Monday, December 24, 2012

வைகறை வெளிச்சம்


ஒரு மணி நேரத்துக்கு முன் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவம் - மார்கழிப் பொங்கல் போல் சுடச் சுட இங்கே.

இன்று காலை 4 மணிக்கு எழுந்து, மெயில் பார்க்காமல் குளித்து, சிற்றஞ்ச்சிரு காலே  நாராயணனையும்  அண்ணாமலையானையும்  போற்றிவிட்டு, கோவிலுக்குப் போக   ஸ்கூட்டியை திருகியபோது போது மணி 6. இன்னும் இருள் பிரியாத நேரம். பனிக் காற்று காதில் புகுந்து குறுகுறுக்க, மயிலையின் சின்ன தெருக்களில் பயணம். சில வீட்டு வாசல்களில் மாமிகள் பலர் , பனியிலுருந்து காத்துக் கொள்ள தலைக்குத் துண்டு சகிதம்,வித விதமாக வண்ணப் பொடிகளில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.சாணியில்  பரங்கிப்பூ வைக்காவிட்டாலும் இந்தப் பழக்கத்தை விடாமல் செய்வது எனக்குப் பிடித்தது. கொடி தூக்கி, மேடை ஏறி முழங்கும் பெண்களை விட  நம் பாரம்பர்யத்துக்கும் கலாச்சாரத்துக்கும்  இவர்கள் அதிகம் செய்கிறார்கள் என்று தோன்றியது.ஒரு வீட்டு வாசலில் சிவப்பில் பெரிய கோலம்- பார்த்தால் க்ரிஸ்துமஸ் தாத்தா. அருமை- கோலமும், ஐடியாவும்!

சென்னை கார்ப்பொரேஷனின் கடமை உணர்ச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எல்லா நாட்களிலும் ஏழு மணி வரை எரியும் தெரு விளக்குகள் மார்கழியில் மட்டும் காலை ஐந்து மணிக்கே காணாமல் போகிறது. கோலம் போடும் மாமிகளையோ ஏன் திருவாதிரைக்காக உலா வரும் மாணிக்கவாசகரைக் கூட கிட்டே போனால்தான் பார்க்க முடிந்த்து- அவ்வளவு இருட்டு. பின்னவருக்காவது தீவட்டி இருந்தது, மாமிகளுக்கு தீவட்டித் தடியன் கூட இல்லை.

ஆனால் அந்த அறைகுறை வெளிச்சத்தில் பல்லக்கில் ஸ்வாமி, மந்திரம் ஓதும் பஞ்சகக்ச மாமாக்களுடன், சாம்பிராணி புகையூடே பிரமாத தரிசனம். மாணிக்கவாசக ஸ்வாமிகள் பல்லக்கைச் சுமந்து வந்த்ததில் ட்ராக் சூட்டில் மூன்று இளைஞர்கள்-சிலிர்த்துப் போனேன், ஆனால் இந்தச் சிலிர்ப்புக்கு காரணம் மார்கழி அல்ல.
 

எனக்கென்னவோ என் மயிலை தான் உலகில் வாழச் சிறந்த இடம் என்று தோன்றியது அவரவருக்குத் தான் வாழும் இடம் தான் வைகுண்டம், கைலாசம் எல்லாம் - காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.

யார் சொன்னது இந்தக் காலஇளைஞர்களுக்குப் பொறுப்பில்லை என்று- கொடுத்துப்பாருங்கள் தெரியும் அவர்களது அக்கரையும், ஸ்ரத்தையையும். மார்கழிக் கோலத்தில் க்ரிஸ்த்மஸ் தாத்தா போடும் பெண்ணும், ட்ராக் சூட்டில் ஸ்வாமி பல்லக்குத் தூக்கும் இளைஞர்களும் எதிர் கால இந்தியாவுக்கு நிறைய நம்பிக்கைத் தருகிறார்கள். வருங்காலத்தில் கோவிலுக்கும் மசூதிக்கும் சண்டை போட்டுக்கொள்வார்கள் என்று தோன்றவில்லை. இவர்கள் புரிந்தவர்கள் எது தேவை, எது வீண் வம்பு, என்று வறையறுத்துக் கொள்வார்கள். இந்தச் சமுதாயத்துக்கு அரசியல் விளையாட்டுகளுக்கு நேரம் இருக்காது. .அந்த அரைகுறை இருட்டிலும், இந்தியாவின் எதிர்காலம் மட்டும் இவர்கள் முகத்தில் பளிச்சென்று தெரிந்தது.

Thursday, December 20, 2012

என்ன விலை?


முன்பெல்லாம் சின்னப் பையனா இருந்த காலத்தில் எனக்கும் நண்பர்கள் வட்டம், அரட்டை, ஊர் சுத்துதல் எல்லாம் இருந்திருக்கு. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்தவுடன், ஒரு ஜில் காப்பிக்கு அப்பறம் நேரா கிரிக்கெட் விளையாட க்ரௌண்ட்தான். ஆனால் , ஆறாவது மணிக்கு வீடு வந்தாகணும், உடனே படிப்புச் சத்தம் கேட்டாகணும். அப்பெல்லாம் ரேடியோ கூட கிடையாது, இருந்தாலும் கொஞ்சம் ப்ரொக்ராம் தான் அப்புறம் வெறும் புஸ் சத்தம்தான். எட்டு மணிக்குச் சாப்பிட்டு , பத்து மணிக்குள்ள எல்லா லைட்டும் அணைக்கப் படும். காலையில் 5 மணிக்கு வீடு விழிக்கும்- எழுந்திருக்கல்லேன்னா கொஞ்ச நேரத்தில் தலையில் தண்ணி கொட்டப் போவதாக அப்பாவிடம் இருந்து ஒரு அதட்டல் போதும், எல்லோரும் அவரவர் வேலையில்.

