Tuesday, January 29, 2013

யுவர் ஹானர் முன் என் ஹானர்


முதன் முறையாக நேற்று கோர்ட்டுக்குப் போனேன் கைதியாகவோ இல்லை ஹெல்மெட் போடாததற்க்காகவோ இல்லை. என் நண்பன் நுகர்வோர் கோர்ட்டில் யாருக்கெதிராகவோ வழக்குப் போட, அது வாய்தா வாங்கி வாங்கி நேற்று போயே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட, இப்பொழுது பார்த்து நண்பன் ஆஸ்பத்ரியில் படுக்க, அவன் சார்பாக ஒரு கடிதம் கொண்டு போனேன்.

பயந்து கொண்டே கொஞ்சம் பதை பதைப்புடன் வீட்டருகே உள்ள கோர்ட்டுக்கு 10 மணிக்கு சென்றேன். ஏகப்பட்ட நோட்டீஸ் ஒட்டியிருந்த போர்டை தாண்டி ஒருவர் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தார். திரும்பி செல்லில் பேசிக்கொண்டே கண்களால் என்ன என்றார். நான் சொன்னது அவருக்குப் புரியாததால் போனை மறைத்து கோர்ட் ஹாலில் காத்திருக்கச் சொன்னார்.  அரைஇருட்டான பெரிய ஹால் - நிறைய காலி நாற்காலிகள் - ஒவ்வொருவராக வக்கீல்கள் வந்து கொண்டிருந்தார்கள். வயசானவர், கோட்டு போட்டு செருப்புப் போட்டவர், ஆண்ட்ராய்ட்டுடன் இளைஞர், வெற்றிலைச் சாறு கீழே விழாமல் இருக்க வாயை வான் நோக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது வேட்டி கட்டிய வக்கீல், ஜீன்ஸ் போட்ட இளைஞீ - இப்படி பலர்.


சினேகிதன் சொன்னது பென்ச்சு கிளார்க்கிடம் லெட்டெரை கொடுத்துட்டு நீ ஓடியே போயிடலாம்னு. ஆனால் என் நேரம், பென்ச்சு க்ளார்க்கு கவுத்துட்டார்- அவர் மச்சினிக்கு சீமந்தமோ இல்லை அவருக்குத்தான் முழங்கால் வலியோ தெரியவில்லை- சரியாக திங்கள் கிழமை பார்த்து லீவடிச்சுட்டார். என்னைப் பார்த்து உங்க கேஸ் நம்பரைக் கூப்பிடும்போது நீங்களே கடுதாஸியைக் குடுத்துடுங்கோன்னார்கள்.

மெதுவாக ஏற்றிய உஷ்ணம் திடீரென்று "ஸைல.....ன்ஸ்" என்ற உரத்த குரலால் எகிரியது. ஒரு டவாலி முன்னே வர, பின் கம்பீரமாக டை கட்டிய நடுத்தர வயது , பார்த்தாலே "ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்" என்ற நீதிபதி முறைப்பாக உள்ளே வந்து அனைவரது வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டே உள்ளே சென்றார். சிரிது நேரத்தில் மறுபடியும் வணங்கி காந்தி படத்தி முன் அமர்ந்தார். உடனே பாதுகாப்புக்காக ஒரு கயிறு அவர் மேசை முன்னே கட்டப்பட்டது. 

கணினி இல்லாமலே அவர்களின் வேகம் அசர வைத்தது. சினிமாவில் வருவதுபோல் அல்லாமல் மெதுவாகப் பேசியதால் அவர்கள் பேசுவது காதில் விழவில்லை. நீதிபதி வழக்குகளை கவனித்த அவசரத்தில் முடங்கிக் கிடந்த வழக்குகளின் எண்ணிக்கை நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. பாவம், அந்த ஹாலை ஏ.ஸி செய்திருக்கலாம் - ஜனவரியிலேயே பலருக்கு வேர்த்தது- வெயிலினாலா இல்லை வழக்காலா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.

