Thursday, April 10, 2014

அழைப்புக்கு மரியாதை

"மின்னஞ்சலில் கல்யாணப் பத்திரிகையை ஸ்கேன் பண்ணி அனுப்புவது இப்போது வழக்கமாகி வருகிறது. இதில் சௌகர்யங்கள் பல. தபால் செலவோ, தாமதமோ இல்லை. Send விசையை அழுத்தியதும், பத்திரிகை உலகெங்கும் போய்ச் சேர்ந்து விடுகிறது. காகிதச் சிக்கனம். 200 பேருக்கு அனுப்புவதற்க்கு 900 காப்பி அடித்துவிட்டு, மிச்சப் பத்திரிகைகளை என்ன செய்வதென்று தவிக்கத் தேவையில்லை. கிடைக்கவில்லை என்று பெறுனர் பொய் சொல்ல முடியாது..." 

கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்கு முன்னேயே அந்த அதிசய எழுத்தாளர் சுஜாதா எழுதியதை இன்று படித்தவுடன் அசந்து போனேன். எவ்வளவு உண்மை! எங்கள் வீட்டில் நடந்த சமீபத்திய கல்யாணத்தில் நான் இன்னும் ஒரு படி மேலே போய் அத்தனை பேருக்கும் அதே மெயிலை கல்யாணத்துக்கு முதல் நாள் மறுபடியும் அனுப்பினேன் - ஞாபகப் படுத்த!

நம்ப பக்கத்துக் கல்யாணங்கள் தான் தமாஷ் என்றால் அதில் கல்யாணத்துக்குக் கூப்பிடுவதும், அதற்க்குக் கூப்பிட்டவர்களின் நடவடிக்கைகளும் கொஞ்சம் தமாஷாகவே இருக்கும்.

சுஜாதா சொன்னது போல் பத்திரிகைகள் மெய்ல் மூலம் அனுப்பப் பட்டாலும், அது வந்து சேர்ந்தது என்று ஒரு கால் கடிதாசி பதில் போடும் பழக்கம்  அரவே கிடையாது. இன்றும் இது  வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதாகச் சொல்கிறார்கள். மற்ற வழக்கங்களில் அமெரிக்காவைப் போற்றும் நம்மவர்கள் இதையும் அனுசரிக்கலாமே?

கூப்பிட்டவர்கள் வருவார்களா, மாட்டார்களா, வந்தாலும் மூன்று வேளைகளில் எப்ப வருவார், இதெல்லாம் அனுப்பியவர் கற்பனைக்கே விடப் படும். பழைய நாட்களில் உள்ள RSVP மறுபடியும் வந்தால் நிறைய உணவு வீணடிப்பதை தவிர்க்கலாம்.

இதைச் சரிக்கட்ட ஒவ்வொரு வேளைக்கும் தனித் தனியாகப் பத்திரிகை என்ற உத்தி உருவானது ஒரு விதத்தில் உதவியது.

வருபவர்களில் பல ரகம் - சரியாகக் கூப்பிட்ட வேளைக்குத்தான் வரும் புரிந்தவர்கள்.

கூப்பிட்ட வேளைக்கு வர முடியாமல், அதற்க்கு பதில் வேறு வேளைக்கு வரலாமா என்று நம்மைக் கேட்கும் உண்மையான நண்பர்கள். எனக்கு இவர்களை ரொம்பப் பிடித்திருக்கு. ஏனென்றால், எப்படியாவது கூப்பிட்ட மரியாதைக்கு வந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எண்ணம், முயற்ச்சி. நிச்சயம் பாராட்டத் தக்கவர்கள்.

வராவிட்டாலும் நிகழ்ச்சி முடிந்து சில  நாட்களில் நேரில் வந்து விசாரிக்கும் சிலரிடம் இருந்த தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தை புரிந்து கொள்ளலாம். சிலர் தொலைபேசியும் விசாரிப்பார்கள். சிலர் அதே ஈமெய்லுக்கும் பதில் போட்டு வாழ்த்துவார்கள். எல்லாவற்றிலும் ஒரு உண்மையோ, வர முடியவில்லை என்ற ஆதங்கமோ, தவற விட்ட வருத்தமோ நன்றாக உணர முடியும்.

