Monday, March 30, 2015

பாதுகாப்பு !

சிலரை விசாரிக்கும் பொழுது கொடுப்பது
சிலர்  சிறைக்குச் செல்லும் போது கொடுப்பது
பலருக்கும் சிறையில் கொடுப்பது

சிலர் பதவியில் உள்ள பொழுது கொடுப்பது
சிலர் பதவியைத் துறந்த பொழுது வேண்டுவது

குற்றம் நடை பெறாமல் தடுக்க சில பாதுகாவலர்கள்
குற்றம் நடந்த இடத்தில் பல பாதுகாவலர்கள்

சிலரை அடித்துத் தள்ள வேண்டி இருக்கிறது மற்றவர்கள் பாதுகாப்பிற்காக
அப்படிப் பட்டவர்கள் பதவி ஏறினால் (சல்யூட்) அடித்துக் கொடுக்கக் கூடியது

மனிதர்களுக்கும், கணினிகளுக்கும் உள்ள பொது பாதுகாப்பு :
      சில கிருமிகள் அண்டாமல் இருக்க
      சில கிருமிகள் அண்டியதால் கொடுக்க

வாழ்க்கைத் துணைக்காக சிலர் வேண்டுவது பாதுகாப்பு
வாழ்க்கைத் துணையால் சிலர் தேடுவதும் அதே பாதுகாப்பு
சில வேண்டாத துணையால் சிலர் போவதும் பாதுகாப்பாக உள்ளே

பொருளுக்குத் தேடுவது.
இருக்கும் பொருளால் நாடுவது

மழையிலுருந்து பாதுகாப்பு- குடை
வெயிலிலிருந்தும் பாதுகாப்பு - குடை
வாழ்நாளுக்கும் பாதுகாப்பு - கொடை

கத்தியால் கிடைக்கும் பாதுகாப்பு
அதே கத்தியைக் காட்டும் பொழுது கத்தினால் போய் விடுகிறது

மாட்ச்சுக்கு முன் எதிர்பார்ப்பினால் கொடுப்பது
மாட்ச் எதிர்பார்ப்பில் சறுக்கியதால் வேண்டுவது

"தோணி வீட்டுக்குப் பாதுகாப்பு"படித்த செய்தியால் விளைந்த சிந்தனைகள்

Wednesday, March 18, 2015

செல்லாத ஃபோன்

எங்க வீட்டு ஸாஸ்த்ரிகளிடம் 'அவசரத்துக்கு உங்களை கூப்பிடணும்னா வேணும், உங்க செல் ஃபோன் நம்பரைக் குடுங்கோன்னு கேட்டா - ஐயா, நான் செல்லாத ஆசாமி. எனக்கு செல் ஃபோன் கிடையாது' என்பார். உண்மை அது இல்லை - வர லேட்டானா நச்சரிப்பாளோன்னு பயந்து தான் என்று அவரைக் கிண்டலடிப்போம்.

இந்நொரு  கொடுமை செல் ஃபோன் இருந்தும் அது உபயோகப் படாதபோது தான்.

குறிப்பாக வீட்டு அம்மிணிகள், பலர் படுத்துவதுண்டு.

வெளியில் வண்டி ஓட்டிக் கொண்டு போகும் பொழுது, அதை பத்திரமாக கைப்பையின் உள்....ளேளேளே வெச்சுடுவா. எவ்வளவு அலறினாலும் கேட்காது.

வண்டியை விட்டு இறங்கியவுடன், மிஸ்டு காலையாவது பார்த்தால் தேவலை. அதுவும் கிடையாது.

சமீபத்தில் என்னுடைய நண்பனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு அவரது மனைவியை தொடர்பு கொள்ள முயற்ச்சித்த போது, எதிர்கொண்ட உண்மை இது.

அதே போல் வீட்டுக்குப் போனபின், கைப்பேசியை எங்காவது வைத்து விடுவது. அல்லது டீ வீயின் சத்ததில் அது அடிப்பதே யாருக்கும் கேட்பதில்லை.

இன்னும் சிலர் ஆபீசுக்குள் நுழையும் போதே அதன் வாயை அடைச்சுடறாங்க - நல்ல பழக்கம்தான். ஆனால் , ஆபீசை விட்டு வெளியே வரும்போது அதன் வாய்ப் பூட்டை எடுக்க மறந்து, பல கால்களை மிஸ் பண்ணி மிஸஸ் கிட்ட கால் வாங்கி, சில சமயம் ஒரு கால் ஒரு பக்கம் வாங்கி நடப்பவர்களையும் கண்டதுண்டு!

இதே போல் ஒரு திரையரங்குக்குள்ளோ அல்லது கதாகாலட்சேபத்திலோ அல்லது கச்சேரியிலோ இதனால் சில இம்சைகள் வருவதுண்டு.

