Tuesday, November 1, 2016

என் அக்டோபர் காதல்

எனக்கும் அக்டோபருக்கும் ஒரு எழுதப் படாத நட்பு இருந்து கொண்டிருக்கிறது.

- சென்னை வெய்யிலின் தாக்கம் குறையத் தொடங்கும் மாதம் (முன்பெல்லாம்)
- பல பண்டிகைகள் வரும், குறிப்பாக தீபாவளி.
-  இந்த மாதத்தில் நடந்த பல சம்பவங்கள் மறக்க முடியாமல் இன்றும் அசை போட வைத்துக் கொண்டே இருக்கின்றன . 

இப்படியாக அக்டோபர் எனக்கு பிடித்துப் போக பல காரணங்களைக் கூறலாம்.

என் மற்றொரு நண்பன் மழை. நான் எடுக்கும் எந்த ஒரு நல்ல முடிவின் போதும் கண்டிப்பாக ஒரு லேசான மழையாவது வந்து ஆமோதித்தே தீரும் - அனேகமாக அது கன மழையாக இருந்தால் மிகப் பெரிய முன்னேற்றமாகத்தான் இருக்கும். இது நம்பிக்கையோ , எதிர் பார்ப்போ இல்லை. உண்மையில் நடந்தது தான்.

குறிப்பாக அக்டோபர் மழையுடன் சேர்ந்து நிகழ்ந்த ஒன்றிரண்டு சம்பங்கள் மறக்க மறுக்கின்றன

அந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர்  மாதக் கடைசியில், வழக்கமான கூட்டம் தான் இருந்தது வங்கியில். கொஞ்சமும் தலை தூக்க முடியாமல் வேலை செய்து கொண்டிருந்த அப்படிப்பட்ட ஒரு அரிய தருணத்தில் மிகவும் பரிச்சயப் பட்ட குரலின் குட் மார்னிங் கேட்டு தலை நிமிர்ந்தால், நட்பு அதிகமுள்ள ஒரு வங்கி வாடிக்கையாளர் அசாதாரண பதற்றத்தில் இருந்தார். கௌண்டரின் உள்ளே வந்து உரிமையோடு பக்கத்தில் உட்கார்ந்து  ' இப்ப சொல்றது இன்னும் கொஞ்ச நேரத்துக்காகவாவது ரகசியமாக வெச்சுக்கோங்க' என்ற பீடிகையுடன் ' இந்திரா காந்திய சுட்டுட்டாங்க. இறந்து  போயிட்டதா தகவல்-மேலும் டெல்லியிலே ஒரே கலவரமாம் . ஜாக்கிரதையா இருங்க' ன்னு சொல்லிட்டு ஓடியே போயிட்டார். சென்னை சாந்தோமில் உள்ள அவர் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு  இப்படிப் பட்ட சேதிகளை முதலில் ஆராய்ந்து மக்களுக்குச் சொல்லும் அதிகாரம் இருந்ததால் 'உண்மையா' என்று கேட்கத் தோன்றவில்லை.   

கேட்டதை மற்ற நண்பர்களுடன் அதே ரகசியகமாகப் பகிர்ந்த பிறகு வீட்டுக்குப் போக வெளியே வந்தால் செய்தி கசிந்ததற்க்கான ஆதாரங்கள் சில ஷட்டர்கள் மூடும் சத்தத்தால் தெரிந்தன. இதற்க்கு முன் இப்படிப்பட்ட தலைவர்கள் இறந்த போது சென்னையில் நடந்த சில கலவரங்கள் ஞாபகத்துக்கு வர சைக்கிளை மிதித்து அருகிலுள்ள பள்ளிக் கூடத்தில் படிக்கும் எங்க வீட்டுப் பையனையும் அவன் நண்பனையும் கூட்டிக் கொண்டு , கூடவே நான்கு ரேடியோ பாட்டரிகளையும் (கலவரம் நடந்தால் கரண்டு பிடுங்கப்படலாம் என்பதால்) வாங்கிக் கொண்டு பத்திரமாக வீட்டில் சேர்த்த பிறகு தான் கொஞ்சம் நிதானப் பட்டது. 

இதனுடன் நில்லாமல் சைக்கிளை மிதித்து சில நண்பர்கள் தி நகரில் கூடி விவாதித்து விட்டு வீடு திரும் பொழுது பார்த்த வன்முறைகள் இன்றும் பீதி ஏற்படுத்துகின்றன. அப்புறம் தான் தெரிய வந்தது டெல்லி கலவரங்களை நினைத்தால் சென்னை ஒன்றுமே இல்லை என்று.    

