Sunday, December 3, 2023

மழைக்கால ஞானம்

 வெளியே மழை பின்னிக் கொண்டிருக்கிறது . அநேகமாக காற்று பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் - அதைக் கண்டவுடன் மழை  சோவென்று இரைச்சலுடன் அதிகமாக ஒரு கொட்டு கொட்டுகிறது. முன்பெல்லாம் மழை வந்தால் குஷியாக இருக்கும். புயலென்றால் பரம சந்தோஷம் . இத்தனைக்கும் வீட்டிலுள்ள பாத்திரங்களெல்லாம் சொல்ப வாடகை வீட்டிற்குள் வந்து எல்லா அறைகளிலும் தங்கி வருணனின் கொடையை தாங்கிக் கொண்டிருக்கும். அப்படியும் ஒரு சந்தோஷம் . முக்கியமாக பள்ளி கிடையாது. இருக்கும் சின்ன அறையில் அண்ணன் தம்பி அக்கா தங்கை அனைவரும் தஞ்சம். என் காலேஜ் வாத்தியார் அண்ணா கற்பனை சிறகடிக்க வீட்டிலுள்ள போர்வைகளை திரையாக வைத்து உடனே ஒரு நாடகத்தை அரங்கேற்றி விடுவான். கதை வசனம் எல்லாம் அவனே . கடைக்குட்டியான எனக்கு எப்பொழுதும் ஒரு பராக் பராக் சொல்லும் வசனமே .

எனக்கு நினனவு தெரிந்த முதல் புயல் , 1967 என்று நினைக்கிறேன் நாங்கள் மயிலை கீழ மாட வீதியில் வசிக்கும் பொழுது தான் . வெளியே போய் மழை பார்த்தால் என்ன ஆகும் என்று அப்பாவிடம்  கேட்டுக் கொண்டிருக்கும் போதே , அருகிலுள்ள தேரின் கூரையிலிருந்து வந்த  ஒரு தகரம்  சர்ரென்று ராக்கெட் போல் கடந்ததும் அலறி அடித்துக் கொண்டு உள் அறைக்கு ஒடினது இன்னும் தெளிவாக நினைவுக்கு வருகிறது.  

பிறகு வந்த சில புயல் மழையில் சென்னையின் முக்கிய பகுதியில் வசிக்கும் பொழுதும்  மின்சாரம், தொலைபேசி இல்லாமல் ஒரு வாரம் தள்ளியது ஒரு புதிய அனுபவம். 

இன்றைய மிஃஜாம் புயல் ஒரு புதிய விழிப்புணர்வைக் கொடுத்தது. வெளியூர்களில், மற்ற நாடுகளில் இருக்கும் உறவெல்லாம் வானிலை செய்தி பார்த்து 'எல்லோரும் பத்திரமாக இருக்கவும். தேவையானதெல்லாம் வாங்கி வைத்தாச்சா - பால், கறிகாய் , மருந்து, மெழுகுவர்த்தி, நொறுக்கு தீனி , இத்தியாதிகள் ' என்று கேட்க இரவில் மழை சத்தத்தை  சுகமாக அனுபவித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று விழிப்பு . உய் உய் என்று சத்தத்துடன் ஓர் ஆம்புலன்ஸ் விரைந்தது. இங்கே சிலர் அமைதியாக அடை மழையில் உறங்கிக் கொண்டிருக்க யாரோ உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் . அதையும் விட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இந்த மழை காற்றிலும்   விரையும் அந்த ஆம்புலன்சில் ஓட்டுனர் !?. 

இப்படி  நினைத்துக் கொண்டிருக்கும் போழுதே மின்சாரம் போனது. இரண்டு நிமிடங்களில் மீண்டும் விளக்கு துடித்து வந்தவுடன் மறுபடியும் நினைவுக்கு வந்தவர் கீழ் தளத்தில் உள்ள காவலாளர்- உடனே ஜனரேட்ட்ரை உயிர்ப்பித்து ஒளி கொடுத்தவர் .

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அவரைப் பார்த்து காபிக்கு காசு கொடுத்து , பகல் சாப்பாட்டிற்கும் ஏற்பாடுகள் முடிந்தது என்று தெரிந்ததும் தான் சிறிது நிம்மதி வந்ததது.

 மின்சாரமும், ஒழுகாத கூரையும், சூடான காபியும் நமக்கு மட்டும் இருந்தால் போதாது. நம்மைச் சுற்றி உள்ள  காவலாளியும், ஆம்புலன்ஸ் ஓட்டுனரும்,  தெரு முனையில் உள்ள ஆட்டோக்காரரும் , அயன் பண்ணுபவரும்,  நாம் தினமும் சந்திக்கும் நம் வீட்டு வேலைக்காரியும் சுகமாக இருந்தால் தான் நாம் நிம்மதி அடைய முடியும் என்பது பளிச்சென்று விளங்கியது. 

இந்த மாதிரி நேரங்களில் நம்மால் முடிந்ததை நாம் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன்   மாடிப்படி ஏறும் பொழுது திரும்பிப் பார்த்தால் வாசல் அருகில் இருந்த காவலாளிக் கூ ண்டு  போதி மரம் போல் தெரிந்தது,  என் பிரமை தானோ !! 



Monday, November 6, 2023

ஓடாத காவேரியில், ஒரு பிடிவாத துலா ஸ்நானம்

 என் அம்மா ஐப்பசி மாதம் வந்த உடனேயே மிகவும் உணர்ச்சிகரமாக துலா ஸ்நானத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவாள் . எப்படி ஓடும் ஆற்றில் , முக்கியமாக காவேரியில், ஸ்நானம் செய்வது புண்ணியம் சேர்க்கும் என்று. ஆனால் அந்நாட்களில் இருந்த பல தடைகளினால் முக்கியமாக பொருளாதார தடைக் கற்களால் அவளின் ஆசை ஓரிரு முறையே நிறைவேறியது. மற்ற பணிகளை முடித்து நானும் இதன் பக்கம் திரும்ப ஆரம்பித்து ஐந்து ஆறு வருடங்களாக முயற்சி செய்து மூன்று நான்கு வருஷங்களாக துலா ஸ்நானம் செய்து கொண்டு இருக்கிறேன் .

