Thursday, April 16, 2015

தூண்டில் ஜாக்கிரதை

எண்பதுகளில் வலைத்தளங்கள் வந்த புதிதில் வலையில் நுழைய  வருடத்துக்கு 15000 ரூபாய் கேட்டு பாமரனுக்கு ஒரு எட்டாக் கனியாகவே வைத்திருந்தார்கள். அதனூடே தெரிந்த  வியாபாரத்துக்குக்காக, வரும் விளம்பர வருவாய்க்காக பின் மெதுவாக மக்களை வலைத் தளத்தில் உலவ  அனுமதித்து பின் பழக விட்டார்கள்.

மக்களுக்கு வலை என்ற போதை ஏற்றப்பட்டவுடன் எல்லாமே வலைத் தளம் என்றாயிற்று. யூ பி எஸ் சி பரீட்சை முடிவுகளிலிருந்து, வங்கி தேர்வு விளம்பரம், காலியுள்ள இடங்களுக்கான விவரங்கள் வரை எல்லாமே தினசரிகளில் வருவது நின்று போனது. அனைவருக்கும் இன்டெர்னெட் கற்றுக் கொடுத்து, எல்லா விவரங்களையும் அதன் வழியே அனுப்பி, வலை உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்து கொடுத்து, கட்டியவரின் பிரிவைக் கூட தாங்க முடியும் ஆனால் கையளவு உலகத்தைக் காட்டும் கைபேசி கொஞ்ச நாள் கூட இல்லை என்றால் வாழ்வே சூனியம் என்று நம்ப வைக்கும் வரை ஒரு நாடகம் நடத்தி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட இணை பிரியா நட்புக்குத் தான் இன்று விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் எல்லோரையும் சமமாக மதிப்பதா இல்லையா என்ற வாதத்தைத் தொடங்கி மறுபடியும் ஒர் ஏற்ற தாழ்வு நிலைக்கு வித்திட்டிருக்கிறார்கள். ஆம் இன்று பத்தி எரியும் ஒரு சூடான விவாதம் 'இணையச் சமன்' தான்.

இது ஒரு ஆதி கால வியாபார உத்தி, அதற்க்கு நாம் இன்றும் பலியாகிக் கொண்டிருப்பது தான் கொடுமை ! ஐம்பதுகளில் பலகாரக் கடைக்குப் போனால் வரவேற்று உட்கார வைத்து முதலில் ஒரு சின்ன துண்டு இனிப்பையோ அல்லது சூடாக அடுப்பிலிருந்து அப்பொழுது தான் இறக்கிய கொஞ்சம் தூள் பக்கோடாவையோ முதலில் கொடுத்து, வந்த வாடிக்கையாளர்களை தன் வசம் ருசியாக இழுத்த பின் தான் , வியாபார வலையை விரிப்பார்கள்.

இப்படித்தான் நாம் பாட்டுக்கு தேமேன்னு வரும் ஒற்றைச் சானலை வைத்துக் கொண்டு, பாதி நேரம் புரியாத ஜுனூன்களைப் பார்த்துக் கொண்டு புதுமணப் பெண் போல் வெள்ளி இரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்து, ஒளிமயமான ஒலியைக் கண்டு ஜன்ம சாபல்யம் அடைந்து கொண்டிருந்தோம். அப்படிப்பட்டவர்களுக்கு பல சானல்களைக் காட்டி விளையாட்டிலுருந்து , பண வியாபாரம் வரை தொலைக் காட்சி என்றாகி இப்பொழுது ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு பொட்டிகளுடன் அறு நூறு ரூபாய் வரை கொடுக்க வைத்து விட்டார்கள்.

