Thursday, December 24, 2015

வலையும் வலை சார்ந்த வாழ்க்கையும்

சிங்காரச் சென்னையை விட்டு இந்நாட்டுக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது .

இந்தியாவிலிருந்து கிளம்பும் பொழுது அமெரிக்காவைப் பார்ப்பதை விட உறவினர்களைக் காணும் ஆர்வம் மேலோங்கி நின்றது. ஒன்றிரு முறை பயணப்பட்டிருப்பதால் புதிய நாட்டை விட பழைய உறவினர்களைக் காணும் நாட்டம் அதிகமாக இருந்தது.

இருந்தாலும் சுஜாதா என்னும் எழுத்து ஜீவி எழுதியது நினைவுக்கு வந்ததது "அமெரிக்காவென்னும் அதிசய உலகம் வெளி நாட்டவர்களுக்கு என்றுமே ஒரு கவர்ச்சிக் கன்னி தான் "

பார்ப்பதற்க்கு நிறைய இடங்கள் உள்ளன .
வியப்பதற்கு அதை விட அதிகம் இருக்கின்றன.
இங்கும் இப்படியா என்று எண்ண வைக்கும் சமாச்சாரங்களும் உள்ளன.
வியப்பது அலுத்து விட்டாலும் பார்க்கப் பார்க்க, ரசிக்க ரசிக்க அதை மற்றவர்களிடம் பகிரும் ஆர்வம் அதிகமாகிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த வலைப் பதிவு.

இங்கு, ஒவ்வொரு முறை வீட்டை விட்டுப் பயணப் படும் பொழுதும் நம்மைக் கவர பல விஷயங்கள் உள்ளன. இந்நாட்டு ஜனங்கள் , அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் ஒழுக்கம்..... இப்படியான பல விஷயங்களில் என்னைச் சிந்திக்கத் தூண்டியது இங்கு நிலவும் 'வலை சார்ந்த வாழ்க்கை'.

நான் சென்ற சில பல நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வேலை நாட்களில் யாரும்  ஒருத்தரை ஒருவர் விசாரித்துக் கொள்ளவே முடியாத ஒரு அவசர நிலை. வார இறுதிக்காக ஏங்கிக்கொண்டே, வார நாட்கள் முழுதும் உழைத்து வெள்ளி மாலையில் தொடங்குகிறது கொண்டாட்டம்.

சனிக்கிழமை முழுவதும் வீட்டைச் சுத்தம் செய்து, துணி துவைத்து- (நம்ம ஊரில் இதெல்லாம் செய்யும்  முனியம்மாக்கள் இந்த ஊரில் கிடையாதாம்) , அருகிலுள்ள மால் எனப்படும் சூப்பர் சந்தைக்குப் போய் பால் முதல் ஷவர சமாச்சாரம் வரை வாங்கி, வரும் வழியில் பீஸ்ஸாக்களை விழுங்கி இன்றே உலகம் முடியப் போவது போன்ற ஒரு துரித கதியில் கொண்டாடி விடுகிறார்கள்.

ஞாயிறு வழக்கத்தை விட இன்னும் தாமதாக எழுந்து எங்கோ பார்த்த ஞாபகமாக உள்ள சமையலறையில் நுழைந்து வெளி வரும் பொழுது இன்னும் ஏழு நாட்களுக்கான உணவு ரெடி. சுட வைத்து சுட வைத்து வாரம் முழுவதும் ஓட்டி அடுத்த வெள்ளி மாலைக்குக் காத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் அனேகமாக சென்னையிலும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தான் என்றாலும் ஏதோ குறைவது போல் உதைத்தது.  நாடே வலை மூலம் இறுக்கமாகப் பின்னப் பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டு , பன்நாட்டு செய்திகளை இவர்கள் எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தேன்.

நான் விஜயம் செய்த வீடுகளில் யார் வீட்டிலும் பேப்பர் வாங்குவதில்லை. (இரண்டு மாதத்துக்குஒரு முறை பழைய பேப்பர்களை விலைக்குப் போடும் தொல்லை இல்லை).

ஆபீஸுக்குப் கிளம்பும் முன் மழை வருமா , குளிர் அதிகமாகுமா, குடையோ ஸ்வெட்டரோ தேவையா , எல்லாம் டீவீ மூலம் தெரிந்த கொள்கிறார்கள்.

எந்நேரமானாலும் உபேர் போன்ற டாக்சிகளை போன் மூலமாகக் கூப்பிட்டு அது எங்கு இருக்கிறது என்பதையும் வலை மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.

