Wednesday, January 6, 2016

உறைத்தது

நினைத்த உடனே காலில் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பி ஷூவும் , குளிர் கோட்டும் போடாது சிறிது தொலைவு போனபின் -

எல்லா திசையிலிருந்தும் வரும் வாகனங்களையும் சமாளித்து லாவகமாக ஒதுங்கி ரோட்டிலேயே நடக்கும் பொழுது -

நடை பாதையில் நடக்காமல் அது தேடியும் கிடைக்காத பொழுது -

முன் போகும் வாகனத்திலிருந்து வரும் புகை நாசியைத்  தாக்கி தானாக கைக்குட்டையை எடுக்கும் போது -

ஒரு கை தேர்ந்த வித்தைக் காரனாக, சிக்னல் இல்லாத தெருவை வாகனங்கள் வராத நேரத்தில் விருட்டென்று கடந்த போது -

தெருவில் சொல்ப வாகனங்களே போனாலும் பெருத்த ஹார்ன் சப்தம் கேட்ட போது- 

சந்தையில் 'காலி.... பிளவர் பத்தே ரூபா' என்ற சத்தம் செவிப்பறையை தாக்கிய பொழுது -  

 நடக்கும் பொழுது காசே கொடுக்காமல் பட்சணக் கடையிலிருந்து வரும் வெங்காய பக்கோடாவின் கம கம வாசனையை அனுபவித்த போது -

பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றாமல் முழங்களாகக் காத்திருக்கும் ரோஜாவையும் , மல்லீப்பூக்களையும் பார்த்த பொழுது -

வைகறையில் மாட வீதிகளில் பாண்டு ரங்கனை கூவி அழைத்த பஜனை கோஷ்டியைக் கண்ட பொழுது - 

கொசு வலையைத் தேடும் போழுது -

மின்சாரம் போய் போய் வந்த பொழுது - 

வங்கியில் பணமெடுக்கப் போனால் வாசலிலேயே ஒரு கும்பல் உதட்டைப் பிதுக்கிய பொழுது -

மடியில் கனமே இல்லாத ஏடீஎம் குஷியாய் குளு குளு அறையில் யாருக்கும் உதவாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த பொழுது -

  .. . . . . . . . உறைத்தது , நான் என் ஊருக்குத் திரும்பி விட்டேன் என்று !