'எங்கேயாவது துலா ஸ்நானம்' என்றஆசை நிறைவேறியவுடன்  இந்த வருஷம் கடமுகத்துக்கே சிறப்பான  மாயூரத்திலேயே (இந்நாளைய மயிலாடுதுறை) ஸ்நானம் செய்ய அவா வந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கையில் அங்கிருந்து வரும் செய்திகள் உற்சாகப் படுத்துவதாக இல்லை. ஏற்கனவே அங்கு ஓடும்  சிறிய காவேரியில் இம்முறை மிகவும் குறைவாக தண்ணீர் இருப்பதாகவும், அதையும் மீறி ஸ்நானம் செய்ய வருபவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் பீச்சீ அடிப்பதாகவும் வந்த செய்திகளினால் இந்த வருட மாயூர முயற்சி கை விடப்பட்டது.

அந்நாட்களில்  சென்னை பஸ்களில் கூட்டமாக  இருந்தால் முந்தைய ஸ்டாப்பிலேயே ஏறிக் கொள்வார்கள். அது போல் மாயூரத்தில் இல்லா விட்டால் திருச்சி அகண்ட காவேரியில் தண்ணீர்  கொஞ்சமாவது ஓடும் என்று நினைத்து அங்கே போனேன். போகும் பொழுதே என் வண்டி ஓட்டுநர் என்னை ஒரு மாதிரி பார்த்து , 'திருச்சியில் எந்தக் காவேரிப் பக்கம்' என்றார் . நானும் 'ஸ்ரீரங்கம் கீதாபுரம்'  என்றேன்.  அங்கு சென்றதும் ஒரு பத்து பேர்கள் அங்குமிங்குமாக தண்ணீரில் உட்கார்ந்து  கொண்டிருந்தார்கள் - விசாரித்ததும் தெரிந்தது கணுக்கால் அளவே தண்ணீர் இருப்பதாகவும்  தண்ணீரை விட பாசி அதிகமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும்  பொழுதே ஒரு பெண்மணி தொபுக்கென்று வழுக்கி உட்கார்ந்து அதிர்வதைக் காண முடிந்தது.

கணுக்கால் அளவே ஆழத்தில் உட்கார்ந்து . . . 

 சம்பிரதாயப்படி  மூழ்கிக் குளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றவுடன் , அப்பொழுது தான் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய ஒரு தம்பதி நான் கேட்காமலேயே ஒரு எவர்சில்வர் சொம்பை என்னிடம் நீட்டி இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நகர்ந்தார்கள். 

மிகக் கவனமாக அடிப்ரதக்ஷணம் செய்வது போல் நகர்ந்து , ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு மனைவியுடன் சந்திரனில் ஆர்ம்ஸ்ட்ராங் போல் நிதானமாக நகர்ந்தேன். கிழக்குப் பார்த்து உட்கார்ந்து ஸ்னானத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் பொழுது அங்கு வந்த ஒரு முதியவர்   (எண்பது தாண்டியவராம் - ஸ்ரீரங்கம் கோவிலில் வேத கோஷ்ட்டியில் ஒரு முக்கிய நபர்- கூட வந்த மாமி சொன்னாள் ) சங்கல்ப மந்திரங்கள் சொல்ல,  'கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதீ நர்மதே சிந்து காவேரீ . . . . .'  முணுமுணுப்புடன் , இருந்த சொல்ப நீரிலும் ஒரு நிறைந்த துலா ஸ்நானம் நிறைவேறியது . 

துலா ஸ்நானம் முடிந்த நிறைவு  

ஸ்நானம் முடிந்தவுடன் அந்த வயது முதிர்ந்த மாமி என் மனைவிக்கு மஞ்சள் குங்கும தாம்பூலம் கொடுத்து, 'ஆற்றின் நடுவே தாம்பூலம் குடுப்பததற்கும் வாங்கிக் கொள்வதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்றவுடன் எங்கள் சிலிர்ப்பு அடங்க வெகு நேரமாயிற்று. 

எங்கிருந்து வந்தார் எனக்கு மொண்டு குளிக்க சொம்பு கொடுத்தவர்?

 எனக்கு சங்கல்பம் செய்து வைத்தது - யார் அந்தப் பெரியவர்?

தாம்பூலம் கொடுத்த அந்த மூதாட்டி எப்படித் தோன்றினாள் ?

எல்லாமே கனவு போல் நடந்தது !!

மனதார சிரத்தையுடன் ஏங்கினால் நினத்ததை அவன் நடத்தி வைப்பான் என்பது இதுதானோ - யாமறியேன் பராபரமே !



Monday, March 23, 2020

அநித்யம் அளிக்கும் அறிவுரைகள்

"என்னால அடுத்த வாரம் வர முடியாது -  நான் ஒரே பிஸி"

"அடுத்த மாசம்  ரயில்ல  மூணு மிடில் பெர்த்து தான்  இருந்துது- புக் பண்ணிட்டேன் .  நல்ல வேளை அப்பர் பெர்த்துல எனக்கு  மூச்சு திணறும்"

"ஏப்ரல் கடைசில தான் முந்நூறு ரூபாய் தர்சன் டிக்கட் இருக்கு - இப்பவே முன்பதிவு பண்ணிட்டேன்"

"அடுத்த வாரம் சனிப் பிரதோஷம் - அப்ப பார்க்கலாம்"

எத்தனை நம்பிக்கை   , எவ்வளவு ஏற்பாடுகள், எவ்வளவு முன் யோசனைகள் - அத்தனையையும் நொடியில் நசுக்கியது  - சின்ன கிருமி !

வெளியூரா போகப் போகிறாய் மூச்சு விட முடியுமா என்று முதலில் பார் என்று ஏளனம் செய்தது எள்ளி நகைத்தது , மனித மூளையினால்  கண்டு பிடித்த கருவியில் பெரிதாகத் தெரிந்த அந்தக் கிருமி

அன்று படித்த  "இந்த சின்ன நூல்கண்டா நம்மை சிறைப் படுத்துவது"  என்ற புத்தகம் ஞாபகத்துக்கு வருகிறது.