திரையரங்கிலாவது சினிமாவின் சத்தத்தில் இதன் மணி ஹீனித்திருக்கும். கச்சேரிகளில் பாகவதர் தனி ஆவர்த்தனத்தில் உள்ள பொழுது அடித்தால், மற்றவர்களின் உச்சுக் கொட்டலிலேயே  நமக்கும் ஒரு ஆவர்த்தனம் நடக்கும்.

ஆனல் கதாகாலட்சேபத்திலோ, பிரவசனம் செய்பவர் பக்தியின் உச்சியில் நின்று கொண்டு, நம்மை சொர்க்கத்தின் வாசலில் நிற்க வைத்து என்னவெல்லாம் செய்தால் நம்மை கடவுள் ஏற்றுக் கொள்வார் என்று உரை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இந்த அழைப்பு மணி அழையா விருந்தாளியாக ஒலித்தால் மொத்த சபாவும் திரும்பிப் பார்த்து, கண்களால் எரித்து அப்படியே ரூட்டை மாத்தி நரகத்தின் பக்கம் தள்ளி விடுவார்கள். அதிலும் சில வயதானவர்கள் தத்தம் மக்கள் வாங்கிக் கொடுத்த கைபேசியை அடித்தால் எப்படி எடுப்பது, எப்படி தடுப்பது என்று தடுமாறுவதைப் பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருக்கும். இவர்களுக்கெல்லாம் கைபேசி வாங்கிக் கொடுக்கும் மஹானுபாவர்கள் அதை எப்படி உபயோகிப்பது, கூட்டத்தில் செல்லும் பொழுது எப்படி அதை(யும்) மௌன நிலைக்குத் தள்ளுவது போன்றவற்றையும் கற்றுக் கொடுத்தால் , பெரியவர்கள் ரொம்ப வாழ்த்துவார்கள்.

இன்னும் சிலர் உபன்யாசம் போன்ற லௌகீக முறையைத் தவிர்த்து சொர்க்கத்துக்கு குறுக்கு வழியிலும் போகிறார்கள்- வண்டி ஓட்டும் பொழுது இந்த கைப் பேசியை தோளில் தாங்கி, அந்தப் பக்கம் கேட்பதை காதில் வாங்கி, எதிரில் வரும் வண்டியை மனதில் வாங்காததால். 

கைப்பேசி என்பது ஒரு வரம். யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள ஏதுவான ஒரு பெரிய சௌகர்யம். 

பல வருடங்களுக்கு முன் எங்காவது ஊருக்குப் போனால், முதல் வேலையாக  தங்கும் ஹோட்டலின் டெலிபோன் நம்பரைத்தான் வீட்டுக்குத் தெரியப் படுத்துவேன். அதுவும், என் வயதான அப்பா படுத்த படுக்கையாய் இருந்த பொழுது எங்கே என்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் போய் விடுமோ என்ற பயம் அதிகமாக இருந்தது.

ஒரு அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் தொலை தூரப் பயணம் செய்பவர்கள் திரும்பி வந்து சொன்னால் தான் சௌக்கியம் என்று தெரியும். காசி போன்ற ஷேத்ராடனம் செல்பவர்களை ஏறக்குறைய கடைசி டாட்டாவே சொல்லி அனுப்புவார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். தொலை தொடர்பே இல்லாத காலமது. கடுதாசி எனப்படும் போஸ்ட் கார்டு போட்டால் அது வருவதற்க்குள் அனேகமாக போனவரே திரும்பி இருப்பார்- அவ்வளவு நாள் ஆகும். சில சமயம் வராமலே கூடப் போய் விடும்.

இதையெல்லாம் போக்கிய கைபேசி எவ்வளவு சௌகர்யம்- இப்படிப்பட்ட நண்பனைத் தொலைக்கலாமா?

Wednesday, March 11, 2015

அச்சமுண்டு அச்சமுண்டு !

எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் , ஒவ்வொருவருக்கும் ஒரு செல்ல பயம் உண்டு.
புஷ்டியான பயில்வானுக்கும் பல்லியையோ , கரப்பான் பூச்சியைக் கண்டாலோ பயம் வரலாம்.
கம்பி மீது நடப்பவர்களுக்கும் அடைந்த இடத்தில் பயம் தோன்றக் கூடும். வேகமாகக் கார் ஓட்டுபவர்களுக்கும் உயரத்தைக் கண்டால் பயம் இருக்க வாய்ப்புண்டு.