பசங்களுக்கு இப்படின்னா, பொட்டைக் குட்டிகளுக்கு ( இப்படித்தான் பெண் குழந்தைகளை செல்லமாக விவரிப்பார்கள்) கேட்கவே வேண்டாம். கத்தி சினிமாப் பாட்டு பாடக் கூடாது, ரொம்ப நேரம் கண்ணாடி முன்னால நிக்கப்டாது, தாவணியை ஒழுங்காச் சுத்திக்கணும் (பூணூல் மாதிரி போடாதே !), கொலுசுன்னா என்ன? , ஜன்னல் பக்கம் ரொம்ப நேரம் போகாதே - இப்படி பல விதிமுறைகள். வெளியே தனியே போகக் கூடாது, அப்படியே போனாலும் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் விளக்கு வைப்பதற்க்கு முன் வீட்டில் இருந்தாக வேண்டும். ரோட்டுல காவாலிப் பசங்க சீட்டி அடித்தாலும் கன்னத்தில் அறையாம தலையக் குனிஞ்ஜுண்டே வர பாட்டி சொல்லிக் கொடுப்பா

சினிமாவெல்லாம் வருஷத்துக்கு ஒண்ணோ, ரெண்டோதான்- அதுவும் வீட்டோடுதான். பசங்களுக்கே சைக்கிளெல்லாம் பத்தாவதுக்கபுறம்தான். பொம்மனாட்டிக் குட்டிகளுக்கெல்லாம் எதுக்கு சைக்கிள்ம்பா.

பொண்கள் ஸ்கூல் தாண்டுமுன் ஜாதகத்தைத் தூக்கிடுவா - அதுகளும் பதில் பேசாம தலய குனிஞ்சுண்டே புன்னகையோட அமைதியா கிடைச்ச வாழ்க்கையையும், புருஷனையும், மாமியாரையும் ஏத்துகிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கத் தயாராயிடுவா. அப்படிப்போனவள்  ஒரு வருஷத்தக்கப்புறம் பெரிய வயிற்றுடன், நிறய வெட்கத்துடன் வளை காப்புக்குத்தான்  திரும்பி வருவா.

அப்பெல்லாம் கம்ப்யூட்டர் இல்லை, ஃபேஸ் புக் இல்லை, சாட் இல்லை, ஈ மெயில் இல்ல, ஸெல் போன் இல்லை, பாக்கெட் மணி இல்லை, அவுட்டிங்க் இல்லை, டேட்டிங்க் இல்லை, பெண்களிடமிருந்து சம்பளமுமில்லை.

அதனால் தானோ என்னவோ நடு இரவு சம்பவங்களும் சாலை விபத்துக்களும், பாலியல் சம்பந்தப் பட்ட அச்சுறுத்தல்களும் - இல்லாமல் இல்லை- ஆனால் மிகக் குறைவு. இதெல்லாம் நாம் நம் சுதந்திரத்துக்கு, உரிமைகளுக்கு, முன்னேற்றத்துக்கு கொடுக்கும் விலையோ ? இப்படிப்பட்ட விலையில் வரும் அனுபவங்கள் தேவையா? ஒரே குழப்பமா இருக்கு.

கட்டுக் கட்டாக சம்பாதித்தாலும், அப்பப்ப உலகம் சுற்றினாலும், பீரோ நிறைய துணி மணிகள் இருந்தாலும், வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஸ்கூட்டியும், காரும் இருந்தாலும், கரண்ட் போனால் இன்வர்டெரும், படுத்தபடியே டீ வீயை நிறுத்த முடிந்தாலும், ஃப்ரிட்ஜ் நிரைய இருந்தாலும் , உள்ளங்கையில் உலகம் தெரிந்தாலும் ஏன் நிறைவு வரவில்லை? இன்னும் எதைத் தேடி ஒடிகொண்டே இருக்கிறோம்? ஆஸ்பத்ரிக்கு அலைந்து கொண்டே இருக்கிறோம்? அப்பல்லாம் இவ்வளவு ஹார்ட் அட்டாக் இல்லையே- ஆபீஸ்ல ஸ்ட்ரெஸ்ன்னா என்னன்னு கேப்பா? யாராவது செத்து போனா 60 வயதுக்கு மேல தான் இருக்கும். இப்பெல்லாம் முப்பதுலயும், நாப்பதுலயும் அல்பாயுசுகள் ஜாஸ்த்தியாயிடுத்தே?