என் நண்பனின் வழக்கைக் கூப்பிட்ட உடனே நான் பவ்யமாக கடித்ததை நீட்டினேன். நீளக் கோட்டை நெற்றியில் போட்டுக் கொண்டிருந்த ஒரு வயசான வக்கீல் ஓடி வந்து நீங்கள் தான் 'என் நண்பன் பெயரைச் சொல்லி" அவரா என்றார். என் இல்லை என்ற தலையாட்டல் எனக்கென்னவோ அவர் முகத்தில் ஒரு த்ருப்தியை வரவழைத்தது போல் இருந்தது. நீதிபதி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கடித்ததை அவசரமாகப் படித்துவிட்டு 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பெத்தேன் பிழைத்தேன் என்று வெளியே வந்தவுடன் தான் தோன்றியது நான் ஏன் பயப்பட வேண்டும் என்று. 

ஒரு சாதாரணமான குரியாராகப் போன போதே இப்படி இருந்தால் உண்மைக் கைதியாகவோ, குற்றம் சாட்டப் பட்டவர் மனம் எப்ப்படி இருக்கும்?

சினிமாவில் அடிக்கடி பார்க்கும் சில இடங்களுக்கு தப்பித் தவறி ஒரு தடவை கூட  போகச் சகிக்காது போலிருக்கு! 

வெளியில் வந்தவுடன் முதல் காரியமாக ஸ்கூட்டியில் எல்லா பேப்பர்ஸும் இருக்கான்னு பாத்துண்டேன். இங்கெல்லாம் வந்து நிக்க நமக்கு சரிப்படாது 



Monday, January 28, 2013

என் பார்வையில் 'கும்கி'


யானையின் கம்பீரத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும். அதனால் கூடிய சீக்கிரம் தூக்கி விடுவார்கள் என்று சொன்னதால் இன்று வலுக்கட்டாயமாக சத்யம் தியேட்டரில் கும்கி படம் பார்த்தேன். எதிர் பார்த்தபடி யானையை வைத்து படம்- ஆனால் எதிர்பாராத விதமாக யானை ஹீரோ அல்ல.

யானை வருது வருது என்றே கதை பண்ணியிருக்கிறார்கள். சில இடங்களில், பகல், இரவு, பகல், இரவு என்று மாற்றி மாற்றி காட்டி திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் கதை  திக்குத் தெரியாமல் அலைகிறது.

ஹீரோ நண்பனுக்கு உதவ கோவில் யானையை வைத்து கண் கவர் ரம்மியமான சூழ்நிலையில் உள்ள கிராமத்துக்கு வந்து அழகிய இளம் கதாநாயகியைப் பார்க்கிறார். காட்டு மக்களின் நம்பிக்கையை ஏமாற்ற முடியாமல் காதலில் சிக்கித் திணறி, டைரக்டருடன் சேர்ந்து திசை தெரியாமல் எப்படி முடிப்பதென்று தெரியாமல் ஓடுகிறார்.

விக்ரம் ப்ரபு நல்ல உயரம், நல்ல நிறம், நடிப்புத் தேவலை. ஆனால் சில இடங்களில் தாத்தா போல் கண்களால் நடிக்க முயல்கிறார்- அதற்க்கு இது ரொம்ப சீக்கிரம். முதலில் நன்றாக நடிக்க வேண்டும். சில இடங்களில் ப்ரமை பிடித்தவர் போல் நிற்க்கிறார். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். ஹீரோயின் லக்ஷ்மி மேனன் அழகாக இருக்கிறார்-15 வயசுக்கு நடிப்பும்  பரவாயில்லை. அந்த காலத்து 'கல்லுக்குள் ஈரம்' அருணா போல் இருக்கிறார்- அவர் போல் காணாமல் போகாமல் இருக்க வேண்டும்.

இமானின் இசை பல இடங்களில் திரும்பிப் பார்க்க வைக்கிறது- சூழ்நிலைக்கேற்ப்ப இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து ரொம்ப சீக்கிரம் வருவது போல் இருந்தது. சில இடங்களில் கொஞ்சம் ஜாரிங்காகவும்  இருந்தது. ஆனால் படத்துக்குப் படம்  இமானின் இசை அழுந்த ஒரு முத்திரயை பத்தித்துக் கொண்டே முன்னேறுகிறது.

'நல்ல  நேரம்' , 'அன்னை ஓர் ஆலயம்' போல் இதில் யானைக்கு நிரைய நடிக்க வாய்ப்பு கொடுக்காமல், கேமராவை வைத்தே கண்ணை உருட்டி இருக்கிறார்கள்.