நம் வாழ்க்கையின் நிரந்தமற்ற தன்மையை நிரூபிக்க  இதை விட வேறு எந்த உதாரணம் தேவை ?

ஆழிப் பேரலை அறிவுறுத்தியது - அலட்சியப் படுத்தினோம் , நாம் தான் கடற்கரைப் பக்கத்தில் இல்லையே என்று.

பூமி, தன் அதிருப்தியைக் காட்டுவது போல்,  பலமாக நடுங்கியது - கண்டு கொள்ளவில்லை .

மற்றவர்களின் நலனைத் துச்சமென மதித்து நான் , என் மக்கள் , என் பணம், என் சொத்து என்னை யார் என்ன செய்ய முடியுமென்று கொக்கரித்த பொழுது -

என் பண, பதவி  பலத்திற்கு முன் யார் என்ன செய்ய முடியும் என்று எண்ணும்   பொழுது-

வலியவர்களின் கொடுமை தாங்காமல் எளியவர்கள் இதற்க்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா என்று எண்ணிய பொழுது-

தீயவர் வாழவும்  நல்லவர் தாழவும் ... இது தர்மம் தானோ என்று ஒன்றும் செய்ய முடியாமல் நல்லவர்கள் கலங்கிய போது

நான் இருக்கிறேன் என்று கிளம்பியது ஒரு சின்னக் கிருமி

என் சக்தி எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று சவால் விடுவது போல்  உலகின் வலியதொரு நாட்டை முதலில் உலுக்கியது

என்று வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் என்று சொல்வது போல் உலகின் மிகப் பெரிய சுவற்றை  அலட்சியமாகத் தாவி கடல் கடந்து கதி கலங்க வைத்தது

எத்தனை பணமும் படையும் இருந்தாலும்  என் முன்னே வாய் மூடி,  நான்கு சுவற்றுக்குள்  தான் உன் ராஜ்ஜியம் என்று உலக  ராஜா ராணிக்களையும்   ஒதுக்குப்ப்புறம் தேட வைத்தது

கடவுளோ இயற்கையோ , அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து , நமக்கு மேல் எதோ ஒன்று, நாம் கட்டுப்படுத்த முடியாமல், நம்மையும் நம் ஆசைகளையும் நம் ஆணவத்தையும் நம் அகங்காரங்களையும் நொடிப் பொழுதில் மண்ணில் புதைக்கக் கூடிய சக்தி எதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர வேண்டிய நேரமா இது ... சிந்திப்போம்

விஞ்ஞானமும்  அறிவியலும் கொடுத்த திமிரில் ஆடுவதை நிறுத்த வேண்டிய நேரமா இது....சிந்திப்போம் 

நான் எனது எனக்கு என்பதைப்  புறந்தள்ளி   நல்லது,  நல்லவை என்பதை உணரும் நேரமா இது .... சிந்திப்போம்

ஆயிரக்கணக்கான கோடிகளும் இடுப்புத் துணியுடன் அவிழ்த்து விடப்படும் என்பதை அறிவுறுத்தும் நேரமா இது .... சிந்திப்போம்

நான் எல்லாவற்றிற்கும் மேற்பட்டவன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது போனற மமதைகளைக் களையும் நேரமா இது ..... சிந்திப்போம்

என்னை, என் செயல்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை விடுத்து,  உன் மனசாட்சியே உன்னை செலுத்துபவன் என்பதை உணரும் நேரமா இது ..... சிந்திப்போம் 

எப்படியோ வாழ்வதை விட என் மனம் அனுமதி அளித்த மற்றவர்களைத் தள்ளி விட்டு , அவர்கள் மேல் ஓடி சம்பாதிக்காமல் என் உழைப்பில் எனக்கு எது கிடைக்குமோ, கிடைத்தது சந்தோசம் என்று உணர்ந்து செல்லும் நேரமா இது ..... சிந்திப்போம்  .

மற்றவர்களின் உணர்வுகளை புண் படுத்தாமல் நான் என் நம்பிக்கையைப் பற்றி வாழ வேண்டிய நேரமா இது .... சிந்திப்போம்

நாளைப்பொழுதை  புறந்தள்ளி இன்று, இந்த நொடிக்காக வாழ வேண்டிய நேரமா இது.... சிந்திப்போம்

இயற்கை கொடுக்கும் கடைசி வாய்ப்பு ... நழுவ விட வேண்டாம் ... உணர்ந்து, திருந்தி , சிரம் தாழ்த்தி கை கூப்பி நன்றியுடன் நகர்வோம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்

இதுவும் கடந்து போம் !!

குளிர்ந்த இயற்கைக் காற்றை அனுபவிக்க முடியாத , நண்பர்களையும் உறவினர்களையும் அன்பாகக் கட்டித் தழுவ முடியாத, விருப்பத்திற்கு வெளியே செல்ல முடியாத ,  தடை இன்றி சுவாசிக்க முடியாத, வீட்டுக்குள்ளிருந்தே மற்ற நல்லவர்களுக்கு கை தட்ட வேண்டிய கட்டத்திற்குத் தள்ளப்பட்ட பொழுது வந்த அந்த 2020இன்  மார்ச்சு மாதக் காலைச்   சிந்தனைகள் 

Wednesday, July 24, 2019

அத்தி வரதர் அனுபவம்



மாயூரம் காவேரி புஷ்கர், நெல்லை தாமிரபரணி புஷ்கர்  என்ற வரிசையில் சமீபத்திய பக்தி மார்க்கத்தின் மற்றுமொரு வழி அத்தி வரதர் தரிசனம்.  போன வருடமே சில செய்திகள் இதனைப் பற்றி கசிந்தபோதும் நான் இதற்க்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல்  இதுவும் ஒரு காலத்துக் கேற்ற  திணிக்கப் பட்ட ஒன்று போல  என்று சற்றே அலட்சியமாகத்தான் இருந்தேன். ஆனால் ஜூன் மாத முடிவில் இதற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் இதனால் கவர பட்டவர்களின் அழுத்தங்களும் என்னை மேலும் கூர்ந்து நோக்க வைத்தது. சில பல காரணங்களால் குளத்திலேயே மூழ்கிக் கிடக்கும் அத்தி மரத்தினால் செய்யப் பட்ட இந்தப் பெருமாள் வடிவை நாற்பது வருடங்களுக்கொரு முறை குளத்திலிருந்து எடுத்து சயனித்த கோலத்திலேயே சில நாட்களும் பின் நின்ற கோலத்தில் சில நாட்களும் மக்களுக்கு அருள் பாலிக்கச் செய்து மீண்டும் இந்த சிலை வடிவப் பெருமாளை குளத்திலேயே சேர்த்து விடுவது ஐதீகம் என்று நம்பப் படுகிறது.