'தெனாலி' போல் எதைக் கண்டாலும் பயம் இல்லா விட்டாலும், சிலருக்கு சில அனுபவங்கள் மூலம் ஏற்பட்ட பயங்கள் நிறைய இருக்கலாம். எனக்குத் தோன்றிய சில:

விமானத்தில்-

- ஜிவ் என்று விமானம் உயரே எழும் பொழுது வயிற்றில் சுருண்டு எழுமே ஒரு பந்து- வார்னே போட்டது போல் எங்கிருந்து வந்ததென்றே சொல்ல முடியாது !

 - பறக்கும் பொழுது குறுக்கே இன்னொரு விமானம் இல்லை. ஒரு காக்கை கூட வந்து விடுமோ என்று பயம்

- விமானம் தரையைத் தொட்டவுடன், சில சமயம் கொஞ்சம் தாறுமாறாய் ஓடும் பொழுது, நாம் சைக்கிள் கற்றுக் கொண்ட முதல் நாள் ஞாபகம் வரும். ஆனால் பைலட்டின் இடுப்பில் குத்தி நேராக உட்காரச் சொல்ல முடியாமல் நாம் படும் அவஸ்தை நமக்குத் தான் தெரியும் !

சில வருஷங்களுக்கு முன் கயா என்ற புண்ய ஸ்தலத்துக்கு குடும்பத்துடன் போனோம். இரவு ஒன்பது மணிக்குப் போக வேண்டிய ரயில் சரியான நேரமாக 11.45க்குப் போனது. வழி தெரியாத ஊரில் ஒரு ஆட்டோவில் ஏறினால் ஓட்டுனரோ நரைன் கார்த்திகேயன் போல் அந்தச் சந்துகளில் போனது, இன்னும் பயம் விலகவில்லை. பனிரெண்டு மணிக்கு மேல் போலிஸ் சோதனை அதிகமாம், அதற்க்காகத்தான் அவ்வளவு வேகம் என்றார் சிரித்துக் கொண்டே. என்றும் மறக்க முடியாத பயம் !

வருடாந்திர சம்பவமாக நாம் நம் இரத்தம், சர்க்கரை போன்றவைகளை சோதித்து அதை நம் மருத்துவர் பார்க்கும் பொழுது, வரும் பயம் கொஞ்சம் அலாதி. சில சமயம் அவரின் முக மாறுதல்கள் பீதியைக் கிளப்பும். இதே சோதனையின் போன வருட அறிக்கையைக் கேட்டால் இரத்த அழுத்தம் எகிறும். எல்லாவற்றையும் விட நம் மார்பின் புகைப் படத்தை சொருகிய பொழுது டாக்டர்  கை பேசியில் பேசிக் கொண்டே பென்சிலால் கோடு போடுவாரே - அனுபவித்தால் தான் புரியும் !

அவசரமாக  இன்டெர்னெட் மூலம்  நம் வங்கிக் கணக்கினுள் நுழைய முயற்ச்சிக்கும்  பொழுது, திரும்பத் திரும்ப நம் பாஸ்வேர்டைக் கேட்கும் பொழுது வரும் சந்தேக பயம்- எவனாவது உள் பூந்து லவட்டிட்டானோ என்று !

ஏற்கனவே லேட்டு என்று  நம் டிரைவர் விரட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த இரவு நேரத்தில் நம் காரை ஒரு கும்பல் நிறுத்தும் பொழுது ! அப்புறம் தான் தெரியும் அவர்கள் அந்த கிராமத்து வாசிகள் , குறுக்கே விழுந்த மரத்துக்காக வண்டிகளுக்கு உபகாரம் செய்ய நினைத்தவர்கள் என்று !

நமக்குச் சம்பந்தமில்லாத குறுந்செய்திகள் நள்ளிரவிலும் நம் கைபேசியில் வரும் பொழுது . விசாரித்ததில் தெரிய வரும் அந்த ரோமியோ , ஜூலியட்டின் கைபேசி நம்பரை ஒரு எண் பிசகி அடிப்பது !

நம் பெண்ணோ, பிள்ளையோ தினசரி வரவேண்டிய நேரம் தாண்டியும் வராமல் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியாமல் போகும் பொழுது.

நம் வீட்டு கம்ப்யூட்டர் திடீரென்று மக்கர் பண்ணும் பொழுது-  நேற்று முடித்த முக்கிய வேலை அனுப்பப் படாமல் இன்னும் அதில்தான் உள்ளது என்று அப்பத்தான்  நினைவு வரும்.

சென்னை ரங்கனாதன் தெருவில் நடக்கும் பொழுது பாண்டி பஜாரில் நிறுத்திய காரை பூட்டினோமா என்று நினைக்கும் பொழுது.

