Saturday, January 3, 2015

கொண்டாட்டத்தில் தடுமாற்றம்

மனிதனுக்கும் விவாதங்களுக்கும் அப்படி என்ன ஒரு ஒற்றுமையோ, ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அது மதமோ, மொழியோ, பண்டிகைகளோ, கொண்டாட்டமோ , தேசிய விஷயமோ, விஞ்யானமோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக குறைந்தது இரண்டு கருத்துக்களாவது இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

சிலரின் இன்றைய தாபம்: ஆங்கில புத்தாண்டு- கொண்டாடும் முறை; கொண்டாடலாமா கூடாதா?  நமக்கும் , ஆங்கிலப் புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம்?

இருபத்து சொச்ச வயதில், எனக்கு நினைவு தெரிந்து ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட முதல் நினைவு. நெருங்கிய நண்பர்கள் சிலர் அன்றைய ஒரே சானல் உடைய தொலைக்காட்சிப் பெட்டி உள்ள நண்பன் வீட்டில் இரவு பத்து மணியளவில் கூடினோம். அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் அவரின் அம்மாவுக்கு தொந்தரவு இல்லாத ஒலியில் தூர்தர்ஷன் கொண்டாடும் ஒற்றைச் சானல் புத்தாண்டை வரவேற்று, ஒரு ரோட்டுக் கடை டீயுடன் முடித்து பின் சைக்கிளில் வீடு திரும்பினோம்.

பின்னொரு வருடத்தில் நண்பர்களுடன் நள்ளிரவு காட்சியில் ரஜினி படத்தினூடே திரையரங்கம் போட்ட புத்தாண்டு வாழ்த்து ஸ்லைடை  பார்த்து ஆரவாரித்து பின் பெசண்ட் நகர்  நண்பன் வீட்டில் தங்கிக் கழித்திருக்கிறோம்.  

பெரிய குடியிருப்பில்  சொந்த வீட்டில் முதன் முறையாக வந்த ஒரு புத்தாண்டில் சில அண்டை வீட்டாருடன் மெரினா பீச்சில் அமர்ந்து சமோசாவுடன் துவங்கிய ஆண்டுகள் இன்னும் நினைவில் காரமாக இருக்கிறது (தண்ணீர் கொண்டு போக மறந்ததால்)! 

வருடங்கள் போகப் போக ஆங்கிலப் புத்தாண்டுகள் தொலைக் காட்சி முன்னமேயே வரவேற்க்கப்பட்டன. 

பிறகு சில வருடங்கள் சீக்கிரமே தூங்கி பட்டாசு சப்தங்கள் மூலம் எழுப்பப்பட்டு அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் மனைவி, மக்களுக்கு வாழ்த்துச் சொல்லி பின் அமைதியாக தூக்கத்தைத் தொடர்ந்த நாட்களும் உண்டு.

சமீபத்திய ஆங்கிலப் புத்தாண்டு முதன்  முறையாகக் கொஞ்சம் வித்தியாசமாக பக்தி கலந்து ஆரம்பித்தது. 

இப்படியாக வருடங்கள் போகப் போக, வயதென்ற எண் மாற மாற கொண்டாடும் எண்ணமும், முறையும், சிந்தனையும் மாறிக் கொண்டே வருகிறது என்பது என் அனுபவம். இப்படி பலருக்கும், பல விதமான அனுபவங்கள் நிலைமைக்குத் தகுந்து மாறலாம்.

ஆனால் கடந்து போன கிட்டத்தட்ட அறுபது வருடங்களில் ஒரு வருடம் கூட தமிழ் புத்தாண்டை அதிகாலை தீபங்கள் , காய் கனிகளுடன் வரவேற்க்க நான் தவறியதே இல்லை! 

என் குறுகிய அனுபவத்திலேயே இவ்வளவு வேறுபாடுகள் , புத்தாண்டுகளை வரவேற்ப்பதில். இத்தனை வருடங்களிடையே நாம் வானொலியைத் தூக்கி எறிந்து, கருப்பு வெள்ளை பெட்டியை ஒதுக்கி வண்ணத் தொலைக்காட்சிகள் கொஞ்சம் திகட்டி, கணினியில் உலகைப் பார்த்து, இப்பொழுது கையளவில்  நோக்கிக் கொண்டிருக்கிறோம்,  சைக்கிள்களையும், கை ரிக்ஷாக்களையும் சைக்கிள் ரிக்ஷாக்களையும் புறந்தள்ளி, இரண்டு சக்கர வாகனங்களுக்கு மாறி, கார்கள் சாலைகளை அடைக்க விட்டிருக்கிறோம். நாம்  இவ்வளவு மாறியும், நம் கொண்டாட்டங்களின் முறைகள் கொஞ்சம் மாறுபடுவதில் என்ன ஆச்சரியம்?