1979ஆம் வருடம் நன்கு புரியக் கூடிய, பக்தியால் உ ந்தப் பட்ட ஒரு இளைஞனாக நான் இருந்தாலும் இந்த நிகழ்வைப் பற்றி எதுவும் கேள்விப் பட்ட ஞாபகமே இல்லை. இன்று போல் தொழில் நுட்பமும் தொலைக் காட்சிகளும் வளர்ந்திராத காலமாக இருந்தாலும் பிரதான செய்திகளைச் சுமக்கும் வாயிலான தினசரிகளும் வானொலியும் இதைப் பற்றி விவரித்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அன்றைய முன்னணிக் கவிஞரான கண்ணதாசன் அத்தி வரதரைப் பற்றிப் பாடிய பாடலாக ஒரு செய்தியும் இன்று உலவிக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் இந்த அளவு நிகழ்ச்சி நிரல்களோ , ஊடகங்களின் கவனமோ இல்லாத நிலையில் ஒரு வேளை வெகுவான பக்தியுடைய குறிப்பிட்ட சில பகுதி மக்களும் அன்றும் தரிசித்திருக்கக் கூடும். தொலைக்காட்சி, முகநூல், குறுஞ்செய்திகளின் அபரிமித வளர்ச்சி, உபயோகங்கள், மக்களை சென்றடையக் கூடிய சாத்தியங்கள், பெருகி வரும் வியாதிகள், தொல்லைகள், மன உளைச்சல்கள், அதிகமாகப் புழங்கும் காசு இப்படிப் பல விதங்களில் உந்தப் பட்டு, மக்கள் இன்று  காஞ்சிபுரத்தை  நோக்கி அத்தி வரதரைக் காண விரைவது கொஞ்சம் புரிய வைக்கிறது.நிற்க.

கூடி இருந்த சுற்றத்தின் அழுத்தத்தினாலும், உடம்பில் உள்ள  தெம்பினாலும் நிறைய இருந்த நேரத்தினாலும், உள்ளே  ஊறிக் கொண்டிருக்கும் பக்தியினாலும் (இதே வரிசையில்தான் என்று அடிக்கோடிட ஆசைப் படுகிறேன்), எந்த விதத்திலும் சராசரி மனிதனுக்கு குறையாதவன் என்ற வகையிலும் நானும் நகரேஷு காஞ்சி நோக்கிப் பயணப் பட்டேன்.

கூட வந்த நண்பர்கள் குடும்பமும், சற்றே மேகங்களுக்குள் ஒதுங்கி ஓய்வெடுக்க முடிவு செய்த சூரியனாரும், இந்த மாதத்திலேயே எட்டாவது முறையாக காஞ்சிக்கு வரும் ஓட்டுனரும் ஒத்துழைக்க அதிகாலையில் சென்னையிலிருந்து கிளம்பிய இன்னோவா காஞ்சிபுரத்துக்கு வெளியே உள்ள ஹோட்டலில் தான் நின்றது. நம்மவர்களுக்கு வாயில் உள்ள வீச்சு வேலையில் இல்லை. முப்பது பேர் பசியுடன் வர சாவகாசமாக எட்டு மணிக்குத் திறந்த உணவகத்தில் சாப்பிட ஒன்றுமே இல்லை.  உக்கிராண அறைக்கு உள்ளே போய்  தேவைப் பட்டதை எடுத்துக் கொண்டு சாப்பிட்ட வகைகளுக்கும் நாமே கணக்குப் பண்ணிக் கொடுத்த காசை சமர்த்தாக வாங்கி உள்ளே போட்டார், என்னமோ வங்கியில் வேலை செய்யும் கேஷியர் போல பெருமிதத்துடன் லேட்டாக வந்து கல்லாவில் அமர்ந்தவர். இதே அண்டை மாநிலத்து அயராது உழைக்கும் மக்களாக இருந்திருந்தால் 'இடாலி' செய்யத் தெரியா விட்டாலும் தெருவுக்கு தெரு கடைகள் திறந்து அதிகாலை நான்கு மணிக்கே சாயா கொடுத்து அசந்து (அசத்தி) இருப்பார்கள்.ஆங்காங்கே நிறைய போலீஸ் தலைகள் தடுக்கப் பட்ட சந்துகளுக்குள் நுழைய பார்க்கும் ஆட்டோக்களுடன் போராட, சிலர் மும்முரமாக ரோட்டோரத்தில் முளைத்திருந்த கையேந்தி பவன் சாம்பாருக்குள் இட்லியைத் தேடிக் கொண்டிருந்தனர் ("என்ன சார் பண்ண காலீல மூணு மணிக்கே லைன்ல வந்துட்றாங்க"- பாவம் போலீஸ்!)

நவம்பர் தோறும் வங்கி பென்ஷனர்கள் அசட்டுத்தனமாக 'நான் உயிரோடுதான் உள்ளேன் ஐயா ' என்று உறுதிப் படுத்துவது போல இங்கும் குறிப்பிட்ட இடத்தில், சொன்ன நேரத்திற்குப் போய் நானும் 'வெகு முக்கியமான ஆசாமி ' தான் என்று சொல்லி அதற்க்காக 'வாங்கி' இருந்த ஆதாரத்தை வந்தவர் காண்பிக்க ஒரு முக்கியதாரர்கள் வரிசையில் செலுத்தப் பட்டோம் ('அவசரப் படாம போங்க. சி எம் வர்றதுனால  கூ ட்டமே இல்ல - போலீஸ்காரி) . இலவச வரிசையில், சூப்பர் ஸ்டாரைப் பார்த்த ரசிகர்கள் போல் உணர்ச்சி வசப்பட்டு, பக்திப் பரவசத்தில் மக்கள் கோவிந்தா நாமங்களை எழுப்ப, இந்த வரிசையில் இருந்த குறைந்த தள்ளு முள்ளால் கொஞ்சம் நிதானமாக அத்தி வரதரை தரிசனம் செய்ய முடிந்தது.  கண்ண மூடி அயர்ந்து கிடைக்கும் பெருமாளுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்வதில் என்ன அவ்வளவு பெருமை என்று தெரியவில்லை-இத்தனைக்கும் படம் எடுத்தால் செல் போன் பறித்துக் கொள்ளப்படும் என்று மூலைக்கு மூலை ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பையும் தாண்டி இவைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தரிசனத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் வெளியே வந்த பொழுது பெருமாள் பள்ளி கொண்டிருந்த இடத்திற்கு சில அடி தூரத்திலேயே காவலர்கள் சிலர் கோவிலுக்குள் காலணியுடன் உலவியது அதிர்ச்சியையும் கோபத்தையும் பெருக்கியது.

