Wednesday, January 29, 2014

ஈரம்

எனக்குத் தெரிந்து பிறக்கப் போகும் குழந்தை பற்றிய செய்தி நடு நிசியில் வந்தாலும்  உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பதற்க்குத் தயாராக இனிப்பு வாங்கி வைத்துள்ள தந்தையும் இருந்திருக்கிறார்.

குழந்தை வயிற்றில் எவ்வளவோ உதைத்தும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு அலுவலகத்துக்குப் போய் அவனுக்காக சம்பாதித்த தாய்மார்கள் நிறைய உண்டு.

கூடப் பிறந்தவன் முன்னேற தியாகங்கள் செய்த சகோதரர்கள் பல.

குடும்ப முன்னேற்றத்துக்காக ஏராளமான அவள் ஒரு தொடர் கதை கவிதாக்கள் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் எவ்வளவோ சகித்து, சில தியாகங்கள் செய்துதான் அப்பா, பிள்ளை, மகள், அண்ணா, தம்பி, தங்கை உறவுகள் உருவாகின்றன.

ஆனால் கேள்விப்படுகிற சமீபத்திய தலைப்புச் செய்திகளோ அதிர வைக்கிறது:

தட்டிக் கேட்ட  தந்தையை கொன்ற மகன்.

சொத்துத் தகறாரில் அண்ணனைப் போட்டுத் தள்ளிய தம்பி.

வயதான அக்காவைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன் மனதுக்குப் பிடித்தவனுடன் தலைமறைவான தங்கை.

தூங்கும் பொழுது தந்தையின் வாயில் ஆசிட் ஊற்றிய மகன்.

கேட்கவே கொடூரமாக இருக்கிறதே- இதைச் செய்பவரின் மன நிலை எப்படி இருந்திருக்கும். சாக்லேட்டுடன் காத்திருந்த தந்தை நினைத்திருப்பாரா, தன் மகன் பாலுக்கு பதில் அமிலம் ஊற்றுவானென்று?

எப்படி அம்மாவை எட்டி உதைக்க முடிகிறது - தொட்டிலுக்கு முன்னேயே வந்த பழக்கம் பால் குடி மறந்த பின்னும் மறக்காமல் போனதேன்?

சின்ன வயதில் ஓன்றாக விளையாடி, திருட்டு மாங்காய் காக்காய் கடியில் பகிர்ந்த மனங்கள் எப்படி கால் க்ரௌண்டுக்கும் அரை க்ரௌண்டுக்கும் அரிவாளைத் தூக்குகின்றது ?

இருபதுக்கு வருடங்களுக்கு மேல் ஒன்றாக உண்டு, உறங்கிய சொந்தங்களை விட்டு  எப்படி நேற்று வந்தவனுடன், புதிய வாழ்க்கையைத் துவங்க கால் ஓட்டமெடுக்கிறது.

எது ரத்த பந்தங்களுக்கு எதிராக வாள் தூக்க வைக்கிறது- மண்ணா, பொன்னா, பெண்ணா?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதைப் பற்றி முன்னேயே பல கவிகள் கண் கலங்கி பாடி இருக்கிறார்கள்.

அருணகிரி பாடிய " மகனே , இந்த ஊத்தை உடம்பின் நாற்ற மேடுகளைக் கண்டு மயங்காதே. ஒரு நாள் பிடி சாம்பலாகப் போகும் கட்டையிது"

"அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே"

"கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளேதான், தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளதான்"

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

இவ்வுலகில் கவி பாடிய பலரும் ஏதோ ஒருவகையில் அனுபவித்துத்தான் பாடி இருக்கிறார்கள். நாம் தான் கவனிக்கவில்லை.

இந்த நாட்டின் மண் வற்றலாம், ஆனால் நெஞ்சின் ஈரம் வற்றுவது கொடுமை.