Sunday, May 26, 2013

டீ எம் எஸ்

"சட்டி சுட்டதடா . . . . கை விட்டதடா " என்ற ஒலியை மீறி சமயலுள்ளிலிருந்து ஒரு ஓங்கிய குரல் " டேய், வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலேல, அமத்துடா அந்த ரேடியோவை" - அம்மா.  இது மட்டுமல்ல- "போனால் போகட்டும் போடா" , "வீடு வரை உறவு"- இப்படிப் பல பாடல்களுக்குத் தடை வீட்டில். என் முதல் அறிமுகம் அந்தக் குரலுக்கும், அபசகுனத்துக்கும், ரேடியோவுக்கும்.

ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல் என் அண்ணனின் முதன் சம்பளத்தில் வாங்கிய, ஒரு மூலையில் மஞ்சள் துணி போர்த்திய அந்த பிலிப்ஸ் ரேடியோவில் கேட்ட பல பாடல்கள் பாடியதென்னவோ "டீ. எம்.எஸ், பீ சுசீலா"தான். வேற பெயரே தெரியாது. மிஞ்சிப் போனால் "பீ. பீ எஸ், எல்.ஆர், ஈஸ்வரி" - அவ்வளவுதான்.

கர்னாடிக்கோ, வெஸ்டெர்னோ, குத்துப் பாட்டோ, எதுவானாலும் அவர் பாடுவார். எம், ஜீ. ஆரோ, சிவாஜியோ, ரவிச்சந்திரனோ யாருக்கும் அவர் தான் குரல் கொடுப்பார். அழகிய தமிழ் மகள் இவள், ஒரு ராஜா ராணியிடம், நிலவு ஒரு பெண்ணாகி போன்ற துள்ளல் பாடல்களுக்கும் அவர் குறைவு வைக்கவில்லை. பாட்டும் நானே, மாப்ளே போன்ற கர்னாடகத்தையும் விட்டு வைக்கவில்லை. தவப் புதல்வனில் உஷா உத்துப்புடன் பாடிய அன்றைய மேலை நாட்டுப் பாடலிலும், முத்துக் குளிக்க வாரீகளா,   என்னடி ராக்கம்மா போன்ற குத்துகளிலும் அவரின் திறமையால் ஜொலித்தார்.

இருந்தும் அவருடைய சோகப் பாடல்கள் தான் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டன. யாரால் மறக்க முடியும் அவரின் கண்ணீர் வரிகளை?

பாசமலர் பார்த்து, தியேட்டரில் நான் அழுததாக என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். அது கதைக்காகவா, பாட்டுக்காகவா என்று இது வரை தெரியவில்லை.

அக்காலத் தமிழ்ப் படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சிவாஜி - எம்ஜீயார் நடிப்பா, வாலி-கண்ணதாசன் வரிகளா அல்லது இவரின் குரலா என்ற முடியாத வாதம் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

அவர் வீட்டுக்கருகாமையில் வசிப்பதால், தினமும் காலை நடையின் போது அவர் வீட்டை கடக்கும்போது ஒரு சில வினாடிகள் மனம் நினைக்காமல் இருந்ததில்லை. ஒரு விதத்தில் இந்த முடிவு சில மாதங்களாக நான் எதிர் பார்த்துகொண்டிருந்ததுதான். தொண்ணூருக்கு மேல் எதிர்பார்ப்பது, ஒரு ரசிகனுக்கு வேணும்னா ஆசையாக இருக்கலாம். ஆனால் அவருக்கு நல்லதல்ல. இருந்தும் அது நம்மைத் தாக்கும்பொழுது, மனம் கனக்காமலிருப்பதில்லை.

இந்தக் கால இளம் ரசிகர்கள் சிலருக்கு அவர் பெருமை தெரியவில்லையென்றால் தப்பில்லை. இது எவர் குற்றமுமில்லை.  அவர் பாடியது போல் மனிதன் மட்டுமில்ல காலமும் மாறித்தான் விட்டது.