பாட்டு எடுத்த இடங்கள் அருமை. லொகேஷன் கண்டு பிடித்தவருக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம். எனக்கென்னவோ இந்தப் படத்தில் பாடல்கள், லொகேஷன் தான் ஹீரோ, ஹீரோயின் என்றே தோன்றுகிறது. அந்த அருவி உச்சியில் ஒரு காட்சி, கண்களை விட்டு அகல மறுக்கிறது. காமிராவுக்கு ஒரு முத்தம் கொடுத்தாலும் தகும்- அப்படி விளையாடி இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல் இருக்கு. ஆடுகளம் பார்த்தபின் ஏதோ நாமே கோழிச் சண்டை போட்டது போல் கையில் ரத்தப் பிசு பிசுப்பை உணர முடிந்தது. இதில் அது இல்லை- கையை பிசையத்தான் முடிந்தது. ஆனால் கடைசி யானகள் சண்டை நன்கு எடுக்கப்பட்டிருக்கிறது.

தம்பி ராமையாவின் நகைச்சுவை நன்றாகவே இருந்தது. ஆனால் கொஞ்சம் ஓவர் தொண தொண- விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.  குறைத்திருந்தால் அலுப்புத் தட்டாமல் இருந்திருக்கும் 

முடிவில் காதலை வாழ வைப்பதா, படத்துக்குப் பெயர் வைத்ததால் யானையை உயர்த்துவதா, இல்லை கொஞ்சம் மண்ணின் மணம் பாடுவதா என்று அங்குமிங்கும் அலைந்து , ஒரு குழப்பத்திலேயே நமக்கு விடை கொடுக்கிறார் .

படம் முழுவதும் யானையின் பிளிரல் கேட்டாலும், வெளியே வரும் பொழுது ஒரு நிறைவு இல்லை.

இன்னும் யோசித்திருந்தால், சிவாஜி பேரனுக்கு இன்னும் ஒரு பெரிய சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம். 

கொஞ்சம் அடி சறுக்கி இருந்தாலும் விழவில்லை  -     ஒரு முறை பார்க்கலாம். 

Saturday, January 19, 2013

சிந்திக்க ஒரு குறும்படம்


வழக்கமாக குறும்படமோ, நெடும்படமோ நாம் பொழுது போக்குக்குத்தான் பார்ப்போம்.

வித்தியாசமாக  - சிந்திப்பதற்க்காக ஒரு குறும் படம்:http://youtu.be/ufvA_VNj--M

Thursday, January 17, 2013

புத்தகக் கண்காட்சி - 2013

இந்த வருட புத்தகக் காட்சிக்கு போய் வந்தாச்சு. சுமார் மூன்று மணி  நேரம் நல்ல விருந்து, நல்ல கால் வலி, நல்ல பசியுடன் கவனித்த, ரசித்தது சில:

  •  காந்தி சத்திய சோதனை - ஆங்கிலப் புத்தகம் 36 ரூபாய் ஆனால் தமிழில் 54 ரூபாய்- ஆஹா- செம்மொழிக்குத்தான் என்ன ஆதரவு 
  •    மனோரமா இயர் புக்- குண்டுப் புத்தகம் 180 ரூபாய் தான்- கண்டிப்பாக விலைக்கு ஏற்ற சமாச்சாரம் இருக்கும்- வாங்க ஆசை- ஆனால் வீட்டில் படிக்கத்தான் ஆள் இல்லை
  •   இந்திய அரசின் புத்தகங்கள் படு சல்லிசான விலையில் , வாங்க ஆளின்றிக் கிட(டை)க்கிறது. க்ருஷ்ண மேனன்    புத்தகம் 13 ரூபாய்க்கு சந்தோஷமாக வாங்கினேன். கட்டாயம் படிப்பேன்.
  •          விருது பெற்ற "Emperor of Maladies"என்ற புற்று நோய் பற்றிய ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருக்கும் புத்தகத்தை, ரூ 500/- என்ற விலை பார்த்து நைஸாக நகர்ந்தேன். மலிவாக இருந்தால் கண்டிப்பாக வாங்கி இருப்பேன். சுதா மூர்த்தி புத்தகங்களும் இப்படித்தான் வாங்க விடாமல் ஏமாற்றின
  •           நடிகர் சிவகுமாரின் புத்தகங்கள் இந்த வருடம் நிறைய கண்ணில் பட்டது
  •           எப்பொழுது நான் லைப்ரரிக்கோ, இந்த மாதிரி இடத்துக்குக் கிளம்பினாலும் என் அம்மா கேட்கும் வை.மு. கோதைனாயகி புத்தகங்கள்  நிறைய இருந்தது- அம்மா தான் இல்லை.
  •          திருக்குறளுக்கும், பாரதி கவிதைகளுக்கும் இன்னும் உள்ள  வரவேற்ப்பு மனசுக்கு சுகமாக இருந்தது.
  •        Indian Thought Publishers என்ற ஸ்டால்  Lean Sigma, Edward De Bono  போன்ற புத்தகங்களுடன் ஒரு வித்தியாசத்தை அளித்தது.
  •          கிருஷ்ணனும்  குரானும் எதிர் எதிர் ஸ்டால்- தமிழ் நாட்டின் பெருமை சொல்லியது 
  •        ஆல் இண்டியா ரேடியோவாவது ஸீ டீக்கள் வைத்திருந்தார்கள்- கூரியர் கம்பெனிக்கு இங்கு என்ன வேலை என்று புரியவில்லை
  •        வைதீகஸ்ரீ  ஸ்டாலில் கொசுவ புடவை மாமி ஸெல் போனில் ஆங்கிலத்தில் அசாத்யமாக பேசிக் கொண்டிருந்தாள்
  •        அனேகமாக எல்லா புத்தகங்களும், கை சுடுமளவுக்கு விலை
  •    பல ப்ரபலங்கள் வாங்க ஆளில்லாததால், பத்திகைகளுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
  • கூட்டம் இருந்தது- ஆனால் எல்லோரும் வாங்க வந்தவர்களாகத் தெரியவில்லை. விலை பரை மிரட்டி இருக்கக் கூடும்.
  • நிறைய வியாபார நோக்கப் புத்தகங்கள் தான்- இலக்கியம், கவிதை குறைவு.
  •  இந்த வருடமும் ஆங்கிலப் புத்தகங்களுக்கு மவுசு இல்லை. ஆனால் ஒரே ஒரு கடையில் மட்டும் "Shop soiled books"  என்று சேஸ் மற்றும் இர்விங்க் வாலஸ் புத்தகங்களை படு சீப்பாக வைத்திருந்தார்கள்.

வழக்கமான சமாச்சாரங்கள் - பாப்கார்ன், நல்ல கேண்டீன், மனுஷ்யபுத்ரன், ஞானி- போன்றவை இருக்கத்தான் செய்தன. ஆயிரமிருந்தும்  இருண்ட பார்க்கிங்கிலுருந்து தடவிக் கொண்டே கார் எடுக்கும்போது என்னவோ ஒன்று குறைந்த மாதிரி இருந்தது - சொல்லத் தெரியவில்லை. 

ஒன்று நிச்சயம். இதே போல் விலை ஏறிக் கொண்டிருந்தால், மக்கள் வேடிக்கைதான் பார்க்க வருவார்கள்- வாங்குவது இன்னும்  குறையும்.

பி. கு: மேக்கில் தமிழ் படுத்துகிறது. தாறுமாறான Indentationஐ மன்னித்து சமாச்சாரத்தை மட்டும் படிக்கவும்

Wednesday, January 16, 2013

அதே கரும்பு தானே ?


பல வருஷங்களுக்கு முன்னால் பொங்கல் பண்டிகை மிக அதிகமான காரணங்களுக்காக எதிர்பார்க்கப் பட்டது.  மிக முக்கியமாக தமிழ் நாட்டில் வரும் நான்கு நாள் ஸ்கூல் லீவுக்காக. அடுத்து போகி , பொங்கல், கனு என்று மூணு நாளைக்கு தொடர்ச்சியாகக் கிடைக்கும் விருந்து சாப்பாட்டுக்காக.

ஆனால் அதை விட முக்கியமாக கனு நாளில் வரும் கரும்புத் துண்டுகள். மூன்று ரூபாய்க்கு வாங்கிய ஒரு கரும்பை எங்கள் குடும்பத்தில் உள்ள 2 அண்ணன், 2 அக்கா மற்றும் உறவினர் எல்லாருடனும் பங்கு போடணும். அப்பா அரிவாளை எடுத்துண்டு மதுரை வீரன் மாதிரி வரும் வரை மனம் படபடப்புடந்தான் இருக்கும். எல்லாருக்கும் பங்கு போட்டு, பெரிய துண்டை கடைகுட்டியாகிய நான் தேர்ந்தெடுத்த பின், அது சின்ன சின்னத் துண்டமாக்கப் பட்டு, தோல் சீவி, கொல்லைப்புறத்திலுள்ள தோய்க்கற கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டு சுவைக்கும் போது, அந்த சாற்றை விழுங்கி சக்கையை ஓரமாகத் துப்பும்பொழுது, கிடைக்கும் சந்தோஷம் அடடா ..

