Sunday, November 30, 2014

அன்று சொன்னது

சில நாட்களுக்கும் முன் படித்த செய்தித் தாளில் ஒரு அதிச்சி தகவல் -  "நம்ம வீட்டு சமையலறையில் கூடத் தொடங்கலாம், நாம் மிகவும் பயப்படும் தொற்றுக் கிருமிகள்" என்று !

ஆம், பெருநகரங்களில் சில ஆயிரம் வீடுகளில் விசாரித்ததில், இவர்களில் பெரும்பாலோர் வாரம் ஒரு முறை கூட சமையலறையை கிருமி நாசினி போட்டுக் கழுவுவது இல்லையாம். நிறையப் பேர் மாதம் ஒரு முறை தான் மிகச் சுத்தமாகக் கழுவுகிறார்களாம். 

இதனால் என்னவாகும்? பல வகை வயிற்று நோய்கள் வருமாம். சமையலறை பார்ப்பதற்க்கு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாதாம்- அதை தகுந்த விதமாக சுத்தமும் செய்யணுமாம். இந்த அவசர யுகத்தில் தினமும் இதையெல்லாம் செய்ய முடியாது தான் - அப்படிச் செய்தால் ஒண்ணா நடு நிசிக்கு முன்னாடி படுக்க முடியாது, இல்லைன்னா வெளிச்சாப்பாடு அதிகமாகும். 

ஆனால் குடிப்பதற்க்கு மினரல் பாட்டில் வாங்கும் நாம் இதற்க்கும் பயப்பட்டும், செலவழிக்கவும் வேண்டியது தான்.

இதற்க்காகத்தான் அந்த நாட்களில் பல விஷயங்களை நடைமுறையிலேயே வைத்திருந்தார்கள்.

அந்நாட்களில் உபயோகப் படுத்தும் மண் அடுப்பை தினமும் பசுஞ்சாணி போட்டு மெழுகுவார்கள்- ஏன்னா சாணி ஒரு  மிகச் சிறந்த கிருமி நாசினி. தரையை சாணி போட்டுத் துடைப்பார்கள். சாப்பிட்ட இடத்தை சாணியுடன் , மஞ்சள் தூள் கலந்து துடைப்பார்கள்- பூச்சி எப்படி வரும்?

ஆனால் டைனிங் டேபிள் வராத, தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட காலமது. இப்பல்லாம் சாப்பாட்டு மேசைக்கு வண்ணத் துணியை போர்த்தி, கீழே சிந்தாமல் நாசூக்காக சாப்பிடும் காலத்தில், சாணியை எங்கு மெழுகுவது?

தினமும் வாசலில் நன்றாகக் கழுவியபின்னும் , அரிசி மாவில் கோலம் போட்டு புண்ணியத்தையும் சம்பாதித்து, அதே சமயம் கொத்தித் தின்ன வரும் பறவைகளினால் எந்த பூச்சி பொட்டும் வராமலும் காத்தார்கள். இதையும் மீறி வாசல் கதவு இடுக்குகளில் உள்ள துவாரங்கள் வழியாக ஏதும் உள்ளே வரக்கூடாதென்று, ஒவ்வொரு வெள்ளியும் வாசக்காலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்தார்கள்.

இந்நாளிலோ, வாசக்காலுக்கு மஞ்சள் வண்ண பெயின்ட் அடித்து, வாசலிலும் ஸ்டிக்கர் கோலம் வைத்து விடுகிறோம். ஆனால் சாணி சமாசாரங்களை இன்றும் கடைப்பிடித்தால் பொருளாதாரத் தட்டுப்பாடும், வேலை வாய்ப்புகளும் பாதிக்கப் படும். பெஸ்ட் கன்ட்ரோல் ஆசாமிகள் வந்து கான்டிராக்ட் போட்டு பத்தே நிமிடத்தில் புஸ் புஸ் என்று எதோ அடித்து நாலு மாசம் கழித்து வருகிறேன் என்று சொல்ல முடியாது. இதெல்லாம் உடல் நலம் கருதி ஒத்துக் கொண்டால் கூட, சாணிக்கு எங்கே போகிறது? மாடுகளை பட்டிணத்திலுருந்து நெட்டித் தள்ளிய பால் பூத்துகளில் கிடைக்குமா?

