Friday, September 20, 2013

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு

பல வருஷங்கள் வெளி நாடு போய் திரும்பிய மகனை அம்மா பார்க்கும் இன்ப அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்தேன். ஆம் . எவ்வளவு வருஷங்களாயிற்று ! நடுவில் ஒரு முறை பெங்களூரில் பார்த்த ஞாபகம். நான் சொல்வது பழைய எதிர் வீட்டில் குடி இருந்தவரையோ, மாமா புள்ளையையோ இல்லை!

நேற்று பனகல் பார்க் பக்கம் கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டியிருந்தது. சாயங்காலத்தில் தி நகருக்கு காரில் போவதை விட நடந்தே போகலாம். வழி நெடுக ஊர்ந்த பின் பார்க் பக்கத்தில் காரை நிறுத்த இடம் தேடுவதற்க்குள் எல்லோருக்கும் பசி வந்து சரவண பவன் சாப்பாடுடன் எதையும் வாங்காமல் திரும்பி வர மனமில்லாமல், ஆட்டோவைத் தேடினேன்.

அன்பாக ஊர்ந்து வந்து  120 ரூபாய் கேட்ட ஆட்டோக்காரரை ஒரு போலி அதிர்ச்சியுடன் பார்த்து ,பழக்க தோஷத்தில்  கூசாமல் 80 கேட்டு 100 ரூபாயில் உடன் படிக்கை ஏற்ப்பட்டு உட்கார்ந்து வண்டி கிளம்பியவுடன் தான் பார்த்தேன் அதை. "ஏம்பா, இப்பத்தான் மீட்டர் வந்துடுத்தே ஏன் அதைப் போடலை".

 "இது நாம் பேசியதுக்கு மேல் காட்டும்" என்று சொன்னவர் அத்துடன் நிற்க்காமல் மீட்டரையும் போட்டு "இதில் என்ன காட்றதோ அதையே கொடுங்க"ன்னார் அந்த நல்லவர்.

கொடியை மடக்கியவுடன், பளீரென்று உயிர் பெற்று, சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் மின்னிய மீட்டரைத்தான் அப்படித் தாய்ப் பாசத்துடன் பார்த்தேன். 25 ரூபாயில் ஆரம்பித்து ரொம்ப நேரம் அதிலேயே இருந்து, பிறகு 1.20 என்று படிப்படியாக முன்னேறி, எல்லா சிக்னலிலும் நின்று, அவ்வளவு கூட்டத்தில் ஊர்ந்த பின்னும், பனகல் பார்க் அடையும்போது காட்டியதென்னவோ 69.20 தான். எழுபது ரூபாயை வள்ளல் போல் நான் கொடுத்தவுடன் மறுபேச்சு பேசாமல் ஆட்டோ நகர்ந்ததை நம்பவே முடியவில்லை. சென்னையிலா ஆட்டோக்காரர் மீட்டர் போட்டு, இறக்கி விட்டவுடன் அதிகம் கேட்காமலா !!!

வந்த காரியத்தை முடித்தவுடன் திரும்பி வர ஆட்டோ தேடும்போது, மந்தைவெளின்னவுடன் முகத்தைத் திருப்பிண்டவர்கள் சிலர்.

ஒருவர் தயங்காமல் 150 கேட்டார்- "ஏன் மீட்டர் என்னாச்சு" என்று வந்த தைரியத்தில் நான் கேட்டவுடன் "அந்த வண்டில மீட்டர் இருக்கு போங்க" என்று உதவினார்.

மீட்டர் வைத்த மற்றொருவர் கொஞ்சம் பேசியபின் மீட்டருக்கு மேல் போட்டுக் குடுங்கன்னார். சரி மீட்டர் இருப்பதை ஒத்துக்கறார்ன்னு ஒரு சந்தோஷத்தில் "பத்து ரூபாய் மேல தரேன்னதும்" மீட்டரை போட்டு வண்டி நகர்ந்த பின் ஒரே புலம்பல் - "கொஞ்சம் கூட யோசிக்காம மீட்டர் போட்டுட்டாங்க சார். கட்டுப் படியே ஆகலை. நீங்கள்ளாம் ஒங்க பசங்களைப் படிக்க வச்சுட்டீங்க. நாங்க என்ன சார் பண்றது. வர வருமானத்தில அரிசியும் வாங்க முடியலை....." ஆட்டோவில் உள்ளே பார்த்தால், ரேடியோ, மணி மணியாய் சீரியல் செட் விளக்குகள் என்று ரதம் போலிருந்தது. அந்த வெளிச்சத்தில் ஒரு மூலையில் தெரிந்தது அரசு வழங்கிய ரேட் அட்டை. வீடு திரும்பியவுடன் மீட்டர் காட்டிய 73 க்கு பதில் எண்பது வாங்கிக் கொண்டு அத்ருப்தியுடன் சென்றார்.

உண்மையிலேயே இவ்வளவு வருஷம் கழித்து சென்னை ஆட்டோக்களில்  மீட்டரைப் பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி இருந்தது. அதை உபயோகிக்கவும் ஆரம்பித்து விட்டதில் பெரு மகிழ்ச்சி. இதற்க்காகப் பாடு பட்ட பல நிறுவனங்களுக்கும், பொது நலக் குழுக்களுக்கும், முக்கியமாக அரசுக்கும் ஒரு ஷொட்டு குடுத்தால்தான் நியாயம்.

ஆனால் இந்தச் சவாரி அனுபவத்தில் ஒரு கவலையும் வந்தது -  இது எவ்வளவு நாள் என்று- மீட்டர் போட மாட்டார்கள், போட்டாலும் ஜாஸ்தி கேட்பார்கள்... எல்லோரையும் த்ருப்திப் படுத்துவதும் கடினம்தான். எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள். இல்லே இதுவும் கொஞ்ச நாள் தானோ என்று.

இந்தக் கலியில், இன்று என்ன நடப்பதோ அதை அனுபவிப்பதே சிறந்தது என்று காலையில் வேளுக்குடியார் சொன்னதை நினைவில் வைத்து நகர்ந்தேன்