Tuesday, November 19, 2013

தந்தையின் தாலாட்டு

அந்த பட்டை உரிக்கும் வெய்யிலில் நாங்கள் சென்னை ஆள்வார்பேட்டை சிக்னலைக் கடந்து நடந்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கு. எந்தவிதச் சட்டக் கட்டுப் பாடும் இல்லாத அந்த நாட்களில் அப்பொழுதுதான் சொல்லி இருந்தார்கள், எங்களுக்குப் பிறக்கப் போவது ஒரு பெண் குழந்தை என்று.

எங்களுக்கு எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாததால், அந்தக் கால சூழலுக்கு மாறாக, ஒரு சந்தோஷம் தான் நிலவியது. பலர் நம்ப மறுப்பார்கள் ஆனால் உண்மையென்னவோ அப்பொழுது தோன்றிய ஒரு எண்ணம் 'இந்தப் பெண் நம் வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு ஒரு நாள் போகத்தான் போகிறாள்' என்று. அந்தப் பாலம் வரும்பொழுது கடந்து கொள்ளலாம் என்று அவசரமாக தலையை உலுக்கி அந்த எண்ணத்திலிருந்து விடுவித்துக் கொண்டேன்.

ஒரு பிள்ளையைச் செல்வம் என்பது ஏன் என்பது அது வளர வளர்த்தான் புரியும். அது முதலில் மல்லாந்து கொண்டே சிரிப்பது, பின் குப்புறப் படுத்து தலையைத் தூக்கிப் பார்ப்பது, நகர முயற்ச்சித்து முடியாமல் வாழ்க்கையின் முதல் தோல்வியில் துவண்டு வாய் கோணி அழுவது, பின் மற்றவர்களின் உந்துதலால் முன்னேறி விசுக் விசுக்கென்று அடி வயிற்றால் முன்னேறி துறத்தும் தாயை ஒட வைப்பது, தத்தி தத்தி நடக்க ஆரம்பித்ததும் தகப்பனுக்கு ஒட்டப் பரீட்சை வைத்து மூச்சு வாங்க வைப்பது, யாரும் பார்க்காதபோது கீழே கிடப்பதை வாயில் போட்டுக் கொள்வது - இது போன்ற எத்தனையோ விளையாட்டுக்களை ஒவ்வொன்றாக நடத்தி காட்டி , இன்பத்தை ஒரு வங்கிக் கணக்கு போல் சேமிப்பதாலோ அதற்க்குச் செல்வம் என்று பேர் வந்தது? இதையெல்லாம் அனுபவிக்காத பெற்றோர்கள் செல்வத்தை சிட் பஃண்டில் போட்டவர்கள் போலாவார்கள் !

என் பெண்ணை ஒவ்வொரு நிலையிலும் அருகிலிருந்து பார்த்து அனுபவித்த பாக்கியம் எனக்குக் கிட்டியது. எல்லா பொம்மைகளுடனும் விளையாடியது, ஊட்டி, கோடை பார்க்குகளில் ஓட விட்டது, படகு சவாரி செய்தது, கை பிடித்து ஸ்கூலிலுருந்து அழைத்து வந்தது, சாயந்திரம் அழைத்துவரச் செல்லும்போது உள்ள ஒரு எதிர்பார்ப்பு, கசங்கிய யூனிபாஃர்ம் கன்னத்து அழுக்குடன்  என்னைப் பார்த்ததும் பளீரென்று சிரித்தது- தனி சுகம்.

இன்று போலிருக்கு- முதன் முதலில் பென்ஸில் பிடித்து எழுத வராமல் அவள் அழுத போது, நானும் அவளை விடக் கீழிறங்கத் திட்டியது - இன்று அவளின் அச்சுப் போன்ற கையெழுத்தைப் பார்த்தால் என் அன்றைய கோபம் இன்று என்னை வெட்கப் பட வைக்கிறது.

அவளுடன் உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுதியது, எல்லாப் போட்டிகளுக்கும் அவளைத் தயார்  செய்தது- கொன்றை வேந்தன் எல்லா வரிகளையும் அலட்சியமாகச் சொல்லி முடித்து பரிசு வாங்கி வந்தவுடன், பரிசின் அருமை தெரியாமல் அவள் சாக்லேட் எங்கே என்று கேட்டது- இன்று இனிக்கிறது .

இன்றைய தலை அஜீத் கையால் அன்று பரிசு வாங்கிய பெருமை இன்று தான் அவளுக்கு உறைக்கிறது !!

இந்தக் கடுமையான போராட்டங்களுக்கிடையில் அவள் எப்பொழுது என் குழந்தையிலிருந்து என் நண்பி ஆனாள்?

அவளின் கடினமான நேரங்களில்  கண் கலங்கியவளை நான் அணைத்த போதா?

கூட நடந்து வரும் போது அறிவுரை சொல்லாமல் அவளைப் பேச விட்ட போதா?

அவள் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்து அனுசரித்துப் போன போதா?

