Friday, October 16, 2015

'அமெரிக்காவில் பார்த்ததும் பதிந்ததும்' - பாகம்- 2

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய 'பார்த்ததும் பதிந்ததும்' பதிவுக்கு வந்த சில கடிதங்கள் மென்மேலும் பகிரத் தூண்டியதால் , இதோ இன்னும்  சில பார்வைகள்:

அமெரிக்காவில் தங்கள் நாட்டுக் கொடியை பறக்கவிடுவதற்கு தயங்குவதே இல்லை. வீட்டு முன்னோ, காரிலோ எல்லா இடங்களிலும் , எல்லா அளவிலும் காணப்படுகிறது. தேசிய உணர்வைத் தூண்ட ஒரு நல்ல உத்தி.

நிறைய சைக்கிள்களைப் பார்க்க முடிகிறது. வண்டி ஓட்டினாலும் அவர்களும் பாதசாரிகளுக்கான விதிமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டுமாம். நம்மூர் மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால்  நம்மூர்ப்படி நடைபாதையில்- ஆனால் அவர்கள் சட்டப்படி சரியாக எதிர் திசையில்- காற்றாய்ப் பறக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் சரியான அடி படும் 

போலிஸ்காரர்கள் ஆஜானுபாகுவாய் இருக்கிறார்கள். ஆகிருதிக்குக்காகவோ இல்லை அபராதத்துக்காகவோ , பொது மக்கள் அவர்களைப் பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள்.

எங்கு ரோடு ரிப்பேர் நடந்தாலும் அங்கு கட்டாயமாக ஒரு போலீஸ்காரர் இருக்க வேண்டுமென்பது ந்நாட்டு விதியாம். அதனால் விதி மீரல்கள் இருப்பதில்லை. நேற்று ஒரு போலீஸ்காரர் ஒரு பக்கம் தெருவில் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருக்க மற்ற முனையில் தெருப் பிள்ளைகளுடன் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தார் .

கார் கண்ணாடியை இறக்கி விட்டு உரத்த சத்தத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே போகக் கூச்சப் படுவதே இல்லை.

கார்கள் அனேகம் பேர் வைத்திருக்கிறார்கள், ஆனால் மோட்டார் சைக்கிளுக்கு இங்கு நல்ல மவுசு. 

இந்தியாவில் காணாமற்போன அத்தனை குருவிகளும் இங்கு தான் உள்ளனவோ - அவ்வளவு குருவிகள் , கொத்துக் கொத்தாக மெல்லிய சத்தத்துடன் . இங்கு செல் டவர், ரேடியேஷன் போன்ற சமாச்சாரங்கள் கிடையாதா? நம்மவர்கள் விசாரித்துத் தேர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று 

நம்ப ஊரில் எண்பதுகளில் ஒரு ஸ்டேடஸ் சிம்பலாக விளங்கிய டீ வீ ஆண்டெனாக்களை, 2015ல் அமெரிக்காவில்  பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது 

நுகர்வோர்களுக்கு  ஏகப்பட்ட சலுகைகள்.  குக்கரிலிருந்து, ஆடைகள் வரை - எதை வேண்டுமானாலும் வாங்கலாம். 'சிவாஜி' மாதிரி பழகிப் பார்க்கலாம். பிடிக்க வில்லையென்றால் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிக் கொடுத்து விடலாம். கேள்வி கேட்காமல் காசு கொடுக்கப் படும். தை அவ்வப்பொழுது தப்பாக தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ளுகிறார்களோ என்று கூட தோன்றுகிறது.

வெகுவாகக் கவர்ந்த மற்றொரு விஷயம். மொபைல் போனை எல்லாவற்றுக்கும் உபயோகப் படுத்துகிறார்கள்- அடுத்த பஸ் , ரயில் எப்பொழுது, ஒரு இடத்துக்குப் போக வழி - ரோட்டில் யாரையும் கேட்க  முடியாது, சொல்லவும் மாட்டார்கள். இந்தவாரக் கடைசியில் மழை வருமா,  பிட்ஸா ஆர்டர் கொடுக்க, கொடுத்த ஆர்டரின் ஸ்டேட்டஸ் அறிய , பார்மஸியில் கேட்ட மருந்துகள், டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன், நேற்று  எடுத்த ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் ரெடியா - இப்படி சமய சஞ்சீவியாக உள்ள போன் இல்லா விட்டால் இவர்கள் பாடு கஷ்டம் தான். அதைவிடக் கொடுமை இன்டர்நெட் இல்லா விட்டால் - முக்கால் தேசம் முடங்கியே விடும் போல.

பார்த்த வரையில் பலரும் ஒரு ஒழுக்கத்துடன் இருக்கிறர்கள்.

நாம் எதிரில் நடந்து வரும் பொழுது அவர்கள் வீட்டு வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தாலோ, நாயை வாக்கிங் கூட்டிச் சென்றாலோ ஒதுங்கி வழி விடுகிறார்கள்.  நாய்களை பிள்ளை போல் வளர்க்கும் இவர்கள் ஆபிஸில் இருந்து வந்தவுடன் சளைக்காமல் செய்யும் முதல் வேலை இந்தக் 'குழந்தையை' வெளியில் கூட்டிப் போவது தான் - "இல்லாவிட்டால் உட்கார விடமாட்டான்".

வாகன ஓட்டிகளின் பொறுமை ஆச்சரியப் பட வைக்கிறது. அனேகமாக எல்லோருமே நிறுத்தி புன்னகையுடன் பாதசாரிகளைக் கடந்து போகச் சொல்லி, பின்தான் போகிறார்கள். கலாச்சாரமும், விதிகளின் உக்கிரமும், கை நீட்டாத காவல் துறையும் - கை கோர்த்திருப்பது தெரிகின்றது.