குடிச்சுட்டு வந்தா ஊரே தூத்தும்- இப்ப குடிக்காதவனை ஒரு மாதிரியாப் பார்க்கறதுகள். சிகரெட் பிடிக்க ஓரமாக ஒதுங்குவா. பெரியவாளைப் பாத்தா சிகரெட் கை முதுகுக்குப் பின்னால போகும் - இப்பல்லாம் மூஞ்சிலயே ஊதறா. பொம்மனாட்டிகளும் பாருக்கு போரா, சிகரெட்டும் பிடிக்கறா. பாரதியின் 'பாருக்குள்ளே நல்ல நாடு' பாடலை தப்பாப் புரிஞ்சுண்டுட்டாளே?

புடவையோ, தாவணியோ போட்டால் உடம்பு தெரியக் கூடாதும்பா - இப்ப நடுவுல கொஞ்சம் துணியைக் காணோம்- முழங்காலுக்குக் கீழே துணியே தெரியறதில்லை.

முன்னேற்றத்துக்கு இதுவா விலை? எது முன்னேற்றம் - இப்ப இருக்கறதா இல்லை அப்ப இருந்ததா- தெரியலயே? முதல்வன் படத்துல சொல்றா மாதிரி, வாழ்க்கைக்கு ஏதாவது ரீவைண்ட் பட்டன் இருந்தால் பேசாம அந்தக் காலத்துக்கே போயிடலாமோ?

எதுக்கும் இன்னிக்கு ராத்திரி சூப்பர் சிங்கர் பாத்துட்டு அப்புறம் முடிவு பண்ணுவோம்

Friday, December 14, 2012

மாதங்களில் என் மார்கழி


நாளை மார்கழி - நினைத்தாலே இனிக்கிறது. பொங்கலுக்காக இல்லை. ஏனென்றால்  இது வரை எங்க வீட்டுல இந்த விடிகாலை நைவேத்யம் போன்ற உபத்ரவப் பழக்கம் கிடையாது !

அதிகாலைக் குளிரில் குளித்து, திருப்பாவை , திருவெம்பாவை சொல்லி அவசர அவசரமாக வாசலுக்கு வந்தால், அகல் விளக்குகள் கார்த்திகை மாலையிலுருந்து, மார்கழிக் காலைக்கு டியூட்டி
மாறி இருக்கும்.

மாட வீதி பஜனை பார்க்கப் போனால், பாதி இருட்டில் கம்பீரமாகத் தெரியும் கோயில் கோபுரம் - நினைத்தாலே சிலிர்க்கிறது. கடந்த சில வருடங்களாக, இயற்க்கை நியதிக்கப்பாற்ப்பட்டு, மார்கழியில் சில நாட்களில் மழை பின்னியது. ஆனால், மழையோ, குளிரோ, பனியோ- விடாது 30 நாட்களும் நான்கு மாட வீதியைச் சுற்றி வரும் பஜனை அன்பர்களோ தவறாமல் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கும் ஆபீஸ், குடும்பம் இத்யாதி பிடுங்கல்கள் உண்டு- ஆனால் சளைப்பதில்லை.

இதில் இளைஞர்களும்,பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுடய சின்ன மாமிகளும் அடக்கம். பஜனைக்கு நடுவே சற்றே ஒதுங்கி அப்பப்போ, ஆண்ட்ராயிடைத் தொட்டு மெயில் பார்க்கும் இளைஞர்களையும், கணவனிடம் குழந்தைக்கு பிஸ்கட் வைக்க ஞாபகப் படுத்தும் இளம் அம்மாக்களையும் அவர்களின் உறுதியையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்த முப்பது நாட்களும் தவறாமல் பஜனை நடத்துவதும் ஒரு கூட்டு முயர்ச்சிதான். பஜனைத் தலைவரிலிருந்து, தம்புரா- ஹார்மோனியம் போடுபவரும், நடு வழியில் காய்ந்து போன தொண்டைக்கு சூடான பால் தரும் அன்பரும், பஜனை முடிந்தவுடன் ஆகாய மார்க்கமாக வரும் ராவணன் போல் காரில் வந்து மனைவியை அவசரமாகக் கொத்திச்செல்லும் கணவர்களும்  - எல்லாருமே முக்கியமானவர்கள்தான். ஏதேதோ நிகழ்ச்சிகளை ஆராயும் IIM  மாணவர்கள் இதையும் ஒரு process க்குக்காவோ,  team workக்குக்காவோஆராயலாமே !

வளர்ந்து வரும் மேல் நாட்டு மோகங்களையும், போன வருடம் கல்யாணம் பண்ணி இந்த வருடம் முடித்து வைக்கும் மக்களையும்  நினைத்துக் கவலைப் பட்டாலும், இவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.

எனக்குத் தெரிந்து மார்கழி காலைக்கு ஏற்ற இடங்கள் மைலாப்பூர் மாட வீதி, கபாலி கோயில் மற்றும் ஸ்ரீரங்கம். திருப்பாவை அருளிய ஸ்ரீவில்லிபுத்தூர் போக ஆசை.

சிறுவனாய் ஒரு காலத்தில், காலை 4 மணிக்கு எழுந்து, ஹார்லிக்ஸ் குடித்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றி, கிழக்கு மாட வீதி இன்றைய ஐ, ஓ. பி வாசலில் "அம்பா உனை நம்பினேன்" என்று நான் பாடிய போது, என் அம்மாவில் முகத்தில் தெரிந்த பெருமை இன்னும் ஞ்யாபகமிருக்கு. இந்த வருட மார்கழிக்குச் சில வித்தியாசமான ப்ளான் இருக்கு - முடித்துவிட்டு, முடிந்தால் சொல்கிறேன்.