இன்று காலை அவர் வீட்டுப் பக்கம் சென்றால் ஒரே கூட்டம்- போலீஸ். இறுதி பயணத்துக்குத் தயாராகும் டீ.எம். எஸ்சுக்கு நான்  "அந்த  நாலு பேருக்கு நன்றி " என்று சொல்லி. தள்ளி இருந்தே விடை கொடுத்தேன்

அவர் பூத உடலை எரித்தாலும் ஆட்டோக்களிலும், மொஃபஸல் பஸ் நிலயங்களிலும், பழய டேப்பில் அவர் என்னமோ தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கப் போகிறார். "எங்கே நிம்மதி  எங்கே நிம்மதி" என்றவருக்கு வழி கிடைத்துப் புறப்பட்டுவிட்டாரோ!

 கொஞ்ச காலமாகவே டீ. எம்.எஸ், ராம மூர்த்தி, பீ.பீ.எஸ் போன்ற  தூண்கள் நிலை குலைவது தமிழ் இசையின் துரதிர்ஷ்டமே.






Sunday, May 19, 2013

அக்கரை

என்னுடைய விபரீதமான ஒரு ஆசையால், மற்றவர்களுக்கும், தமிழுக்கும் வரப்போகும் இம்சையை மறந்து, ஒரு அசட்டுத் தைரியத்தில் நான் தமிழில் வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடமாவதற்க்குள் விளையாட்டாக ஒரு இருபது தொகுப்புகளையும் எழுதி விட்டேன்.  நட்புக்கு இலக்கணமாக உள்ள என் பல நண்பர்களில் சிலர் "உனக்கு இவ்வளவு சரளமாக தமிழில் எழுத வருமா"  என்று வியந்து பாராட்டுக் கடிதமும் அனுப்பினார்கள். இதில் ஒரு தமிழ் எழுத்தாளரும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்ட ஒருவரின் பேரனும் ஆவர். பின்னவர்தான், என்பால் கொண்ட அக்கறையில் எனக்கு ஒரு வித்தியாசமான கூட்டத்திற்க்குச் செல்லுமாறு கை காட்டினார்.

என் மேலும், என் எழுத்தின் மேலும் உண்மையான அக்கறை கொண்ட ஒரு நண்பர், என் முன்னாள் மேலாளர், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் எனக்குக் காட்டிய அந்த பாதையில் சென்றபோது வந்ததுதான் "அக்கரை" கூட்டம்.

மூவரால் தொடங்கிய 'அக்கரை' - ப்ரதி மாதம் மூன்றாம் சனிக்கிழமை எளிய முறையில் கூடி எண்ணங்களைப் பரிமாரிக் கொள்ளும் ஓர் அமைப்பு. ஆங்கிலத்தில் உள்ள "Look before you leap" என்ற எச்சரிக்கையை மறந்து நானும் நேற்று அந்தக் கூட்டத்தில் ஆஜரானேன். எனக்கு சிபாரிசு செய்த நண்பர் வராததால் வெய்யில் மேலும் உரைத்தது.

என்னைத் தவிர அங்கு உள்ள அனேகரும் தமிழுக்கு அதிகம் பரிச்சயம் உள்ளவர்கள் என்று புரிந்தது. அங்கிருந்த சில ப்ரபலங்களை கண்டு கொள்ள முடியாதது  எனக்கும் எழுத்துக்கும் உள்ள இடைவெளியை பறை சாற்றியது.

மிக எளிமையாகத் தொடங்கிய கூட்டம் ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடப் பேச்சு முறையில் நன்றே நடந்தது. கூட்டம் என்னவோ தமிழில் மட்டும்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு, என் தமிழைத்  தூசு தட்டி, கொஞ்சம் சுமாராக என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

ஆனால் பேச்சுக்கள் ஜோக்குக்கும் ஹ்யூமருக்கும் உள்ள வித்தியாசத்தில் தொடங்கி, சூது கவ்விய ஐ பி எல் வரை வந்து  பின் கடைசியில் பேசிய இளைஞரின் அமெரிக்கா வாடைத்தமிழில் தங்கம் ஏன் வாங்கக்கூடாது வரை சென்ற போது ஒரு விரிவான பேச்சுத்திடல் தெரிந்தது. இடையில் வைணவ, சைவ சங்கதிகளையும் அருமையாக விளக்கியவர்களுக்குப் பிறகு வந்த பெண்மணியின் தன் இல்லாத மாமியாரை  நினைவுகூர்ந்ததில் வந்த கண்ணீரில் ஒரு நிஜம் தெரிந்தது.