தரிசனம் முடிந்து வெளியே வந்த உடனேயே மீண்டும் ஒரு கும்பல் உருவாக்கிக் கொண்டிருந்தது.இங்கு ஏதும் சன்னதி இல்லையே என்று எட்டிப் பார்த்தால் பிரசாதம் விற்றுக்(!) கொண்டிருந்தார்கள்-நெரிசலைச் சமாளிக்காமல் ஊதிப் பெருசாக்கும் முயற்சி ஏமாற்றத்தை அளித்தது.

சிறிது தூரத்தில் மற்றுமொரு நீண்ட வரிசை அங்கு இருந்த நான்கு பொதுக் கழிப்படத்திற்கு அடிவயிற்று கனத்துடன் காத்திருந்தது. உள்ளே சென்று வந்தவரின் கணிப்புப்படி 'போகாமல் இருப்பதே நல்லது. சென்று திரும்புவது வியாதியை வரவழிக்கக் கூடும்'.     

'ஆறிலிருந்து ஒன்பது மணி வரை ஆகும் என்று பயமுறுத்தப் பட்டது எப்படி பதினைந்து நிமிடங்களில் சாத்தியமானது' ??? -   உள்ளே ஒரு நம்பகமில்லா உணர்வும் எழுந்தது.

நம்ப முடியாத புளகாங்கிதம், அதிர்ச்சி, கோபம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சிப் பிழம்பாக நான் வந்த வாகனத்தை நோக்கி நகர்ந்த பொழுது மோதிய எண்ண அலைகள் வெகுவாகச் சிந்திக்க வைத்தது.  உணர்வுகளை அமைதிப் படுத்தியதும் எழுந்த சில எண்ணங்கள்:
  1. முப்பத்தொன்பது வருடங்களில் இந்த அளவு ஏற்பாடு தான் செய்ய முடிந்ததா? 
  2. இதைவிடப் பன்மடங்கு கூட்டத்தை சமீபத்திய மஹாமகத்தில் சமாளித்த அனுபங்கள்  எங்கே போயிற்று?   
  3. இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்பது ஏற்புடையதா?
  4. இப்படிப்பட்ட ஜனத்திரளில் முதலில் தரம் குறைவது சுகாதாரம் தான் - இதைக் கருத்தில் கொண்டிருந்தால் இவ்வளவு குப்பைகளும் தெருவோர அசிங்கங்களும் தவிர்க்கப் பட்டிருக்கலாமே - திருப்பதி போன்ற இடங்களிலிருந்து சுத்தமான கழிவறைகளை மக்களுக்குக் கொடுப்பது எப்படி என்று அறிந்திருக்கலாமே!    
  5. சராசரியாக மூன்று மணி நேரத்திற்கு மேல் எவருக்கும் எழும் இயற்க்கை உபாதையை ஏன் கருத்தில் கொண்டு வசதிகள் செய்யப் படவில்லை? 
  6. எனக்குத் தெரிந்து காவல் துறையை குறை சொல்வதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் அலைக்கழிக்கட்ட அவர்கள், நான் பார்த்த வரையில், இருக்கும் அதிகாரத்திற்குள் பல குறுக்கீடுகள் இடையே முடிந்தவரை செய்கிறார்கள் என்றே சொல்வேன்
  7. நேற்று வரை முப்பது  லக்ஷம் பேர் வந்த இந்த இடத்தில், எந்த விதமான சோதனைகளும் நடத்தப்  படாதது ஏன் என்று புரியவில்லை - இதே  அளவு கூட்டம் வரும் பல கோவில்களிலும் கருவிகள் கொண்டு  உடல் முழுவதும் வருடி ஆயுதங்களுக்கான பரிசோதனை நான் சென்ற வரிசையில் நடை பெறாதது  ஆச்சரியமாக இருக்கிறது!!
  8. பணமும் செல்வாக்கும் இருந்தால் மட்டுமே  கிடைக்கும் என்ற நிலையை மாற்றி முக்கிய புள்ளிகளுக்கு அளிக்கும் சலுகைகளை ஏன் ரத்து செய்யக் கூடாது. இல்லையென்றால் குறைக்கவாவது செய்யலாம். இவைகள் இருந்தால்,  இருக்கப் பட்டவர்கள் உபயோகப் படுத்தத்தான் செய்வார்கள் - அவர்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால் திருப்பதி போன்ற இடங்களிலேயே இதைச் செய்ய முடியாத போது 48 நாட்கள் கூத்தில் எவ்வளவு செய்ய முடியும்?!   
வரதனைக் கண்டு திருப்திப் பட்ட மனம் ஏனோ அமைதி இல்லாமல் இவ்வளவு சங்கடங்களையும் அசை போட்டுக் கொண்டிருக்கிறது . 

குறை கூறுவது நோக்கமல்ல - அதனால் சாதிக்கப் போவது எதுவும் அல்ல. 

ஆனால், முக்கியமாக, இப்படிப்பட்ட  அனுபவங்களை அடுத்து வரும் நிகழ்வுகளுக்குக் கொண்டு சென்றாலே, மாற்றங்களும் முன்னேற்றங்களும் வரும்  - நடக்கும் என்று நம்புவோம் !!