Saturday, November 17, 2012

"துப்பாக்கி" முனையில்


"துப்பாக்கி" படம் பார்த்தபின் தங்கிய சில நினைவுகள்:

வித்தியாசமான விஜை- கொஞ்சம் அதிக குறும்பு, கூடிய இளமை, ஒரு சோம்பேரித்தனமான ஆனால் எதிரிகளைத் தகர்க்கும் அதிரடி, அசரவைக்கும் நடனம். முதல்வன் அர்ஜுனையும், அயன் சூரியாவையும் அடிக்கடி நினைவுப் படுத்துகிறார் - ஆனால் மாறுபட்டு நிற்க்கிறார்

கண்களை உறுத்தாத வண்ணங்கள்- சில இடங்களில் கேமராவின் அபார ஓட்டத்துடன் ஈடு கொடுக்க வேண்டி இருக்கிறது

இயக்குனர் முருகதாஸ்- தன் வித்தியாசமான கதையின் மேல் அபார நம்பிக்கை. நிறைய சிந்தித்திருக்கிறார்- நிறைய பேருடன் விவாத்தித்திருக்கிறார்- உழைப்பு தெரிகிறது. இவரின் புத்திசாலித்தனம் ஹீரோயினை அளவோடு உபயோகித்திருப்பதில், விஜையை தேர்ந்தெடுப்பதில் தெரிகிறது. காவல்துறைக்கும் ராணுவத்துக்கும் உள்ள வேறுபாட்டை மிக மெலிதாக  உணர்த்த முற்ப்பட்டிருப்பது ஒரு நல்ல முயற்ச்சி

ஹாரிஸ் ஜெயராஜ் - ஏமாற்றி இருக்கிரார். பாட்டுக்கள் நினைவில் நிற்க்கவில்லை- முணுமுணுக்க வைக்கவில்லை. கூகுள் கூகுள் திணிக்கப் பட்டு ப்ரபலமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

பாடல்கள் இல்லாமல் இந்தப் படம் ஒரு ஆர்னால்டின் படம் போல் இருந்திருக்கும். ஆனால் கல்லா கட்டாது. ரசிகர்களுக்கும், தமிழ்ப் பட உலகுக்கும், முக்கியமாக முருகதாஸ் அடுத்த படம் எடுப்பதற்க்கும், இவை தேவைப்படுகிறது. பரவாயில்லை - இந்த உலக நன்மைக்காக இந்தச் செல்ல இம்சைகளை சகித்துக் கொள்ளலாம்.

சத்யன்- சிந்திக்க வைக்கிறார். தன் கதாபாத்திரம் மூலம் ஒரு இயற்க்கையான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் கவர்கிறார். ஒரு நடிகனாக இவர் கடந்து வந்த பாதையால் வியக்க வைக்கிறார். சின்ன சின்ன வாய்ப்புகளை எப்படி உபயோகப் படுத்திக் கொண்டு தன் இடத்தை நிலைப் படுத்திக் கொண்டிருக்கிறார்! கொஞ்ச உதவியும், நிறைய உழைப்புடனும் ஒருவர் எப்படி முன்னேரலாம் என்பதற்க்கு ஒரு நல்ல உதாரணம்

டைட்டிலில் இருக்கும் முன்னாள் குற்றவியல் தலைவர் கார்த்திகேயனுக்கு நன்றி எதற்க்கு  என்பதற்க்கு கதையில் விடை கிடைக்கிறது. சுஜாதாவிர்க்கு ஒரு நல்ல மாற்று நபரை கண்டுபிடித்த முருகதாசின் சிந்தனைக்கு ஒரு ஓ போடலாம். இக்காலக் கதாசிரியர்களின் புத்திசாலித்தனத்துக்கு, "sleeper cell"  என்னும் புதிய சிந்தனை ஒரு உதாரணம்.

பிடித்தது: பத்து ரீலிலும் எதையோ எதிர்பார்த்து உட்கார வைத்தது, விஜயின் இளமை, குறும்பு, சத்யன் வழியாக ரசிகர்களுடன் பேசும் முருகதாசின் புத்திசாலித்தனம், கதையில் உள்ள சில புதிய நுணுக்கங்கள்/உத்திகள்.

பிடிக்காதது: இவ்வளவு பிடித்தபோது, இது எதற்க்கு- விட்டுத் தள்ளுவோம். இல்லாததைத் தேடுவதை விட இருப்பதை ரசிப்போம்.

ஏமாற்றுவதர்க்கு மன்னிக்கவும். பேனாவை எடுத்து என் எண்ணங்களை கிழிக்க தயாராக வேண்டாம். இது துப்பாக்கி பட விமரிசனம் அல்ல-விமரிசனம் எழுதுவது என் நோக்கமுமல்ல. இந்தப் படத்தை 120 ரூபாய் டிக்கட்டுக்குக் கொடுத்து, மேலும் 500 ரூபாய் செலவழித்து பாப் கார்ன் கொரித்துக் கொண்டே 3 மணி நேரம் தியேட்டரில் செலவழித்தற்க்கு, எனக்கு இதை வெளிப் படுத்துவதற்க்கான உரிமை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

கில்லிக்குப் பின் நிறையப் பேசப்படும் என்று தோன்றுகிறது. விஜய் இப்படிக் கவனமாகத் தேர்ந்தெடுத்தால், இன்னும் நிறைய நாட்கள் அவரின் பல நல்ல படங்களை எதிர்பார்க்கலாம். 

