Thursday, September 24, 2015

விழிக்குமா வங்கிகள் ?

சமீபத்தில் ஒரு விசேஷத்துக்கு போன உறவினர் வீட்டில் சாப்பாடு முடிந்தவுடன் வெற்றிலை பாக்கு போடும் இடத்தில் பேசிக் கொண்டிருந்த பொழுது அந்த விசேஷத்துக்கு வந்திருந்த சில அந்தணர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள்- அதில் பாதிப் பேர் எழுபதைத் தொட்டிருப்பார்கள். திடீரென்று ஒரு வயதானவர் ' நீங்க வங்கிலயா வேலை பார்த்தேள்' என்று கேட்டு விட்டு எந்த வங்கி என்றும் கேட்டார். சொன்ன பதிலுக்குக் கூட காத்திராமல் மடை திறந்தால் போல் கொட்ட ஆரம்பித்தார்:

 ' இப்பல்லாம் ஒண்ணும் சரியில்லை. பாங்குக்குக்குள்ள நுழஞ்சதும் முன்ன மாதிரி சிரிக்க வேண்டாம், ஆனா ஏன் வந்தேங்கற மாதிரி  பாக்கரா'.

'கம்ப்யூட்டர் தான் வந்துடுத்தேன்னு பார்த்தா- இன்னும் லேட்டாறது. கோணா மூணான்னு பாஸ்புக்ல என்ட்ரி போட்றா'

' போதாக் குறைக்கு அப்பப்போ கம்ப்யூடர் வேல செய்யலன்னு திருப்பி அனுப்பிசுடறா. ஆத்திர அவசரத்துக்கு நம்பி போக முடியல . முன்னெல்லாம் நிறைய பேர் இருப்பா. இப்பல்லாம் எண்ணினாப் போல தான் இருக்கா. ஏன் இப்பல்லாம் ஆளே எடுக்கறதே இல்லையா" என்றார்.

இன்னும் ஒரு முதிர்ந்தவர் ' என் கணக்குலேர்ந்து மாசா மாசம் ஒரு அம்பதோ, நூறோ எடுத்துண்டே இருந்தா- என்னன்னு கேட்டா செக் புக் சார்ஜுன்னு சொன்னா. நான் இத்தனை வருஷமா செக்கு  வாங்கினதே இல்லயேன்னு சொன்னதும் , இனிமே எடுக்காம பாத்துக்கறேன். ஆனா இதுவரைக்கும் புடிச்சதை ஒண்ணும் பண்ண முடியாது'ன்னுட்டா.

வந்துதே கோபம் , மானேஜர் ரூமுக்குப் போய், என் மருமான் ரிஜர்வ் பாங்கில பெரிய இடத்துலதான் இருக்கான், நான் அவனண்ட சொல்ரேன்னு அவன் பேரையும் சொன்னப்புறம், மறுநாளே அந்தப் பணம் அக்கௌண்ட்ல திரும்பி வந்துடுத்து" என்றார்

நான் கிளம்பும்போது அவர் கேட்ட கேள்வி செவிட்டில் அறைந்து சிந்திக்க வைத்தது " டெப்பாஸிட் வரலேன்னா இப்படியெல்லாம் பண்றாளே இப்பெல்லாம். பாங்கு அவ்வளவு மோசமாவா இருக்கு? என்ன மாதிரி எத்தன பேருக்கு மருமான்கள்  வங்கிகள் பயப்படும் இடத்தில் இருக்கா? அப்ப அவர்கள் கிட்டேந்து இப்படித் தப்பு தப்பா புடிக்கறதெல்லாம்  அவ்வளவு தானா? எதற்க்கு இப்படி ஏமாத்தி பொழைக்கணும்"னு பொறிந்து தள்ளி விட்டார்.

ஒரு கஸ்டமர் மீட்டிங்கில் இருந்தது போல் போல் தெரிந்தாலும்  அது ஒரு சாதாரண மனிதனின் உண்மையான குமுறலாய்ப் பட்டது. 'அதுக்கப்புறம் அக்கௌண்டை க்ளோஸ் பண்ணி வேற தனியார் பாங்குக்கு மாத்திட்டேன்' என்றவுடன், புரிந்தது, பொதுத் துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஏன், எப்படித்  தள்ளி போய்க் கொண்டிருக்கிறது என்று.

