Sunday, March 10, 2013

கொடிது கொடிது

கொடிது கொடிது வறுமை கொடிது என்ற ஔவையின் நினைவு வந்தது, ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி பார்க்கும் பொழுது.

தினசரிப் பற்றாக்குறையால் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் ஒரு குடும்பமே ஏறக்குறைய தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கருத்து வித்தியாசத்தால் சிறு வயதில் பெற்றோர்கள் பிரிந்ததால் தடுமாறும் குடும்பம்.

கடன் தொல்லையால் பூட்டிய தன் கடையை விட்டு ஓடி முதலாளி ஸ்தானத்திலிருந்து தினக் கூலித்தொழிலாளியான ஒருவர்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு தொல்லை.

'அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்பது போல் பலருக்கு படிக்க முடியாமல் பல தடைகள். பார்த்த பொருளை வாங்கப் போய், இந்தக் காசு இருந்தால் நாளை பால் வாங்கலாமே என்று பின் வாங்கும் சிறுமி.

உண்மையான காரணத்தையும் தன் படிக்கும் ஆவலையும் சொல்லியும் கல்விக் கடன் கொடுக்கும் வங்கி  அதிகாரியின் அலட்சியப் போக்கால் வன்முறையைக் கூட கையாள நினைத்த ஒரு மாணவன்.

பணம், பணம், பணம்..... எங்கு போனாலும் இந்த வைட்டமின் 'ப' வைத் தேடும் ஜனம். நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்? நம் முன்னோர்களும் இதை விடக் குறைவாகத்தான் சம்பாத்தித்தார்கள். நிறையக் குழந்தைகளுடன், உற்றார் உறவினருடன் பெரிய குடும்பங்களை  சமாளித்திருக்கிறார்கள்- எப்படி? நாம் எங்கு தடுமாறுகிறோம்?

நிகழ்ச்சியின் முன் பகுதியில், இன்றைய பொறாமைப் படக்கூடிய ஐ.டியில் உள்ள ஒரு தம்பதியினர் கஷ்டப் படுவதாகச் சொன்னதற்க்கு அவர்களின் காரணம் மாதத் தவணை என்று சொல்லக் கூடிய ஈ.எம்.ஐ. சிக்கனத்துக்காக நகருக்குத் தள்ளி வீடு வாங்கி அதன் முழுப் பலனை அனுபவிக்காமல், டீ.வீ, வாஷிங் மிசினுக்காக மேலும் மாதத் தவணையைக் கூட்டிக் கொண்டு, உடம்புக்கு வந்தால் கூட சமாளிக்க முடியாத அபாயகரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிலர் இப்படி. ஆனால் மற்றொரு பக்கம் நகைக் கடைகளிலும், புடவைக் கடைகளிலும்,  நக்ஷத்ர ஹோட்டல்களிலும் கூட்டத்திற்க்குக் குறைவில்லை. எப்படி வந்தது இந்த எதிர் முனைகள்?

இதில் முக்கியமான அம்சம் 'படிப்பு'. இயற்க்கையிலேயே நன்றாகப் படிப்பவனுக்குப் ப்ரச்சினைகள் குறைவு. கொஞ்சம் சுமாராகப் படிப்பவர்களுக்கு பெற்றோர்களின் வளத்தால் சரியும் அதிர்ஷ்டத்தை சரி செய்தால் பின் அவர்கள் பற்றிக் கொள்கிறார்கள். படிப்பும் இல்லாமல், ஆதரவுக் கரம் நீட்டவும் ஆளில்லாமல் இருப்பவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாக இருக்கு. எப்படியோ முட்டி மோதி படித்து வேலைக்கு வந்தால் ஓரளவு புத்திசாலித்தனமாக இருந்தால் பிழைக்க வழி உண்டு. ஆகையால், இளைஞர்களும், இளைஞிகளும் படிப்பை எக்காரணத்துக்கும் உதாசீனப் படுத்தக்கூடாது.

வேலைக்கு வந்தவுடன் கஷ்டப் பட்டு வந்த பலர் ஜாக்கிரதையாக வாழ்ந்து முன்னேறுகிறார்கள். ஆனால் இப்பொழு பலர் அகலக் கால் வைத்து மாட்டிக்கொள்கிறார்கள். மேலை நாட்டு மோகம், தேவையில்லாப் பழக்கங்கள், சுற்றத்தார் எதிர்பார்ப்பு, வரட்டு ஜம்பம் இவற்றால் உருவாகிறதுதான், இந்தத் தவணை முறைக் கூட்டம்.