Friday, November 2, 2012

நீலம் புயலுடன் ஒரு பயணம்


வெகு நாளாகவே கும்பகோணம் அருகே உள்ள கோவில்களுக்கு, கா(ர்)ல் போன போக்கில் போக வேண்டும் என்று ஒரு ஆசை. அதனால் ஒரு மாசம் முன்னாடி டிக்கட் ரிசெர்வ் பண்ணும் போது எதையுமே எதிர் பார்க்காமல் அக்டோபர் 29க்கு சோழன் எக்ஸ்ப்ரசில் ஐந்து பேர் தயாராகி விட்டோம். கிளம்பும் முதல் நாளிலிருந்து வானமும், டீவீ யில் ரமணனும் பயமுறுத்தத் தொடங்கினார்கள். நான் இதைப்போல நிறைய மழை, புயல்களைப் பார்த்ததால் புத்தர் போல் இருந்தேன். என் மன்னியோ, நான் டிக்கட்டை ரத்து செய்வதை பார்ப்பதற்க்கு தயாராக இருந்தாள்.

கிளம்பற தினம் வானம் சும்மாவானும் சில உறுமல்களும், பல பஞ்சுப் பொதிகைகளுமாக பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் போகப் போக மழை இல்லாமல் ப்ரமாதமான அனுபவம் கிட்டியது. அதே சந்தோஷத்தில் , சாயந்திரம் ஆதி கும்பேஸ்வரன் அன்னாபிஷேகத்தையும், மங்களாம்பிகையையும் தரிசித்து, ஒரிரு தோசைகளுடன் அந்த 
நாளை இனிதே முடித்துக் கொண்டோம்.

மறுநாள் சூரியனார் கோவில் போகும் போதே தொடங்கிய மழை , கஞ்சனூர் சுக்ரனுடன் கூடவே வந்து, வைத்தீஸ்வரன் கோவிலில் நான் தரிசனம் செய்யும் பொழுது, ஊரை புரட்டிப் போட்டது. விடாது தொடர்ந்து திருவெண்காடு புதஸ்தலத்திலும் ஃபோட்டோ எடுக்க விடாமல் படுத்தியது. நாங்கள் சென்ற கீழ்பெரும்பள்ளம் மற்றும் திருக்கடையூரில் துணைக்கு நின்ற மழை, திருநள்ளாரில் சனீஸ்வரைக் கண்டவுடன் என்ன குஷியோ அப்படி ஒரு பேயாட்டம் போட்டது.  இந்த நேரத்தில் எங்களுக்கு மழையுடன் ஒரு பரிச்சயம் ஏற்ப்பட்டு, அது இல்லாவிட்டால் எங்களுக்குத் தனிமை தெரிய ஆரம்பித்து. இந்த உற்ச்சாகத்தில், கூத்தனுர் சரஸ்வதியையும் பார்த்தோம். வாசல் கடைகளில் நிறைய பேனா, நோட்டுப் புஸ்தகங்கள்- கடைக்காரர் சொன்னது "ஜனவரி ஆரம்பிச்சால் போதும், எல்லாரும் ஹால் டிக்கட்டோட வந்துருவாங்க" . அதற்க்குப்பின் திருமெய்ச்சூர் லலிதா சஹ்ஸ்ரநாம கோவிலையும் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பியபின், என்ன அதிசயம்- ஒரு சொட்டு மழை கூட இல்லை. இன்னுமொரு அனுபவம் என்னான்னா, நாங்கள் காரில் போகும்போது இல்லாத மழை, காரை விட்டுக் கோவிலுக்குள் போகும்போது வந்து விடும். இதனால் எல்லா கோவில்களுக்கும் நாங்களும் கடவுள் போல குடையுடன் தான் போனோம்!

விடிய விடிய மழை பெய்தாலும், விடாமல் வானிலை அறிக்கை பயமுறுத்தினாலும், மறுநாள் எல்லோருக்கும் ஒரு அரிய வைராக்யம் வந்து விட்டது- மற்ற கோவில்களையும் பார்த்தே விடுவது என்று. சூடான பொங்கலும், ஒரு கும்பகோணம் டிகிரி காபிக்குப் பிறகு, கொட்டும் மழையில் திங்களூரை நோக்கிப் பயணப்பட்டோம். மணல் அள்ளும் நூற்றுக்கணக்கான லாரிகள் வழியில் பொறுமையை சோதித்து நேர விரயம் செய்தது. ஒரு சூப்பர் மழையின் நடுவே, சந்திர தரிசனம். அதே கொட்டும் மழையிலும் ஒரு அருமையான ஆலங்குடி குரு சந்திப்பு. ஆம்- பெரிய கோவில் - தமிழகத்துக்கே உரிய கரண்ட் இல்லாத இருட்டு- அழகிய ஆலங்குடி குரு பகவானின் தரிசனம் எண்ணை விளக்குகளுக்கிடையே. திரும்பி வரும் வழியில் ஒரு எதிர்பாராத கோவில்- வலங்கைமான் ' பாடை கட்டி ' மாரியம்மன்.

