Monday, April 23, 2018

கூழும் மீசையும்

சில வருஷங்களுக்கு முன் என் நண்பன் இன்றைய வழக்கமான வருடாந்திர உடல் பரிசோதனைக்காக ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தான். எல்லா டெஸ்ட்டுகளும் முடிந்த பின், நிறைய ரூபாய்க்கு சிறிய ப்ளாஸ்டிக் அட்டையைத் தேய்த்ததும், ஒரு வயதான டாக்டர் வந்தார். எல்லா ரிபோர்ட்டுக்கக்ளையும் கூர்ந்து கவனித்து விட்டு, அவனைப் படுக்கவைத்து அடி வயிற்றை கொஞ்சம் அமுக்கிய பிறகு, சினிமா டாக்டர் போல் ஒரு தடவை மூக்குக் கண்ணாடியை கழற்றி மாட்டியபின், சிரிக்காமல் சொன்னார் "எல்லாம் சரியாயிருக்கு- இரண்டு வருஷம் கழிச்சு மறுபடியும் வாங்க" . விடை கொடுத்த போது, அவனுக்குக் கொஞ்சம் ப்ரஷர் எகிறி, மீண்டும் சீரானது. இப்படியும் தப்பிக்கலாம்.

இன்னொரு உறவினருக்கு Tread mill லில் ஏறியவுடன் இரத்த அழுத்தம்  ஏதோ பன்சரான லாரி போல் தாறுமாறாக அலைந்தது.  பின்னர் எடுத்த மார்பு எக்ஸ்ரேயில் ஏதோ ஒரு புகை மண்டலத்தைப் பார்த்த டாக்டர் " நிறைய வாயு (கேஸ்) " என்று சொல்லி "  நீங்கள் விருப்பப் பட்டால் அதற்க்கான வாயு  நிபுணரைப்  பார்க்கலாம்"  என்று சொல்லி முடிவை நோயாளியின் கையில் கொடுத்து அனுப்பினார்.

இந்த மாதிரி டெஸ்ட்டுக்கள் எடுத்தாலே அடுத்த சில ஆயிரங்களுக்கு டாக்டர்கள் ரூட்டு போடுவார்கள் என்று சொல்லி, பாட்டி சொன்ன பெருங்காயம், மோருடன்  சும்மா இருந்து விட்டார்கள். சில மாதங்களுக்குப் பின் நிறைய இருமலுடன் மறுபடியும் சோதித்துப் பார்த்த போது தெரிந்தது அது கேஸ் இல்லை- நீர் என்று. மூன்றாம் நிலை புற்று நோய் எனக் கண்டு பிடித்து, சில காலம் வெறுமையாகப் போராடி அடங்கிப் போனார்.

வாயில் வரும் புண், வெறும் சூட்டினாலும் இருக்கலாம். கொஞ்சம் உப்புப் தண்ணீரும், மணத்தக்காளியுடனும் போய் விடலாம். இல்லை அது வேறு ஏதாவது நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

மலத்துடன் ரத்தப்போக்கு, வெயில்காலத்துக்கே உரிய சூடாகவும் இருக்கலாம், அல்லது மூலமாகவும் இருக்கலாம்.

விடா இருமல் சீதோஷ்ணத்தினாலும் இருக்கலாம், வேறு ஏதாவதுக்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஆனால் இதில் முக்கியம், இதை யார் தீர்மானிப்பது என்பதுதான்.

வருடாந்திர சோதனை என்பது நம்முள் மறைந்திருக்கும், நமக்கும் தெரியாத நோய்களை அறியத்தான். அறிந்தால் மட்டும் போதாது, அதற்க்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

சில டாக்டர்கள் நன்றாகச் சோதித்து, பயப்படாமல் இருக்கச் சொல்லித்  தட்டிக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

சிலர் அவரின் நர்சிங் ஹோமுக்கு போர்ட்டிகோ கட்டவும் மேஸ்த்ரிக்குச் சொல்லி அனுப்புகிறார்கள்.

எல்லாத் தொழில்களிலும், ஒரு சில கருப்பு ஆடுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதற்க்காக எல்லா மருத்துவர்களையும் சந்தேகத்துடன் பார்ப்பதும் சரியல்ல.

மற்றமொரு கொடுமை வைத்தியரின் எண்ணம் காசு பிடுங்குவது இல்லை என்றாலும் சொல்ல வந்ததை சரியாக நோயாளிக்கு புரியுமாறு சொல்லாதது -  இது அன்னாரின் கையாலாகாததனமாக இருந்தாலும் நோயாளியின் விதி என்றே சொல்ல வேண்டும். வாயுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உத்தேசமாக கணிப்பதை தவிர்த்து விளையாடுவது மனித உயிருடன் என்ற நினைப்பில் எதற்கும்  இருக்கட்டும் என்று ஒரு நிபுணரிடம் மேலும் ஆராய அனுப்பும் வைத்தியர் கிடைத்தால்  விதியை வைத்தியரின் மதியால் வெல்லலாம் .

நமக்கு வாய்க்கும் டாக்டருக்காகப் பிரார்த்திப்பதோடு, கொஞ்சம் கவனமாகத் தேர்ந்தெடுக்கவும் வேண்டும். என்ன இருந்தாலும் இது நம் உடம்பல்லவா?

இன்னும் சிலருக்கு என்ன சொல்லி விடுவார்களோ என்றும் பயம். அதற்க்காகச் சோதனையே செய்யாமலிருப்பதும் நல்லதல்ல.

குளத்தோட கோவித்துக் கொண்டு, கால் அலம்பாமல் இருக்க முடியுமா? காலில் உள்ள சேறு நமக்குத்தானே அருவறுப்பு.

ஆனால் கொஞ்சம் சமயோசிதத்தால் "கூழுக்கும் ஆசைப்படலாம், மீசைக்கும் ஆசைப் படலாம்".

  கொஞ்சம் ட்ரிம் செய்தால் போதும்- மீசையை அல்ல, மூளையை !!