சுலபமாகப் புன்னகைக்கிறார்கள். உற்சாகப் பிரியர்கள். எல்லாவற்றையும் கொண்டாடுகிறார்கள். 

மொத்த விற்பனைக்கே பிரபலமான சில கடைகளில் தயங்காமல் அள்ளுகிறார்கள் - 48 பாட்டரிகள் கொண்ட ஒரு பாய், பட்டிணத்தில்  பூதத்தில் வரும் ஜாடி சைஸில் ஜூஸ் பாட்டில்கள், பல தரப்பட்ட வடிவங்களில் ரொட்டிகள் எல்லாவற்றையும் சளைக்காமல் வாங்குகிறார்கள். நிறைய, செலவழிக்காமலேயே தேதி முடிந்து போய் தூக்கியிம் போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன் 

இது ஷாப்பிங் பிரியர்களின் சொர்க்கபுரி  போலும் - எப்பொழுதும் ஏதாவது ஒரு சேல் நடந்து கொண்டே இருக்கிறது. பிளாஸ்டிக் அட்டையுடன் உள்ள வீட்டம்மாக்களைப் பற்றிக் கவலைப் படாமல் கணவன்மார்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் உழைத்து, வார இறுதியில் கொண்டாடி,மறுபடியும் திங்களன்று நீள முகத்துடன் அடுத்த வார கவலைக்குக் கிளம்புகிறார்கள். 

நான் பேசிய சிலரின் படி- சேமிப்புத் திட்டங்கள் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது. வங்கிகள் சேமிப்புக்குக் கொடுக்கும் வட்டி விகிதங்கள் வடிவேலு பேசுவதை விட காமெடியாக இருக்கிறது. வங்கியிலேயே அட்வான்ஸ் வாங்கி, நகை செய்து , அதற்க்கு எதிராகவே நகைக் கடன் வாங்கி, கடனை அடைத்து நகையை  சே(ர்)மிக்கும்  நம்ம வங்கி ஊழியர்களின் திறமைக்கு இங்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது . சிறு சேமிப்பில் நம்மவர்களை மிஞ்ச முடியாது.

 வெளி நாட்டில் சம்பாதித்து, இந்திய வங்கிகளில் சேமித்து, எந்த நாட்டு ஷேர் மார்கெட்டிலும் விடாமல் கூடுவாஞ்சேரி பக்கம் வீட்டைக் கட்டி செட்டில் ஆகும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள் . ஆனால் கொஞ்சம் கம்மி. அனேகமாக பலரும் பெற்றோர்களின் முதியோர் இல்லச் செலவு போக, இங்கேயே விரயம் செய்து,  வளரும் மகள்களை நினைத்துக் கொஞ்ச காலம் கவலைப் பட்டு, அடங்கி விடுகிறார்கள்.

நான் பார்த்தவரை தெருக்கள் அனேகமாக சுத்தமாக இருக்கின்றன. மரங்களிகளிலுருந்து உதிரும் இலைகளைக் கூட மிஷின் வைத்து தவறாமல் எடுத்து விடுகிறார்கள் 

தெருவில் தன்னிச்சையாக மாடுகளையோ அவைகள் போடும் சாணங்களையோ பார்க்காமல் மனது வெறுமையாக இருக்கிறது.

நாய்களைப் பொறுத்தவரை இங்குள்ள விதிகள் மிகக் கடுமை. அவைகளை நடை பயிற்சிக்குக் கூட்டிக் கொண்டு போகும் பொழுது அவைகளின் கழிவுகளை சுத்தம் செய்யாவிட்டால், நாயின் சொந்தக்காரருக்கு நூறு டாலர் வரை அபராதம் என்று மூலைக்கு மூலை அறிவித்திருக்கிறார்கள்   

உள்ளூர் மட்டுமில்லை , நெடுஞ்சாலைகளிலும் குப்பையோ, காகிதங்களையோ பார்க்க முடியவில்லை.

சாலைகளில் 100 கி மீ குறையாமல் வேகமாக காரில் பறக்கிறார்கள். சாலை பராமரிக்கும் விதம், விதிகளின் பயம், சுய கட்டுப்பாடு இவைகளெல்லாம் உதவுகின்றன. 

நியூயார்க் போன்ற பெரிய நகரங்களிலும் எவ்வளவு நெரிசல் இருந்தாலும் எந்தக் காரும் ஹார்ன் அடித்துத் தன் வெறுப்பைக் காட்டாமல் இருந்தது ஒரு பெரிய ஆச்சரியம்.

ஒரு சில நெடுஞ்சாலைகளில் ' அதிக வேகம் 70 மைல் ஆனால் குறைந்தது 45 மைல் போயே ஆக வேண்டும் ' என்பதும் ஆச்சரியமே!

கார்களில் முகப்பு விளக்குகளை, கொஞ்சம் வெளிச்சம் குறைந்தாலும் தானாக எரிய வைத்திருக்கிறார்கள். 

பார்த்த மற்றொரு ஆச்சரிய போர்டு 'இன்னும் இரண்டு மைல் காத்திருங்கள் SMS அனுப்ப'

அமெரிக்க ஆச்சரியங்கள் இன்னும் தொடருகின்றன......

1 comment:

  1. Really great.you have more observation power and also communication ability. Pl.continue.
    Regards
    S.Balu

    ReplyDelete