Saturday, November 22, 2014

சென்னையின் வேறு முகம்?

சென்னையின் பெருமைக்குரிய,  'மால்' என்று நாகரீகமாக அழைக்கப்படும் 'துரித' சந்தை அது.

குமுறிக் கொண்டிருக்கும் வானத்தைப் பின் தள்ளி உள்ளே நுழைந்தால், வண்ண மயமான சந்தை வெளியுலகக் கவலைகளை மறக்கடிக்க முயற்ச்சித்துக் கொண்டிருந்தது. எஸ்கலேட்டரிலிருந்து இறங்கியவுடன், வெளியே பத்து ரூபாய்க்கு விற்கப்படும் சமோசாவை நாற்பது ரூபாய்க்கு வாங்கி , ஒரு காலத்தில் தெருக் குழாய்களில் இரு கைகளையும் குவித்து ஆனந்தமாய் பருகும் தண்ணீரை, சுத்திகரிக்கப்பட்டு  தவிர்க்கப் பட வேண்டிய ப்ளாஸ்டிக் பாட்டில்களில் வாங்கி , முதுகுப் பையில் வைத்துக் கொண்டு அவசரமாக இன்னும் சில ரூபாய்களை விரயம் செய்ய விரைந்து கொண்டிருந்தார்கள்.

சமீபத்தில் நாகரீகத்தினுள் நுழைந்த நடுத்தர வர்கத்தினர் இன்னும் பிரமிப்புக் குறையாமல் கழுத்தை சுத்தி சுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டே  நகர்ந்தார்கள். 'எக்ஸார்ஸிஸ்ட்' படத்தில் வரும் பேய்ப்பெண்ணின் கழுத்து இவர்களுக்கு ரொம்ப உபயோகமாக இருந்திருக்கும்

அண்மையில்அமெரிக்காவிலிருந்து திரும்பிய தம்பதியர் அங்கு வாங்கிய தள்ளு வண்டியில் தூங்கும் குழந்தையை வைத்து, இங்குள்ள ஏற்ற இறக்கங்களுக்கு ஈடு கொடுக்கப் பிரம்மப் பிரயத்னம் செய்து கொண்டிருந்தார்கள்.

நெடு நாளைய சீமாட்டிகளோ, தாதிகளிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு முகத்தில் சலிப்புடன் பின் வரும் கணவன்மார்களுடன் சன்னல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். தாதிகள் பஞ்சு மிட்டாய் வண்ணப் புடவையில் கூம்பு ஐஸ்க்ரீமை தனக்கும் குழந்தைக்குமிடையே மாற்றி மாற்றி பகிர்ந்து கையில் வழியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஆக மொத்தம் அனைவரையும் சந்தோஷப் படுத்தும், பல வண்ணங்கள் கலந்த , குறிப்பாக வாரக் கடைசிகளில் தோன்றும் சொர்க்கபுரி உற்சாகத்தில் திளைத்திருந்தது. அங்குள்ள மக்களின் ஒரே கவலை கையிலுருக்கும் ப்ளாஸ்டிக் அட்டையை எங்கு தேய்ப்பது தான் என்பது போலத் தெரிந்தது.

சில நடுத்தர தந்தைமார்களின் பாடுதான் ரொம்ப பரிதாபமாக இருந்தது. 'இதெல்லாம் இங்கே யானை வில சொல்வான் . வெளியில வாங்கிக்கலாம்" என்று சொன்ன புருஷனை , 'அற்பப் பதரே' என்பது போல் ஒரு பார்வை பார்த்து, "ஏங்க கூட்டிட்டு வந்துட்டு பிசு நாரித்தனம் பண்றீங்க" என்று பல்லைக் கடித்த மனைவியை, லீவு நாள் மூடு கெடுக்காமல் அவர் சமாளிக்க முயன்றது பாவமாகவும் , சிரிக்க வைப்பதாகவும் தெரிந்தது !!

சில மணிகளில் கால் வலிக்கத் தொடங்க, வாங்கிய பைகளும் கைகளில் ஏற வீட்டுக்குப் போக வாசல் பக்கம் வந்தால் பெரீய கூட்டம். குமுறல் தாங்காமல் வானம் மடை திறந்து தெருக்கள் வழிந்தோடிக் கொண்டிருந்தன.

பள்ளம் பார்த்து, நெளியும் கூட்டத்தூடே வண்டியைச் செலுத்தும் போது தான் தென்பட்டது அந்தக் காட்சி. பக்கத்தில் வந்த மீன் பாடி வண்டியில் தலையில்  ஒரு ப்ளாஸ்டிக் பையை குடையாக்கி பின்னால் தன் வீட்டம்மாவை உட்கார வைத்து சொட்டச் சொட்ட நனைந்தாலும் சிரமப் பட்டு மிதிக்கும் பெரியவர்.

அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த, மழையிலும் பள பளக்கும் காரை சிரமப் பட்டு முந்த முயன்ற மீன் மாடியை, கார் ஓட்டிய இளைஞர் மழைத் தண்ணீர் உள்ளே வராமல் கொஞ்சமாக கண்ணாடியை இறக்கி, பாப் கார்ன் பையை வெளியே  போட்டு விட்டு "பெருசு, என்ன அவசரம். வண்டில இந்நேரம் கோடு போட்டுருப்பே" என்றார்.

பெரியவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை என்றாலும் அவரின் மெல்லிய புன்னகை " உனக்கென்ன, நனையாமல் உள்ளே இருக்கே. எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் மிதித்தால் தான் நான் வீட்டுக்கே போக முடியம் . அப்புறம் தான் உலை வைப்பதெல்லாம்" என்றது போலிருந்தது.

மழை, வண்டி வித்தியாசம் பார்க்காமல், மறுபடியும் பெய்யத் தொடங்கியது !

No comments:

Post a Comment