அவளை ஒரு அப்பாவுக்கு பயப்படும் பெண்ணாக இல்லாமல் , ஒரு நல்ல தோழமைக் கூட்டணியாக நடத்திய போதா?

எப்படியோ தெரியாது. ஆனால் இவற்றினூடே  எப்பொழுதோ நான் பிடித்துக் கொண்டிருந்த விரல் மாறி என் விரல் அவளின் கையில் தஞ்சமான அன்று எனக்கு ஒரு சினேகிதி கிடைத்தாள்.

ஒரு வளர்ந்த பெண் பெற்றோருக்கு ஒரு வரப் ப்ரசாதம். எல்லா விஷயங்களிலும் கலந்து பேசிக் கொள்ளலாம்.

அவளின் புரிதல் அபீசிலிருந்து வந்த நான் அசதியுடன் எதுவும் பேசாமல்  சாய்வு நாற்காலியில் பாதி கண் மூடி  இருக்கும்போது கால் அமுக்கி விட்டு  " ஆபீஸில் ஏதேனும் ப்ரச்சனயா" என்ற கேள்வியில்  தெரிந்தது.

அவளின் அக்கறை , கேலிக்காக நான் முதியோர் இல்லம் பற்றிய விளம்பரங்களை ஊன்றிப் படிக்கும்போது வரும் கோபத்தில் தெரிந்தது.

அவளின் குழந்தைத்தனம், என்னை டைனிங் டேபிள் சுற்றி விரட்டியதில் தெரிந்தது

திருமணப் பேச்சு ஆரம்பித்தபின், அவள் முகத்தில் தெரிந்தது கவலையா, வரப்போகும் பிறிவினால் ஏற்ப்படும் சோகமா என்று தெரியாமல் மறைப்பதில் புத்திசாலித்தனம் தெரிந்தது.

திருமணம் முடிந்து அவளைப் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கார் நகர்ந்தபின் தான் எனக்குப் புரிந்தது- நான் இத்தனை நாளாக "வந்த பிறகு பார்த்துக் கொள்வோம்" என்ற அந்தப் பாலம் விச்வரூபமெடுத்து என் முன்னே நிற்கிறது என்று !

இந்த உலகிலேயே  ஒருவர் ஒரே நேரத்தில் சந்தோஷத்தின் உச்சியிலும், சோகத்தின் பிடிப்பிலும் இருப்பார் என்றால் அவர் பெண்ணைப் பெற்றவராகத்தான் இருக்க முடியும்.

தன் மாப்பிள்ளையிடம் பெண்ணை அறிமுகப் படுத்தி, கோத்ரம் மாற்றி கன்னிகாதானம் செய்யும் பொழுது, ஒரு தகப்பன் பெருமையின் உச்சிக்குச் செல்கிறான்.

இது நடந்த உடனே பெண் தன் வீட்டை விட்டு கணவனுடன் போகும்பொழுது பேச்சு வராமல் போகிறான்.

இதற்க்குப்பின் அவன் வாழப் போவது இது வரை வாழ்ந்த நினைவுகளிலும்,  இனி வரப் போகும் தன் பெருந்செல்வத்தின்  வாழ்க்கைக்காகவும்தான்.







Friday, November 1, 2013

புஸ்ஸாகும் தீபாவளி

எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து, ஒரு வருஷத்தின் பெரிய பண்டிகையே தீபாவளிதான். ஒரு மாசத்துக்கு முன்னாடியே பட்டாசு லிஸ்ட் போட ஆரம்பித்து, ஒரு க்ளயன்டுக்கு அனுப்பும் ரிபோர்ட் போல் பல முறை ரெவியூ பண்ணி, பின் அப்பா அனுமதிப்பதென்னவோ பத்து ரூபாய் தான்- ஆனால் அதில் கிடைக்கும் கை/பை நிறைய பட்டாசுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

வழக்கமாக நவராத்ரி லீவில் மைலாப்பூரிலேயே உள்ள ஒரு கடையில் துணி வாங்கி, தேரடி பக்கத்தில் உள்ள பாபு ராவிடம் கொடுத்தால் அவர் தீபாவளிக்கு இரண்டு நாள் முன் பேண்ட் என்ற பேரில் ஒரு பாவாடை தைத்துக் கொடுத்தாலும், முகம் கோணாமல் சந்தோஷமாக உடுத்துவோம்.

தீபாவளிக்கு முந்தைய இரவு தூங்கவே மாட்டோம். அண்ணா, அக்காக்களுடன் குளிருக்கு (ஆம் அப்பல்லாம் நவம்பரில் குளிர் உண்டு- இந்த மாதிரி வெய்யில் கிடையாது) போத்திக் கொண்டு மறு நாள் வெடிக்கப்போவதை மனசுக்குள்ளேயே ரிஹர்ஸல் பண்ணுவோம்.