இந்தியாவில் ஓடும் ஆண் பெயர் கொண்டஒரே நதி ஏன் "க்ருஷ்ணா" இல்லை என்ற விளக்கம் என் போன்ற பாமரனின் புருவங்களை மேலே இழுத்தன

ஒருவர் நாம் கோபப்படும்பொழுது ஏன் உரக்கப் பேசுகிறோம், அன்பாகப் பேசும் பொழுது ஏன் ரகசியக் குரலில் பேசுகிறோம் என்பதையும் அருமையாக விளக்கினார். லால்குடியின் மறைவுக்கிறங்கியதில் இழப்பின் பரிமாணத்தை உணர முடிந்தது.

வயிற்றுப் பசிக்கு போண்டாவுடன் அறிவுப் பசிக்கும் ஒரு கேள்வியை எல்லோருக்கும் கொடுத்து, சரியான விடைக்கு ஒரு பொற்க்கிழியையும் கொடுத்து வந்தவர்களை  உற்ச்சாகப் படுத்தினார்கள்

இப்படியாக ஒரு மணிக்குமேல் நடந்த பேச்சுக்கள் இது என்ன வகை- தமிழார்வமா, பேச்சுத்திறனை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமா என்று வியந்தபோது, அமைப்பாளர் ராணிமைந்தன் வந்து "இது ஒரு நட்பு வட்டம், நம் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்" என்று கை கூப்பி விடை கொடுத்த பொழுது, அடுத்த கூட்டம் எப்போ என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

பேச்சும், அதன் சுதந்திரமும் பல இடங்களிலும் பறிக்கப்படும் நிலையில் இப்படியும் ஒரு அக்கரையா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை

Friday, May 3, 2013

சுஜாதாவைப் போன்ற ஒரு குறிஞ்சி


என்னுடைய முதல் அறிமுகம் சுஜாதா எழுத்துக்கு - 1968 என்று நினைக்கிறேன். குடும்பத்துடன் பழனிக்குப் போயிருந்த பொழுது என் அண்ணா வாங்கிய குமுதத்தில் முதல் முதலாக சுஜாதாவின் கதை படித்தேன். நைலான் கயிறு என்ற ஞாபகம்- அந்த 12 வயதிலும் என்னை சுண்டி இழுத்த வார்த்தைகள்.

அதற்க்கப்புறம் எங்கு போனாலும் சுஜாதா புத்தகத்துக்கான வேட்(கை)டை தான். திருச்சி குல தெய்வம் கோவிலுக்கு போனபின் உடனே மேய ஆரம்பிப்பது, பெரிய கடை வீதியில் உள்ள பழய புத்தகக் கடைகளுக்குத்தான். எத்தனை புத்தகங்கள் நான்கு ரூபாய்க்கெல்லாம் வாங்கி இருக்கேன். பத்து ரூபாய் தாண்டாமல் இருந்தால் அள்ளி விடுவேன். ஒரு தடவை பல கோவில்களுக்குத் தனியாய் பயணித்த போது, திருச்சியில் வாங்கிய இந்தப் புத்தகங்கள் மட்டுமே துணையாய் இருந்திருக்கு.

அந்தத் தனிப்பட்ட நடை - 'ஏறினான்' என்பதை மாடிப்படி போலவே எழுதுவது. ஒரு கதையில் திருகாணி படத்தைப் போட்டு பக்கத்தில் 'யூ' என்று போட்டதில் அந்தக் கால விடலைகளில் பலருக்கு இன்னும் புரியவில்லையாம்!