நம் முன்னோர்கள் இந்த மாதிரி பல சமாச்சாரங்களை விட்டுச்சென்றார்கள். என்ன - காரணங்களைச் சொல்லலாமல் விட்டு விட்டார்கள்.  ஏனென்றால் அந்தக் காலத்தில் கேள்வி கேட்காமல் பிள்ளைகள் செய்வார்கள். மேலும் , எதிலுமே ஒரு இலை மறைவு காய் மறைவு இருந்தது. பிற்காலத்தில் பிள்ளைகள் இப்படி முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி வேறென்னல்லாம் சொல்லிருக்காங்க , கொஞ்சம் பார்க்கலாம்:

க்ரஹணத்தின் போது சாப்பிடாதே , வயிற்றைக் காலியாக வை- கதிர் வீச்சுக்களினால் ஜீரணக் கோளாறு வரும் என்று

எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு, விளக்கை அணைத்துப் படுத்து விடுவார்கள், மறுநாள் விடியலில் எழுந்திருப்பதற்க்கு. என்ன அந்தக் காலத்தில் டீ வியும் கிடையாது சீரியல்களும் கிடையாது நம்ம ஊர்ல!  இன்றும் அமெரிக்கர்கள் மாலை ஐந்து மணிலேந்து டின்னர் ஆரம்பிச்சுடராங்க. ஏன்னா, அங்கெல்லாம் காலை ஏழு மணிலேர்ந்தே வாடிக்கையாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் தொடங்கி விடும். லேட்டாவே எழுந்து பழக்கப் பட்ட நம்ம மக்கள், அங்கே போய் ரொம்ப கஷ்டப் பட்டு மாத்திக்கறதாகக் கேள்வி.

தோப்புக் கரணம் - இன்று யோகா வகுப்பில் சொல்கிறார்கள் , காது நுனிகளை மஸாஜ் செய்யும் பயன்களை.

பாழும் நெத்தியோட இருக்காதே - இன்று பல ஆராய்ச்சிகள்  நெற்றியில் பூசப்படுபவைகளின் பலன்களைப் பற்றியும் பொட்டு வைக்கப்படும் அந்த இடத்தின் மகிமை பற்றியும் பல விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றன.

வடக்கே தலை வைத்துப் படுக்காதே - தெற்க்கு , வடக்கு துருவ சமாச்சாரங்கள் தான்

தொடை தட்டாதே - சில வகுப்பினர் இதை மயானங்களில்தான் செய்வதால்.

வெளியில் போகக் கிளம்பும் பொழுது தடுக்கினால் கொஞ்சம் உட்கார்ந்து, தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வது- மனத்தடுமாற்றத்தை சரி செய்து  அமைதிப் படுத்திக் கொள்ளத்தான்.

முதல் நாள் வயிற்றைக் காயப் போட்டால், மறு நாள் கண்டிப்பாகக் கீரை சாப்பிடுவது, காலி வயிற்றில் சுரந்து ஏமாந்து போன அமிலங்களின்  கோபத்தை சரிக் கட்டத்தான். இது போலத்தான், இரவில் கீரை வகைகள் சமைப்பதும், சாப்பிடுவதும்- அஜீர்ணத்தைக் கருதியும், இரவில் சமைக்கும் கீரைகளில் உள்ள பூச்சிகள் கண்களில் படாமல் போகும் வாய்ப்பும் இருப்பதால். கிருபானந்த வாரியாரின் ஒரு உரையில் கேட்டது ஞாபகம் வருது:  "தவிர்க்கப் படவேண்டியவைகள்- இரவில் தயிர், சுடுகாட்டுப் புகை, தன்னை விட மூத்த பெண்களுடன் தகாத உறவு"

அன்று மூத்தோர்கள் சொன்ன பல விஷயங்களை கேள்வி கேட்காமல் செய்தாலே போதும் என்று தான் தோன்றுகிறது.

கண்ணதாசன் சொன்னது போல் "அன்று சொன்னதில் ,நிறைய அர்த்தங்கள் உள்ளது" போல. நம்ப மக்களும் இதெல்லாம் விளக்கிச் சொன்னா கேட்டுப்பானுக. சொல்லத்தான் பல பெரிசுகளுக்கு தெரியவமுல்லை, பொறுமையுமில்லை.

Thursday, November 27, 2014

சொல்லத்தான் நினைக்கிறேன்

ஓரளவு தெரிஞ்ச இங்லீஷை வச்சு இந்தியாவில் எல்லா எடத்துலேயும் ஒப்பேத்திடலாம்னு தான் நினைச்சுண்டு இருந்தேன், சென்னையை விட்டு  நகராத வரை.

1981ல் நண்பர்களெல்லாம் இல்லாமல் தனியாக கல்கத்தா, டெல்லி, ஜெய்பூர், பம்பாய் போன போது, முதன் முறை உறைத்தது. வண்டி விஜயவாடா தாண்டும் வரை எல்லாம் சுகமே. கரக்பூரில்  டீ எவ்வளவு என்று  கேட்டதற்கு கடைக்காரன் என்ன பதில் சொன்னான் என்பது ரயில் கல்கத்தா போகும் வரை புரியவில்லை. ஹௌரா ஸ்டேஷனில் என் அண்ணன் என்னை ஜாமினில் கூட்டிப் போகாமலிருந்தால் அப்படியே சென்னை திரும்பி இருப்பேன்.

