Tuesday, June 9, 2015

'தலை'யாய கடமை

தலைக் கவசம் என்னும் ஹெல்மெட் கட்டாயமாகும் ஆணை வருவதற்க்கு முன்னமேயே ஒரு சாரார் அதன் விளவுகளை பட்டியலிடத்  தொடங்கி விட்டனர்:
தலை வலி, முடி உதிருதல், ஜலதோஷம், முதுகு வலி இப்படிப் பல.

எது முக்கியம் - தலையா இல்லை முடியா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

பின்புறம், பக்கவாட்டில் வரும் வாகனங்களை பார்க்க முடியவில்லை என்கிறார்கள்.
இது தவறான பழக்கம்- அதற்க்குத்தானே கண்ணாடிகள் உள்ளன?

கட்டாயமாக்க வேண்டாம், தலைக் கவசத்தின் உயிர் காக்கும் மதிப்பை மக்களுக்கு உணர்த்தினால் போதும் என்கின்றனர் சிலர்.
உணர்த்துவது மட்டும் போதுமா - சுடும் என்றால் தொட்டுப் பார்க்கும் இந்தத் தலைமுறையில்?

பெண்களுக்கு கட்டாயப் படுத்த வேண்டாம், ஆண்களுக்கு மட்டும் போதும் என்ற ஒரு வாதம் நடந்து கொண்டிருக்கிறது.
உயிரில் ஆண் என்ன , பெண் என்ன? உங்கள் மனைவுக்கும், மகள்களுக்கும் பாதுகாப்பு தேவை இல்லையா?

தொலை தூரப் பயணங்களுக்கு மட்டும் போதும், மற்றபடி அணிய வேண்டாம் என்பவர்க்கு ஒரு உண்மைச் சம்பவம் . ஒரு ஞாயிற்றுக் கிழமை, அதிக வாகன நடமாட்டமில்லாத பிற்பகலில் என் நண்பன் அடுத்த தெருவில் உள்ள கடைக்குப் பால் வாங்கச் சென்ற போது, ஸ்கூட்டி வழுக்கி தலையில் காயம் பட்டு, பிரபல மருத்துவமனையில் ஒரு வருடம் கோமாவில் இருந்து , பனிரெண்டு லட்சங்கள் செலவழித்தும் பயனில்லாமல் போய்ச் சேர்ந்தான். அந்தக் குடும்பம் செலவழிக்க முடியாமல், அவனைப் பார்த்துக் கொள்ளவும் ஆளில்லாமல் பட்ட பாடு... தேவையா ?  

ஹெல்மெட் என்றவுடன் போலிஸ்காரர் சம்பாதிப்பார் என்கின்றனர். இத்தனை கஷ்டங்கள் நமக்கு வரவிருக்கும் போது ஏன்  நாம் அவர் வாங்கும் லஞ்சத்தைப் பற்றிக் கவலை பட வேண்டும்?
எல்லோரும் ஹெல்மெட் போட்டு இவ்வழியில் வரும் லஞ்சத்தை ஒழிக்க உதவலாமே?
நாம் செய்யும் தவறிலிருந்து தப்பத் தானே குறுக்கு வழி தேடப் படுகிறது. இந்தத் தவற்றை, விதி மீறலைச் செய்யாமலேயே இருந்தால் ???  

குறுக்கு வழிகளைத் தவிர்த்து, நொண்டிச் சாக்குகளைத் தேடாமல் பேசாமல் அரசாணை வருகிறதோ இல்லையோ தலைக் கவசமணிந்தால் என்ன? தலைக்குத் தானே சுகம் !!

விதண்டா வாதத்தை விட்டு, விதி முறைகளைப் பின் பற்றினால் விதியையும் வெல்லலாமே!

ஹெல்மெட் பத்திய விவாதங்களின் போது எனக்கு எப்பொழுதுமே நினைவுக்கு வருவது , சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்திருந்த ஒரு பலகையில் இருந்த வாசகம்:
" BETTER A BROKEN HELMET THAN A BROKEN SKULL"