Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Thursday, December 24, 2015

வலையும் வலை சார்ந்த வாழ்க்கையும்

சிங்காரச் சென்னையை விட்டு இந்நாட்டுக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது .

இந்தியாவிலிருந்து கிளம்பும் பொழுது அமெரிக்காவைப் பார்ப்பதை விட உறவினர்களைக் காணும் ஆர்வம் மேலோங்கி நின்றது. ஒன்றிரு முறை பயணப்பட்டிருப்பதால் புதிய நாட்டை விட பழைய உறவினர்களைக் காணும் நாட்டம் அதிகமாக இருந்தது.

இருந்தாலும் சுஜாதா என்னும் எழுத்து ஜீவி எழுதியது நினைவுக்கு வந்ததது "அமெரிக்காவென்னும் அதிசய உலகம் வெளி நாட்டவர்களுக்கு என்றுமே ஒரு கவர்ச்சிக் கன்னி தான் "

பார்ப்பதற்க்கு நிறைய இடங்கள் உள்ளன .
வியப்பதற்கு அதை விட அதிகம் இருக்கின்றன.
இங்கும் இப்படியா என்று எண்ண வைக்கும் சமாச்சாரங்களும் உள்ளன.
வியப்பது அலுத்து விட்டாலும் பார்க்கப் பார்க்க, ரசிக்க ரசிக்க அதை மற்றவர்களிடம் பகிரும் ஆர்வம் அதிகமாகிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த வலைப் பதிவு.

இங்கு, ஒவ்வொரு முறை வீட்டை விட்டுப் பயணப் படும் பொழுதும் நம்மைக் கவர பல விஷயங்கள் உள்ளன. இந்நாட்டு ஜனங்கள் , அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் ஒழுக்கம்..... இப்படியான பல விஷயங்களில் என்னைச் சிந்திக்கத் தூண்டியது இங்கு நிலவும் 'வலை சார்ந்த வாழ்க்கை'.

நான் சென்ற சில பல நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வேலை நாட்களில் யாரும்  ஒருத்தரை ஒருவர் விசாரித்துக் கொள்ளவே முடியாத ஒரு அவசர நிலை. வார இறுதிக்காக ஏங்கிக்கொண்டே, வார நாட்கள் முழுதும் உழைத்து வெள்ளி மாலையில் தொடங்குகிறது கொண்டாட்டம்.

சனிக்கிழமை முழுவதும் வீட்டைச் சுத்தம் செய்து, துணி துவைத்து- (நம்ம ஊரில் இதெல்லாம் செய்யும்  முனியம்மாக்கள் இந்த ஊரில் கிடையாதாம்) , அருகிலுள்ள மால் எனப்படும் சூப்பர் சந்தைக்குப் போய் பால் முதல் ஷவர சமாச்சாரம் வரை வாங்கி, வரும் வழியில் பீஸ்ஸாக்களை விழுங்கி இன்றே உலகம் முடியப் போவது போன்ற ஒரு துரித கதியில் கொண்டாடி விடுகிறார்கள்.

ஞாயிறு வழக்கத்தை விட இன்னும் தாமதாக எழுந்து எங்கோ பார்த்த ஞாபகமாக உள்ள சமையலறையில் நுழைந்து வெளி வரும் பொழுது இன்னும் ஏழு நாட்களுக்கான உணவு ரெடி. சுட வைத்து சுட வைத்து வாரம் முழுவதும் ஓட்டி அடுத்த வெள்ளி மாலைக்குக் காத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் அனேகமாக சென்னையிலும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தான் என்றாலும் ஏதோ குறைவது போல் உதைத்தது.  நாடே வலை மூலம் இறுக்கமாகப் பின்னப் பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டு , பன்நாட்டு செய்திகளை இவர்கள் எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தேன்.

நான் விஜயம் செய்த வீடுகளில் யார் வீட்டிலும் பேப்பர் வாங்குவதில்லை. (இரண்டு மாதத்துக்குஒரு முறை பழைய பேப்பர்களை விலைக்குப் போடும் தொல்லை இல்லை).

ஆபீஸுக்குப் கிளம்பும் முன் மழை வருமா , குளிர் அதிகமாகுமா, குடையோ ஸ்வெட்டரோ தேவையா , எல்லாம் டீவீ மூலம் தெரிந்த கொள்கிறார்கள்.

எந்நேரமானாலும் உபேர் போன்ற டாக்சிகளை போன் மூலமாகக் கூப்பிட்டு அது எங்கு இருக்கிறது என்பதையும் வலை மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.

பஸ்ஸிலோ , பூமிக்கடியிலும் மேலும் ஓடும் ரயிலிலோ போகும் பொழுது  நாட்டு நடப்பு, அடுத்த ரயில் எப்பொழுது, போகுமிடம் எவ்வளவு தூரம் வரை எல்லாவற்றையும் கைக்கடக்கமாக உள்ள சின்னக் கணிணி போன்ற தொலை பேசியில் பார்த்துக் கொள்கிறார்கள்.