கல்கத்தாவிலிருந்து டெல்லி போக ரயிலில் உட்கார்ந்தவுடன்  சுற்றி வர புரியாத பாஷை பேசினதைப் பார்த்து நான் பயந்த போது என் அண்ணன் தான் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தான். அவர்கள் என்னைப் பற்றித்தான், தென்னிந்தியாவையும் சேர்த்து, கொஞ்சம் மோசமாகப் பேசியதை சொல்லவே இல்லை. ராத்திரி பதினோரு மணிக்கு எதற்க்கு 'அண்டா' விற்கிறார்கள் என்பது என் ஹிந்தி பண்டித நண்பன் டெல்லியில் சொல்லத்தான் புரிந்தது.

அதன் பின் 1987ல் காஷ்மிர் பயணத்தின் போது, ஷாலிமார் எக்ஸ்ப்ரெஸ்ஸில் நாங்கள் பட்ட பாடு, இப்பொழுது நினைத்தாலும் அடி வயிறு கலங்குகிறது. நடு ராத்திரியில் சில போலிஸ்காரர்கள் எங்களுக்கு அருகில் சீட்டாடிக் கொண்டிருந்த ஒரு தமிழ் பேசும் வங்கி ஊழியர் கும்பலை சந்தேகத்துடனேயே கேள்விகள் கேட்டு, சில பண்ட மாற்றுகளுக்கப்புறம் தான் விட்டார்கள். நானும் என் நண்பனும் அது வரை பேசிக் கொண்டே வந்தவர்கள், இவர்களின் மிரட்டலைக் கேட்டவுடன், அப்படியே சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டோம் - தூங்கத்தான் இல்லை. பாஷை புரியா விட்டாலும் அவர்களின் மிரட்டலில் விளைந்தது அவ்வளவு திகில் !

83க்கப்புறம் வந்த கிரிக்கெட் ஆர்வத்தால்  தூர்தர்ஷனின் ஒரே சானலில் கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் பொழுது 'அச்சி கேந்த்' புரியாவிட்டாலும் , நேரொளியால் சமாளிக்க முடிந்தது.

குடியரசு தினமோ, சுதந்திர தினமோ தொலைகாட்சியில் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முயன்றும் எந்தப் பலனும் இல்லை. இன்றும் பிரதமரும், ஜனாதிபதியும் யாருக்காக  உரைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 'ஜெய் ஹிந்த்' சொல்லும் வரை காத்திருப்பது வழக்கமாகி விட்டது, அடுத்த நிகழ்ச்சிக்குப் போக

மூஞ்சி புத்தகத்தில் வரும் முக்கிய ஆங்கில செய்தி சானல்களில் போடும் வீடியோக்களிலும் இந்தியிலேயே பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், சண்டை போடுகிறார்கள். எதுக்குன்னுதான் தெரியவும் புரியவும் மாட்டேங்கிறது.

சரி நம்ம ஊர்ல தான் இப்படின்னா, அண்டை மாநிலமான கேரளத்துக்குப் போனா சம்சாரிக்கிறார்கள். ஆந்திராவில் மாட்லாடுகிறார்கள், மஹாராஷ்டிரத்தில் அச்சாவாக 'போல்" என்கிறார்கள்.

இதென்ன கொடுமை. என் நாட்டினுள்ளே,  நான்  இருக்குமிடத்தை விட்டு சில மணி நேரங்கள் போனாலே எந்த பாஷை தெரிய வேண்டும் என்று குழம்ப வேண்டி இருக்கே?

ஒரு சில தென் மாநிலங்களைத் தவிர எல்லா இடத்திலும் ஹிந்தியை வைத்து நடமாட முடியும் போலிருக்கிறது. மக்கள் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும், அதில் எத்தனை கட்டாயம், எது கட்டாயமாக கூடாது என்று இப்பொழுது இருக்கும், இன்னும் வரப்போகும் கட்சிகள் அனைத்தும் உரையாடிக் கொண்டே இருக்கட்டும். நம்ப ஊர்ல மட்டும் பிடிவாதமாக கூடாது என்று சொல்லி தள்ளி வைத்த ஹிந்தியை தெரிஞ்சுண்டால் தான் அடுத்த சுற்றுலாவில் கொஞ்சம் தைரியமாக கடையில் வேண்டியதைக் கேட்டு வியாபாரம் செய்ய முடியும்.  நம்ப வேலையைப் பாக்கலாம், அவர்கள் அவங்க பொழப்ப பார்க்கட்டும்.

ஏன்னா பேசின் ப்ரிட்ஜ் தாண்டினாலே 'வாயிருந்தும் சொல்வதற்க்கு வார்த்தை இன்றி தவிக்க' வேண்டி இருக்கு.


Tuesday, November 25, 2014

மீண்டும் அண்ணா சாலை

மாநகரப் பேருந்து என்ற அன்றைய பல்லவன் புதிய பாதையில் ஸ்மித் ரோடு வழியாக வந்து ,எப்பொழுதுமே கும்பலாக உள்ள இரானியைக் கடந்து,  டீ வீ எஸ் அருகாமையிலுருந்து அண்ணா சாலையில் நுழைந்த போது, பஸ் மட்டுமல்ல, நினைவுகளும் வழுக்கிக் கொண்டு ஓடின- கொஞ்சம் பின்னோக்கி !

