Monday, February 23, 2015

வீடு வாங்கலியோ வீடு!

வீடுகள் விற்பதற்க்காக சென்னையில் ஒரு சந்தை சில நாட்களாக நடந்து கொண்டிருந்தது. நேற்று நானும் என் நண்பருக்காக அவருடன் சென்றிருந்தேன். கணினி, கைபேசிகளின் தாக்கம் உள்ளே நுழைவத்ற்கு முன்பே தெரிந்தது. உங்கள் பெயருடன், கை பேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு, ஒரு குறுஞ்செய்தி மூலம் அனுமதி வழங்கப் படுகிறது. எவ்வளவு நாசூக்காக உங்களின் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்கிறார்கள்.

நுழைந்தவுடன் நம்மைத் தாக்கும் குளிரூட்டப் பட்ட பிரம்மாண்டமான அரங்கம். நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கண்ணைக் கவரும் வண்ணத்தில் பல மாடிக் குடியிருப்புகளின் பதாதைகள், உட்கார அருமையான நுரை மெத்தைகள் போட்ட சோபாக்கள், குளிருக்கு அடக்கமான கோட், ஸூட்டுடன் நாஸூக்காக உலவி நம்மை நெருங்கும் விற்பனையாளர்கள்- உள்ளே நுழையும் போதே கண்ணைக் கட்டியது. இப்படிப் பட்ட சந்தைகளில் நாம் நடமாட  முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு தான் உலா வர வேண்டும். இல்லையென்றால் பக்கத்தில் இருக்கும் நண்பரிடம் 'காப்பி சாப்பிடலாமா' என்று கேட்பதற்க்குள் கை நிறைய பேப்பர்களைத் திணித்து விடுகிறார்கள்.

பல பிரபல சென்னை வாழ் பன்மாடிக் கட்டிடங்கள் கட்டுவதில் வல்லுனர்களும் இங்கு ஆஜர். காதில் நிறையப் பட்டது சோளிங்க நல்லூர், கூடுவாஞ்சேரி, படூர் போன்ற இடங்கள். சிறுசேரியில் உள்ள பிரபல மென்பொருள் அலுவலகத்தைக் காட்டி , அங்கு வேலை செய்யும் பல்லாயிரக் கணக்கான இஞ்சினீயர்களே வாடகைக்கு வந்து விடுவார்கள், என்று நாக்கில் தேன் தடவிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது போலும் இது போன்ற நிறுவனங்களில் தான் திடுதிப்பென்று வீட்டுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அல்லது வாங்குபவர்களுக்கு அது தெரிந்திருக்காது என்ற நம்பிக்கையிலோ? தெரியவில்லை.

பெருங்களத்தூர் ரயில் நிலயத்திலுருந்து பத்து நிமிடங்கள் தான்- நாங்களே கூட்டிச் செல்கிறோம் - "எவ்வளவு நாளைக்கு ஸார்" என்று கேட்கத் தோன்றியது.

"இந்த பிளாக்கில் வாங்குபவர்களுக்கு கார் பார்க்கிங் உண்டு. ஆனால் இந்த பிளாக்கில் இல்லை" என்றார். "கொஞ்ச வருடங்கள்  கழித்து அவர்களும் கார் வாங்குவார்கள். அப்ப அவர்கள் எங்கு நிறுத்துவார்கள்"என்று கேட்டால் , இருக்குமிடத்தில் அங்கங்கதான்" என்ற பதிலைக் கேட்டு உணர்ந்தது "இப்படிப் பட்ட தொலை நோக்கில்லாதவர்களிடம் சிக்கினால், வாங்கியவர்கள் சண்டை போட, இவர்கள் பணத்தை எண்ணிக் கொண்டே போய்க் கொண்டே இருப்பார்கள். ஜாக்கிரதை" என்று உள்ளே மணி அடித்தது.

இப்படித்தான்  ஒருத்தர் கழுத்து டையை கொஞ்சம் தளர்த்திக் கொண்டே 'எங்கள் திட்டத்தில் 24 மணி நேர காவலர்கள், நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட மைதானம் எல்லாம் தருகிறோம்' என்றார். இதெல்லாம் ஒரு விற்பனைக்குறிய உத்தியா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. இவர் சொன்ன வசதிகளையோ/ சலுகைகளையோ பராமரிக்க ஆகும் மாசச் செலவு யார் கணக்கில்?

அடுக்கு மாடி என்றால் ஒன்றிரண்டு இல்லை- முப்பது , நாப்பது மாடி. இன்னும் ஆச்சரியப்பட வைத்தது, மாடி மேலே போகப் போக வீட்டின் விலையும் ஏறுமாம். முன்பெல்லாம் அதிக பட்சமாக இருந்த மூன்றாம் மாடிக்கு " கரண்ட் இல்லாத போது ஏற முடியாது, தண்ணி கஷ்டம் வந்தால் குடம் தூக்க முடியாது" என்ற காரணத்தால் ஒரு சதுர அடிக்கு இருபது ரூபாய் குறைப்பார்கள். கண்ணோட்டமும், வியாபரமும் தலை கீழாகப் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

குறைந்த பட்சம் அறுபது , எழுபது லகரத்துக் குறைந்து எந்த வீடும் கிடையாது. கேட்டால் புழுவைப் போல ஒரு பார்வை பார்த்து விட்டு, அடுத்து வருபவரிடம் நகருகிறார்கள் 'டை'யர்கள். இதெல்லாம் ஊருக்கு எந்தக் கோடியிலோ என்று கொஞ்சம் நகருக்குள் நிலவரம் பார்க்கலாம் என்றால் இங்கும் கோடிகள் தான் . "ரெண்டு ஸீக்கு குறைஞ்சு சிட்டில தேடாதேங்க ஸார்" என்று சொல்லிண்டே போனார், காலையிலிருந்தே இங்கு சுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர்.