இப்படியெல்லாம் அவரவர் வாழ்க்கையில் எத்தனையோ பயங்கள்.  அப்படியும் சிரித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
வரும் இடுக்கண்ணை நினைத்தா இல்லை துன்பம் வரும் வேளையிலா!

அவரவருக்கே வெளிச்சம்.

Tuesday, March 3, 2015

நிலையற்ற நிரந்தரம்

எப்பொழுது கிரிக்கெட் விளையாட்டு பார்த்தாலும் இது நம் தினசரி வாழ்க்கைக்கு எவ்வளவு பாடங்களை கற்று கொடுக்கிறது என்றே வியந்திருக்கிறேன்.  நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சிறு தவறினாலோ அல்லது ஒருவரின் அலட்சியத்தாலோ நிலைமை தலை கீழாக மாறி விடுகிறது.

சௌகரியமான நிலையிலிருந்து சறுக்குவதில் வாழ்க்கைக்கு நிகர் கிரிக்கெட்டே.

அதே  போல் நிலமை மிக மோசமாக இருக்கும் பொழுதும் கூட  நிதானத்தைக் கடைப் பிடித்து, சிறுகச் சிறுக முன்னேறி இறுதியில் உச்சியைத் தொடவும் முடியும் என்றும் அறிவுறுத்துகிறது.

பெரியோர்கள் சொன்ன 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது இரண்டுக்கும் பொருந்தும்.

நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது சிலர் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடரலாம் என்பர். இது 'எல்லாமே எப்பொழுதுமே' ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்ற ஒரு (மூட) நம்பிக்கையில் விளைவது.

என் குழுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வெளி நாட்டில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று இந்தியா திரும்ப வேண்டும் என்ற போது காரணம் கேட்டால் " சும்மாத்தான். வேண்டுமென்றால் மறுபடியும் போனால் போயிற்று" என்றவர், ஐந்து வருடங்களாகியும் இன்னும் போக முடியவில்லை. இவர் மறுபடியும் முயற்ச்சி பண்ணும் பொழுதுதான் உலகச் சந்தையின் சறுக்கல், அலுவலகத்தில் நடந்த மாற்றங்கள், வெளி நாட்டு வாடிக்கையாளர்களின் மன மாற்றம்" இப்படி பல காரணங்களால் இன்னும் மீனம்பாக்கம் தாண்ட முடியவில்லை.

கிரிக்கெட்டில் எல்லா பந்துகளையும் விளாசிக் கொண்டிருந்தவர் சின்ன காயம் காரணமாக கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு மறுபடியும் உள்ளே நுழைந்தால், அந்த சுலபம் கிடைக்காமல் திணறிய கதைகள் பல உண்டு.

இப்படித்தான் சிலர் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னும் ஒரு சில வருடங்களுக்குள் முடிக்க வேண்டிய உயர் கல்வியை  கொஞ்ச நாள் வேலை பார்த்து விட்டுத் தொடரலாம் என்று ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு வந்தால் பழைய வேகத்தையும், புத்தி கூர்மையும் காணாமல் போவதை உணர்கிறார்கள்.

இதெல்லாம் நதி போலத்தான் - ஒடிக்கொண்டே இருந்தால் தான் நல்லது. கொஞ்சம் தயங்கினாலோ, நாமாகத் தடை போட்டாலோ திசை திரும்பி விடுகிறது.

மிகச் சுலபமாகத் தோன்ற வைக்கும் சந்தர்ப்பங்கள் நம் கதவைத் தட்டும் பொழுது, இது தான் ஒரே முறை நம் கதவு தட்டப் படுகிறது என்பது போல் நம் சிந்தனைகளையும், செயல்களையும் அதிகரிப்பது தான் புத்திசாலித் தனம். கையிலிருக்கும் களாக்காயை விட்டு விட்டு எங்கிருந்தோ எப்பொழுதோ கிடைக்கப் போகும் பலாக்காய்க்கு காத்திருப்பது ஒரு உசிதமான செயல் அல்ல.

கடைசி காலத்தில் வாயைத் திறக்க முடியுமோ, மனத்தால் கூட நினைக்க முடியுமோ முடியாதோ என்ற நிலையற்ற நேரங்களுக்காகத்தான்  "அப்போதைக்கு இப்பொதே சொன்னேன் நாராயணா", என்று அட்வான்ஸாகவே  நல்ல சொற்களையும், எண்ணங்களையும் மனக் கணக்கில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்களோ பெரியவர்கள் என்றும் தோன்றுகிறது. இப்பொழுது சுலபமாக அடிக்கக் கூடிய பந்தை விளாசி வெளியே அனுப்பலாம், அடுத்த முறை அது எசகு பிசகாக சுழன்று , திரும்ப வாய்ப்பிருப்பது என்பதை உணர்வோமாக !