1977ல் தொடங்கியது, முதலில் சாப்பாட்டு வேளையில் ஒரு சின்ன உலா. ஆர்ட்ஸ் காலேஜ் வரை சென்று ஒரு கிழவியிடம் வேர்க்கடலை வாங்கத்தான் நேரமிருக்கும், ஆனால் அதை தவற விட்டதே இல்லை. அன்றைய நாட்களில் வங்கிகள் நடத்திய வினோதமான ஒரு மணி ஸ்ட்ரைக் போதும் இந்த உலா கை கொடுத்தது. பகல் வேளை வெய்யிலில் அன்றைய ஸ்பென்சரிலோ அல்லது ஹிக்கின்பாதத்திலோ தஞ்சம்.  பின் ஆபீஸ் முடிந்து எல்லோரும் , ஒரு நான்கைந்து பேர், கிளம்பி பொடி நடையாக சாந்தி தியேட்டர் வந்து அங்குள்ள 'கோபி, டே' என்று வினோதமாகப் பெயர் கொண்ட  கடையில் டீயில் ஆரம்பித்து, நாட்டு நடப்புகளெல்லாம் பேசி அவ்வப்போது வந்து வந்து அக்கடைக்கு வியாபாரம் கொடுத்துகொண்டிருப்போம்.   

என்னவெல்லாம் பேசினோம் - தமிழ்த் திரையுலகம் தொடங்கி, அன்றைய ஆபீஸ் சமாச்சாரங்களை பேசி, சிரித்து, சிலரைத் திட்டி, சிலரை புகழ்ந்து, சிலரை எண்ணி வியந்து, உலக விசயங்களைத்  தொட்டு, கமலா- ரஜினியா, விம்பிள்டன், 83 உலகக் கோப்பை, ருத்ரையா... எல்லாம் அந்த அண்ணா சாலை என்ற அப்பொழுதைய மௌண்ட் ரோட்டில் தான், அண்ணா தியேட்டர் படிகளில் தான், அந்தக் கடை அருகில் தான். சில சனிக்கிழமைகளில்  தியேட்டர்களில் ஐக்கியமானதும் உண்டு. பேச்சு ரொம்ப சுவாரசியமாக இருந்தால் அப்படியே நடந்து வந்து மயிலாப்பூரில் மிச்சமிருந்த நண்பனை பெசந்த் நகருக்கு கடைசி பஸ்ஸில் ஏற்றி விடுவதும் உண்டு. வாகனம், செல் போன் எதுவுமில்லாத அந்த நாட்களில் சரியாக இந்த இடத்தில் அனேகமாக எல்லாருமே வந்தது இன்று ஆச்சரியப் பட வைக்கிறது. வெயிலாவது, மழையாவது எதையுமே பொருட் படுத்தியதில்லை.

எங்கள் கும்பலின் சிலருடைய  எதிர்காலங்களும் இங்கு இப்படித்தான் நிர்ணயிக்கப் பட்டது. CA படித்தவன் ஐ ஐ எம் போனது, ஒருவன் எங்கள் வங்கியை விட்டு மற்றொன்றுக்குத் தாவியது, ஒருவன் பதவி உயர்வில் டெல்லி போனது, இப்படிப் பலப் பல. சிலருடைய குடும்ப சமாச்சாரங்கள், சிலருடைய கல்யாண முடிவுகள், அன்னாரின் பருவ நிலைக் கோளாறுகள், இது படிக்கலாமா வேண்டாமா போன்ற சீரியஸ் விஷயங்கள் எல்லாம் அலசப் பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் அது.

கூட்டம் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கினாலும், என் போன்ற, வேற்றிடம்  போகாத சிலரால் பிடிவாதமாக இந்த நடைபாதையின் பெருமை காப்பாற்றப் பட்டு கடை பிடிக்கப் பட்டது. நடு நடுவில் ஊரிலுர்ந்து மக்கள் சென்னை வந்தால் விவாதிக்கப் படாத ஒரு சந்திக்கும் இடமாகவே அது இருந்தது. 
  
அப்படிப் பட்ட அந்த திவ்ய ஸ்தலத்தை இன்று பார்க்க நேர்ந்தது. சேரனின் சைக்கிள் இல்லாமல், பாட்டு இல்லாமல் ஞ்யாபகம் மட்டும் வந்தது .

டீக்கடை, காலத்துக்கேற்ப மாறி இருந்ததில் ஆச்சரியமில்லை. 
அன்றைய மங்கல் விளக்கு இன்று கண்ணைப் பறித்தது, கூடுதல் விளக்கினாலா அல்லது தேய்ந்து வரும் கண்களினாலா என்று தெரியவில்லை. 
குடித்த டீ விலை ஏறி தரம் இறங்கி இருந்தது! 
வருவோர் கூட்டம் அப்படியே தான் இருந்தது. அந்தக் கடை உள்ள இடம் அப்படி. 