Monday, July 22, 2019

சிரிக்க சிந்திக்க -2019

நகைச்சுவை மன்றத்தில் சிரிக்கத்தான் முடியும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி !!

சபை ஒழுக்கம், நேரம் தவறாமை, சபை நாகரிகம் அனைத்திற்கும் கட்டியம் கூறி, மேற்கோள் காட்டியது ஹியூமர் கிளப்பின் திருவல்லிக்கேணி கிளையின் 36ம் ஆண்டு விழா - இதற்க்கு மேல் சிரிக்கவும் வைத்து திறமை வாய்ந்த சாதனையாளர்களை அழைத்துப் பேசச் சொல்லி சிந்திக்கவும் வைத்தது. 

இளம் வைஷ்ணவி சாந்தியை நிலவ விட்டவுடன் வழக்கமான கலகலப்புடன் 'No one wants to displease anyone by saying what is wrong' ,  'I is' , Pristine  போன்ற உதாரணங்களால் ராமச்சந்திரன் ஐயா சபைக்கு தன் பல வருட பேராசிரியரின்  அனுபவங்களை அடிக்கோடிட்டுக் காட்டினார்  - 'Serial Killer' மூலம் சிரிக்கவும் வைத்தார் .

ஏற்புரை நிகழ்த்திய பலரும் தான் எப்படி இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்தான் என்பதை இரத்தன சுருக்கமாக சொன்னார்கள் 

கண் மருத்துவர் விஜய் ஷங்கர் பெரிய குரலில் எப்படி பல்லாயிரம் பேர்களுக்கு தன் தந்தையின் விருப்பப் படி பார்வை கொடுத்தார் என்பதைக் கேட்க கேட்க அரங்கில் மேலும் பல கண்கள் சொட்டு மருந்து போடாமலே   விரிந்தன .

வழக்கறிஞராகவே பார்த்துப் பழக்கப்பட்ட  சுமதியின் எழுத்துத் திறன் 'கல் மண்டபம் ' என்ற புத்தகம் எழுதும் அளவுக்கு விரிந்தது என்பது பார்வையாளர்களுக்கு மற்றுமோர் ஆச்சரியம் . அன்னாரின் பல குரல் பேச்சுத் திறமையைக்  கேட்டுக் கொண்டே  'மனோரமாவின் கடைசி உரையை'  யூ டியூபில் தேட வேண்டும் என்று பலரும் குறித்துக் கொண்டனர்.

நித்யஸ்ரீ பாடுவதைப் போலவே இனிமையாகப் பேசினாலும் அவரும் மேடையில் இருந்த உன்னி கிருஷ்ணனும் ஓரிரண்டு வரிகளில் அவர்களின் குரல் வளமையைக் காட்டாதது இசை ரசிகர்களுக்கு ஏமாற்றமே 

பின் கர்ஜித்த பர்வின் சுல்தானா என்ற பெண் சிங்கம் வழக்கம் போல் தன் பரந்த அறிவினால் அனைவரையும் பிரமிக்க வைத்தார் . மருந்துக்கடை ஊழியர் எப்படி விபத்தில் சிக்கிய தன் மகனுக்கே காசில்லாமல் மருந்து கொடுக்க மறுத்ததை எண்ணி கதறிய கதையைச் சொல்லி அனைவரையும் அதிர வைத்து Contactக்கும் Connectக்கும் உள்ள வித்தியாசத்தை அருமையாகப் படம் பிடித்துக் காட்டினார்.   "உன் காரணங்களால் இறைவன் உன்னைத் தோற்கடிக்கும் பொழுது காரணங்கள் மேல் ஏன் கோபம் வருவதில்லை" என்று சிந்திக்க வைத்து , முடியவில்லை என்றால் 'வீட்டுக்குப் போய் யோசியுங்கள்' என்று கூறி வீட்டுப் பாடமும் கொடுத்து அசத்தினார் 

கடைசியில், குறைந்த நேரத்துடன் பேச வந்த புலவர் இராமலிங்கம் ஸ்லாக் ஓவரில் வரும் பேட்ஸ்மன் போல் கொடுத்த நேரத்தில் விளாசியதில், வீட்டுக்குப் போக எழுந்தவர்களும் மீண்டும் அமர்ந்தனர். அதிருஷ்டம் செய்தவர்கள்தான் - இல்லையென்றால் ஒரு அருமையான சர வெடிச் சிரிப்புச் சொற்பொழிவை தவற விட்டிருப்பார்கள் . 'தண்ணீரில் அவர் மூழ்கினாலும் தமிழைக் கரை சேர்த்தவர்' என்று ஒற்றை வரியில் கண்ணதாசனுக்குப் புகழாரம் சூட்டி விட்டு சிந்திக்கவும் வைத்தார் . இதைக் கேட்டபின் மறுபடியும் பேராசிரியர் ராமச்சந்திரனின்  'சென்னையில் தண்ணி தாராளமாகத்தான் கிடைக்கிறது, தண்ணீர் தான் பஞ்சம்'  என்ற வார்த்தைகளை எண்ணி மீண்டும் புன்னகைக்க முடிந்தது  

சொன்னபடி சரியாக நான்கு மணிக்கு ஆரம்பித்து நாங்கள் கொடுத்த நொறுக்கு தீனி வகையறாக்களை மென்று கொண்டே நகைச்சுவையையும் ரசிக்க இதுவே சரியான நேரம் என்று சொல்லாமலேயே ஒரு புரிதலின்படி எட்டு மணிக்கு முடித்த ஒரு ஒழுங்கைப் பாராட்டியே ஆக வேண்டும் . இருந்தாலும் முன்னே பேசியவர்களின் நிதானப் பேச்சை கொஞ்சம் கட்டுப் படுத்தி பின்னவர்களுக்குப் பகிர்ந்தளித்திருந்தால், மற்றவர்கள் நேரமில்லாமல் அவதி பட்டிருக்கவும் வேண்டாம், உறுப்பினர்களின் ஏமாற்றத்தையும் குறைக்க ஏதுவாக இருந்திருக்கும் . முன்னே  பரிமாறிய பாயசத்தை அளவில்லாமல் கொடுத்ததில் பின் வரும் பதார்த்தங்களை சாப்பிட கி வா ஜ சொன்னது போல் இன்னொரு வயிறு தான் தேவை !!