இந்தக் கஷ்டங்களெயெல்லாம் சமாளிக்க கொஞ்சம் சமயோசிதம் இருந்தால் போதும். முதல் வழி திட்டமிட்டுச் செலவழிப்பது. பட்ஜெட் போடாமல் உள்ள குடும்பம் சரிவில் ப்ரேக் இல்லாமல் போகும் வண்டி போலத்தான். ஒடும் பொழுது நன்றாகத்தான் இருக்கும் ஆனால் தடங்கல் வரும் பொழுது நிலைகுலையும்.

ஒவ்வொரு செலவின் போதும் ஒரு முறை "இது தேவைதானா" என்று மனைவிடமோ, கணவனிடமோ பேசிப் பின் முடிவு செய்வது நல்லது.

ஒரு எதிர்பாராத சூழ்நிலைக்கு நாம் எந்தளவுக்கு தயாராக உள்ளோம் என்பதை ஒவ்வொரு மாதமும் ஆராய வேண்டும்.

கேளிக்கை, ஆடம்பரம், மகிழ்ச்சி எல்லாம் தேவைதான்- ஆனால் விரலுக்குத் தகுந்த வீக்கம் புரையோடாமல் காக்கும்.

ப்ளாஸ்டிக்கைத் தவிருங்கள்- ஆம் முடிந்தால் க்ரெடிட் கார்டே வைத்துக் கொள்ளாதீர்கள். அதை எப்படி நமக்குச் சாதகமாக உபயோகப்படுத்துவது என்று தெரியாதவர்கள், இதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் வருமானத்தில் குழந்தைகள் படிப்பு, பெரியவர்கள் பராமரிப்பு, மருத்துவச் செலவுகள், பிற்க்காலப் பராமரிப்பு இவையெல்லாம் இல்லையென்றால், எச்சரிக்கையாக இருங்கள்- உங்கள் நீர்க் குமிழி வாழ்க்கையை நினைத்து.

எவ்வளவுதான் யோசித்து, நிதானமாகக் குடும்பம் நடத்தினாலும் எதிர்பாராத செலவுகள் வரத்தான் செய்யும். ஆனால் இப்படி ஜாக்கிரதையாக இருந்தால் அதைச் சமாளிப்பதற்க்கான தைரியம் தானாக வரும்.

ஒன்று நிச்சயம்- நம் முன்னோர்களுக்கு இதை விடப் ப்ரச்சினைகளும், இப்பொழுதை விட அதை சமாளிக்கக் கூடிய சக்திகளும் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் இதற்க்காக யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை!

இந்தத் தேடல் எல்லா மனிதனுக்கும் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களான டாட்டா, பிர்லா போன்றவர்கள் கூட இதைதான் தேடுகிறார்கள், சாதாரண மனிதனும் இதைத்தான்  நாடுகிறான். சிலர் தக்க வைத்துக் கொள்ளப் பாடு படுகிறார்கள். சிலர் வாழ இதைத் தேடுகிறார்கள். உங்கள் கொள்கை, புத்திசாலித்தனம், சாமர்த்தியம், நட்பு, வளர்ப்பு ஆகியவை முடிவு செய்கின்றன  நீங்கள் தேடுபவரா அல்லது அதை வைத்துகொண்டு ஓடுபவரா என்பது.

இந்த மன வருத்தத்திலும், ஒரு வெளிச்சம். பல சௌகர்யங்கள் இருந்தும், எனக்கு வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்று அனத்துபவர்களுக்கு இது ஒரு விழிப்பை ஏற்ப்படுத்தட்டும்- உங்களுக்குக் கீழே எத்தனையோ கோடி. உள்ளதை வைத்து த்ருப்தியாக இருக்கவும்