அந்தக் கால திரிவைகளை நகர்த்தி, தோய்க்கும் கற்களை காணாமல் போகச் செய்து,  மிக்ஸிகளையும் , வாஷிங் மிஷினையும் கொண்டு வந்தது இந்த அவசரக் கால அனைவருக்கும் அலுவலகம் போகும் குடும்பங்களுக்கும் தேவையான ஒரு வரப் பிரசாதம் தான். ஆனால் இதிலிருந்து உருவாகும் ஒரு பெரிய மின்சாரத் தேவையை கவனிக்கத் தவறி சமாளிக்க முடியாமல் திணறும் போது  தனியார்கள் கேட்ட விலை கொடுத்தால் மின்சாரமும் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

விறகையும், மண்ணெண்ணைகளையும் தொலைத்து சமையல் வாயுவைத் திணித்து, இப்பொழுது அதை ஒரு உருளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தும் தனியாரிடம் வாங்கத் தயார் பண்ணப் பட்டிருக்கிறோம்

இப்படியாக , சும்மா இருந்தவர்களை வசதிகள் , சலுகைகள் காட்டி சொரிந்து விட்டு பின் அதற்க்கும் விலை கொடுக்கும் படி ஒரு கட்டாயத்தை நம்மை அறியாமலே நம் மேல் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்

அறுபகளில் நம் முன்னோர்கள் சொற்ப வருவாயில், குடும்பத்தை முன்னேற்ற படாத பாடு பட்டு கல்வியைக் கொடுத்து, பொருளாதார நிலையில் ஏற்றத்தை கொண்டு வந்ததை மறுபடியும் அதே நிலைக்குத் தள்ளி அந்த இருப்பவருக்கும் இல்லாதவர்களுகும் உள்ள இடைவெளியை தொடர்ந்து இருக்கச் செய்யத்தான் சில நடவடிக்கைகளோ என்று கூட தோன்றுகிறது.

பின் ஏன் இந்த பாகுபாடு?

காசு கொடுத்தால் அதிக வேகம், நிறைய தளங்களுக்கு அனுமதி. ஆனால் நான் சொல்லும், கட்டுப் படுத்தும் வலைத் தளங்களுக்கு மட்டும் தான் போக முடியும்.

காசு கொடுத்தால் தொலைகாட்சியில் நிறைய சேனல்கள், அதனால் தான் ஆயிரக் கணக்கான கோடிகளில் சூப்பர் போட்டிகளை வைத்து, பெயர் தெரியாத சானல்களில் அதைக் காட்டி, நம்மைக் காசு கொடுத்துப் பார்க்கத் தூண்டுகிறார்கள்.

காசு கொடுத்தால் சீரிய கல்வி இல்லையேல் கார்ப்பொரேஷன் பள்ளிதான். அதையும் சீர் செய்ய மாட்டோம், தரத்தை முன்னேர விட மாட்டோம்.

காசு கொடுத்தால் மருத்துவ, இஞ்சினீயரிங் கல்வியில் இடம்.

காசு கொடுத்துச் சேர்க்கும் கல்லூரிகளுக்குத் தான் கடைசி வருடத்தில் கல்லூரிக்கே வந்து பல்லைப் பிடித்துப் பார்த்து வேலை கொடுப்பார்கள். மற்றவர்கள் ?

காசு கொடுத்தால் நல்ல மருத்துவம் இல்லையேல் நலமாகாத பொது மருத்துவ கவனிப்புத் தான்

இப்படி காசு, காசு என்று எதற்கெடுத்தாலும் நோகச் செய்தால், இல்லாதவன் தளர்கிறான், தவறுகிறான்.

நம் தேவைகளை மட்டும் அடையாளம் கண்டு , தேவை இல்லாதவைகளை உணர்ந்து மலிவாகக் கொடுத்து ஆசை காட்டினாலும் உதறினால் தான் இந்த ஆதிக்கத்திலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

வண்ண மயமான , கனஉலகில் மற்றும் தோன்றிக் கொண்டிருந்த காட்சிகளை நேரிலும் விலை கொடுத்து வாங்க முடியும் என்று வியாபாரிகள் நம்மை இழுப்பதைக் கண்டு கொண்டாலே தப்ப முடியும்.