மெதுவாக நகர்ந்து அண்ணா தியேட்டர் பக்கம் போய்ப் பார்த்தால்.......

அதே படிகளில் ஒரு இளைய கூட்டம் அட்டகாசமாகச் சிரித்து , கலாட்டா பண்ணி சந்தோஷமாக இருந்தது. அது எழுந்து மெதுவே நடந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி - அதே கடைக்கு டீ குடிக்க அனைவரும் நுழைந்தது! 

அடுத்த தலை முறை வந்து அந்த சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய சந்தோஷத்துடன் 21 பஸ்ஸில் ஏறினேன், வீடு திரும்ப. கடிகாரம் ஏழு காண்பித்ததுதான் கொஞ்சம் உறுத்தியது. அந்த முட்கள் ஒன்பதை நெருங்காமல் , அந்த இடத்தை விட்டு நகர்ந்ததே இல்லையே!!    

Saturday, November 22, 2014

சென்னையின் வேறு முகம்?

சென்னையின் பெருமைக்குரிய,  'மால்' என்று நாகரீகமாக அழைக்கப்படும் 'துரித' சந்தை அது.

குமுறிக் கொண்டிருக்கும் வானத்தைப் பின் தள்ளி உள்ளே நுழைந்தால், வண்ண மயமான சந்தை வெளியுலகக் கவலைகளை மறக்கடிக்க முயற்ச்சித்துக் கொண்டிருந்தது. எஸ்கலேட்டரிலிருந்து இறங்கியவுடன், வெளியே பத்து ரூபாய்க்கு விற்கப்படும் சமோசாவை நாற்பது ரூபாய்க்கு வாங்கி , ஒரு காலத்தில் தெருக் குழாய்களில் இரு கைகளையும் குவித்து ஆனந்தமாய் பருகும் தண்ணீரை, சுத்திகரிக்கப்பட்டு  தவிர்க்கப் பட வேண்டிய ப்ளாஸ்டிக் பாட்டில்களில் வாங்கி , முதுகுப் பையில் வைத்துக் கொண்டு அவசரமாக இன்னும் சில ரூபாய்களை விரயம் செய்ய விரைந்து கொண்டிருந்தார்கள்.

சமீபத்தில் நாகரீகத்தினுள் நுழைந்த நடுத்தர வர்கத்தினர் இன்னும் பிரமிப்புக் குறையாமல் கழுத்தை சுத்தி சுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டே  நகர்ந்தார்கள். 'எக்ஸார்ஸிஸ்ட்' படத்தில் வரும் பேய்ப்பெண்ணின் கழுத்து இவர்களுக்கு ரொம்ப உபயோகமாக இருந்திருக்கும்

அண்மையில்அமெரிக்காவிலிருந்து திரும்பிய தம்பதியர் அங்கு வாங்கிய தள்ளு வண்டியில் தூங்கும் குழந்தையை வைத்து, இங்குள்ள ஏற்ற இறக்கங்களுக்கு ஈடு கொடுக்கப் பிரம்மப் பிரயத்னம் செய்து கொண்டிருந்தார்கள்.

நெடு நாளைய சீமாட்டிகளோ, தாதிகளிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு முகத்தில் சலிப்புடன் பின் வரும் கணவன்மார்களுடன் சன்னல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். தாதிகள் பஞ்சு மிட்டாய் வண்ணப் புடவையில் கூம்பு ஐஸ்க்ரீமை தனக்கும் குழந்தைக்குமிடையே மாற்றி மாற்றி பகிர்ந்து கையில் வழியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஆக மொத்தம் அனைவரையும் சந்தோஷப் படுத்தும், பல வண்ணங்கள் கலந்த , குறிப்பாக வாரக் கடைசிகளில் தோன்றும் சொர்க்கபுரி உற்சாகத்தில் திளைத்திருந்தது. அங்குள்ள மக்களின் ஒரே கவலை கையிலுருக்கும் ப்ளாஸ்டிக் அட்டையை எங்கு தேய்ப்பது தான் என்பது போலத் தெரிந்தது.

சில நடுத்தர தந்தைமார்களின் பாடுதான் ரொம்ப பரிதாபமாக இருந்தது. 'இதெல்லாம் இங்கே யானை வில சொல்வான் . வெளியில வாங்கிக்கலாம்" என்று சொன்ன புருஷனை , 'அற்பப் பதரே' என்பது போல் ஒரு பார்வை பார்த்து, "ஏங்க கூட்டிட்டு வந்துட்டு பிசு நாரித்தனம் பண்றீங்க" என்று பல்லைக் கடித்த மனைவியை, லீவு நாள் மூடு கெடுக்காமல் அவர் சமாளிக்க முயன்றது பாவமாகவும் , சிரிக்க வைப்பதாகவும் தெரிந்தது !!