Wednesday, March 6, 2013

வன யுத்தம்

என்றுமே எனக்கு சந்தனக் கடத்தல் வீரப்பன் போன்றவர்கள் மேல் எந்த விதமான இரக்கமும் இருந்தது கிடையாது. ஒரு உயிரையே கொல்லக் கூடாது  என்பவனுக்கு, இத்தலை கொலைகள் செய்தவன் மேல் வேறு எப்படிப்பட்ட எண்ணம் இருக்கக் கூடும். ஆனால், வீரப்பனைப் பற்றியும், அவன் ஏன் இப்படி மாறினான், எப்படிக் கொல்லப் பட்டான் என்று வந்த  பல செய்திகளினால் ஓர் ஆர்வம் எழுந்தது. நாணயத்தின் மற்றொரு பக்கத்தையும் பார்க்கும் ஆர்வம் தூண்டப்பட்டது. அதனாலேயே, 'வன யுத்தம்'  படத்தைப் பார்ப்பதற்க்காகக் காத்திருந்தேன்.  இன்னும் கொஞ்ச நாட்களில் அரங்கை விட்டுப் போகும் வாய்ப்பு அதிகமானதால் இன்று துணிந்தேன்.

பரபரப்புடன் தொடங்கிய படம், பத்து நிமிடங்களில் பிசு பிசுக்க ஆரம்பித்தது. ஒரு சின்ன உத்தியை நன்றாக வளர்க்காமல், ஐந்து நிமிடங்களில் அதை விட்டு அடுத்த சம்பவத்துக் கூட்டிச் செல்லப் படுகின்றோம். ஒவ்வொரு சம்பவத்துக்கும் இடையே அப்படி ஒரு வேகம். கீழே போடப்படும் இடம் பற்றிய எழுத்துக்களும் நம்மிடம் போட்டி போடுகின்றன.  இந்த வேகத்தினால் படம் பார்க்கும் எண்ணம் போய் எதோ புத்தகம் படிப்பது போலிருந்தது.

அனேகமாக தமிழ் நாட்டில் பலருக்கும் வீரப்பன் கதை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் இதைப் பார்க்க மெனக்கெடுவது, தெரியாத உண்மைகளைத் தேடி. ஆனால் ஏமாற்றப் படுகிறார்கள்.

ஒவ்வொரு சம்பவமாக கையிலெடுக்கிறர்- இளம் பிராயம், ஏன் யானைத் தந்தத்திலிருந்து சந்தன மரங்கள், இளம் காட்டதிகாரி ஸ்ரீனிவாசை நம்ப வைத்துக் கொல்வது, குண்டு வைத்து போலிஸ் ஜீப்பை தகர்ப்பது, ராஜ்குமாரைக் கடத்துவது, சுட்டுக் கொல்லப் படுவது என்று. ஆனால் எதிலும் எதிர்பார்க்கும் அதிகப் படியான செய்திகள் இல்லை. இந்தச் சம்பவங்கள் தான் ஏற்கனவே தெரியுமே- அல்லது வலையில் நிரைய இருக்கே. இதற்க்கு எதுக்கு நான் 150 ரூபாய் கொடுத்து பார்க்கணும்?  ஒரு நல்ல கதையை சொல்லத் தெரியாமல் வீணடித்திருக்கிறார்.  பாலச்சந்தரும், சுஜாதாவும் பிறந்த தமிழ்னாட்டில் கதை சொல்லத் தெரியவில்லை என்றால் வெட்கமாக இருக்கு.

இந்தக் கதைக்கு ஏன் இப்படி சென்சாருடன் போராடினார்களென்று தெரியவில்லை. ஆனால் பல விஷயங்கள் காண்பித்த  மற்றும் காண்பிக்கப் படாத காட்சிகளினால் தெரிகிறது இது வெளி வர பட்ட பாடு. புரியும் என்று நினைக்கிறேன் !

நடு நடுவில் வரும் ஏகப்பட்ட ஆங்கில வசனங்கள் யாருக்கு என்று தெரியவில்லை. 'பொல்லாதவனு"க்குப் பின், நான் கிஷோரின் பெரிய விசிறி. ஆனால், படத்தில் அர்ஜுனைத்தவிர யாரும் நடிக்க முயர்ச்சிக்கக் கூட இல்லை என்பதுதான் வருத்தமே. அர்ஜுனுக்கு இந்த ரோல் அல்வா சாப்பிடுவது போல் . சும்மா ப்ரேக்கில் வந்து  அனாயாசமாக  நடித்து விட்டுப் போயிருக்கார். பெயருக்கு ஒரு பெண்ணை அறிமுகப் படுத்தியவுடன் நான் கூட பயந்தேன், ஏதாவது டூயட் வந்துடப் போர்தேன்னு - நல்ல வேளை.

