகையின் (துர்) நாற்றமும் காட்டிக் கொடுத்து விடும். பல்லாவரம் அருகில் உள்ள பவுடர் தொழிற்சாலையும், முண்டியம்பாக்கம் பக்கத்தில் சர்க்கரை ஆலைகளும் மேலும் சில உதாரணங்கள் - அவற்றிலிருந்து வரும் நறுமணங்கள் இன்று நினைத்தாலும் என் நாசியை சோதிக்கின்றன.

ஆனால் நான் சமீபத்தில் போன அந்த இடத்தில் இதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லை. அந்த அமைதியான பரந்த இடத்தில், அவ்வப்போது ஆடும் மரத்தின் கிளைகளும், தூரத்தே ஒலிக்கும் நாம சங்கீர்த்தனமும்  தான் கேட்டன. ஐநூறு மாடுகளுக்கு மேல் இருக்கும் இடம் என்பது உள்ளே போய் பார்த்தால் தான் தெரிகிறது.

ஒரு சாதாரண குடிலைப் போல் காட்சி தரும் அந்த கோசாலையில் வாயிலில் அழகான கிருஷ்ணர் சிலை நம்மை வரவேற்கிறது. புன்னகையுடன் வரவேற்கும் ஓர் அம்மையார் நம் விருப்பத்திற்க்குப் பிறகு சொன்ன விவரங்கள் பிரமிக்க வைத்தன.
கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் என்ற ஒரு அழகான ஊரில் இருக்கும் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்துக்கு அருகில் தோன்றி வெகு விரைவாக மக்களைக் கவர்ந்து வரும் ஸ்ரீ விட்டல் ருக்மிணி ஸமஸ்தான் எனப்படும் அழகிய வானளாவிய பாண்டுரங்கன் கோவில் உள்ளே தான் இருக்கிறது, இங்கு விவரிக்கப்படும் கோசாலை.

 இங்கே பராமரிக்கப் பட்டு வரும் ஏறக்குறைய ஆயிரம் மாடுகள், பல இடங்களிலுருந்து வந்தனவாம். அனேகமாக துவாரகையுலிருந்து கொண்டு வரப்பட்டவைகள் தான் என்றாலும், சில மதுராவிலிருந்தும், சில பிருந்தாவனிலிருந்தும், ஓங்கோலிலுருந்தும், சில ஜெர்ஸி பசுக்களும் உள்ளன. ஒரு சில பசுக்களின் காதுகள் நீண்டு மஞ்சள் கொத்தின் இலை போலிருந்ததற்க்குக் காரணம் கண்ணனின் குழலோசை கேட்டு அவற்றின் செவிகள் சந்தோஷத்தில் இப்படி  நிலை மாறியதாகக் கூறுகிறார்கள்.

கண்ணனின் குழ்லோசை கேட்டு குளிர்ந்த காதுகள்
கன்றுக்குட்டிகள் உற்சாகமாக இருந்ததைச் சுட்டிக் காட்டி, இங்கு கன்றுக்குட்டிகள் கட்டப் படுவதில்லை. அவை எப்பொழுது தேவையானாலும் தாய்ப் பசுவிடம் பால் குடிக்க ஏதுவாக சுதந்திரமாக திரிய விட்டிருக்கிறார்கள் என்று சொன்னது எவ்வளவு உண்மை என்பதை சந்தோஷத்தை தன் முகத்தில் வெளிப் படுத்திய அந்த வெள்ளைக் கன்றிடம் காண முடிந்தது.

வரிசை வரிசையாகக் கட்டி இருந்த பசுக்கள் நான் போன போது காலை உணவான வைக்கோல் மற்றும் இதர பண்டங்களை பசியோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் வேலையைத் தொடர்ந்தன.

மின் விளக்கு, விசிறிகளுடன் பசுக்கள்

நிமிர்ந்து பார்த்தால் மேற்கூரையின் கீழே இன்னும் ஒரு ஓலை லேயர் தெரிந்தது. அதன் கீழ் சீராக இடை வெளி விட்டு மின் விசிறிகள் பொருத்தப் பட்டிருந்தன. ஆம் மாட்டுக் கொட்டாயில் மின் விசிறிகள் பொருத்தி கும்பகோணத்தின் பிரசித்தி பெற்ற வெயில் சூட்டிலுருந்து இந்தக் கால் நடைகளைக் காப்பாற்றுகின்றனர் !

இங்குள்ள பசுக்களிடம் கறந்த பாலை விற்பனை செய்வதில்லையாம். கன்று குடித்தது போக உள்ள மீதி அருகிலுள்ள திருவிடைமருதூர் மஹாலிங்கேஸவருக்கு அபிஷேகத்துக் கொடுத்து விடுகிறார்கள். அப்படியும் மீதமிருந்தால் அவற்றை மோராக்கி பாண்டுரங்கன் கோவில் வாயிலில் வைத்து விடுகிறார்களாம், யார் வேண்டுமானாலும் பருக !

ஒரு பசுவைப் பராமரிக்க ஒரு நாளைக்கு ஐநூறு இருந்த காலம் போய் இன்று சுமார் ஆயிரத்தைத் தாண்டி விட்டதாம். இருந்தும் யாரிடத்திலும் கேட்காமல் இவர்களே பராமரிக்கிறார்கள்- விருப்பப் பட்டு யாரேனும் கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறார்கள்.

பெற்று வளர்த்து பெரியவனாக்கி கை நிறைய சம்பாதிக்க வைத்த  பெற்றோர்களுக்கு முதியோர் இல்லம் தேடும் இந்தக் காலத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு நிழல் கொடுத்து, சீதோஷ்ணத்திலுர்ந்து பாதுகாத்து, சத்தான உணவும் கொடுத்து, அதிலிருந்து வருபவைகளையும் வியாபார நோக்கில்லாத நல்ல சேவைகளுக்குக் கொடுக்கும் அந்த நல்ல உள்ளங்களை நினைத்தால் சிலிர்க்கிறது.

காசோலை கேட்காத இந்த  கோசாலை அந்த வழி போனால் ஒரு நடை பார்க்க வேண்டிய ஒன்று.

2 comments:

  1. Elangovan wrote on 02-Feb-2015 " இனிய அனுபவம், இனிய செய்தி, நன்றி"

    ReplyDelete
  2. V.Parthasarathy wrote on 02-Feb-2015 "உயூனகலூட தமிழ் உரைநடை மிகவூம் நன்றாக இருக்றது . அதுவும் கடைசீவரி கள் நெஞ்சை தொடுகிறது . என்க்கு தமில்சொற்ப அளவு தான் பழ்காம்தான் .நன்றி,"

    ReplyDelete