சில மணிகளில் கால் வலிக்கத் தொடங்க, வாங்கிய பைகளும் கைகளில் ஏற வீட்டுக்குப் போக வாசல் பக்கம் வந்தால் பெரீய கூட்டம். குமுறல் தாங்காமல் வானம் மடை திறந்து தெருக்கள் வழிந்தோடிக் கொண்டிருந்தன.

பள்ளம் பார்த்து, நெளியும் கூட்டத்தூடே வண்டியைச் செலுத்தும் போது தான் தென்பட்டது அந்தக் காட்சி. பக்கத்தில் வந்த மீன் பாடி வண்டியில் தலையில்  ஒரு ப்ளாஸ்டிக் பையை குடையாக்கி பின்னால் தன் வீட்டம்மாவை உட்கார வைத்து சொட்டச் சொட்ட நனைந்தாலும் சிரமப் பட்டு மிதிக்கும் பெரியவர்.

அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த, மழையிலும் பள பளக்கும் காரை சிரமப் பட்டு முந்த முயன்ற மீன் மாடியை, கார் ஓட்டிய இளைஞர் மழைத் தண்ணீர் உள்ளே வராமல் கொஞ்சமாக கண்ணாடியை இறக்கி, பாப் கார்ன் பையை வெளியே  போட்டு விட்டு "பெருசு, என்ன அவசரம். வண்டில இந்நேரம் கோடு போட்டுருப்பே" என்றார்.

பெரியவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை என்றாலும் அவரின் மெல்லிய புன்னகை " உனக்கென்ன, நனையாமல் உள்ளே இருக்கே. எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் மிதித்தால் தான் நான் வீட்டுக்கே போக முடியம் . அப்புறம் தான் உலை வைப்பதெல்லாம்" என்றது போலிருந்தது.

மழை, வண்டி வித்தியாசம் பார்க்காமல், மறுபடியும் பெய்யத் தொடங்கியது !

Monday, November 10, 2014

என்ன வளம் இல்லை ?

சமீபத்திய ஒரு நெடும் பயணம் கொடுத்த சில 'நிறைவுகள்'.

     பார்த்த இடங்கள்  நிறைய
     மஹாராஷ்ட்ரம் காண்பித்தது நிறைய
     அனுபவித்தது நிறைய
     கற்றுக் கொண்டது நிறைய

பக்தி ரஸத்தினூடே வந்த இடைச் செருகலான சில கலை மற்றும் கை வண்ணங்கள் நெகிழ வைத்தன.

பீமா சங்கர், த்ரையம்பகேஸ்வர் போன்ற கோவில் கோபுரங்களின் சிற்ப வேலைப் பாடுகள்  பிரமிக்க வைத்தன.

பஞ்சவடியில் இலக்குமணன் சூர்ப்பனகையின் அங்க வதம் செய்ததாகச் சொல்லப் படும், நர்மதாவும் கபிலா நதியும் கலக்கும் இடக்குமிடத்தில் உள்ள கல் வெட்டு தத்ரூபம்.

எல்லோரா - - - எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு இடம்.

21 குகைகளில் , பார்த்ததென்னவோ இரண்டு தான். அதற்க்குள் அவ்வளவு பிரமிப்பு, வியப்பு ! எல்லோருக்குமான சிற்பங்கள் இங்கே உள்ளன. ஒரு குகையில் மஹாபாரதக் கதைகள், ஒன்றில் சிவ புராணக் கதைகள், மற்றொரு இடத்தில் சிருங்கார ரசத்துக்கு குறைவில்லாத சிலைகள், கைலாசச் சிற்ப்பங்கள், தசாவதாரக் காட்சிகள் காண்பவரை கை கூப்ப வைக்கிறது. ஜைனக் குகைகளுக்கும் சிலைகளுக்கும் பஞ்சமே இல்லை. சில வேலைப் பாடுகள் மெய் சிலிர்க்க வைத்தன. இப்படி ஒன்றிரண்டு இல்லை, பலப் பல- ஆயிரத்தை தாண்டினால் ஆச்சரியமில்லை.

அவ்வளவு வருஷங்களுக்கு முன் எவ்வளவு பேர் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் ?

விஞ்ஞானம் அவ்வளவாக இல்லாத அந்நாட்களில் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள்?

சில சிலைகளில் உள்ள லேசான புன்னகைகளின் துல்லியம் அதிர வைத்தது ! அனைத்தையும் விட வியக்க வைத்தது, இந்தியாவில் அத்தனை நூற்றாண்டுகளுக்கும் முன்னாலிருந்த கை வண்ணம்.

இவையெல்லாம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் செய்தவையாம். ஆச்சரியத்தில் திறந்த வாய் ஔரங்கபாத் தாண்டும் வரை மூடவேயில்லை.