காயம் பட்ட போலீஸ் அதிகாரியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போவதற்க்கென்ன இவ்வளவு பரபரப்பு? ஏதோ க்ளைமாக்ஸ் போன்ற தேவையற்ற பில்டப்.

படத்தின் உண்மை நாயகன் காமிராதான். அழகை அள்ளி அள்ளிக் காண்பித்திருக்கு- ஆனால் கதை இல்லாததால் எடுபடவில்லை.

வீரப்பனைப் பார்த்தால் பயம் வரவில்லை. மேக்கப்பும் , சிந்தனையும் போறாது. பின்னிசையை வைத்து பயமுறுத்தப் பார்த்துத் தோல்வியே அடைகிறார் .

ஒரு நல்ல கதையையும், சந்தர்ப்பத்தையும் வீணடித்து, தமிழ்னாட்டு மக்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். அவர்கள் காசையும், நம்முடைய நேரத்தையும் விரயமாக்கியது தான் மிச்சம்.

படம் முடிந்தவுடன், பெயர்கள் போடப்பட்டும், சில உண்மையான பாத்திரங்களைக் காட்டும் பொழுது, அரங்கில் உள்ள மக்கள் அப்படியே நின்று பார்த்தனர்- இவர்களுக்குத்தான் இன்னும் எத்தனை நம்பிக்கை தமிழ் சினிமாவின் பெயரில்.


Monday, March 4, 2013

விதண்டாவாதம்

ஒவ்வொரு நாளும் , தினந்தோறும் சில சூடான செய்திகள், ஹோட்டல் மெனு போல. இவை இல்லாவிட்டால் பத்திரிகைகள் இல்லை. சிலருக்கு பத்திரிகை இல்லாத நாட்கள்  உதயமாவதே இல்லை. அப்படிப் பலப் பல செய்திகள் தோன்றிக்கொண்டே இருக்கும் இன்னாட்களில், மிதமான சூட்டுடன் தினமும் பரிமாரப்படும் ஒன்று தான் ஒரு மூத்த காந்தியவாதியின் உண்ணா நோன்பு- எதற்க்காக- தனக்கு ஓய்வூதியம் அதிகப்படுத்துபதற்க்காகவோ , முதியவர்களின் சலுகைகளைக் மேலும் கூட்டுவதற்க்காகவோ அல்ல. இக்கால இளைஞர்களின் நலனுக்காக. குடி என்ற ஒரு கொடிய, ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விரும்பி வாங்கித் தக்க வைத்துக் கொண்ட ஒரு பழக்கத்துக்கு எதிராக. அதற்க்கு அரசின் ஆதரவை விலக்கிக் கொள்ள.

எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். அதில் எனக்கு நாட்டமும் இல்லை. அதைச் சாக்கடை என்று நினைக்கவுமில்லை, அப்படி இருந்தாலும் அதைக் கழுவி சுத்தம் செய்ய மனமுமில்லை. காசுக்குச் செய்ய பலர் இருக்க, அவர்களின் பிழைப்பில் மண் போட விருப்பமுமில்லை.

ஆனால் குடிக்கு எதிரான குரல் அரசியலில்லை. இது ஒரு சமூக விழிப்புணர்வு. அவ்வளவு தான். அதையும் மீறி இது குடும்ப நலனுக்காக என்று நினைப்பதால், இந்தப் போரட்டத்தின்பால், என் மனம் இழுக்கப்பட்டது. பல முறை இதிலும், என் மற்ற வலைப் பூக்களிலும் இதைப் பற்றி என் கருத்தை  எழுதி இருக்கிறேன்- திரும்பச் சொல்ல விழயவில்லை.