தூண்டிலில் உள்ள புழு மீனின் பசிக்கு அல்ல, மீன் பிடிப்பவனின் ருசிக்காகவே என்று உணர்ந்தால் வலையிலிருந்து தப்ப முடியும்.

இது பசியில் அலையும் மீனை விட ஆசையில் திரியும் மனிதனுக்குத் தான் அதிகம் பொருந்தும்

Saturday, April 11, 2015

மறதி

சின்ன வயசிலேயே என் அம்மாவிடம் கேட்ட கேள்வி " ஒருத்தர் இறந்த பின் , அவரை தகனம் செய்து விட்டு வந்தவுடன் ஏன் இனிப்போடு சாப்பாடு போடுகிறார்கள்".

பதில் (வந்ததாக) ஞாபகமில்லை, கேள்வி மட்டும் மனதில் தங்கி விட்டது- அடிக்கடி கேட்டுக் கொண்டதாலும் இருக்கும்.

என் உறவினர் பையன் சிறு வயதில் அகால மரணமடைந்தவுடன் அவரின் வயதான தகப்பனார் அன்று இனிப்புடன் சாப்பிட்டது, இன்னும் கண் முன் வந்து போகிறது. அது தவறா, சரியா என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால் உறுத்தியது. அதே சமயம் , அன்னாள் வழக்குகளில் இருந்த சில சம்பிரதாயங்களுக்கு எங்கோ பதில் உண்டு என்று மட்டும் உள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. அதைத் தேடுவதுதான் கடினமாக இருந்தது.

தேடும் படலத்திந் போது - ஒரு சாரார் ' அது மக்கள் எந்த விதமான உணர்ச்சிகளிலிருந்தும் சகஜ நிலைக்குத் திரும்ப வைக்கும் முயற்சி தான்' என்றனர்.

சிலர் 'வாழ்வின் இன்ப துன்பங்கள்' மாறி மாறி வருவதை உணர்த்தத்தான்' என்றனர்.

'துக்கத்தைப் போக்கி வாழ்வின் நிஜப் பக்கத்துக்கு அழைத்து வரத்தான் உடனே இனிப்பு போடுகின்றனர்" என்றார்கள்.

வந்த பேரிழப்பை மறக்க வைக்கும் முயற்சி என்றார்கள்.

கிணற்றில் விழுந்தவன் ஏறினால் விழுங்கத் தயாராக மேலே காத்திருக்கும்  புலியைக் கண்டு அஞ்சி கீழே உள்ள கொடிய பாம்பினால் இறங்கவும் முடியாமல் புல்லைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது மேலே உள்ள தேனடையிலிருந்து சொட்டிய தேனைச் சுவைத்து வாழ்க்கை எவ்வளவு இனியது என்று நினைத்ததாகச் சொன்ன கதை ஞாபகத்துக்கு வந்தது. துளி  இன்பத்தினால் கூட சூழ்ந்துள்ள அபாயங்களையும், இழப்புகளையும் நொடியில் மறக்க சாத்தியமிருப்பதாக நினைத்திக்கிறார்கள் !

சிறு குழந்தை தன் இள வயது நடவடிக்கைகளை உணராது இருப்பது மறதியாலா அல்லது முதிரும் பருவத்தாலா?.

எழுபதுகளில்  ஒரு முதிர்ந்த அரசியல்வாதி வருமான வரி கட்ட மறந்ததாகச் சொன்னார்.

சில முக்கிய காரியங்களை மறந்து நம் குடும்பத்திலும், அலுவலகத்திலும் வாங்கிக் கட்டிக் கொண்ட நேரங்கள் அனேகமாக எல்லோர் மனதிலும் வந்து போகலாம்.

இந்த மறதி - வரமா, சாபமா?