 ஒரு நல்ல சாப்பாட்டுக்கப்புறம் கோவிந்தபுரம் புதிய கோவில் - அழகிய இடமாக இருந்தாலும் ஏனோ மனதில் நிற்க்கவில்லை- கொஞ்சம் காமராஜர் அரங்கம் போலிருந்தது. அதற்க்கப்புறம் பார்த்த அதிஷ்டானம் தான் நான் எதிர் பார்த்தது போல- அருமையான சூழ்நிலை. தொடர்ந்து 'ஐயாவாடி' என்று அழைக்கப் படும் "ஐய்வர் பாடி" - அங்குள்ள ப்ரத்யங்கரா தேவி மிகுந்த சக்தியுடையவர் என்றும், பல ப்ரபலங்கள் அங்கு வந்துள்ளதாகவும் சொன்னார்கள். சன்னதியிலுள்ள கூரைகள் முழுக்க உத்ராக்ஷங்கள். ஆதலால் கர்பூர தீபாரதனைகள் தவிர்க்கப் படுவது சிந்திக்க வைத்தது.

அதற்க்கப்புறம் கிடைத்தது ஒரு மறக்க முடியாத சந்திப்பு. ஆம் - உப்பிலியப்பனும் நானும். இந்தக் கோவிலை திருப்பதிக்கு இணையாகச் சொல்வார்கள். ஏழுமலையானுடன் தனியாக ஒரு பத்து நிமிடம் - நம்பும்படியாக இருக்காது. ஆனால் நடந்தது அதுதான். விடா மழையுடன் கடைசியாக ராகுஸ்தலமான திருநாகேஸ்வரம், முடித்து ஹோட்டல் திரும்பியதும் ஒரு சொட்டு மழை கூட இல்லை. என்னுடன் வந்தவர் "ஆண்டவன் நம் பொறுமையை எப்படிச் சோதித்திருக்கிறார்" என்று சொன்னது உண்மையோ என்று சிந்திக்க வைத்தது.

சில நினைவுகள் சில சிந்தனைகள், சில வேதனைகள்:
  1. விழுப்புரம் ஸ்டேஷனில், 20 ரூபாய் என்று அச்சடித்த சாப்பாட்டு பொட்டலத்தை 24 ரூபாய்க்கு விற்றதும்,  என் அண்ணா உடனே ரெய்ல்வேக்கு எஸ். எம். எஸ்  கொடுத்து பதில் வாங்கியது.
  2. நிறைய இடங்களில் மழையில் மூழ்கிய பயிர்கள்
  3. எங்கும் பச்சை
  4. குப்பை, குப்பை - மூட்டை மூட்டையாக குப்பை எல்லா கோவில் அருகிலும்
  5. கும்பகோணச் சந்தையில் பச்சைக் கறிகாய்கள்
  6. குடந்தை டிகிரி காபி
  7. கும்பகோணத்தவர்களின் உபசரிப்பு.
  8. ஹோட்டலில் க்ரெடிட் கார்ட் என்றவுடன் கடைசியில் பே பண்ணினால் போதும் என்றது - இன்னும் வியாபாரம் கெடவில்லை
  9. ஸ்டேஷனில் கொடுக்கும் டபரா, டம்ளர் காபி
  10. அருமையான ரயில் பயணம்
  11. வழியில் பார்த்த உண்மையான பாரதி ராஜாத்தன கிராமங்கள்
நாங்கள் சென்னை வந்ததும் முதலில் கவனித்து- எங்கும் எங்களைத் துரத்திய மழை இங்கு இன்று ஒரு பொட்டு  கூட இல்லை. அடுத்த டூருக்கு மனம் ஆசைப்பட்டது

Friday, June 29, 2012

தள்ளாடும் தலைமுறை


என்றைக்குமே எனக்கு டீ வீ பார்ப்பதில் ஒரு தயக்கமான நாட்டம்தான். என்னுடைய பார்வை எல்லாம் கிரிக்கெட், பாடல்கள், அப்பப்போ சினிமா (கொஞ்சம் வருடங்களுக்கு முன்னால் வரை), மற்றும் எப்பொழுதுமே செய்திகள்- ஆங்கிலமும், தமிழும்.

இப்பொழுதெல்லாம் , ரிடயர் ஆனதுக்கப்புறம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும் பார்க்க தொடங்கியுள்ளேன் - ஆனால் என்றைக்குமே சீரியல்களுக்கு ஒரு பெரிய நோ நோ தான் - எதற்க்கு வீணாக உணர்ச்சிகளை சிந்தி உடம்பைக் கெடுத்துக்கணும்.

சமீப காலமாக வரும் சில உண்மை நிகழ்சிகள் என்னை திடுக்கிடச் செய்வதோடு, கொஞ்சம் சிந்திக்கவும் வைத்தது. அனேகமாக எல்லா பிரச்சினைகளுக்கும் பிரதான காரணம்: குடி, பெண்.