ஆனால் வேண்டியோ, வேண்டாதையோ, திரும்பத் திரும்ப இது என்னைத் தாக்குகிறது. தொலைக் காட்சியத் திருகினாலே, சில சேனல்களில் கும்மாளங்கள் இருந்தாலும், பல சேனல்களில் குடிபழக்கத்தைப் பற்றி, இதனால் வரும் விளைவுகளைப் பற்றிச் சொல்லி என்னை மிகவும் பயமுறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும், நல்ல வேளை நம் வீட்டில் யாரும் இல்லை என்று சமாதானம் செய்து கொண்டாலும், என் நண்பர்களைப் பற்றிக் கவலைப் படத்தான் வேண்டியிருக்கு (இல்லேன்னா நான் என்ன நண்பன்? )

பல போராட்டங்கள், பல சாலை மறியல்கள், பல கடையடைப்புப் போராட்டங்கள், பல நபர்களால்- இவற்றையெல்லாம் மீறி ஏன் இந்தப் பெரியவரின் போராட்டம் என்னைக் கவர்ந்தது? இவரிடம் சுய நலம் இல்லை, விளம்பர வேட்கை இல்லை. காசுத்தேவை இல்லை. ஒரு அரசியல்வாதியோ அல்லது அரசியல் கட்சியோ போராடினால், உடனே நமக்குத் தோன்றும் அவர்களின் ஆதாயம் இதில் கொஞ்சமுமில்லை. பின் என்னதான் இவரிடம் இருக்கு. ஒரு அக்கரை. சமூக அக்கரை. நம் வருங்கால இளைஞர்கள் மேல் அக்கரை- ஒரு கரிசனம். ஒரு தந்தையைப் போல் பாடு படுகிறார்.

மற்றுமொன்று இவர் கடைப்பிடிக்கும் காந்திய வழி. அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல், உண்மையான ஒரு உண்ணாவிரதம். 

இந்தப் பெரியவர் இப்படி ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க, ஊடகங்கள் பல பேச்சாளர்களைப் பேச வைத்து, கருத்துக்களை பரிமாறி ஒரு நல்ல சூழ் நிலையை உருவாக்கிகொண்டிருக்கிறது- அதுதான் ஊடகங்களிடம் நாம் எதிர்பார்க்கும் ஒரு சேவை கூட. ஆனால் விவாதத்தின் தேவைக்காக சிலரை ஆதரிப்பாளர்களாகவும், சிலரை எதிர்ப்பாளர்களாகவும் வைப்பது, சில நேரங்களில் விபரீதமாக முடிகிறது. உதாரணத்துக்கு, ஒரு விவாதத்தில், ப்ரபல எழுத்தாளர் ஒருவர் எதிரணியில் இருந்தார் என்பதற்க்காகவோ என்னவோ தெரியவில்லை- தன் பங்குக்கு "குடிப்பது ஒரு தனி மனிதரின் உரிமை. இதில் விவாதிப்பதற்க்கு என்ன இருக்கு" என்று ஆரம்பித்தார். உடனே எதிரணி நண்பர் "இவர் எதிரணியில் இருப்பதர்க்காகவே இப்படிப் பேசுகிறார் போலிருக்கு " என்றும் உரைத்தார்.

எது தனி மனித உரிமை, சுதந்திரம்? இவர்கள் என்ன சாப்பாடு சாப்பிடுவதையா எதிர்க்கிரார்கள்? ஒருவன் குடித்து விட்டு , அது அவரை மட்டும் தாக்கினாலே அந்தக் குடும்பத்தினர் சும்மா இருக்க முடியாது. ஏனென்றால், நம் இந்தியக் கலாச்சாரம் அப்படி. நம் குடும்பத்தில் ஒருவர் அவதிப் பட்டால், மொத்தக் குடும்பமே சேர்ந்து , ஒன்று கூடி அவரை அந்தக் கூட்டிலிருந்து விடுவிக்கும்
அக்கறை கொண்ட சமூகம். மேலை நாட்டைப் போல திருமணத்துக்குப் பின் உடனே மனைவியுடன் பிரிந்து சென்று பின் பெற்றோர்கள் தங்கள் வீட்டுக்கு வந்தால் , உறவினர் வருகையாக நினைப்பவர்கள் அல்ல. 

மேலும், குடித்து விட்டு ஒருவன் அவதிப்படும் பொழுது, அவன் குடும்பம் பொருளாதார நிலையால் பாதிக்கப் படுகின்றது.  அவன் தெரு முனையில் விழுந்து கிடக்கும் பொழுது, அவன் குடும்பத்தினர், மான ரீதியாக பாதிக்கப் படுகின்றனர். ஒருவன் குடித்து நோய்வாய்ப்பட்டு அவதிப் படும் பொழுது, அவன் குடும்பமே மன உளைச்சலால் அவதிப் படுகின்றனர்.  