பஸ்ஸில் போகும் பொழுது என் அருகிலுருந்தவர் திடீரென்று செல் போனை வாயருகில் கொண்டு போய் 'ஸ்டார்பக்ஸ்' என்று சொன்னவுடன் அது அருகிலுள்ள காப்பிக் கடைக்கு வழி காட்டுகிறது. நம்மூரிலும் செல் போனை அழுத்தி 'இரானி டீக்கடை' என்று சொன்னால் வருமா என்று பார்க்க வேண்டும். இலவச வை பை கிடைப்பதால் ஸ்டார்பக்ஸ் கடைக்குள் எப்பொழுதும் கூட்டம் . ஒரே ஒரு கப்புசினோ காப்பியை வாங்கிக் கொண்டு மேக்கைப் பிரித்து மணிக்கணக்கில் உட்கார்ந்து விடுவதைப் பார்க்கும் பொழுது எண்பதுகளின் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் ஞாபகம் வந்தது.

சில வாரங்களுக்கு முன் நான் போன ஒரு இந்தியக் கடையிலிருந்த சில இலவச பேப்பர்களைக் கொண்டு வந்து என்னதான் இருக்கிறதென்று பார்த்ததில் சில தலைப்புச் செய்திகள்:
  • எட்டு மாதங்களுக்கு முன் பேரக் குழந்தையைப் பார்க்க குஜராத்திலிருந்து வந்த பட்டேல் தாத்தாவை எப்படி ஒரு காவலர் அநியாயமாக சந்தேகத்தின் பேரில் அடித்து அவர் இன்னும் எழுந்திருக்க முடியாத நிலையில் தள்ளப் பட்டார் என்ற கேஸ் கோர்ட்டில் நடப்பதை விரிவாகச் சொல்லி இருந்தார்கள். 'அவரைப் பார்ப்பதற்க்கு எழுபது வயது போலிருந்தார். அவரால் எந்த ஆபத்தும் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை" - இப்படிச் சொன்னது இதில் சம்பந்தப் பட்ட ஒரு காவலர் தான்.  
  • சைனா அதன் ஒரு குழந்தைகள் உள்ள பிரஜைகளுக்கு இன்னொன்று பெற்றுக் கொள்ள அனுமதி கொடுத்தது !
  • சோட்டா ராஜனைப் பற்றியும் , ஹர்பஜன் திருமணம் பற்றியும் சில சுவையான தகவல்கள் இருந்தது . ஆனால் பத்திகையாளர்களிடம் ஹர்பஜன் கேட்டதாக வந்த  மன்னிப்பு பற்றி செய்தி இல்லை 
  • அழகுச் சாதனங்களில்  உள்ள கேன்சர்  அபாயத்தைப் பற்றிய ஒரு திகில் செய்தி.
  • எளிய ஜீரணத்துக்கு முட்டைக் கோசையும் , பெரிய வெங்காயத்தையும் சாப்பிட ஒரு அறிவுறுத்தல் 
 ஒரு வேளை காசு கொடுத்து வாங்கும் பேப்பர்களில் இன்னும் இருக்குமோ ?

ஒரு விபரீதக் கற்பனை - நம்ம ஊரில், நம்ப வங்கிகளில் நடப்பது போல் சர்வர் உட்கார்ந்து போனாலோ இணைய தளம் இல்லாமல் போனாலோ இந்நாடு என்னவாகுமோ ?

நினைக்கவே பயமாக இருக்கிறது.

ரொம்ப வருடங்களுக்கு முன் போய் விட்ட என் பாட்டியின் குரல் கேட்கிறது "நல்ல நாளும் அதுவுமா தோசித்தனமாக யோசிக்காதே. பாவம் இங்குள்ளவாளெல்லாம் தவிச்சுப் போயிடுவா"

 - -   சாண்டா பெரியவரின் மணியோசையை எதிர்பார்த்து இருக்கும் ஒரு குளிராத டிசம்பர் மாலையில் எழுந்த கலங்கிய எண்ணங்கள் .

Thursday, October 22, 2015

அமெரிக்காவில் கடந்த சில பக்திப் பாதைகள்

சென்னையில் இருந்தவரை , அவ்வப்போது கோவில்களுக்குப் போவது ஒரு பிடித்த அம்சமான நடவடிக்கையாக இருந்தது. அமெரிக்கா வந்தவுடன் அது இருக்காது என்று எதிர்பார்த்தது தான். ஆனால் இங்கும் , சில சந்துகளிலுருந்து  சாயந்திர வேளை நடையின் பொழுது இந்தியர் வாழும் பகுதிகளில் பஜனை சத்தங்களும் , பிரசாத வாசனைகளையும் உணர ஒரு இனிய அதிர்ச்சி.

சந்திர கிரஹணத்தன்று , சூடாக பிரயாணி விற்பனையாகிக் கொண்டிருக்கும் தெருவுக்குப் போகும் வழியில் பக்தர்களின் ஆக்ரோஷமான ஜால்ரா சப்தங்கள் அவர்களின் பரவச நிலையின் எல்லையைக் காட்டியது.

பிரதான வீதி ஒன்றிலேயே , பழக் கடைகளுக்கும், பல் டாக்டர்களுக்கும் இடையே, கண்ணாடி வழியே கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரித்தது பல கடவுள் சிலைகள்- உள்ளே மங்கலாக குளிருக்கோ இல்லை பக்திக்கோ பட்டுச் சால்வை போர்த்தப்பட்டுத் தெரிந்தன.