காலை ரெண்டு மணிக்கு அரக்கப் பரக்க எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து (அப்படின்னா?), எல்லா பட்டாசையும் கரியாக்கிய பின் தான் வீட்டுக்குள்ளே வருவோம். இதற்க்கு நடுவில் வாசலில் நாதஸ்வரம், மேளக்காரர்கள் வந்து மங்கள வாத்யம் வாசிப்பார்கள். அதற்க்குப்பின், இட்லி, பஜ்ஜி சாப்பிட்டு விட்டு தெரிந்த சொந்தக்காராள் வீட்டுக்கெல்லாம் போய்ட்டு ஒரு மணிக்குத் திரும்பும் போது நல்ல பசி இருக்கும்.

காலைப் புகை இந்நேரம் நல்ல தொண்டை எரிச்சல் ஏற்ப்படுத்தி இருந்தாலும், மிச்ச சொச்ச சரங்களை ஒவ்வொன்றாக உதிர்த்து வெடித்து  இரவு சொக்கப் பனை முடியும் பொழுது, துக்கம் தொண்டைய அடைக்கும்- தீபாவளி முடிந்ததுக்கா இல்லை மறுநாள் ஸ்கூலுக்கா என்று தெரியாது. சில சமயங்களில் அன்று இரவு ஒரு நைட் ஷோவுடந்தான் தீபாவளி முடியும்.

இப்பல்லாம் இதில் ஒன்றுமே கிடையாது- இன்று காலை ஐந்து மணிக்கு ஒரு பட்டாசு சத்தம் கூட கேக்கல்ல. ஏன் இப்படி நம் பாரம்பரியப் பண்டிகைகள் களை இழந்து போகின்றன?

முதல் காரணம் ஆபீஸ்.  தீபாவளிக்கு ஒரே நாள் தான் லீவு. பாதி பசங்க வெளியூர்லேந்து டிக்கட் வாங்கர தொந்தரவுக்காகவே ஊருக்கு வருவதில்லை. மேற்கு வங்காளத்தில் பூஜாவுக்கு 4 , 5 நாள் லீவு விடறாங்க. வெளிநாடுகளில் க்ரிஸ்மஸுக்கு 15 நாள் முன்னமேயே மெயில் பக்கம் போகவே மாட்டேங்கராங்க. ரம்ஜான்போது அரபு நாடுகள் எல்லாமே தொழில்களை முடக்கி தத்தம் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றன.

 நம்ம தீபாவளி, பொங்கலைத் தான் யாரும் மதிப்பதில்லை போலிருக்கு. நம்ம ஊர் பசங்கதான் சொல்லணும் இந்த நாள்லெல்லாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆபிஸ் வரமாட்டேன்னு. ஒண்ணும் குடி முழுகி விடாது, இந்தப் பண்டிகை கொண்டாடாதவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கொஞ்சம் முன்யோசனை தான் தேவை அது இருந்தால் சமாளிக்கலாம்.

என்னமோ இந்தப் பட்டாசினால் தான் மாசு கெட்டுப் போயிடுவது போல ஒரு கும்பல் கிளம்பிடுது. நாம் ரோட்டில் போடும் பேப்பர்களும், ப்ளாஸ்டிக்குகளும் மறந்து விடுகின்றன.

 இந்த சத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். ஏன் நம்ம ஊரில் வாகனங்கள் போடதா சத்தமா, விடாத புகையா. இதற்க்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் வேற.

இப்பல்லாம் கார்த்தால 5 மணிக்கு எழுப்பினாலே பசங்க ஏன் இவ்வளவு சீக்கிரம்னு திட்றாக. எழுந்ததுக்கப்புறம் முகனூல்ல வாழ்த்துக்கள். அதுக்கப்புறம் லேகியம் உண்டோ இல்லையோ, பட்டி மண்டபம் உண்டு. அதுக்குப்பின்னால் அப்படியே உட்கார்ந்த படியே டீ வீல படம் , படம் , படம் தான். போதாததுக்கு கிரிக்கெட் மாட்ச் இருந்தா கேக்கவே வேணாம்- நாளைக்குக் கார்த்தால மூடு இன்று மாட்ச் ரிசல்ட் பொறுத்துத் தான்.

இக்கால இளசுகளே- விழித்துக் கொள்ளுங்கள். நம் பாரம்பரிய பண்டிகைகளை முறைப்படி, அமைதியாக, சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்- எதற்க்காகவும் இவற்றை விட்டுக் கொடுக்காதீர்கள். பண்டிகை நாட்களில் லேப்டாப்பைத் திறக்காதீர்கள். டீ வீ போடாதீர்கள். குடும்பத்தாருடன் நிறைய பேசுங்கள். உறவினர் வீட்டுக்குச் செல்லுங்கள்.  நம் நாட்டில் சுதந்திரத்திலிருந்து, சம்பள உயர்வு  வரை எதுவுமே போராடமால் கிடைக்கவில்லை. இதற்க்கெல்லாம் அமைதியாக, அற வழியில் போராடுங்கள். அப்பத்தான் உங்க பிள்ளைகளுக்கும் இவையெல்லாம் மறக்காமல் இருக்கும்.

 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்