Sunday, December 15, 2013

மயக்கும் மார்கழி

நினைத்தாலே இனிக்கிறது- பிறக்கப் போகும் மார்கழியை நினைத்து .

இந்த இனிய எதிர் பார்ப்பு, பல வருடங்களாகவே இருந்து கொண்டிருக்கு.

சின்ன வயதில், ஸ்கூல் படிக்கும் பொழுது, மார்கழியை விட அது வரும் டிசெம்பர் மாதம் பிடித்தது. அந்தக் குளிர் பிடித்தது. அரைத் தூக்கத்தில், அதி காலையில் கிழக்கு மாட வீதியில் வலம் வரும் அண்ணாஜி ராவ், பாபனாசம் சிவன் பஜனை ஓசை பிடித்தது. உண்மையைச் சொன்னால் மார்கழியைப் பற்றி ரொம்ப ஆசையாகப் பேசப்படும் பொங்கல் என்னை அவ்வளவாக ஈர்த்ததே இல்லை.

காலேஜ் போனப்புறம், அந்த அதிகாலைக் குளிரில் எழுந்து பால்கனியில் உட்கார்ந்து மேத்ஸ் போடப் பிடித்தது. நண்பர்களுடன் சுற்ற அந்த சீதோஷ்ண நிலை உதவியது. நிறைய லீவு இந்த மாதத்தில்தான் கிடைக்கும்.

வங்கியில் சேர்ந்தப்புறம் மார்கழியில் வரும் டிசம்பர் அனைத்தையும் அள்ளிக் கொடுக்கும் அதிசயக் கன்னியாகத் தெரியும். புது வருடத்தில் வரும் லீவ் க்ரெடிட், புதுப் புது வருமானங்கள்.  நிறைய இந்த மாதத்தில்தான் டூர்கள் பல போயிருக்கிரேன், வெய்யிலும் விடுமுறை எடுப்பதால். இதனிடையே ஆங்கிலப் புத்தாண்டும் மார்கழியில் தான் மலரும்.

இப்படிஇருந்த மார்கழி, தொண்ணூறுகளில் மாறிப் போனது, வீட்டுக்கு வந்த ஒரு பெரியவர் திருப்பாவை பற்றி சொன்னவுடன் அதிகாலை எழுந்து அதைப் படித்து அனுபவித்தேன்.

சமீப காலமாக, குறிப்பாக வேலையிலிருந்து விலகியபின், ஏனோ மார்கழி அதிகமாக இனிக்கிறது. காலையில் நான்கு மணிக்கு வேண்டுமானாலும் எழுந்திருக்க முடிகிறது - தேவைப் பட்டால் மதியம் தூங்கலாமே. உறங்கும் வீட்டை தொந்தரவு பண்ணாமல் நாமே காபி போட்டுக் குடித்து, குளித்து, பூஜை செய்த பின்னும் மணி ஆறுதான் என்றால் ஒரு தனி சுகம் தான். இருள் பிரியாத காலையில் குளிரில் கோபுர தரிசனம் எனக்குப் பிடித்த ஒன்று- இதை மார்கழியில் தான் செய்ய முடியும்.

போன வருஷம் ஒரு திடீர் உந்துதலில், தினமும் ஒரு கோவில் என்று முப்பது கோவில்கள் சென்ற நினைவு இன்றும் இனிக்கிறது.

நான்கு மாட வீதியைச் சுற்றினால் சம்ப்ரதாய பஜனையிலுருந்து இன்றைய பஜனை வர எல்லாவற்றையும் அனுபவிக்கலாம். மதியம் சாப்பிட்ட பிறகு கூட ஏதாவது ஒரு சபாவுக்குள் நுழைந்தால் எதோ ஒரு கச்சேரி கண்டிப்பாக அனுபவிக்கலாம், இலவசமாக. இதையெல்லாம் மீறி சபாக்களில் கிடைக்கும் அறு சுவை உண்டி ஒரு சிறப்புச் சலுகைதான்.

எனக்குத் தெரிந்து மார்கழியில் ஏற்ப்படும் ஒரே நஷ்டம் அதி காலை நடைப்பயிர்ச்சிதான். மனம் தான் இவ்வளவு சந்தோஷமாக இருக்கே, கொஞ்சம் உடலைத் தள்ளி வைக்கலாமே என்றுதான் ஆறுதல் அடையலாம்.