மனசாட்சியே இல்லாமல், மிகவும் சாதுவாக இருந்து கொண்டு ஆனால் வெளியே ஒரு பெண்ணிடம் தனி உலகம் நடத்துகிறார்கள்- இது ஒரு ரகமென்றால் இன்னொன்று குடியினால் வந்த  விளைவுகள் - மனைவியை அடி, உதை, வேலைக்கு போகாமல் இருப்பது, குறுக்கு வழியில் பணம், கெட்ட சகவாசம், பெண் - இப்படி இன்னொரு ரூட். நம் தமிழ் சினிமாவுக்கும் பல நாட்டுகள் இதைச் சுற்றித்தான் இருக்கும் போல- அதனால் தான் உண்மைக் கதை போல் இருக்கு- நல்லா கல்லா கட்டுகிறது.

சிறு பையன் முதல் பெரியர் வரை குடிபழக்கம். இது என்ன கேடு கெட்ட வழிமுறை? ஒரு கணவன் தன் மூவாயிரம் சம்பளத்தில், இரண்டாயிரம்தான் வீட்டிற்க்குத் தருகிறார் என்கிறாள் ஒரு பெண்- மாதம் ஆயிரம் ரூபாய் குடிப்பதற்க்கா? குடும்பம் என்னாவது?

ஒருவன் தன் வாழ்னாள் முழுவதும் மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்தால், அறுபது வயதில், எத்தனை லட்சங்கள் கிடைக்கும் தெரியுமா? இதை ஏன் ஒரு பென்ஷன் போல் எடுத்துக் கொள்ளக் கூடாது? அல்லது, மூன்று மாதங்களுக்கு ஒரு கிராம் தங்கம் வாங்கினால், பெண் கல்யாணத்துக்கோ அல்லது மனைவிக்கோ எவ்வளவு நகை செய்யலாம்? பிற்க்காலச் செலவுக்கு இது எப்படிக் கை குடுக்கும் தெரியுமா ?

சரி- உங்களிடம் நிறைய பணம் இருக்கிறதென்றே வைத்துக் கொண்டால்- உடம்பு என்னாவது? ஒரு எட்டு அப்பலோ கான்சர் ஸ்பெஷாலிடியோ, அடயார் ஆஸ்பத்ரியோ எட்டிப் பாருங்கள். அப்புறம் சோடா புட்டி கூட தொட மாட்டீர்- அவ்வளவு அவஸ்தை. ரகம் ரகமாக கான்சரில் எத்தனை விதம். வாயில், வயிற்றில், மலத்துவாரத்தில், முதுகுத் தண்டுவடத்தில், மூளையில் இப்படி பல அவஸ்தை. ஒன்றுமே பழக்கம் இல்லாமல், என் அண்ணனுக்கு புற்று நோய் வந்து, அவசரமாக வாரிக் கொண்டதுபோல் நடந்தால், உலகமே உண்மயில் இரங்கும். இப்படி ஏதாவது பழக்கம் என்றால் உலகம் என்ன, உங்கள் உறவே காரித் துப்பும். இது தேவையா?

நீங்கள் அதி புத்திசாலியாகவோ அல்லது அதி மேதையாகவோ இருந்தாலும், கடைசியில் கிடைக்கும் பட்டம் என்னவோ - "ஓ அந்தக் குடிகாரனா"

இந்தப் பழக்கத்துக்குள் உலவும் சோஷலிசமோ வியப்பானது - இதற்க்குப் பணக்காரனோ ஏழையோ பாகுபாடே கிடையாது. இருவரும் வாந்தியெடுத்து, ஒரே ப்ளாட்பாரத்தில்தான் கிடப்பார்கள்.

இதனால் என்ன சுகம்- உலகமே மதிப்பதில்லை. பெண்டாட்டி , பிள்ளைகள் அவமானத்தில் புழுங்குகிறார்கள். காசு விரயம். டாக்டர் புழுவைப்போல பார்க்கிறார். குடிப்பவனுக்கு அவஸ்தை வேறு. அப்படி இந்தக் கண்றாவிதான், குடிப்பதற்க்காவது நன்னயிருக்கா - அதுவும் இல்லை. குடிச்சுட்டு ஒவ்வொருத்தன் மூஞ்சி போற போக்கே சொல்லுது. அப்புறம் ஏன் ?

இது எப்படி ஒருத்தரை தொத்திக்கறது? ஸ்கூல் முடியறப்பவே ட்ரீட்டில் ஆரம்பிக்கறது. சில அப்பாக்களுக்குத் தெரிவதே இல்லை, சிலருக்கு தர்ம சங்கடம் ஏன்னா அவரே தாக சாந்தி ஆசாமி. காலேஜ்ல கேட்கவே வேண்டாம், ஆசை காட்டியே வழிக்குக்கு கொண்டுவந்திருவாங்க. ஆபீஸ் போனால் இதற்க்கான கேள்வி கேட்காத பாஸ்போர்ட்டும் , வீசாவும் கிடைத்த மாதிரி. வாரம் முழுக்க வேலை செய்யராங்களோ இல்லயோ, வெள்ளிக்கிழமையானால் முகத்தில் தனி பொலிவு, சந்தோஷம். கொஞ்ச நஞ்சம் தயங்கறவங்களையும் சகாக்களும், சீனியர்களும் சரிக்கட்டிடுவாங்க. இதுதான் ஆரம்பம். அதற்க்கப்புறம் முடிவு அவரவர் வேகத்தைப் பொறுத்தது.