வந்த கம்ப்யூடர் எல்லாம் ஊழியர்களைத் தாண்டி வாடிக்கையாளர்களைத் தொடவே இல்லையா, இல்லை தொட்டது போதவில்லையா?

படித்த வாடிக்கையாளர்களுக்குக் கம்ப்யூடர் மூலம் வந்த நன்மைகள் எல்லாம் இப்படிப்பட்ட பாமர மக்களுக்கு போய்ச் சேரவே இல்லையா ?

இவை எல்லாம், என் கண் முன்னே நடந்த -கொஞ்சமும் கற்பனையோ பொய்யோ இல்லாத உண்மைச் சம்பாஷணைகள் என்பதால் அந்தக் கோப வார்த்தைகளின் தாக்கம் அதிக நேரம் என்னுள்ளே இருந்தது. முன்பெல்லாம் இருந்த ஆனால் இப்பொழுது கிடைக்காத அன்பான வரவேற்பு, வங்கிகள் சரியாகப் போகவில்லை என்ற வதந்திகள், வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து தவறான முறையில் பணத்தைக் கறக்கிறார்கள் என்றெல்லாம் எண்ண வைத்திருக்கிறது. அவ்வளவு வயதானவர்கள் பொய் சொல்வதற்கு எந்தத் தேவையுமில்லை என்றே தோன்றியது. ஏதோ சொல்வதற்க்கு இடமில்லை, கேட்பதற்க்கு ஆளும் இல்லையாததால் கிடைத்த சந்தர்பத்தில் கொட்டி விட்டுப் போகிறார்கள் போலும்!

க்ளாஸ் பாங்கிங்கில் இருந்து மாஸ் பாங்கிங் போவதாகச் சொன்ன இந்த வங்கிகள் இப்பொழுது தங்கள் மேல் அதே மாஸ் இவ்வளவு  மாசு கற்பிக்கும் அளவிற்க்கு விட்டதற்க்கு யார் காரணம் என்று எண்ணிப் பார்க்கிறார்களா?

மாஸ் பாங்கிங்குக்கு கிளாஸ் தேவையில்லை என்று யார் முடிவெடுத்தது ?

ஹை க்ளாஸ் மக்கள் வங்கிகளைக் கடனுக்கு மட்டுமே அண்டி பின் 'வாராக் கடன்' என்ற செல்லக் குழந்தையை விட்டுச் செல்கின்றன.  ஆனால் எதுவுமே அதிகம் அறியாத , அதிக எதிர்பார்ப்பு இல்லாத இப்படிப்பட்ட 'மாஸ்' தான் வங்கிகளின் ஆணி வேர் என்பதை எப்பொழுது பொதுத்துறை வங்கிகள் உணரப் போகின்றன?

வங்கி நிர்வாகங்கள் வாராக் கடனுக்கு  மட்டும் ஊழியர்களை பயமுறுத்தாமல், இந்தப் பக்கத்தையும் கவனிப்பதும், வாராக் கடன் என்பது வங்கிகள் தெரிந்தோ, தெரியாமலோ, எந்த அழுத்தத்தினாலோ கொடுத்து செய்த தவறுகள். ஆனால்  வங்கிகள் தேற, கரையேற இப்படிப்பட்ட சாதாரண மக்கள் இன்னும் முக்கியம் - உணருமா?

பெரும்பொழுதில் தூங்கிக் கொண்டே இருந்து ஆனால்   எழுந்திருக்கும் கொஞ்ச நேரத்தில் மக்களுக்கு நன்மை அளிக்கும் வாஸ்து புருஷன் போல , வங்கிகள் விழிக்குமா, விழித்தாலும் உதவுமா? சாதாரணர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!

Thursday, September 17, 2015

நியூ ஜெர்ஸி- பார்த்ததும் பதிந்ததும் (இதுவரை)