இந்தச் சந்தையை அமைத்தவர்கள் கொஞ்சம் சிந்தித்துத் தான் இருக்கிறார்கள். 'இவ்வளவு பணத்திற்க்கு எங்க போக' என்று வியந்து வாய் திறந்து வெளியே வந்தால் திறந்த வாய் மூடுவதற்க்குள் அடுத்த அரங்கில் கடன் கொடுப்பவர்களெல்லாம் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.

கண்ணைப் பறிக்கும் கலரில் 'சிகாகோ' என்று பெயர் பொறித்த பெரிய சைஸ் பனியனுடன், வழுக்கைத் தலைக்கு மேலே தூக்கி விடப்பட்ட குளிர் கண்ணாடியுடன், அண்மையில்தான் பிள்ளை வீட்டிலுருந்து இந்தியா திரும்பி இருக்கிறேன் என்று கேட்காமலே பறை சாற்றும் எல்லா அறிகுறிகளுடன்  ஒருவர் "Actually it is for my son in U.S. How much is he eligible"  என்று ஆங்கிலத்தில் கடன் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படி தத்தம் பெண், பிள்ளைகள் வெளி நாடுகளில் குளிருக்கு அடக்கமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி நெட் ஃப்ளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டிருக்க பல அப்பாக்கள் கையில் சட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள்!

கொஞ்ச நேரத்திலேயே கால் வலிக்க , 'என்னமோ தெரியல ரொம்ப டயர்டா இருக்கு"ன்னப்போ, என் நண்பர் "கையில இருக்கறத இறக்கி வெச்சா கொஞ்சம் சுலபமாக மூச்சு விடலாம்" என்றார். அப்பத்தான் தெரிஞ்சது ,  வாழ்க்கையின் பாப புண்ணியங்களைப் போல, நமக்கே தெரியாமல்,நிறைய சேர்த்துக் கொண்டிருப்பது. கையில் கட்டு கட்டாக புத்தகங்கள், பல வண்ணத்தில் பேப்பர்கள். பலரும் அதை அப்படியே வாசலில் போட்டு விட்டுப் போகிறார்கள். குப்பை இரைவது மட்டுமில்லாமல், நிறைய காகித விரயங்களும்- தவிர்க்கப் பட வேண்டிய விஷயங்கள். வாசலில் பெரிய பெட்டிகள் வைத்து அதில் தேவை படாதைவகளைப் போடச் சொல்லி இருக்கலாம்- இதெற்க்கெல்லாம் பிரதமரையா ஒரு திட்டத்தோட வரச் சொல்ல முடியும்?

வெளியில் அரை இருட்டில் தட்டு தடுமாறி வண்டி நிறுத்தி இருக்கும் இடத்திற்க்குப் போனால், அங்கிருந்து வெளியே வர எந்த வழி காட்டிப் பலகைகளும் இல்லாது கொஞ்சம் சுற்றிய போது உரைத்தது- வீடு வாங்க வருபவர்களும், இப்படித்தான் பல கண் கவர் திட்டங்களைப் பார்த்து மயங்கி, விலையை நினைத்து எப்படி போவது என்று வழி தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்களோ என்று !

சந்தை என்றால் கொஞ்சம் சல்லிசாக கிடைக்கும் என்பார்கள். ஆனால் லட்சங்களையும் கோடிகளையும் கூவி விற்கும் இந்தச் சந்தை கொஞ்சம் வினோதமாகத் தான் இருந்தது.

இந்த விலையில் ஒரு சாதாரணன் சென்னைக்கு அருகே வீடு வாங்குவது குதிரைக் கொம்பு தான். அதற்க்காக எல்லோரும் வெளி நாட்டுக்கும், மென் பொருள் கம்பெனியையுமா தேடிப் போக முடியும்- அங்கும் துரத்த ஆரம்பித்து விட்டார்களே !

வீட்டைக் கட்டிப் பார் என்றார்கள். வீட்டைக் கட்ட சுற்றிப் பார்ப்பதற்குள்ளேயே இப்படி மூச்சு வாங்கினால், வருங்கால சந்ததியினரை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.  நிறையப் படிக்க வேண்டி இருக்கு, நிறைய உழைக்க வேண்டி இருக்கு. அவர்கள் இதை எவ்வளவு சீக்கிரம் உணருகிறார்களோ, அவ்வளவு நல்லது.

6 comments:

  1. SreePriya Ramesh commented on 23-Feb-2015 - "Superb Sir" !

    ReplyDelete
  2. Guruprasad commented on 23-Feb-2015 " I enjoyed your satirical article on ground real(i)ty

    ReplyDelete
  3. Raghothaman commented on 23-Feb-2105 - " Superb article. u have evolved as a full fledged writer long ago ..."

    ReplyDelete
  4. Karthik Gopalakrishnan commented on 23-Feb-2015 "I enjoyed reading it Sir..very nice.."

    ReplyDelete
  5. Krishna Kumar commented on 23-Feb-2015 "Good one"

    ReplyDelete
  6. Bharath Kumar commented on 23-Feb-2015 " நல்ல நடை. உள்ளேயும் சரி கபாலியின் எழுத்திலும் சரி"

    ReplyDelete