விநாயகர் சதுர்த்திக்கு இந்தியர்கள் நிறைய வந்து போகும்  பிரதான  வீதியில் பிளாட்பாரத்தில் ஒரு விநாயகர் சிலையை வைத்து பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் கழுத்தைச் சுற்றி மைக் அணிந்து கொண்டு உரக்க மந்திரங்கள் சொன்ன சாஸ்திரிகள்.

ப்ளஷிங்க் (FLUSHING)   என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோவில் மிகப் பிரசித்தம். சதுர்த்தி முடிந்து சில தினங்கள் கழித்து ஒரு ஞாயிறன்று விநாயகரை வெள்ளித் தேரில் வைத்து வீதி உலா வர விழாக் கொண்டிருந்த இடத்தை அமெரிக்கா என்று நம்பக் கடினமாக இருந்தது. பட்டுப் புடவைகள் சரசரக்க மாமிகள் கோலாட்டம் ஆட, பட்டு வேட்டிகளிலும் , பஞ்ச கச்சத்திலும் மாமாக்கள் மைக் பிடித்து ஸ்லோகங்கள் சொல்ல , பல இந்தியர்கள் உற்சாகத்துடன் தெருவில் நடந்தனர். குடிநீர் , குளிர்பானம், சின்ன மணி பர்ஸ் இப்படி பல இலவசங்களும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அழகான , மிகச் சிறப்பாக பராமரிக்கப்படும் இந்தக் கோவிலில் மக்கள் அமைதியாக வரிசையில் நின்று தரிசனம் செய்தார்கள். முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் சுடச்சுட சாம்பார் சாதம், லட்டு பிரசாதம். உடன் கொடுத்த தயிர் சாதம் கிருஷ்ணருக்கு ரொம்பப் பிடிக்கும் - அவ்வளவு க்ரீம். வந்த கூட்டத்துக்கும் விநியோகிக்கப்பட்ட பிரசாதங்களுக்கும் தெருவில் இருந்த குப்பை மிகக் கம்மிதான். நம்பிக்கையை தள்ளி வைத்து இவ்வளவு கூட்டத்தையும் , தேர் பவனியையும் பராமரித்து பாதுகாப்புக் கொடுத்த அமெரிக்க போலீஸ், அவர்கள் விரும்பும்  பல-மத-நம்பிக்கைக்கு நல்ல உதாரணம்.

Flushing Temple Car


ப்ரிட்ஜ் வாட்டர்  (Bridge Water)

ஜெர்சியிலிருந்து ஒரு மணி தூரத்தில் இங்கு உள்ள இந்தக் கோவிலில் அனேகமாக எல்லா பிரசித்தமான தெய்வங்களின் சந்நிதிகளும் இருக்கின்றன. சில்லென்ற மார்பிள் தரையை அனுபவித்துக் கொண்டே நடந்தால் எல்லா ஸ்வாமிகளும் ஒரு சுத்தமான எண்ணை பிசுக்கு, விபூதி குங்குமம் சிதறாத சூழ்நிலையில் இருப்பதைக் காணலாம் - பெருமாள் , திருப்பதியை நினைவில் கொண்டு வரும் ஒரு ஏழு அடி பிரம்மாண்டம்;  ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியும், அங்கங்கு சத்தியநாராயணா பூஜையும், இங்கு பிரபலமாக இருக்கும் ஸ்வாமினாரயணன், விட்டல் மற்றும் நவ கிரஹங்கள். எல்லா சந்நிதிக்கு முன்னும் ஸ்ரீ ரங்கம் கோவில் தூண்களில் காசு சொருகும் நம்மவர்கள் இங்கு தாராளமாக டாலர்களை தூவி இருந்தார்கள்.  பலி பீடங்கள் இருக்கக் கூடிய  இடங்களில் நம்ம ஊர் வெள்ளை சோற்றுக்கு பதில் காகித கப்பில் பொங்கல் வைத்திருந்தார்கள். குருக்கள் மந்திரங்களைச் சொல்லி , "Anybody else want to do archanaa " என்று கூவி விட்டு  ஹாரத்தி காண்பித்து எல்லோரையும் பரவச நிலைக்குக் கூட்டிச் சென்றார். தமிழ் நாட்டில் கோவில் நடத்துபவர்கள் இங்கு வந்து எப்படி கோவில் வளாகத்துக்குள்ளேயே ஒரு சுத்தமான கழிப்பறையையும் பராமரிக்கலாம் என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
Bridge Water temple

அக்ஷர்தாம் - (Akshardham)

ராபின்ஸ்வில்லே என்னும் இடத்தில் உள்ள 'அக்ஷர்தாம்' உலகிலேயே பெரிய கோயில் என்று வந்த ஒரு செய்தியுடனும், இதே கோவிலை தில்லியில் பார்த்த ஒரு எதிர்பார்ப்புடனும் சென்றேன். ஏக்கர் ஏக்கராக நிலத்தை வளைத்துப் போட்டு, விஸ்தாரமான கார் பார்க் கொடுத்து, ராஜஸ்தான் மார்பிள்களால் இழைத்துக் கட்டப்படும் ஒரு பெரிய இடம். தில்லி அளவு செக்யூரிட்டி கெடுபிடிகள் கிடையாது. செல் போன், ஐ பேட் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லலாம், ஒரு நிலை வரை போட்டோவும் எடுக்கலாம்.
Akshardham