நிகழ்ச்சிக்கு பல வாரங்களுக்கு முன்னேயே அலைந்து திரிந்து, கஷ்டப்பட்டு சிலரின் விலாசத்தை வாங்கி பத்திரிகை போட்ட சந்தோஷம், சிலரின் பதில்களில் சுரீர் என்று கடிக்கவும் செய்யும்.

வரவில்லை என்றாலும் பரவயில்லை, விசாரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சிலர் கிணற்றில் விழுந்த கல் போல் நேரில் பார்த்தாலும் அதைப் பற்றி ஒன்றுமே கண்டு கொள்ள மாட்டார்கள்.

மருத்துவர்கள் பலரும் இதெல்லாம் தேவை இல்லாத ஒரு உபாதையாகத்தான் நினைக்கிறார்கள்.

இன்றைய அவசர உலகில் உள்ள சிலர் இதற்க்கான இடத்தை கொடுக்காமல் , கண்ணில் தென்படாத மானேஜரையும் க்ளையன்டையும் திட்டி, அலுவல்களின் உள்ளேயும் அடைக்கலம் அடைகிறார்கள்

ஆனால் சிலரின் காரணங்கள் இதைவிடக் கசப்பாக இருக்கும்.

"என்ன கல்யாணம் ஆயிடுத்தா. மறந்தே போயிட்டேன்"

"வரணுந்தான் இருந்தேன். அன்னிக்குன்னு பாத்து ஃபைனல்ஸ் மாட்ச் இருந்தது"

"இல்ல மாப்ள. க்ளப்லஉக்காந்து பேசிண்டே இருந்தோமா, டைம் போனதே தெரியல"

"ஒர்க்கிங் டேயோனோ, அதான் வரலே. இல்லேன்னா கண்டிப்பா வந்திருப்பேன்"

இவர்களிடமெல்லாம் எனக்கென்னவோ கொடுத்த பத்திரிகையே இருக்காது என்று தான் தோன்றுகிறது. அவ்வளவு அக்கறை.

இதில் மறந்து போவது என்னவென்றால் அழைப்பவரின் மன நிலையைத்தான். அழைத்தவர் வந்தவுடன் அவர் முகத்தில் பீறிட்டுவரும் சந்தோஷத்தை வராதவர் தவற விடுகிறார்.

ஒவ்வொரு அழைப்புக்குப் பின்னும் உள்ள ஒரு ஆதங்கத்தை - வந்து என் மகனையோ, மகளையோ ஆசிர்வதியுங்கள்- ஒரு எதிர்பார்ப்பைச் சிதற விடுகிறார்.

நிகழ்ச்சி முடிந்து நம்மைச் சுற்றி, நம் நலனில் அக்கறை கொண்ட இவ்வளவு உள்ளங்களா என்று கொடுக்கும் பூரிப்பை.

இதெல்லாம் விட பெரிய கொடுமை, சில அலுவலகங்களில், நிகழ்ச்சி முடிவதற்க்கு முன்னமேயே, சில பத்திரிகைகள் குப்பைத் தொட்டியிலிருந்து எட்டிப் பார்க்கும். கொடுத்தவர் கண்ணில் உதிரம் - இப்படி ஒரு நண்பனா என்பதற்க்கா அல்லது முப்பது ரூபாய் பத்திரிகை அவசர கதியில் மூலையில் போனதற்க்கா என்று நிர்ணயிப்பது, கொஞ்சம் கடினம்தான்

என் உறவினர் ஒருத்தர் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கண்டிப்பாக போவார். சாப்பிடாவிட்டாலும் தலையையாவது காட்டுவார். அவரிடம் கேட்டதற்க்கு " எனக்குக் கொடுத்த அழைப்புக்கு மரியாதை கொடுக்கணும். அதான் என் நோக்கம்- I must honor the invitation " என்பார். இவர்களைப் போன்ற ஜனங்கள் என்னவோ குறைந்து கொண்டே போவது போல எனக்குத் தோணுது.