இங்கு நாம் பொதுவாகக் குடிப்பவர்களைப் பற்றிப் பேசினாலும், குடிக்கும் மேல் தட்டு மக்களை விட கீழ்த்தட்டு வர்க்கம் தான் மிகுந்த அவதிக்குள்ளாகிறது. ஒரு பெரிய ஹோட்டலிலோ, கிளப்பிலோ குடித்து விட்டு ட்ரைவர் பத்திரமாகக் கொண்டு வந்து வீட்டில் விடுபவர்களைப் பற்றி அல்ல. தினக்கூலியாக நூறு  ரூபாய் வாங்கி, அதில் பெரும் பகுதியைக் குடித்து விட்டு தள்ளாடிக்கொண்டு வீடு திரும்பும்போது, உலை வைக்கக் காத்திருக்கும் மனைவி, சிறு குழந்தைகளைக் கட்டி பிடித்து அழுவார்களே- அந்தக் குடும்பங்களை நினைத்து. அது அழுகையோ, ஓலமோ அல்ல. அந்தப் பேசப்படாத வசனம் " இந்தப் பாவி இன்றும் காசு கொண்டு வரவில்லை. இன்றும் நீங்கள் பட்டினிதான்" என்று மருகும் போது.

இப்படி ஒரு பழக்கம் தேவைதானா? இதேபோல் உங்கள் மனைவியோ, மகனோ, மருமகனோ குடித்து விட்டு ரோட்டில் கிடக்கலாமா?  இதனால் உங்களுக்கு புற்று நோயோ, காச நோயோ வந்தால் குடும்பம் உங்களைக் கண்டு கொள்ளாமல் விடலாமா?  நீங்கள் மட்டும் குடும்பத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு, உங்களுக்கு நோய் வந்தபின் அவர்கள் உங்களைத் தாங்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா? அதில் என்ன நியாயம் உள்ளது?

ஆனால் என் கவலை இதை விட , இப்படிக் கூட்டம் போட்டு டீ வீயில் பேசும் இந்த அதி புத்திசாலிகளப் பற்றித்தான். இப்படியெல்லாம் பேசி சின்ன வயசுப் பசங்களைக் குழப்பி விட்டு, பின் அவர்கள் குடித்து, கண்ட சித்தாந்தங்களைப் பேசித் திரியும் போது, இந்த மேதாவிகள் காணாமல் போய்விடுகிறார்கள். டீ வீயில் பேசுபவர்களுக்கும் ஒரு சமூக பொறுப்புணர்வு தேவையில்லையா? யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசி விடலாமா? இப்படியே விட்டால் கண்டிப்பாக டீ வீக்கும் சென்சார்கள் தேவைதான்.

இன்னொரு விவாதத்தில் ஒரு குடும்பப் பெண் சொல்கிறாள் " இவர் வீட்டில் குடிப்பதோ அல்லது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பதோ பரவாயில்லை. நானே சில சமயங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் வெளியே குடிக்கக் கூடாது". நம் பெண்களும், அடக்க வேண்டிய சமயத்தில்  எப்படி வளைந்து கொடுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் !

இன்று உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் பாட்டில்களைப் பார்க்கும் உங்கள் மகனுக்கு பின்னால் உங்களுக்கு ஞானோதயமோ, வியாதியோ வந்த பிறகு எப்படிப் புரிய வைக்கப் போகிரீர்கள் இது தப்பு என்று. 


முடிவாக இதே டீ வீயில் மக்களரங்கத்தில் கேட்ட இன்னொரு பெண்ணின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகிறது - " எது தப்பு? நீங்கள் தனியாகச் செய்யும் எந்த ஒரு காரியத்தை  நாலு பேர் முன் செய்யத் தயங்கிகுறீர்களோ, அது தான் தப்பு".  இதற்க்கு விவாத மேடையும், அரை குறை அறிவு ஜீவிகளும் தேவையில்லை. இது உங்கள் வாழ்க்கை, நீங்களே புரிந்து, முடிவெடுத்துக் கொள்ளுங்கள்