ஆயிரம் நிறைகளிருந்தும் கையளவே  குறைகள் தென்பட்டாலும் சீதாராமன் , சேகரன், கண்ணன் மூவரணியின் கடுமையான உழைப்பினால் பரிமாறிய விருந்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

அதே போல் வந்த உறுப்பினர்களும் மிகுந்த பொறுமையுடன் வரிசையில் ஒழுக்கம் காட்டி நின்று நாம் நினைத்தால் எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்கலாம் என்று காண்பித்தார்கள். உன்னி கிருஷ்ணனின் 'நியாயமா இது நியாயமா , ஆண்டுக்கு ஒருமுறைதான் தெரிவது நியாயமா' என்று யப்பனை நோக்கி கேட்கும் கேள்வி, ஹியூமர் கிளப்புக்கும் சரியாகப் பொருந்தும்.

இவர்களின் பிரமிக்க வைக்கும் அறிவிப்பாகக் காட்டிய அடுத்த ஆண்டு  வருடாந்திர நிகழ்ச்சியாக அறிவித்த ஜூலை 19ம் தேதிக்கு இப்போழுதே மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது   

இவர்கள் நகைச்சுவைத் தரத்தை  சீராகத்தான்  வழங்குகிறார்கள் என்பதற்கான சாட்சி இவர்களின் 2016ம் ஆண்டின் விழாவைப் பற்றிய என் கருத்துக்களை இதைச் சொடுக்கிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்  :  சிரிக்க சிந்திக்க -2016 

Thursday, December 27, 2018

அங்கும் இங்கும்

மதியம் மணி மூன்றாகினும் ஒரு அரை இருட்டு, பிசு பிசு தூறல்,  வெற்று உடம்புக்குத் தாங்காத குளிர் , ஜன்னல் கண்ணாடியின் மேல் பாசத்தோடு படர்ந்து பிரிய  மறுக்கும் பனித்துளிகள். படிக்கப் புத்தகம், பக்க வாட்டில் சில கரகர மொறுமொறு வகையறா,  துணைக்கு இளையராஜா குழு நவீனின் புல்லாங்குழல் மெல்லிசை, அருகில் ஆவி பறக்கத் தன் நேரத்துக்கு காத்துக் கிடந்த  பில்டர் காபி ,  பல வருடங்களுக்கு முன் போன மூணார் விஜயம்  நினைவில் வந்து போனது .

இப்படிப் பட்ட சூழ்நிலைக்குத் தானே இவ்வளவு நாட்கள் சென்னையில் ஏங்கியதுண்டு,  பின் என்ன குழப்பம் என்று உள் மனம் வினவியது.  ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் என்று மனதில் தோன்றிய 'ஞான ஒளி',  இதுவே சென்னையாய் இருந்தால்  எப்படி இருக்கும் என்றும் அசை போடத் துவங்கியது .

அருகில் வசிக்கும் நண்பர்களின் அரைத் தூக்கத்தைக் கெடுத்து எங்கே போகலாம் என்று குழம்பி முடிவுறாத நிலையில் சந்தித்து கமல் முதல் கிரிக்கெட் வரை டீக் கடைகளில் அலசி  சீனு மோகன் மறைவினால் ஞாபகப் படுத்திய கிரேசி குழுவினர்களிடையே ஒரு உலா வந்து வீடு திரும்புவதற்குள் மாலை முடிந்திருக்கும்!

என்ன செய்வது , கனவு காண்பதோ தொலை தூரத்திலுள்ள டிசம்பரிலும் நல்ல சீதோஷ்ண நிலை என்று பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலிருந்து . ஆனால் இந்தக் குளிரே கொஞ்சம் சோதித்துதான் பார்க்கிறது. அருகிலுள்ள சுற்றத்தாரின் கேள்விக் கணைகளுக்கும்,  நக்கல் பார்வைக்கும் எண்பதுகளில் நடு இரவில் மலைப் பிரதேசங்களில் நண்பர்களுடன் உலாவிய கதையைச் சொல்லி மாளவில்லை ;  இருந்தும் கடந்து போன முப்பத்துச் சொச்ச வருடங்களை கணக்கில் கொள்ள மறுக்கிறார்கள்.

 சரி சட்டையை மாட்டிக் கொண்டு பொடி நடையாகப் போய் டீ குடித்து அப்படியே மத்தள நாராயணன்  தெரு கடை வெங்காய பக்கோடா வாங்கலாம் என்பதற்காவது வழி இருக்கா... . ஹுஹும் முடியவே முடியாது ! துணை இல்லாமல்,  பாக்கெட்டில் பேப்பர்கள் இல்லாமல் நகரவே முடியாது.

வாநிலை  பார்த்து, உடை பல அணிந்து, நைக்கியை மாட்டி, காதுகளை மறைத்து வெளி இறங்கினால் சட்டென்று மாறிய மேகங்கள் இடியுடன் கண்ணடித்து மிரட்டும். அதையும் மீறி நடுங்கிக் கொண்டே சில நேரம் நடந்து,  பாக்கெட்டில் விட்ட கைகளை பிடிவாதமாக வெளியே எடுக்காமல்,  எப்பொழுதும் புன்னகைக்கும் எதிரே வரும் பாதசாரிகளையும், வேலை முடிந்து வீட்டுக்கு மென்று கொண்டே காரில் போகும் பெண் மணிகளையும்  ( ஆமாம் இந்த ஊரில் என்ன பெண்கள் மட்டும் தான் கார் ஒட்டுகிறார்களா ?நான் பார்த்ததில் அநேகம் அவர்களே! இல்லை, என் குறும்புக்கார நண்பன்  சொன்னது போல் அவர்கள்தான் டாண் என்று ஐந்து மணிக்கு  கிளம்பி விடுகிறார்களா??!!  )  கடந்து வீடு திரும்பி முக நூலில் ஸ்டேட்டஸ் போட்டவுடன் வருமே ஒரு திருப்தி -  மேரி கோம்  கூட அவ்வளவு பெருமை பட்டிருக்க மாட்டார் !!