இந்திய அரசாங்கத்து தொல் பொருள் ஆராய்ச்சி மையம் இதை பாதுகாத்து, பராமரிக்கும் விதம் பாராட்ட வேண்டிய ஒன்று. குப்பைகள் மிகக் குறைவு. பச்சைப் பசேல் புற்கள் தினப்படி கவனிப்புக்குக் கட்டியம் கூறின.

பார்த்த இரண்டு குகைகளில், இருந்த சில மணிகளில் எடுத்ததோ இருநூறுக்கும் மேல்பட்ட புகைப் படங்கள், இருந்தும் மனம் அமைதிப் படவில்லை. ஒரு விதமான அதிர்ச்சியில், பிரமையில்தான் வெளியே வந்தேன். எல்லோருக்காக அமைக்கப் பட்ட, எல்லோருக்கும் ஏதாவது ஒன்று இருக்கும் எல்லோரா , எல்லோராலும் பார்க்கப் பட வேண்டிய ஒன்று.

பண்டரீபுரம், ஆலந்தி போன்ற இடங்களில், சாரி சாரியாக  நடை பயணத்தில் இவ்விரண்டு இடங்களுக்கும் போகும் பக்தர்கள் கூட்டிய பக்தி உணர முடிந்தது.

புண்டரீகநையே   நினைத்துப் பாடி, தன் சரீரத்துடன் மோக்ஷம் போன  துக்காராம் போன்றவர்கள் வாழ்ந்த பூமியில் கால் பதிப்பதிலும் ஒரு பெருமை இருந்தது.

கூட்டம் கூட்டமாக மக்கள் தன்னையும் , தன்னைச் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும் கொஞ்சமும் பொருட் படுத்தாமல் தன்னை மறந்து பஜனை செய்யும் , ஆலந்தி என்ற ஒரு புராதானம் கமழும் இடத்தில் தவழும் பக்தி, அனுபவித்து உணர வேண்டிய ஒன்று.

புண்டரீகனுக்குச் சமைத்த அடுப்பையும், பாத்திரங்களையும் இன்னமும் பாதுகாக்கும் , பண்டரீபுரத்துக்கருகில் உள்ள ஒரு கிராமம். இங்கு தான் கண்ணனைக் கட்டிய உரலும் உள்ளதாகக் கூறுகிறார்கள், ஆனால் ஊர்ஜிதப் படுத்த ஆளில்லை.

மராத்திய மன்னர் சிவாஜிக்கு வாள் கொடுத்து ஆசிர்வதித்த துல்ஜா பவானி கோவிலின் கம்பீரத்தை நேரில் பார்த்தால் தான் உணர முடியும். அது கோவில் போலில்லாமல்  ஒரு கோட்டை போலிருந்தது பக்தியை விட வீரத்தைக் காட்டியதாக இருந்தது.

பூனாவின் மத்தியில் உள்ள கேல்கர் ம்யூசியம் கண்டிப்பாக பார்க்கப் பட வேண்டியதாகும். நாம் அ ன் நாட்களில் உபயோகித்த அனேகப் பொருட்கள் இங்கு பார்வைப் பொருளாக உள்ளது. குளியலரையில் உள்ள அக்கால பாய்லர்கள், தானியம் வைக்கும் பெட்டிகள், பாக்கு வெட்டிகள், திரிகைகள், சேவை நாழி, அந்தக் காலப் பாத்திரங்கள் - இவையெல்லாம் இன்னும் பழசாகவில்லை. ஆனால் சில வருடங்களில் மறக்கப் படும், ஆகையால் பாதுகாக்கப் பட வேண்டியவைகள். நன்கு பராமரிக்கிறார்கள்.

- எல்லோராவைச் செதுக்கிய கலைஞர்கள்
- துக்காராம், மீரா போன்ற பக்திமான்கள்
- பெற்றோர்களுக்காக வீட்டுக்கு வந்த கடவுளையும் காக்க வைத்த பிள்ளைகள்
- பூமியில் நிழல் படாத கோபுரங்களை அன்றே கட்டிய 'வில்லேஜ்  
  விஞ்ஞானிகள்'
- எம்மதமும் சம்மதம் என்று பிற மத குருக்களையும் போற்றி அன்னாரின்
  நினைவுச் சின்னங்களை இன்னும் பராமரித்து வழி காட்டும் தலைவர்கள்
-  நாட்டிற்க்காக சொந்த வாழ்க்கையை அற்பணித்தவர்கள்
- எதுவும் இல்லை என்று பாடும் அதிருப்தியாளர்களிடையே பால் புரட்சியும்,
  பசுமைப் புரட்சியும் செய்தவர்கள்

- இப்படிப்பட்டவர்கள் உள்ள  பூமி இது.

