Tuesday, March 3, 2015

நிலையற்ற நிரந்தரம்

எப்பொழுது கிரிக்கெட் விளையாட்டு பார்த்தாலும் இது நம் தினசரி வாழ்க்கைக்கு எவ்வளவு பாடங்களை கற்று கொடுக்கிறது என்றே வியந்திருக்கிறேன்.  நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சிறு தவறினாலோ அல்லது ஒருவரின் அலட்சியத்தாலோ நிலைமை தலை கீழாக மாறி விடுகிறது.

சௌகரியமான நிலையிலிருந்து சறுக்குவதில் வாழ்க்கைக்கு நிகர் கிரிக்கெட்டே.

அதே  போல் நிலமை மிக மோசமாக இருக்கும் பொழுதும் கூட  நிதானத்தைக் கடைப் பிடித்து, சிறுகச் சிறுக முன்னேறி இறுதியில் உச்சியைத் தொடவும் முடியும் என்றும் அறிவுறுத்துகிறது.

பெரியோர்கள் சொன்ன 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது இரண்டுக்கும் பொருந்தும்.

நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது சிலர் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடரலாம் என்பர். இது 'எல்லாமே எப்பொழுதுமே' ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்ற ஒரு (மூட) நம்பிக்கையில் விளைவது.

என் குழுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வெளி நாட்டில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று இந்தியா திரும்ப வேண்டும் என்ற போது காரணம் கேட்டால் " சும்மாத்தான். வேண்டுமென்றால் மறுபடியும் போனால் போயிற்று" என்றவர், ஐந்து வருடங்களாகியும் இன்னும் போக முடியவில்லை. இவர் மறுபடியும் முயற்ச்சி பண்ணும் பொழுதுதான் உலகச் சந்தையின் சறுக்கல், அலுவலகத்தில் நடந்த மாற்றங்கள், வெளி நாட்டு வாடிக்கையாளர்களின் மன மாற்றம்" இப்படி பல காரணங்களால் இன்னும் மீனம்பாக்கம் தாண்ட முடியவில்லை.

கிரிக்கெட்டில் எல்லா பந்துகளையும் விளாசிக் கொண்டிருந்தவர் சின்ன காயம் காரணமாக கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு மறுபடியும் உள்ளே நுழைந்தால், அந்த சுலபம் கிடைக்காமல் திணறிய கதைகள் பல உண்டு.

இப்படித்தான் சிலர் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னும் ஒரு சில வருடங்களுக்குள் முடிக்க வேண்டிய உயர் கல்வியை  கொஞ்ச நாள் வேலை பார்த்து விட்டுத் தொடரலாம் என்று ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு வந்தால் பழைய வேகத்தையும், புத்தி கூர்மையும் காணாமல் போவதை உணர்கிறார்கள்.

இதெல்லாம் நதி போலத்தான் - ஒடிக்கொண்டே இருந்தால் தான் நல்லது. கொஞ்சம் தயங்கினாலோ, நாமாகத் தடை போட்டாலோ திசை திரும்பி விடுகிறது.

மிகச் சுலபமாகத் தோன்ற வைக்கும் சந்தர்ப்பங்கள் நம் கதவைத் தட்டும் பொழுது, இது தான் ஒரே முறை நம் கதவு தட்டப் படுகிறது என்பது போல் நம் சிந்தனைகளையும், செயல்களையும் அதிகரிப்பது தான் புத்திசாலித் தனம். கையிலிருக்கும் களாக்காயை விட்டு விட்டு எங்கிருந்தோ எப்பொழுதோ கிடைக்கப் போகும் பலாக்காய்க்கு காத்திருப்பது ஒரு உசிதமான செயல் அல்ல.

கடைசி காலத்தில் வாயைத் திறக்க முடியுமோ, மனத்தால் கூட நினைக்க முடியுமோ முடியாதோ என்ற நிலையற்ற நேரங்களுக்காகத்தான்  "அப்போதைக்கு இப்பொதே சொன்னேன் நாராயணா", என்று அட்வான்ஸாகவே  நல்ல சொற்களையும், எண்ணங்களையும் மனக் கணக்கில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்களோ பெரியவர்கள் என்றும் தோன்றுகிறது. இப்பொழுது சுலபமாக அடிக்கக் கூடிய பந்தை விளாசி வெளியே அனுப்பலாம், அடுத்த முறை அது எசகு பிசகாக சுழன்று , திரும்ப வாய்ப்பிருப்பது என்பதை உணர்வோமாக !



No comments:

Post a Comment