  • மதிப்போ , பயமோ - சாலை விதிகளுக்குப் பணிகிறார்கள்.
  • வண்டிகள் தமக்குக் கொடுக்கப்பட்ட பாதைகளில் அசுர வேகத்தில் போகின்றன , ஆனால் பாதை மாறி ஆட்டோ போல் போவதை  இன்னும்  பார்க்கவில்லை
  • பாதசாரிகளுக்குத்தான் முன்னுரிமை, அவர்கள் தவறே செய்தால் கூட.
  • சாலைகளைக் குறுக்கே கடந்து ஓடுபவர்களையும் பார்க்க முடிந்தது- இதிலும் நம்மவர்கள் தான் அதிகம் என்பது தான் கொடுமை!
  • பாதசாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நடைபாதைகளின் அகலம் பொறாமைப் பட வைக்கிறது.
  • விதிகளுக்குப பணிந்தால் பயமில்லை. ஆனால், விதிகளை மதிக்காதவர்களுக்கு இடமில்லை 
  • நான் பார்த்த வரை , அனேகமாக கார் ஓட்டுவதில் , அதிகம் பேர் பெண்மணிகள் தான்
  • நடைபாதைகளில் நடப்பவர்களைத் தவிற நிறைய மூட்டைகள் தெரிகிறது - குப்பை !
  • குப்பை சேகரிப்பதிலும், அள்ளுவதிலும் ஒரு ஒழுங்கு முறை தெரிகிறது.
  • கொஞ்சம் பிரயத்தனப்பட்டுத் தேடினால் , நடைபாதைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களும், பிஸ்கோத்துக் கவர்களையும் காணலாம்.
  •  குழந்தைகளை பிறந்தவுடனே தள்ளி வைத்து விடுகிறார்கள் - நடக்கும் போது தள்ளு வண்டியில், காரில் பின்புறம் தனி சீட்டில்- அப்பா, அம்மாவின் வாசனையையும் , கதகதப்பையும் குழந்தைகள் எப்படி உணரும்? முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெருகுவதில் என்ன ஆச்சரியம்?
  • நாயாகப் பிறந்தாலும் அமெரிக்காவில் தான் பிறக்க வேண்டும் - அவ்வளவு அனுசரணை, பராமரிப்பு
  • அன்பை வெளிப்படுத்தத் தயங்குவதே இல்லை - ஏர்போர்ட் எஸ்கலேட்டரிலோ, நடை பாதையிலோ, ஓடும் ரயிலிலோ - அன்பு பெருக்கெடுத்தால் தயங்காமல் கன்னத்தில் பதித்துக் கொள்கிறார்கள்.
  • கொஞ்சூண்டு தொப்பையை வைத்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க மெரினாவில் ஓடும் நம்ம ஊர்க்காரர்கள், இங்கு இருப்பவர்களைப் பார்த்தால் நிம்மதி அடைவார்கள். அவ்வளவு அபரிதமான உடல் வளர்ச்சி - கவலை படுவதாகத் தெரியவில்லை- பீட்ஸாக்களையும், ஐஸ்க்ரீம்களையும் விட்டு வைப்பதில்லை .
  • நன்றி சொல்லவோ , வாழ்த்துச் சொல்லவோ யோசிப்பதே இல்லை - மாலில் நாம் வாங்கிய பொருளுக்குப் பணம் கொடுத்தாலோ, எதிரே வரும் பொழுது வழி விட்டாலோ எதுவாக இருந்தாலும் சரி.
  • நம்மூர் போல 'ராத்திரியெல்லாம் ஒரே சளி, எதாவது மாத்திரை கொடுங்க'ன்னு பார்மசியில் கேட்டு மருந்து வாங்குவது கடினம்.
  • எதெற்கெடுத்தாலும் பொசுக் பொசுக்கென்று 911 கூபிட்டு விடுகிறார்கள்- அவர்களும் உடனே வருவதுதான் ஆச்சரியம்.
  • பள்ளிக்கு உள்ளே போகும் வரை அனேகமாக எல்லா குழந்தைகளும் செல் போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
  • கையில் உள்ள பானத்தை உறிஞ்சிக் கொண்டே, இயர் போன் உதவியுடன் பேசிக் கொண்டே விறுவிறுவென நடக்கும் பலரைக் காண முடியும்.
  • அப்பொழுதுதான் ஆபிஸிலிருந்து திரும்பிய அப்பாக்கள் , பேக் பாக்கைக் கூட கழற்றாமல் குழந்தையை  பார்க் ஊஞ்சலில் வைத்து ஆட்டும் பொழுது, பத்தடி தள்ளி இளம் மனைவிகள் தத்தம் இந்திய அம்மாக்களுடன் நாளைய பிள்ளையார் சதுர்த்திக்கு எப்படி கொழுக்கட்டை பண்ணுவது என்று அறிந்து கொண்டிருக்கிறார்கள்.  
       - - - இன்னும் வரும்