ஒன்றிரண்டு மாநிலத்தைப் பார்த்த வியப்பு இது. இன்னும் இருக்கும் இருபத்தி சொச்சத்தில் உள்ளவைகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை

வெளி நாட்டு மோகத்தில் கடல் கடந்து, மேலோட்டமாக உள்ள இன்பங்களை வைத்து, நம் நாட்டை குறைவாக மதிப்பிடுபவர்கள் யோசிக்க வேண்டியவைகள் இவை.

'என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்' என்ற பாடல்  நினைவுக்கு வந்தது - கொஞ்சம் பெருமையாகவும் இருக்கிறது !


Wednesday, November 5, 2014

எங்கே தேடுவேன்?

கலைவாணர் பல ஆண்டுகளுக்கு முன் பாடினார் " எங்கே தேடுவேன்- பணத்தை எங்கே தேடுவேன்" என்று.

அன்று அவர் தேடியது இல்லாத சமாசாரத்தை.

இன்றோ -  இருப்பது, இல்லாதது, தேடுவது எதற்க்கும் பாதுகாப்பு இல்லை !

உள்ள பொருளை வங்கியில் வைத்தால் மூன்றாவது தெருவிலிருந்து பள்ளம்  நோண்டி அடி வழியாக ஆட்டையைப் போட்டுடறாங்க !

பாங்க நம்பாம சேத்த பணத்த ஃபைனான்ஸ் கம்பேனில போட்டா பணத்தோட கம்பெனியையும் தேட வேண்டி இருக்கு.

கொஞ்சூண்டு பணம் , நகைகளை வீட்ல வெச்சாகூட மூக்குல வேர்த்தா மாதிரி வந்து பட்டப் பகல்லையே அடிச்சுடறான். நகைகளெல்லாம் சேட்டுக் கடையில் தான் சேஃப் என்கிறார் நண்பர் !

மாச முதல்ல சம்பளத்த பஸ்ஸுல பாக்கெட் அடிக்கரதெல்லாம் பழைய கதை ஆயிடுச்சு, சம்பளம் அக்கௌண்ட் க்ரெடிட்டுக்கு மாறினதுக்குப்புறம்.

அவசரத்துக்கு செல் போன் வழியா பாங்க் அக்கௌண்ட் பாலன்ஸ் பார்த்தால், கொஞ்ச நேரத்துல நம்ப அவசர சிகிச்சை பிரிவில், அக்கௌண்ட்ல உள்ளதோ கட்சி மாறி வேறு இடம் புகுந்துடறது.

எசகு பிசகா ஏதாவது கடையில கார்டைத் தேச்சு பொருள் வாங்கினா, வீடு திரும்பினப்புறம், கார்டு மட்டும் தான் உங்க கையில- அத வச்சு பணம் , பொருள் எல்லாம் உருவிடறாங்க.

வீட்டுல இருந்தபடியே உலகத்தச் சுத்திப் பாக்கலாம்னு வலையில போனா , கொஞ்சம் அசந்தாலும் நீங்க போக நினச்ச மாதிரியே உள்ள வேற இடத்துக்குக் கூட்டிண்டு போய், பாஸ்வேர்ட்லேந்து எல்லாத்தையும் கறந்துடறாங்க. நன்றிக் கடனா நாம விஜயம் செஞ்ச இடத்திலேருந்து உபரியா ஒண்ணு ரெண்டு வைரஸையும் வெத்தல பாக்கு போல கொடுத்து, அனுப்பி வெக்கறாங்க.

முக நூல்ல நம்ப நண்பர்கள் மட்டும்தானேன்னு நிம்மதியா உலாவ முடியல்ல. நம்ம ஒண்ணு போட்டா, நடுவுல எவனோ புகுந்து விளம்பரம் போடறான், திறந்த வீட்ல ஏதோ நுழையற மாதிரி.

நம்ம வலையில போய் ஏதாவது தேடினா, உடனே உங்க மூஞ்சி புக் பக்கத்துல அதுக்கான விளம்பரம் உக்காந்துண்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிரத பாத்தா, முக நூல்காரனே நம்மள நோட்டம் உட்ரானோன்னு நினக்கத் தோணுது ! தப்புத்தான் .

மூலல உக்காந்து ஒரு கதை எழுதினாக் கூட எவனாவது சுட்டு படம் எடுத்துடுருவானோன்னு பயம்மா இருக்கு.

வீட்டுக்குள்ளயே உக்காந்து எங்கெயுமே போகாம வலையில படம் பாக்கலாம்னாக் கூட நம்ம வீட்டு வை ஃபை பாஸ்வேர்டை எவனோ உபயோகிச்சுண்டு இருக்கான்.

இப்பல்லாம்  கோவில் வாசல்ல விடற செருப்பு ரொம்ப சேஃப்.

பூட்டி வெச்ச வீடும், போட்டு வெச்ச பணமும், 16 டிஜிட் பாஸ்வேர்டும் தான் அம்பேல் போல !

அய்யயையோ, பக்கத்துல இருந்த மௌஸக் காணும் !