ஆனால் இன்றோ, போகி பண்டிகையன்று வாங்கிய ஐம்பது ரூபாய் கரும்பு கேட்பாறற்றுக் கிடந்து, இன்று காலை இரண்டாக வெட்டி வேலைக்காரிக்கும் வாட்ச்மானுக்கும் பாதியாகக் கிடைத்தது. அதிசயமாகவும் ஆச்சரியத்துடனும் ஏற்றுக் கொண்ட அவர்களுக்கு எங்க தெரியப் போகிறது - வீட்டில் பெரியவர்களின் பல் ப்ரச்சினையும், சிரிசுகளின் "இதையெல்லாமா தின்பார்கள்" என்ற உவ்வே பார்வையும் !

அதே இனிப்பு தானே அந்தக் கரும்பில்- பின்ன ஏன் மவுசு போயிடுத்து? அதுக்கும் வயிசாறதோ?

Sunday, January 13, 2013

மயங்க வைத்த மார்கழி

ஒரு நாள் சுருக்கப்பட்ட மார்கழி, இன்று 29  நாட்களுக்கப்புறம் இனிதே முடிவடைகிறது. இன்று காலை ஆறு மணிக்குக் கிளம்பிய பொழுது, எங்கள் தெருவின் அந்த முனை தெரியவில்லை- அவ்வளவு மூடு பனி. இல்லை அது புகை இல்லை. விடாமல் செய்த ப்ரசாரத்தினாலோ அல்லது உணர்ந்தோ போகி கொளுத்துதல் குறைந்துதான் இருந்தது.

இந்த வருட மார்கழியில் என்னுடைய ஒரு நெடு நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது. எல்லா மார்கழி நாட்களிலும், இருட்டு உள்ளபோதே ஒரு கோவிலைப் பார்க்க வேண்டும் என்பதே அது. 29 நாட்களில் 33 கோவில்களைத் தரிசித்தேன்.  இதில் ஒரு ஆச்சர்யமான  உண்மை- 23 கோவில்கள் என்னைச் சுற்றி மயிலாப்பூரிலேயே உள்ளது. நம்மைச்சுற்றி இவ்வளவு கோயில்களா- அப்புறம் எதற்க்கு ஊர் ஊராகச் சுற்ற வேண்டும்?

ஆலய தரிசனம் முடித்து இந்த வருட மார்கழிக்குக் கடைசி முறையாக கோவிலருகே வந்த போது மாட வீதி களை கட்டியிருந்தது.

ஹரிதாஸ் கிரி பஜனை மண்டலி, ஸகல வாத்தியங்களுடன் உச்ச ஸ்தாயியில் இருந்தார்கள். சம்ப்ரதாய பஜனையில்  இவர்களை மீறுவது  கடினம்

பாபனாசம் சிவன் குழு '  நாளை வரும் என்று நம்பலாமா 'என்று கவலைப் பட்டு, ' நம்பிக்கெட்டவர் எவரையா' என்று முடித்தது, வரும் தை மாதத்தின் மேல் மிகுந்த நம்பிக்கையளித்தது .

மயிலையின் மார்கழிக்கு ஈடு இணையே இல்லை.

ஒரு சில நாட்கள் சீக்கிரம் எழுந்திருப்பதே கஷ்டமாக இருக்கு. இந்த பஜனைக் குழுவினர் ஒரு நாளைப்போல் தினமும் 3 மணிக்கு எழுந்து, இரண்டு மணி நேரம் மாட வீதி சுற்றி பாட்டும் பாட வேண்டும். அசாத்திய தைர்யம்- இல்லை- மன வலிவு வேண்டும். பாராட்டியே ஆக வேண்டும்- இல்லயேல் பொங்கல் மட்டுமில்லை, புண்ணியமும் கிடைக்காது

எனக்குத் தெரிந்து பல பேர் ' வேலைக்குப் போக முடியலே ஆனால் வேலையை விட்டால் என்ன செய்ய' என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சித்த இந்தப் பக்கம் வந்து பாருங்கள். அனுபவிக்க நிறைய இருக்கு.