அந்த ஆல்ரௌண்ட் அறிவு - சுமார் 40 வருஷங்களுக்கு முன்னமேயே ஒரு கம்ப்யூட்டரை எப்படிப் ப்ரொக்ராம் பண்ணி தேவைப் பட்ட கதை வரவழியப்பதென்று- 30% காதல், 35% இளமை, 20% குடும்பம், 10% சண்டை என்று எழுதி அதன் அவுட்புட்டையும் தெரிவித்தார்.

 அவரின் 'கம்ப்யூட்டரே கதை சொல்லு" புத்தகத்தில் சொல்லும் சீ பீ யூ போன்ற டெக்னிகல் ஸமாச்சாரங்களின் விளக்கம் பல இன்ஸ்டிடூட்டுகளை வெட்கப் பட வைக்கும். அன்னாரின் ஃப்ளோ சார்ட்டுக்கான உதாரணத்தை நான் தொடாத  வகுப்பே இல்லை.

தொடாத சப்ஜெக்டே இல்லை எனலாம். அவர் கதையில் வரும் உதாரணங்களிலிருந்து பல சட்ட நுணுக்கங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆர்தர் ஹெயிலி, இர்விங்க் வாலஸ் போன்ற பல ப்ரபலங்கள் கையாண்ட வகையில்,  கதையில் வசந்துக்குச் கணேஷ் சொல்வது போல் படிப்பவர்களுக்கு விவரிக்கும் பாணி அருமை.

கட்டுரைகளில் அவர் அறிவின் ஆழம் இன்னும் தீர்க்கமாகத் தெரியும். அது திரைப் படங்களை விமரிசிப்பதாக இருக்கட்டும், அல்லது புத்தகங்களைப் பற்றியோ, அல்லது கதை எழுதுவது எப்படி என்பதோ எதிலும் ஒரு தீர்க்கம்.

அவரின் நகைச்சுவைதான் அவரை இன்னமும் நெருங்கிய நண்பனாக்கியது. அவரின் பையாக்குட்டி, வசந்த்தின் சவால் - ஆண்கள் செய்வதெல்லாம் பெண்களாலும் செய்ய முடியும் என்று ஒரு பெண் கதாபாத்திரம் சொன்னவுடன்... அவரின் மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்குக்காக இன்னும் பலர் காத்திருக்கிறர்களாம் !

அவரின் இருநூறு புத்தகங்கள் படித்தபின் ஒரு இறுமாப்பிலுர்ந்தேன். இன்டெர்னெட் வந்தப்புரம்தான் தெரிந்தது இன்னும் எவ்வ்வ்வளவு இருக்குன்னு.

எல்லாவற்றையும் எல்லாருக்கும் வாங்கிப் படிக்க சக்தி இருக்காது. இந்த மாபெரும் எழுத்தாளனின் பேனா இன்னும் பலருக்குக் கிட்ட, சில மலிவு விலைப் புத்தகங்களை வெளியிடலாம். ஈ புக் என்ற பெயரில் மோசமான பீ டீ ஃப் களைப் படிப்பதை விட இதைச் செய்யலாம் என்று தோன்றுகிறது

அதிசயமாக அவதரிப்பவற்றை குறிஞ்சிப் பூ பூத்தாற்ப் போல என்பார்கள். குறிஞ்சியாவது 12 வருடங்களுக்கொரு முறை கண்டிப்பாக வரும். சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் அரிய குறிஞ்சி வகை

இன்று சுஜாதாவின் பிறந்த நாள்.. இவர் தன் பிள்ளைகளுக்கு ரங்கனின் ப்ரசாதம் என்ற பெயர் வைத்தது போல், இவர் அப்பா இன்று இருந்திருந்தால் இவருக்கு "எழுத்துப் ப்ரசாத் என்று வைத்திருப்பாரோ !

 அன்னாரின் படைப்புகளை இன்று படிக்க ஆரம்பிக்கும் புதிய ரசிகர்களுக்கு பிறந்த  நாள் வாழ்த்துக்கள்