பிரதான மண்டபத்தில் உள்ள மார்பிள் சிலைகள் மேல் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் விளக்குகளின் பளீர் கண்ணைப் பறிக்கின்றது. நாம் உள்ளே நுழைந்து எந்தப் பக்கம் ஆரம்பிக்கலாம் என்று திணறும் போது, அமைதியாக நம் அருகில் வரும் வழி காட்டிகள் எளிய நடையில் அந்த இடத்தைப் பற்றி சொல்கின்றனர் - காசு எதுவும் கொடுக்க வேண்டாம். எப்படி வாசலில் உள்ள இரண்டு தூண்கள் வருபவர்களை பவித்ரமாக்குகின்றன; 250 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் 2700 தொண்டர்களைக் கொண்டு நடக்கும் இந்தப் பணி பத்து சதவிகிதம் தான் முடிந்து இருக்கின்றன; இங்குள்ள 97 தூண்களை அவர்கள் எதிர்பார்ப்புக்குக் கொண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும்... இப்படிப் பல தகவல்கள்.

ஒவ்வொரு தூணிலும் ஒரு கதைக்கான சிற்பங்கள் - மிக நுண்ணியமாக செதுக்கப் பட்டவை. வெகு அழகாக வடிக்கட்ட ஒரு வெண் தாடியை உணர கையை அதனருகில் கொண்டு சென்ற போது, எங்கிருந்தோ புகை மண்டலத்திலுருந்து , கத்தி பட கதாநாயகன் போல் வந்த ஒரு பணியாளர் சிலைகளை தொடக்கூடாதென்றும், எப்படி ஒரு அன்பர் ஒரு சிலையை உடைத்து விட்டார் என்று கையைப் பிடித்துக் கூட்டிப் போய் சிரித்துக் கொண்டே காண்பித்தார் . சிலைகளின் தத்ருபம், புத்திசாலித்தனமாகப் பொருத்தப்பட்ட விளக்குகளின் வெளிச்சத்தில் உள்ள தூண்கள் ...எழுபதுகளின்  'வசந்த மாளிகையை' நினைவுப் படுத்தின .

இவற்றுள் ராமர், வியாசர், துருவர், நாம்தேவ், துக்காராம், திருவள்ளுவர் இப்படி பல தெரிந்த பிரபலமானவர்களைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தால் சிவன், பார்வதி அவர்களின் பிள்ளைகளை வைத்து முருகன் மூத்த பிள்ளை என்று ஒரு கூக்ளி போட்டு சிவன் குடும்பத்தில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தனர்.

இந்த இடத்தால் என்ன லாபம் என்றால் ' இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்தும் நம் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட நம் வரலாறு தெரிய வேண்டும் என்பதே ' என்று அந்த வழி காட்டி சொன்னது முற்றிலும் உண்மை என்றே நம்ப வைத்தது. வழக்கம் போல் கோவிலுக்கு மறு புறத்தில் உள்ள கடையில் நம்ம ஊர் பட்சணங்களின் வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது.

ஸ்வாமினாராயன் கோவில்

நம்ம ஊருல அஞ்சு விளக்குன்னு சொல்றமாதிரி , இங்கும் ஐந்து தெருக்கள் கூடும் இடத்தை Five Corner என்றழைக்கிறார்கள். இங்குள்ள ஸ்வாமினாராயன் கோவில் இந்த இடத்தில் பிரபலம் என்றதால்  ஒரு குளிர்ந்த மாலையில் நுழைந்தோம். இந்தியக் கோவில்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசைகள் தான் இருக்கும். ஆனால் இந்தக் கோவிலிலோ நுழைந்தவுடன் தம்பதிகளைப் பிரித்து தனித்தனியாக சாமி கும்பிட வைக்கிறார்கள். இந்தப் பிரிவினை இறுதி வரை வெளியில் வந்து காலணிகளை எடுக்கும் வரை நடப்பது தான் ஆச்சரியம். சரி தரிசனம் பார்த்தது போதும் என்று எழுந்தால் அமுக்கிப் பிடித்து 'இருந்து போகலாமே, இன்னும் அரை மணியில் மகா பிரசாதம் கொடுக்கப் போகிறார்கள்' என்று நம்ப ஊரில் கிரெடிட் கார்ட் வியாபாரி போல் பிடிவாதம் பிடித்தார்கள். அப்படியும் நான் மசியாததால் நைவேத்யத்துக்கு முன்னேயே பிரசாதத்தைக் கையில் திணிக்க ஒரு பரவச நிலையில் வெளியில் வந்தால் போதும் என்று வந்தது ஒரு நல்ல அனுபவம்.