சமீபத்திய காளானான IT கம்பெனிகளின் சம்பளங்கள், பலரை ஊட்டி வளர்க்கின்றன. இதனால் தான் ஒண்டுக் குடித்தனத்தில் இருந்து கஷ்டப்பட்டுப் படித்து வேலை கிடைத்தும், இன்னும் பல பேரால் வீடு கூட வாங்க முடியவில்லை. காரணம் உள்ளேயே இருக்கு.

நான் ஒண்ணும் குடிக்கரவனெல்லாம் அயோக்யன் மற்றவர்களெல்லாம் யோக்யர்கள் என்று சொல்லவில்லை. நம் உடலுக்குக் கேடு, அதோடு நம் குடும்பத்தவர்களுக்கும் மஹா ஸ்ரமம். வெள்ளைக்காரனிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கு, அதையெல்லாம் விட்டுட்டு இந்த சனியன் மட்டும் ஏன்?

பெண்கள் இன்னும் தைர்யமாக வேண்டும். குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனை, வீட்டுக்குள் சேர்க்காமல் இருக்கணும். குடிக்காத அப்பாக்கள்,  மகன் குடித்துவிட்டு வந்தால்  அந்தக் கால அப்பாக்கள் போல் பெல்ட்டை உருவ வேண்டும். இதெல்லாம் இந்தக் காலத்துக்கு ரொம்ப ஓவராகத்தான் தெரியும்- ஆனால் குடும்பதுக்காகவும், உடம்புக்காகவும் செய்தே ஆக வேண்டும்- பின்னாடி புலம்பியோ, டீ வீ யில் பேட்டி கொடுத்தோ ப்ரயோஜனம் இல்லை.

அரசாங்கமும் உதட்டளவு சொல்லாமல், மது விலக்கை அமுல் படுத்தினால், இது கொஞ்சம் குறையலாம். அதற்கென்ன கள்ளச் சரக்கு அடிப்பார்கள், பாண்டி போவார்கள் என்று அடுக்கலாம்- அப்படிப்பட்ட தீவிர ரசிகர்களை குடும்பம்தான் மேற்சொன்னபடி கவனிக்க வேண்டும்- அப்படியும் 
திருந்தலேன்னா எக்கேடு கெட்டு போன்னு விட வேண்டியதுதான்.

எனக்குப் பாலிடிக்சில் ஆர்வம் கிடையாது- ஆனால் அதெப்படி குஜராத்தில் மட்டும் ரொம்ப வருஷமாகவே மது விலக்கு இருக்காமே - ஏன் நாம் செய்யக்கூடாது? உடம்பப் பாத்துக்கோங்கப்பா.

Saturday, June 23, 2012

காலை நேரப் பூங்குயில்

விடியற்காலை எப்பொழுதுமே எனக்கு ஒரு தனி சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இன்னும் யாருமே எழுந்திருக்காத காலை இன்னும் சுகம். நல்ல தூக்கத்திற்க்கு பின், ஒரு தெளிந்த மனத்துடன், நேற்றைய வடுக்களை அங்கேயே விட்டு விட்டு அல்லது மறந்து போய், யோசிக்கும்போது , மனம்தான் எவ்வளவு தெளிவாய் இருக்கு !

சென்னை மாகரத்தில் யாருக்கும் கிடைக்காத ஒரு தனி சுகம் எனக்கு உண்டு. இருப்பது ஒரு அடர்ந்த பகுதியான மந்தவெளியாக இருந்தாலும், இன்னும் விட்டு வைத்திருக்கும் சில மரங்கள் ஒரு வரப்ரசாதம். அதிலிருந்து, தினமும் அலாரம் அடித்தால் போல் காலையில் ஒரு குயில் கூவுவது, சென்னைவாசிகள் கற்பனயில்தான் காணமுடியும். எனக்குக் கிட்டியுள்ளது.


எழுந்தவுடன் நல்ல சந்தோஷ எண்ணங்கள், ல்லதே டக்கும் என்ற சிந்தனைகள், ஒரு நாளை நல்ல விதத்தில் ஆரம்பிக்கும் யுக்திகள்.  


ஒரு இனிய காலைப்பொழுதில் - 24 ஜுன்-2012



வாங்க வாங்க !!


வணக்கம் !
என்னோட முதல் தமிழ்ப் பக்கத்துக்கு வருகை தந்ததற்கு நன்றி.
இந்த முயற்ச்சி ஒரு அரசியல்வாதி போல் செம்மொழியில் எழுதுவதற்க்கல்ல.
என்னுடய செந்தமிழ் இத்துடன் முடிவடைகிறது. என் ஆசையெல்லாம், மனசில் தோன்றும் எண்ணங்களை அப்படியே கொட்டிப் பகிர்ந்து கொள்வதுதான்.
எனக்கு ஏற்கனவே ஒரு ப்ளாக் இருக்கும் போது இன்னொன்று எதற்க்கு ? சில விஷயங்களை உடனே தமிழில்தான் நினைக்கத் தோன்றுகிறது. அப்படியே எண்ணங்களுக்கு வடிவமைக்கலாம் என்றுதான், தமிழ் ப்ளாக் ஒன்று தொடங்கியுள்ளேன்.
எண்ணங்கள் சிறகடிக்கும் போது இந்த வலை இன்னும் விரியும்
நட்புடன் கபாலீஸ்வரன்
23-ஜூன்-2012