நம் பழக்க வழக்கங்களும் மாறாமலா இருக்கின்றன- எத்தனை பேர் வீட்டிலோ, அலுவலகத்திலோ ஆங்கில நாளிதழை விடுத்து உள் நாட்டு மொழியில் நாட்காட்டி வைத்திருக்கிறார்கள்? என் மகனுக்கு ஜனவரி 29 என்றில்லாமல் தை மாதம் 15 ஆம் தேதி கல்யாணம் என்று எத்தனை பேர் அழைக்கிறார்கள்? 

எனக்குத் தெரிந்து யாரும் என் மேல் இந்தக் கொண்டாட்ட விதையைத் திணிக்கவில்லை- பின் எது கொண்டாடத் தூண்டுகிறது ? ஜனவரி வந்தால் கையளவு லீவு ஏறியது. இருந்த பணியில் புதிய வருமானங்கள் வந்தன. டிசம்பர் மாதத்தில் சேர்ந்ததால் ஒரு வருடம் கூடி சம்பளம் ஏறி பல வண்ணக் கதவுகள் திறந்தது எனக்குக் கிடைத்த தனி போனஸ். ஏப்ரல் கையளவு தூரத்தில் தெரிய மனம் வருடாந்திர விடுமுறைக்கு ஏங்க ஆரம்பித்தது. கொண்டாடப்பட வேண்டிய சீதோஷ்ண நிலை. மனதைக் கவரும் மார்கழி- இவ்வளவு வரவுகளை ஏன் கொண்டாடக் கூடாது? கொண்டாடினால் என்ன நட்டம்?

நம் வாழ்க்கையே நம்பிக்கையில் தான் நகர்கின்றது என்பது என் எண்ணம். ஒரு வருடம் மாறும் பொழுது - ஆங்கிலமோ, தமிழோ அல்லது பிற மொழியோ- தன்னிச்சையாக தனக்கு ஒரு நல்ல காலம் பிறக்காதா என்று நினைக்கிறான், ஏங்குகிறான் அதற்க்காக அவன் படும் கஷ்ட நிலை பொறுத்து கடவுளை நாடுகிறான். எந்தக் கடவுள் என்பது அவரவர் மதம், நம்பிக்கை சார்ந்த விஷயம் . இந்தச் செயலில் என்ன தவறு?  நிஜமோ இல்லையோ, உண்மையோ தவறோ ஏதோ ஒரு சின்ன புல்லைப் பிடித்து முன்னேற முயல்பவனை ஏன் இப்படி அலைக்கழிக்க வேண்டும்?

இத்தனை ஆட்சேபங்களை எழுப்பும் மக்களும், அவர்களின் தத்தம் மதங்களிலும், பழக்கங்களிலும் கூறப்படும் எல்லா நியதிகளையும் நேரம் தவறாமல் கடைப் பிடிக்கிறார்களா என்று யோசித்தால் கொஞ்சம் தொனி குறையும் என்று தோன்றுகிறது. சட்டென்று நிறுத்தி இன்றைய அவர்களின்  மாதத் தேதியையும், வருடப் பெயரையும் கேட்டால் விளங்கும்.

இப்படிப்பட்டவர்கள் உள்ளூர் மொழிப் புத்தாண்டுக்கு விடுமுறை கூட அளிக்காது வேலை வாங்கும் நிறுவனங்களையும் கொஞ்சம் கேள்வி கேட்டால் நல்லது.

எல்லை மீறாத வரையில் எல்லாம் சுகமே. போதையில் வாகனமோட்டி கண்மண் தெரியாத வேகத்தில் போய் புத்தாண்டுக்கும் தனக்கும் எந்த பந்தமும் கொண்டாடாமல் சாலையில் போகும் தனி மனினைத் தாக்கும் வகையில்  கொண்டாடினால் அது கண்டிக்கப் பட வேண்டியதது தான்.

உறுத்தாமல் , ஒருவரையும் படுத்தாமல், மற்றவர்கள் பாதையில் குறுக்கிடாமல் ஒருவர் தன் பாட்டுக்குத் தன் மனதுக்குப் பிரியமான  செயல்களைச் செய்தும் , வரும் ஆண்டிற்க்காக இஷ்ட தெய்வத்தை பிரார்தித்து சந்தோஷப் படுவதும் , தப்பாகப் படுவது எப்படி என்று புரியவில்லை. இதில் கலாச்சாரம் எங்கு கெடுகிறது என்றும் தெரியவில்லை !

தடுமாறிக் கொண்டே கொண்டாடுவது தவறு. கொண்டாடுவதில் என்ன தடுமாற்றம் ?!

No comments:

Post a Comment