நவராத்திரி

இந்தியர்கள் வெகுவாகப்  புழங்கும் ஒரு தெருவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடக்கப் போவதாக பல வாரங்களுக்கு முன்னேயே சுவரொட்டிகள் மூலம் அறிவித்திருந்தார்கள். இண்டியன் ஸ்டிரீட் எனப்படும் தெருவில் பட்டேல் ஸ்டோர்ஸும் , பிரியாணி அரிசி முதல் அப்பளம், வடாம் வரை அனைத்து இந்திய உணவுகளும் விற்க்கும் இந்தத் தெருவில் மாலை நடை பயிற்ச்சியின் போது பல இந்தியர்களைக் காண முடியும். தெருவின் இரண்டு முனைகளிலும் வண்ண விளக்குகள் மின்னியதைப் பார்த்து ஆஹா என்ன ஏற்ப்பாடு என்று வியந்து அருகே போனவுடன் தான் தெரிந்தது அது பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்ட போலிஸ்கார்கள் என்று. அருகிலுள்ள பெங்காலி ஹோட்டலில் அளவில்லாத சாப்பாட்டை ஒரு கட்டு கட்டி விட்டு வெளியில் வந்தால் குளிர் பிடுங்கித் தின்றது. முகத்தைத் தவிர எல்லாவற்றையும் மூடி அருகில் போனால் பெரிய மேடையில்  இரண்டு பேர் சுமாராகப் பாடிக் கொண்டிருக்க பல இந்தியர்கள்  குளிருக்காகவோ இல்லை பாடுபவர்களுக்காகவோ கையைக் காலை உதறி ஆடிக் கொண்டிருந்தார்கள்- கார்பாவாம் !
Garbha on Indian street

இங்கு ஒண்ணும் நம்ம ஊர் பக்திக்குக் கொஞ்சமும் குறைவில்லை தான் . ஒரு நல்ல சுத்தமான சூழ் நிலையில், வரிசையாக நின்று, அமைதியாக தரிசித்து, டாலர்களை அள்ளிப் போட்டு, பல கோவில்களில் சூடான பிரசாதம் எனப்படும் மதிய உணவையும் முடித்துக் கொண்டு மக்கள் திருப்தியாகத்தான் போகிறார்கள் .

அமெரிக்காவில் வந்து மக்கள் சாமி கும்பிட கோவில்கள் கட்டியதென்னவோ நியாயம் தான் , அதிலும் சுத்தமாக கழிப்பறைகளும் தேவை தான். இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தியவர்கள் ,  இயற்கை உபாதைகளுக்குப் பின் கால் அலம்பவும் ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் பேஷாக இருந்திருக்கும்.

Friday, October 16, 2015

'அமெரிக்காவில் பார்த்ததும் பதிந்ததும்' - பாகம்- 2

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய 'பார்த்ததும் பதிந்ததும்' பதிவுக்கு வந்த சில கடிதங்கள் மென்மேலும் பகிரத் தூண்டியதால் , இதோ இன்னும்  சில பார்வைகள்:

அமெரிக்காவில் தங்கள் நாட்டுக் கொடியை பறக்கவிடுவதற்கு தயங்குவதே இல்லை. வீட்டு முன்னோ, காரிலோ எல்லா இடங்களிலும் , எல்லா அளவிலும் காணப்படுகிறது. தேசிய உணர்வைத் தூண்ட ஒரு நல்ல உத்தி.

நிறைய சைக்கிள்களைப் பார்க்க முடிகிறது. வண்டி ஓட்டினாலும் அவர்களும் பாதசாரிகளுக்கான விதிமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டுமாம். நம்மூர் மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால்  நம்மூர்ப்படி நடைபாதையில்- ஆனால் அவர்கள் சட்டப்படி சரியாக எதிர் திசையில்- காற்றாய்ப் பறக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் சரியான அடி படும் 

போலிஸ்காரர்கள் ஆஜானுபாகுவாய் இருக்கிறார்கள். ஆகிருதிக்குக்காகவோ இல்லை அபராதத்துக்காகவோ , பொது மக்கள் அவர்களைப் பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள்.

எங்கு ரோடு ரிப்பேர் நடந்தாலும் அங்கு கட்டாயமாக ஒரு போலீஸ்காரர் இருக்க வேண்டுமென்பது ந்நாட்டு விதியாம். அதனால் விதி மீரல்கள் இருப்பதில்லை. நேற்று ஒரு போலீஸ்காரர் ஒரு பக்கம் தெருவில் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருக்க மற்ற முனையில் தெருப் பிள்ளைகளுடன் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தார் .

கார் கண்ணாடியை இறக்கி விட்டு உரத்த சத்தத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே போகக் கூச்சப் படுவதே இல்லை.

கார்கள் அனேகம் பேர் வைத்திருக்கிறார்கள், ஆனால் மோட்டார் சைக்கிளுக்கு இங்கு நல்ல மவுசு. 

இந்தியாவில் காணாமற்போன அத்தனை குருவிகளும் இங்கு தான் உள்ளனவோ - அவ்வளவு குருவிகள் , கொத்துக் கொத்தாக மெல்லிய சத்தத்துடன் . இங்கு செல் டவர், ரேடியேஷன் போன்ற சமாச்சாரங்கள் கிடையாதா? நம்மவர்கள் விசாரித்துத் தேர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று 

நம்ப ஊரில் எண்பதுகளில் ஒரு ஸ்டேடஸ் சிம்பலாக விளங்கிய டீ வீ ஆண்டெனாக்களை, 2015ல் அமெரிக்காவில்  பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது 

நுகர்வோர்களுக்கு  ஏகப்பட்ட சலுகைகள்.  குக்கரிலிருந்து, ஆடைகள் வரை - எதை வேண்டுமானாலும் வாங்கலாம். 'சிவாஜி' மாதிரி பழகிப் பார்க்கலாம். பிடிக்க வில்லையென்றால் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிக் கொடுத்து விடலாம். கேள்வி கேட்காமல் காசு கொடுக்கப் படும். தை அவ்வப்பொழுது தப்பாக தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ளுகிறார்களோ என்று கூட தோன்றுகிறது.