என்ன செய்வது இங்கிருப்பது அங்கில்லை , அங்கிருந்தால் இதற்க்கு ஏங்கும் மனத்தின் தொல்லை.  'உள்ளதைக்  கொண்டு திருப்திப் படுடா பேப்பட்டி மகனே' என்று சொல்லும் அம்மாவின் குரல் கேட்கிறது.  

Monday, April 23, 2018

கூழும் மீசையும்

சில வருஷங்களுக்கு முன் என் நண்பன் இன்றைய வழக்கமான வருடாந்திர உடல் பரிசோதனைக்காக ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தான். எல்லா டெஸ்ட்டுகளும் முடிந்த பின், நிறைய ரூபாய்க்கு சிறிய ப்ளாஸ்டிக் அட்டையைத் தேய்த்ததும், ஒரு வயதான டாக்டர் வந்தார். எல்லா ரிபோர்ட்டுக்கக்ளையும் கூர்ந்து கவனித்து விட்டு, அவனைப் படுக்கவைத்து அடி வயிற்றை கொஞ்சம் அமுக்கிய பிறகு, சினிமா டாக்டர் போல் ஒரு தடவை மூக்குக் கண்ணாடியை கழற்றி மாட்டியபின், சிரிக்காமல் சொன்னார் "எல்லாம் சரியாயிருக்கு- இரண்டு வருஷம் கழிச்சு மறுபடியும் வாங்க" . விடை கொடுத்த போது, அவனுக்குக் கொஞ்சம் ப்ரஷர் எகிறி, மீண்டும் சீரானது. இப்படியும் தப்பிக்கலாம்.

இன்னொரு உறவினருக்கு Tread mill லில் ஏறியவுடன் இரத்த அழுத்தம்  ஏதோ பன்சரான லாரி போல் தாறுமாறாக அலைந்தது.  பின்னர் எடுத்த மார்பு எக்ஸ்ரேயில் ஏதோ ஒரு புகை மண்டலத்தைப் பார்த்த டாக்டர் " நிறைய வாயு (கேஸ்) " என்று சொல்லி "  நீங்கள் விருப்பப் பட்டால் அதற்க்கான வாயு  நிபுணரைப்  பார்க்கலாம்"  என்று சொல்லி முடிவை நோயாளியின் கையில் கொடுத்து அனுப்பினார்.

இந்த மாதிரி டெஸ்ட்டுக்கள் எடுத்தாலே அடுத்த சில ஆயிரங்களுக்கு டாக்டர்கள் ரூட்டு போடுவார்கள் என்று சொல்லி, பாட்டி சொன்ன பெருங்காயம், மோருடன்  சும்மா இருந்து விட்டார்கள். சில மாதங்களுக்குப் பின் நிறைய இருமலுடன் மறுபடியும் சோதித்துப் பார்த்த போது தெரிந்தது அது கேஸ் இல்லை- நீர் என்று. மூன்றாம் நிலை புற்று நோய் எனக் கண்டு பிடித்து, சில காலம் வெறுமையாகப் போராடி அடங்கிப் போனார்.

வாயில் வரும் புண், வெறும் சூட்டினாலும் இருக்கலாம். கொஞ்சம் உப்புப் தண்ணீரும், மணத்தக்காளியுடனும் போய் விடலாம். இல்லை அது வேறு ஏதாவது நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

மலத்துடன் ரத்தப்போக்கு, வெயில்காலத்துக்கே உரிய சூடாகவும் இருக்கலாம், அல்லது மூலமாகவும் இருக்கலாம்.

விடா இருமல் சீதோஷ்ணத்தினாலும் இருக்கலாம், வேறு ஏதாவதுக்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஆனால் இதில் முக்கியம், இதை யார் தீர்மானிப்பது என்பதுதான்.

வருடாந்திர சோதனை என்பது நம்முள் மறைந்திருக்கும், நமக்கும் தெரியாத நோய்களை அறியத்தான். அறிந்தால் மட்டும் போதாது, அதற்க்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

சில டாக்டர்கள் நன்றாகச் சோதித்து, பயப்படாமல் இருக்கச் சொல்லித்  தட்டிக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

சிலர் அவரின் நர்சிங் ஹோமுக்கு போர்ட்டிகோ கட்டவும் மேஸ்த்ரிக்குச் சொல்லி அனுப்புகிறார்கள்.

எல்லாத் தொழில்களிலும், ஒரு சில கருப்பு ஆடுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதற்க்காக எல்லா மருத்துவர்களையும் சந்தேகத்துடன் பார்ப்பதும் சரியல்ல.

மற்றமொரு கொடுமை வைத்தியரின் எண்ணம் காசு பிடுங்குவது இல்லை என்றாலும் சொல்ல வந்ததை சரியாக நோயாளிக்கு புரியுமாறு சொல்லாதது -  இது அன்னாரின் கையாலாகாததனமாக இருந்தாலும் நோயாளியின் விதி என்றே சொல்ல வேண்டும். வாயுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உத்தேசமாக கணிப்பதை தவிர்த்து விளையாடுவது மனித உயிருடன் என்ற நினைப்பில் எதற்கும்  இருக்கட்டும் என்று ஒரு நிபுணரிடம் மேலும் ஆராய அனுப்பும் வைத்தியர் கிடைத்தால்  விதியை வைத்தியரின் மதியால் வெல்லலாம் .

நமக்கு வாய்க்கும் டாக்டருக்காகப் பிரார்த்திப்பதோடு, கொஞ்சம் கவனமாகத் தேர்ந்தெடுக்கவும் வேண்டும். என்ன இருந்தாலும் இது நம் உடம்பல்லவா?

இன்னும் சிலருக்கு என்ன சொல்லி விடுவார்களோ என்றும் பயம். அதற்க்காகச் சோதனையே செய்யாமலிருப்பதும் நல்லதல்ல.

குளத்தோட கோவித்துக் கொண்டு, கால் அலம்பாமல் இருக்க முடியுமா? காலில் உள்ள சேறு நமக்குத்தானே அருவறுப்பு.

ஆனால் கொஞ்சம் சமயோசிதத்தால் "கூழுக்கும் ஆசைப்படலாம், மீசைக்கும் ஆசைப் படலாம்".

  கொஞ்சம் ட்ரிம் செய்தால் போதும்- மீசையை அல்ல, மூளையை !!