பஸ்ஸிலோ , பூமிக்கடியிலும் மேலும் ஓடும் ரயிலிலோ போகும் பொழுது  நாட்டு நடப்பு, அடுத்த ரயில் எப்பொழுது, போகுமிடம் எவ்வளவு தூரம் வரை எல்லாவற்றையும் கைக்கடக்கமாக உள்ள சின்னக் கணிணி போன்ற தொலை பேசியில் பார்த்துக் கொள்கிறார்கள்.

பஸ்ஸில் போகும் பொழுது என் அருகிலுருந்தவர் திடீரென்று செல் போனை வாயருகில் கொண்டு போய் 'ஸ்டார்பக்ஸ்' என்று சொன்னவுடன் அது அருகிலுள்ள காப்பிக் கடைக்கு வழி காட்டுகிறது. நம்மூரிலும் செல் போனை அழுத்தி 'இரானி டீக்கடை' என்று சொன்னால் வருமா என்று பார்க்க வேண்டும். இலவச வை பை கிடைப்பதால் ஸ்டார்பக்ஸ் கடைக்குள் எப்பொழுதும் கூட்டம் . ஒரே ஒரு கப்புசினோ காப்பியை வாங்கிக் கொண்டு மேக்கைப் பிரித்து மணிக்கணக்கில் உட்கார்ந்து விடுவதைப் பார்க்கும் பொழுது எண்பதுகளின் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் ஞாபகம் வந்தது.

சில வாரங்களுக்கு முன் நான் போன ஒரு இந்தியக் கடையிலிருந்த சில இலவச பேப்பர்களைக் கொண்டு வந்து என்னதான் இருக்கிறதென்று பார்த்ததில் சில தலைப்புச் செய்திகள்:
  • எட்டு மாதங்களுக்கு முன் பேரக் குழந்தையைப் பார்க்க குஜராத்திலிருந்து வந்த பட்டேல் தாத்தாவை எப்படி ஒரு காவலர் அநியாயமாக சந்தேகத்தின் பேரில் அடித்து அவர் இன்னும் எழுந்திருக்க முடியாத நிலையில் தள்ளப் பட்டார் என்ற கேஸ் கோர்ட்டில் நடப்பதை விரிவாகச் சொல்லி இருந்தார்கள். 'அவரைப் பார்ப்பதற்க்கு எழுபது வயது போலிருந்தார். அவரால் எந்த ஆபத்தும் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை" - இப்படிச் சொன்னது இதில் சம்பந்தப் பட்ட ஒரு காவலர் தான்.  
  • சைனா அதன் ஒரு குழந்தைகள் உள்ள பிரஜைகளுக்கு இன்னொன்று பெற்றுக் கொள்ள அனுமதி கொடுத்தது !
  • சோட்டா ராஜனைப் பற்றியும் , ஹர்பஜன் திருமணம் பற்றியும் சில சுவையான தகவல்கள் இருந்தது . ஆனால் பத்திகையாளர்களிடம் ஹர்பஜன் கேட்டதாக வந்த  மன்னிப்பு பற்றி செய்தி இல்லை 
  • அழகுச் சாதனங்களில்  உள்ள கேன்சர்  அபாயத்தைப் பற்றிய ஒரு திகில் செய்தி.
  • எளிய ஜீரணத்துக்கு முட்டைக் கோசையும் , பெரிய வெங்காயத்தையும் சாப்பிட ஒரு அறிவுறுத்தல் 
 ஒரு வேளை காசு கொடுத்து வாங்கும் பேப்பர்களில் இன்னும் இருக்குமோ ?

ஒரு விபரீதக் கற்பனை - நம்ம ஊரில், நம்ப வங்கிகளில் நடப்பது போல் சர்வர் உட்கார்ந்து போனாலோ இணைய தளம் இல்லாமல் போனாலோ இந்நாடு என்னவாகுமோ ?

நினைக்கவே பயமாக இருக்கிறது.

ரொம்ப வருடங்களுக்கு முன் போய் விட்ட என் பாட்டியின் குரல் கேட்கிறது "நல்ல நாளும் அதுவுமா தோசித்தனமாக யோசிக்காதே. பாவம் இங்குள்ளவாளெல்லாம் தவிச்சுப் போயிடுவா"

 - -   சாண்டா பெரியவரின் மணியோசையை எதிர்பார்த்து இருக்கும் ஒரு குளிராத டிசம்பர் மாலையில் எழுந்த கலங்கிய எண்ணங்கள் .