அதே அக்டோபர் கடைசி தினத்தில் 2002ஆம் ஆண்டு காலை பொழிந்த பலத்த மழை என்னை அவ்வளவு பாதிக்கவில்லை ஏனென்றால் என் மனமெல்லாம் நான் அன்று எடுத்து வைக்கப் போகும் மிகப் பெரிய அடியில் இருந்தது. கால் நூற்றாண்டுக்கு மேல் ஒட்டி உறவாடிய வங்கிக்கு கையசைத்து விடை கொடுத்து, என் மனதுக்குப் பிடித்த அடுத்த துறையில் வேலைக்கு போகும் முதல் நாள். கொட்டிய மழையைப் பொருட்படுத்தாது ஆட்டோவில் சென்று அந்த அண்ணா சாலை அலுவலகத்தில் நுழைந்தால் அங்கு வேறு விதமான வெள்ளம் - புதிய ப்ரோஜக்டுக்குச்  சேர வந்த நிறைய தலைகள், அன்று தொடங்கும் பயிற்ச்சியில் கொடுத்த 'அறிவுப் பரிமாற்றத்தில்' கிடைத்த லீஸிங் பற்றிய வெள்ளமான விவரங்கள் - இப்படி மூழ்கி இரவு ஒன்பது மணி அளவில் வெளியே வந்தவுடன் தான் தெரிந்தது அன்று நாள் முழுவதும் சுமார் எட்டு மணி நேரத்துக்கு மேல் மழை கொட்டித் தீர்த்து சென்னையை புரட்டிப் போட்டிருக்கிறது என்று. கெஞ்சிக் கூத்தாடி ஒரு ஆட்டோ பிடித்து காலைத் தூக்கி ஸீட் மேல் வைத்தும் நனைந்து (நீந்திக்) கொண்டே வந்த போது இரவு மணி 10.30. அன்று ஏற்பட்ட வெள்ளத்தில் புரண்ட சென்னை சாலையால் பல பஸ்கள் அங்கங்கு நின்று போக , அன்று பார்த்து தன் முதல் நாள் வண்டலூர் கல்லூரியில் பொறியியல் கல்வி தொடங்கிய என் அண்ணன் மகன் , செல் போன் இல்லா அந்தக் காலத்தில் என்ன ஆனான் என்று கவலைப் பட்டு ஒரு வழியாக இரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தது வேற கதை.

இதே போல் 1986 என்று நினைக்கிறேன். கடமைக்கு ஒரு  பணி ஆற்றிக் கொண்டிருந்த போதிலும் என் திருப்திக்காக துரத்திக் கொண்டிருந்த மற்றோரு பணி படித்தறிந்ததை கற்றுக் கொடுப்பது. இப்படி ஆசைப்பட்டு அதற்கொரு மஹானுபாவன் வாய்ப்பளித்த களிப்பில் ஒரு அக்டோபர் மாலையில் வெளியில் வந்தால் வானம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கவலைப் படாமல் வண்டியை உருட்டி வேகத்தைக்கூட்டினாலும் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு அருகில் வந்த பொழுது இனிமேல் என்னால் முடியாது என்பது போல் வானம் மடை திறந்து ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்து என்னையும் முழுமையாக நனைத்தது. சரி , இனிமேல் இப்படி ஈரம் சொட்டும் உடையில் பாடமெல்லாம் எடுக்க முடியாது என்று தைரியமாகப் போன எனக்கு ஷாக் கொடுத்தார் மேலாளர் - 'இன்று நல்ல நாள். வகுப்பை ஆரம்பித்து விடலாம் ' என்று. ஈர சாக்ஸை உலரவைத்து விட்டு வெறும் காலுடன் முழுவதும் நனைந்த பேண்டு, ஷர்ட்ஆங்காங்கே ஜில்லுப்பாக கிசு கிசு மூட்ட எடுத்த முதல் வகுப்பு அனுபவம் ; மிகப் பெரிய வரவேற்பு கொடுத்து மேலும் பதினைந்து வருடங்கள் ஓடியது, மற்றுமொரு மறக்க முடியாத அக்டோபர்  நாள் தான்.

இந்த இனிய உறவின் நினைவு ஒவ்வொரு  அக்டோபர் மாதமும் வரத் தவறுவதில்லை.