மறக்காமல் இருக்க இந்த விஞ்யான உலகில் பல உத்திகள் வந்து விட்டன. நீங்கள்  மறந்தாலும் தட்டி எழுப்ப உபகரணங்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் விஞ்யானத்தின் ஆட்சிக்கு உட்படுத்தி விட்டால் ,வாழ்க்கை ஒரு பொம்மாலாட்டமாகி விடுகிறது என்ற இன்றைய வாதத்தையும் ஒதுக்க முடியவில்லை.

சிலவற்றை மறந்தே ஆகவேண்டிய கட்டாயங்களும் இருக்கின்றன.

சமீபத்தில் படித்தது - நம் நெருங்கியவர்களின் மறைவு காலப் போக்கில்,  மொத்தமாக மறக்கப்படா விட்டாலும் நம் நினைவுகளை அந்த இழப்பிலிருந்து மறைக்கத்தான் வேண்டுமாம். தொடர்ந்து ஒருவர் அப்படிப்பட்ட சோகத்திலேயே படையப்பா, நீலாம்பரி போல்,ஆழ்ந்திருந்தால், புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் கூட உள்ளதாக சொல்லப் பட்டிருந்தது !

மறக்கவில்லையென்றால் எப்படி ஒரு நாடு நடத்தப் படும்? அனேகமாக பல பெரிய அரசியல்வாதிகளும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறார்கள். கேட்டால் அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா என்கிறார்கள். அப்படிப் பட்டவர்களை ஒதுக்குவதும் சாத்தியமாகப் படவில்லை, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குறுகிய வட்டத்துக்குள். அனேகமாக கரங்கள் இணைந்து நிற்கும் எல்லா அரசியல்வாதிகள் மேல் உள்ள  ஏதோ ஒரு கறை நம் கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இருந்தும் தேர்தல் சமயங்களில் ஒரு வித மறதி தான் நாம் அறியாமலே இவர்களுக்கு உதவுகிறது.

உறவினர்களிடையோ அல்லது நண்பர்களிடையோ இருந்த பல நாள் பகைகளும், சில காலங்கள் கடந்தால் கரைந்து விடுகிறது, தேவைப் பட்டால் மறந்தும் விடுகிறது.

பெற்றோர்களையும் சுற்றத்தையும் மனம் கவர்ந்தவருக்காக உதறி ஓடியவர்களையும் கூட பல வருடங்களுக்கப்புறம் பார்க்கும் பெற்றோர்கள் எல்லாவற்றையும் மறந்து வாரித்தான் அணைத்துக் கொள்கிறார்கள்.

அரசியலில் கட்சிகள் ஒருவருக்கொருவர் பரிமாரிக் கொண்ட நிந்தனைகள் மறந்துதான் கை கோர்க்கின்றனர், கூட்டணிகள் உருவாக்கப் படுகின்றன.

வல்லரசுகளும் அவ்வப் பொழுது தம் பகைமைகளை மறந்து உலக அமைதிக்காக கை குலுக்கிக் கொள்கிறார்கள்.

தேவைப் பட்ட பொழுது மறக்கத் தான் வேண்டி இருக்கிறது- பகைமையை, இழப்புகளை, வார்த்தைகளை, முறிந்த உறவுகளை. வாழ்வில் முன்னோக்கிச் செல்ல இந்த மறதி தேவையாக இருக்கிறது.

"மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை " என்ற கூற்றில் நிறையவே தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட நேரங்களில் இந்த மறதி ஒரு வரமாகவே உள்ளது

வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுக்காமல், வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுது அடுப்பை அணைக்காமல், சாயந்திரம் சினிமாவுக்கு அழைதுப் போவதாக நேற்று கொடுத்த வாக்குறுதிகள்  போன்ற மறதிகள் சாபமாகின்றன.

இப்படிப்பட்ட மறதிகளிலும் எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதை மறக்காமல் முடிவு செய்து கொண்டால், வாழ்வில் மறக்கப் படவேண்டிய நாட்கள் குறைவே !