Saturday, August 29, 2015

பவித்ர நினைவுகள்

விடிவதற்க்கு முன்பே எழுப்பப் பட்டு, குளித்தவுடன் முழங்காலுக்கு கீழும் கால் முழிக்கு மேலும் தடுமாறும் சின்ன பட்டு வேஷ்டியுடன் ஒரு செல்ல மோதல். பட்டுக்குத் தான் தெரியும் இடுப்பில் இறுக்கப் பட்ட பெல்டால் அது மூச்சுக்கு எவ்வளவு திணறுகிறதென்று.  அப்பா, அண்ணன்களுடன் வரிசையாக, செம்மண் கோலத்தின் மேல் போடப்பட்ட பலகையில் உட்காருவதற்க்கு ஒரு பெருமை. சில சமயம் ஆத்து வாத்தியார் மெயில் வேகத்தில் 'மின்னல்' மாதிரி வந்து போய் விடுவார்- அதில் இல்லை சுரத்து. நாமே போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, அந்தப் பொறுப்பை கொஞ்சம் இந்த விஷயங்களில் நாட்டம் அதிகமுள்ள ஒரு அண்ணனிடம் ஒப்படைக்கப் பட்டவுடன் அவர் தான் வாத்தியார். தட்டுத் தடுமாறி அவர் மந்திரங்களைச் சொல்ல, மற்றவர்களும் அதற்க்குப் பின் மொழிய , சில கடினமான சமஸ்கிருத வார்த்தைகளை அவர் வாயிலிருந்து எடுக்க நாங்கள் பட்ட பாடு கொஞ்சம் அதிகம் தான், ரொம்ப நேரமாக சமி, சமி என்று சொல்லி பின் 'ரொம்ப சாரி , அது சமர்ப்பயாமி' என்று சொன்னதை நினைத்து இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட கஷ்டங்களும் சிரிப்பும் நிறைந்த சில நிமிடங்களுக்குப் பின் பூணுல் போடுவதிலும் நம் பொறுமையை  சோதித்துத் தான் பார்த்தார்கள். கள்ளப் பூணுலெல்லாம் கடைசியில் தான் என்று உட்கார வைத்து கடைசியில் ஒரு வழியாக அந்த பவித்ரமான கயிறு வந்து விழுந்தவுடன் முதலில் உறுத்துவது அதன் நீளம் தான்- அநேகமாக அது இடுப்பிற்க்கு வெகு கீழே, டிராயர் பாக்கெட்டை தாண்டி எட்டிப் பார்க்கும். இன்னொரு சகோதரன் இந்த மாதிரி விஷயங்களில் சமய சஞ்சீவி - கொஞ்சம் உருட்டி, முடிந்து ஏதோ செய்து 'பயத்தங்காய்' என்று என்னெல்லாமோ சொல்லி அதன் நீளத்தை குறைத்து விடுவார். பின் எடுக்கும் ஹாரத்தியிலும் என் சகோதரிகளுக்குப் போடும் எட்டணா, ஒரு ரூபாய்க் காசுகளில் அவ்வளவு பெருமிதமிருக்கும்.

பின் வருவது முக்கியமான , வெகு நாட்களாக எதிர்பார்க்கப் படும் சம்பவம். நமக்கு பெரியவர் எவராயிருந்தாலும் அவர் காலில் விழுந்து கையை நீட்டினால் நாணயத்தின் சில்லிர்ப்பை உணரும் வரை கை மடங்காது ! என்னுடைய 1968ஆம் ஆண்டின் குறிப்பில் எதேச்சையாய் என்று பார்த்த வரிகள் "அப்பா இன்னும் தர வேண்டிய பாக்கி 75 காசு" இனிமையாக வலித்தது ஒவ்வொரு வருடமும் அன்றைய கலக்க்ஷனை ஆராய்வதில் ஒரு அலாதி சுகம். கொஞ்சம் குறைந்திருந்தால், அம்மா என்ற காமதேனு கொஞ்சம் அதிகம் கொடுத்து முகத்தின் பிரகாசத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

 'அவிட்டத்துக்கு அசடியும் சமைத்து விடுவாள்' என்ற நடைமுறைக்கேற்ப்ப அன்றைய தினம் சாப்பாடு ரொம்ப நேரமாகும். அதனால் காலையிலேயே இட்லி சட்னியை ஒரு கை பார்த்து விட்டு எல்லா சகோதரர்களும் கிளம்பிவிடுவோம்- உற்றார் உறவினர் அத்தனை பேர் வீட்டுக்கும், அவரவர் கால்களில் விழுந்து நல்லாசி பெற. ஸ்கூட்டர்கள் இல்லா அந்தக் காலத்தில் பல்லவன் உதவியுடன் பல்லாவரம் வரை கூடச் சென்று சில்லறைகளின் கலகலப்பையும் கூட்டி மதியம் இரண்டு மணிக்குத் திரும்பினால் வடை, பாயஸத்துடன் ஒரு அமிர்தமான சாப்பாடு.

இன்றைய தினங்களில் அனேகமாக எல்லாமே காலத்தின் கட்டாயத்தில் மறைந்து, மழுங்கி விட்டாலும், அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் ஆத்து வாத்தியார் என்பவர் காணாமல் போய் விட்டார். நாமே முதல் நாள் போய் குளத்தங்கரை, கோயில் போன்ற இடங்களில் வாங்கிய பூணுல் சமாச்சாரங்கள் தான். ஆபீஸ் போக வேண்டிய கட்டாயத்தில் மொத்த சம்ப்ரதாயங்களும் ஏழரை மணிக்கு முன் நடந்து விடுகின்றன. நமஸ்காரம் செய்தாலும், செய்யப் பட்டாலும் வரும் தக்ஷணையை யாரும் அதிகம் மதிப்பதில்லை- ஒரு வேளை காலத்துக்கேத்தால் போல் ரூபாய்க்கு பதில் டாலரோ, யூரோவோ போட்டால் மவுசு ஏறுமோ- தெரியவில்லை. ஹாரத்தி எடுப்பதற்குள் அலுவலகத்திலிருந்தோ இல்லை வராமலிருந்த வீட்டம்மாவிடமிருந்தோ தொடர்ந்து போன் கால்கள். பஸ் பிடித்துப் போய் ஆசி வாங்கின காலம் மலையேறி வாட்ஸாப்பில் வாழ்த்துச் சொல்லி, பூணுல் போட்டுக்கொள்கிறாப் போல போட்டோவையும் அனுப்பினால், க்ளௌட் மூலமாக வாழ்த்துக்கள் வந்து சேருகின்றன.

இவ்வளவு தூரம் வந்தபின் ஏதோ இதாவது நடக்கிறதே என்று சந்தோஷப் படுவதா, இல்லை இன்னும் சில வருடங்களில் இதுவும் இருக்குமோ என்று கவலைப் படுவதா, தெரியவில்லை !!