வெகுவாகக் கவர்ந்த மற்றொரு விஷயம். மொபைல் போனை எல்லாவற்றுக்கும் உபயோகப் படுத்துகிறார்கள்- அடுத்த பஸ் , ரயில் எப்பொழுது, ஒரு இடத்துக்குப் போக வழி - ரோட்டில் யாரையும் கேட்க  முடியாது, சொல்லவும் மாட்டார்கள். இந்தவாரக் கடைசியில் மழை வருமா,  பிட்ஸா ஆர்டர் கொடுக்க, கொடுத்த ஆர்டரின் ஸ்டேட்டஸ் அறிய , பார்மஸியில் கேட்ட மருந்துகள், டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன், நேற்று  எடுத்த ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் ரெடியா - இப்படி சமய சஞ்சீவியாக உள்ள போன் இல்லா விட்டால் இவர்கள் பாடு கஷ்டம் தான். அதைவிடக் கொடுமை இன்டர்நெட் இல்லா விட்டால் - முக்கால் தேசம் முடங்கியே விடும் போல.

பார்த்த வரையில் பலரும் ஒரு ஒழுக்கத்துடன் இருக்கிறர்கள்.

நாம் எதிரில் நடந்து வரும் பொழுது அவர்கள் வீட்டு வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தாலோ, நாயை வாக்கிங் கூட்டிச் சென்றாலோ ஒதுங்கி வழி விடுகிறார்கள்.  நாய்களை பிள்ளை போல் வளர்க்கும் இவர்கள் ஆபிஸில் இருந்து வந்தவுடன் சளைக்காமல் செய்யும் முதல் வேலை இந்தக் 'குழந்தையை' வெளியில் கூட்டிப் போவது தான் - "இல்லாவிட்டால் உட்கார விடமாட்டான்".

வாகன ஓட்டிகளின் பொறுமை ஆச்சரியப் பட வைக்கிறது. அனேகமாக எல்லோருமே நிறுத்தி புன்னகையுடன் பாதசாரிகளைக் கடந்து போகச் சொல்லி, பின்தான் போகிறார்கள். கலாச்சாரமும், விதிகளின் உக்கிரமும், கை நீட்டாத காவல் துறையும் - கை கோர்த்திருப்பது தெரிகின்றது.



சுலபமாகப் புன்னகைக்கிறார்கள். உற்சாகப் பிரியர்கள். எல்லாவற்றையும் கொண்டாடுகிறார்கள். 

மொத்த விற்பனைக்கே பிரபலமான சில கடைகளில் தயங்காமல் அள்ளுகிறார்கள் - 48 பாட்டரிகள் கொண்ட ஒரு பாய், பட்டிணத்தில்  பூதத்தில் வரும் ஜாடி சைஸில் ஜூஸ் பாட்டில்கள், பல தரப்பட்ட வடிவங்களில் ரொட்டிகள் எல்லாவற்றையும் சளைக்காமல் வாங்குகிறார்கள். நிறைய, செலவழிக்காமலேயே தேதி முடிந்து போய் தூக்கியிம் போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன் 

இது ஷாப்பிங் பிரியர்களின் சொர்க்கபுரி  போலும் - எப்பொழுதும் ஏதாவது ஒரு சேல் நடந்து கொண்டே இருக்கிறது. பிளாஸ்டிக் அட்டையுடன் உள்ள வீட்டம்மாக்களைப் பற்றிக் கவலைப் படாமல் கணவன்மார்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் உழைத்து, வார இறுதியில் கொண்டாடி,மறுபடியும் திங்களன்று நீள முகத்துடன் அடுத்த வார கவலைக்குக் கிளம்புகிறார்கள். 

நான் பேசிய சிலரின் படி- சேமிப்புத் திட்டங்கள் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது. வங்கிகள் சேமிப்புக்குக் கொடுக்கும் வட்டி விகிதங்கள் வடிவேலு பேசுவதை விட காமெடியாக இருக்கிறது. வங்கியிலேயே அட்வான்ஸ் வாங்கி, நகை செய்து , அதற்க்கு எதிராகவே நகைக் கடன் வாங்கி, கடனை அடைத்து நகையை  சே(ர்)மிக்கும்  நம்ம வங்கி ஊழியர்களின் திறமைக்கு இங்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது . சிறு சேமிப்பில் நம்மவர்களை மிஞ்ச முடியாது.

 வெளி நாட்டில் சம்பாதித்து, இந்திய வங்கிகளில் சேமித்து, எந்த நாட்டு ஷேர் மார்கெட்டிலும் விடாமல் கூடுவாஞ்சேரி பக்கம் வீட்டைக் கட்டி செட்டில் ஆகும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள் . ஆனால் கொஞ்சம் கம்மி. அனேகமாக பலரும் பெற்றோர்களின் முதியோர் இல்லச் செலவு போக, இங்கேயே விரயம் செய்து,  வளரும் மகள்களை நினைத்துக் கொஞ்ச காலம் கவலைப் பட்டு, அடங்கி விடுகிறார்கள்.

