Thursday, February 5, 2015

ஏழ்மைக்கு ஆசைப்படு

750 கோடி மில்லியன் டாலர் (இந்திய மதிப்புக்குக் கணக்குப் போட்டுக் கொள்ளவும்) சொத்துள்ளதாகச் சொல்லப்படும் பிரபல தொழிலதிபரை சில வங்கிகள் சமீபத்தில் விரும்பியே கடனைத் திருப்பி தராதவராக அறிவித்தது.

ஒரு படத்துக்கு பல கோடிகள் வாங்குவதாகக் கூறப்பட்ட முன்னணி திரைப்பட நடிகருக்கு வந்த சோதனை, ஒரு வங்கி அவர்பால் கொடுக்கப்பட்ட நிலத்தை ஏலம் விடுவதாக பகிரங்கமாக பத்திரிகைகளில் அறிவித்தது- காரணம் அவரது மனைவி அந்த வங்கியிலிருந்து வாங்கிய சில கோடி ரூபாய் கடனை நேரத்தில் திருப்பித் தராததால் என்று சொல்கிறார்கள்.

இப்படி பல பணக்காரர்கள் கதை கூகுளைத் தட்டினால் வந்து கொட்டும். நம் கவலை தொழிலதிபர்கள் பற்றியோ அல்லது நடிகர்கள் பற்றியோ அல்ல. இந்தக் கூற்றுகள் எந்தளவுக்கு உண்மை என்றும் தெரியாது.

ஆனால் வெளி மனிதன், சாதாரணன் நினைத்துக் கொள்வது 'இவர்களுக்கென்ன கவலை. ஏழு தலைமுறைக்கு சொத்திருக்கிறது" என்று. தெரியாதது பத்து தலைமுறைகள் கட்ட வேண்டிய கடனும் சிலருக்கு  இருக்கலாம் என்பது தான்.

நம்மைப் போன்ற  சராசரி மனிதனின் கவலை, இந்த மாத சம்பளம் துண்டு விழாமல் இருக்குமா? வருமான வரிக்கே அடுத்த இரண்டு மாத சம்பளமும் பலியாகி விடுமே ! பிள்ளைகளை காலேஜில் சேர்க்க வேண்டுமே ? ஒரு வீடு கட்ட வேண்டுமே? வயதாக ஆக ஓய்வுக்கு பிறகு எப்படி காலம் கடத்துவது என்பதுதான். இப்படிப்பட்ட உண்மையான கவலைகள் ஒருவனை நல்ல திட்டங்களுக்கு, நல்ல முயற்ச்சிகளுக்கு, நல்ல குறிக்கோளுக்குக் கூட்டிச் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இப்படியாக தனக்குள்ள கட்டுப் பாடுகளை மனதில் வைத்துக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக எங்கு எப்பொழுது சறுக்கி விடுவோமோ என்ற பயத்திலேயே நகர்கிறான் சாதாரணன்- ஆனால் முன்னேறுகிறான்.

வரும் சொல்ப சம்பளத்துக்கு, நிர்வாகம் வருமான வரி பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. வேலை இல்லாக் காலத்தில் உதவுவதற்க்காகக் கொடுக்குக் கூடிய ஓய்வூதியத்தையும் விட்டு வைக்காமல் வரி பிடித்துத் தான் கொடுக்கிறார்கள். மேலும் ரிடயர்மெண்ட் சமயத்தில் வந்த அல்ப பணத்தையும் வங்கியில் போட்டு மாதா மாதம் வரும் வட்டியில் சாப்பிடலாமென்றால் அதிலும் வருமான (?) வரியை கொஞ்சம் சுரண்டி விடுகிறார்கள் கடமை தவறா வங்கிகள்.

சரி எவ்வளவு முடியுமோ புடிங்கப்பா அப்படின்னு வலிக்காத மாதிரியே இருக்கும் அந்த சாதாரணனுக்குத் தான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றுகிறது. மறைக்க ஏதுமில்லை, கொடுக்கறதுன்னா கொடு என்பவனுக்கு என்ன பயம்?

இதெல்லாம் விட்டுட்டு பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கிய கோடீஸ்வரன், சில கோடி ரூபாய் கடனுடன் ஒரு லட்சாதிபதியாகி, ஏறின புலியின் வாலை விட முடியாமல் மேலும் கடனாளியாவதில் என்ன பலன்?

எனக்கென்னவோ கோடிஸ்வரன் என்று பிறர் நினைக்க பஞ்சு மெத்தையில் படுத்துத் தூக்கம் வராமல் புரள்வதை விட, அன்றாடம் காய்ச்சியாக இருந்து , தரையில் போட்ட பாயில் அடிக்கும் வெயில் தெரியாமல் தூங்குவதே மேல் என்று தோன்றுகிறது.

ஆகையால் வருமானம், தேவைகளை விட, இருக்கும் செலவை விட குறைவாக   இருக்கவே எனக்கு ஆசை. என்னைத் தேடி வரிக்காரன் வரமாட்டான், என் பெயர் பத்திரிகையில் வங்கி வழியாக வராது. ஏன், சொந்தக் காரன் கூட நெருங்க மாட்டான்- ரொம்ப ஒட்டினால் கடன் கேட்பானோ என்ற பயத்தில்.

முக்கியமாக கொஞ்சம் குறைவு நம்மை நிறைவை நோக்கி நகர்த்துகிறது. நம்முள் நமக்குத் தெரியாமல் முடங்கிக் கிடக்கும் இன்னல்களை சமாளிக்கும் ஆற்றலை வெளிக் கொணர்கிறது. இது நம்முள் இருக்கிறது என்பதை நமக்கே உணர்த்துகிறது. குறைவுகள் ஒருவனின் சக்தியை தூண்டும் வல்லமை படைத்ததாகத் தோன்றுகிறது.

அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள் சிலர் .
எதன் மேலும் ஆசை வைக்காதே என்கிறது சில தத்துவங்கள்

 என் அனுபவம்  சொல்வது கொஞ்சம் ஏழ்மைக்கு(ம்) ஆசைப்படு - அதில், அதிலிருந்து மீண்டு வர எடுக்கும் முயற்ச்சியில், கற்கும் பாடத்தில் நிறைய சந்தோஷமிருக்கிறது, நிம்மதி இருக்கிறது. முக்கியமாக பயமில்லை!!

குறை ஒன்றுமில்லை என்றால் கோவிந்தனுக்கு நன்றி சொல்லலாம்.
கொஞ்ச நஞ்சம் ஏதாவது இருந்தால் அதில் உள்ள சில நல்லவைகளை நினைத்து, பயமொன்றுமில்லை பரந்தாமா, என்று சொல்லி  முன்னேற முயற்ச்சிக்கலாமே !!

No comments:

Post a Comment