நான் பார்த்தவரை தெருக்கள் அனேகமாக சுத்தமாக இருக்கின்றன. மரங்களிகளிலுருந்து உதிரும் இலைகளைக் கூட மிஷின் வைத்து தவறாமல் எடுத்து விடுகிறார்கள் 

தெருவில் தன்னிச்சையாக மாடுகளையோ அவைகள் போடும் சாணங்களையோ பார்க்காமல் மனது வெறுமையாக இருக்கிறது.

நாய்களைப் பொறுத்தவரை இங்குள்ள விதிகள் மிகக் கடுமை. அவைகளை நடை பயிற்சிக்குக் கூட்டிக் கொண்டு போகும் பொழுது அவைகளின் கழிவுகளை சுத்தம் செய்யாவிட்டால், நாயின் சொந்தக்காரருக்கு நூறு டாலர் வரை அபராதம் என்று மூலைக்கு மூலை அறிவித்திருக்கிறார்கள்   

உள்ளூர் மட்டுமில்லை , நெடுஞ்சாலைகளிலும் குப்பையோ, காகிதங்களையோ பார்க்க முடியவில்லை.

சாலைகளில் 100 கி மீ குறையாமல் வேகமாக காரில் பறக்கிறார்கள். சாலை பராமரிக்கும் விதம், விதிகளின் பயம், சுய கட்டுப்பாடு இவைகளெல்லாம் உதவுகின்றன. 

நியூயார்க் போன்ற பெரிய நகரங்களிலும் எவ்வளவு நெரிசல் இருந்தாலும் எந்தக் காரும் ஹார்ன் அடித்துத் தன் வெறுப்பைக் காட்டாமல் இருந்தது ஒரு பெரிய ஆச்சரியம்.

ஒரு சில நெடுஞ்சாலைகளில் ' அதிக வேகம் 70 மைல் ஆனால் குறைந்தது 45 மைல் போயே ஆக வேண்டும் ' என்பதும் ஆச்சரியமே!

கார்களில் முகப்பு விளக்குகளை, கொஞ்சம் வெளிச்சம் குறைந்தாலும் தானாக எரிய வைத்திருக்கிறார்கள். 

பார்த்த மற்றொரு ஆச்சரிய போர்டு 'இன்னும் இரண்டு மைல் காத்திருங்கள் SMS அனுப்ப'

அமெரிக்க ஆச்சரியங்கள் இன்னும் தொடருகின்றன......

Thursday, September 17, 2015

நியூ ஜெர்ஸி- பார்த்ததும் பதிந்ததும் (இதுவரை)


  • மதிப்போ , பயமோ - சாலை விதிகளுக்குப் பணிகிறார்கள்.
  • வண்டிகள் தமக்குக் கொடுக்கப்பட்ட பாதைகளில் அசுர வேகத்தில் போகின்றன , ஆனால் பாதை மாறி ஆட்டோ போல் போவதை  இன்னும்  பார்க்கவில்லை
  • பாதசாரிகளுக்குத்தான் முன்னுரிமை, அவர்கள் தவறே செய்தால் கூட.
  • சாலைகளைக் குறுக்கே கடந்து ஓடுபவர்களையும் பார்க்க முடிந்தது- இதிலும் நம்மவர்கள் தான் அதிகம் என்பது தான் கொடுமை!
  • பாதசாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நடைபாதைகளின் அகலம் பொறாமைப் பட வைக்கிறது.
  • விதிகளுக்குப பணிந்தால் பயமில்லை. ஆனால், விதிகளை மதிக்காதவர்களுக்கு இடமில்லை 
  • நான் பார்த்த வரை , அனேகமாக கார் ஓட்டுவதில் , அதிகம் பேர் பெண்மணிகள் தான்
  • நடைபாதைகளில் நடப்பவர்களைத் தவிற நிறைய மூட்டைகள் தெரிகிறது - குப்பை !
  • குப்பை சேகரிப்பதிலும், அள்ளுவதிலும் ஒரு ஒழுங்கு முறை தெரிகிறது.
  • கொஞ்சம் பிரயத்தனப்பட்டுத் தேடினால் , நடைபாதைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களும், பிஸ்கோத்துக் கவர்களையும் காணலாம்.
  •  குழந்தைகளை பிறந்தவுடனே தள்ளி வைத்து விடுகிறார்கள் - நடக்கும் போது தள்ளு வண்டியில், காரில் பின்புறம் தனி சீட்டில்- அப்பா, அம்மாவின் வாசனையையும் , கதகதப்பையும் குழந்தைகள் எப்படி உணரும்? முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெருகுவதில் என்ன ஆச்சரியம்?
  • நாயாகப் பிறந்தாலும் அமெரிக்காவில் தான் பிறக்க வேண்டும் - அவ்வளவு அனுசரணை, பராமரிப்பு
  • அன்பை வெளிப்படுத்தத் தயங்குவதே இல்லை - ஏர்போர்ட் எஸ்கலேட்டரிலோ, நடை பாதையிலோ, ஓடும் ரயிலிலோ - அன்பு பெருக்கெடுத்தால் தயங்காமல் கன்னத்தில் பதித்துக் கொள்கிறார்கள்.
  • கொஞ்சூண்டு தொப்பையை வைத்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க மெரினாவில் ஓடும் நம்ம ஊர்க்காரர்கள், இங்கு இருப்பவர்களைப் பார்த்தால் நிம்மதி அடைவார்கள். அவ்வளவு அபரிதமான உடல் வளர்ச்சி - கவலை படுவதாகத் தெரியவில்லை- பீட்ஸாக்களையும், ஐஸ்க்ரீம்களையும் விட்டு வைப்பதில்லை .
  • நன்றி சொல்லவோ , வாழ்த்துச் சொல்லவோ யோசிப்பதே இல்லை - மாலில் நாம் வாங்கிய பொருளுக்குப் பணம் கொடுத்தாலோ, எதிரே வரும் பொழுது வழி விட்டாலோ எதுவாக இருந்தாலும் சரி.
  • நம்மூர் போல 'ராத்திரியெல்லாம் ஒரே சளி, எதாவது மாத்திரை கொடுங்க'ன்னு பார்மசியில் கேட்டு மருந்து வாங்குவது கடினம்.
  • எதெற்கெடுத்தாலும் பொசுக் பொசுக்கென்று 911 கூபிட்டு விடுகிறார்கள்- அவர்களும் உடனே வருவதுதான் ஆச்சரியம்.
  • பள்ளிக்கு உள்ளே போகும் வரை அனேகமாக எல்லா குழந்தைகளும் செல் போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
  • கையில் உள்ள பானத்தை உறிஞ்சிக் கொண்டே, இயர் போன் உதவியுடன் பேசிக் கொண்டே விறுவிறுவென நடக்கும் பலரைக் காண முடியும்.
  • அப்பொழுதுதான் ஆபிஸிலிருந்து திரும்பிய அப்பாக்கள் , பேக் பாக்கைக் கூட கழற்றாமல் குழந்தையை  பார்க் ஊஞ்சலில் வைத்து ஆட்டும் பொழுது, பத்தடி தள்ளி இளம் மனைவிகள் தத்தம் இந்திய அம்மாக்களுடன் நாளைய பிள்ளையார் சதுர்த்திக்கு எப்படி கொழுக்கட்டை பண்ணுவது என்று அறிந்து கொண்டிருக்கிறார்கள்.  
       - - - இன்னும் வரும்   

Saturday, October 5, 2013

கேள்விக்கென்ன பதில்

'முளச்சு மூணு இலையும் விடலே.." - முகேஷின் குரல், உள்ளத்தை உருக்கி ஊடுருவி சிந்தனையையும் தூண்டுகிறது .

குழந்தைக்கு ரெண்டு வயசாகறத்துக்கு முன்னாடி, இன்னும் சரியாகவே பேசக்கூட வருமுன், வாரக்கடைசீல டீ வீ பார்த்து, வழக்கமான தூக்கத்துக்குப் பின் பெற்றோர்கள்அதன் முன்னேற்றத்தையும், வருங்காலத்தையும் நினைக்கலாம் என்று ஆரம்பித்து, கவலையில் முடிக்கிறார்கள். சில வாரங்களுக்குப் பின் அதை ஏதாவது ஒரு ப்ளே ஸ்கூல்ல போட்றதுதான் சரி என்று ஒருவர் சொல்ல, பின் இருவரும் ஒரு மனதாகிறார்கள். வீட்ல இருக்கற ஒரு பாட்டிம்மா மட்டும் எதுக்கு இவ்வளவு சீக்கிரம் ஸ்கூல்னு கேட்டா, அப்பத்தான் அதுக்கு நல்ல பழக்கங்களெல்லாம் வருங்கரா. குழந்தையோ எங்க தூங்கினால் என்ன, எங்கு விளையாடினால் எனக்கென்ன என்று விவரமரியாமல் வலையில் விழுகிறது. அப்ப ஆரம்பிக்கரது இதுகளோட ஓட்டம்.

 ஸ்கூலுக்குப் போனபின் அவனக் கேக்காமலேயே சாயங்காலம் ஸ்பெஷல் க்ளாஸ்- ஏன்னா, அப்பத்தான் முத ரேங்க் எடுக்க முடியும்- மாலை க்ரௌண்டுல விளையாடுற கிரிக்கெட் பாதி போச்சு

ரிபோர்ட் கார்டு வந்தால், ஏன் முதல் இரண்டு ரேங்க் எடுக்கவில்லை என்ற கேள்விக்கணைகள், அதைப் பிடிக்க இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமென்று மாத்தி மாத்தி உபதேசம்- பையன் மனசுக்குள் நினைச்சுப்பான் "இந்த உபதேசம் கேட்கற  நேரத்தில், இன்னும் சில 5 மார்க் கேள்விகளுக்கு பதில்கள் படித்திருப்பேன் என்று".

ஒன்பதாவதிலுருந்து, அவன் இதுவரை நழுவி ஓடிக்கொண்டிருந்த விளையாட்டுக்கு ஒரு முழு முற்றுப் புள்ளி. ஐ. ஐ.டி கோச்சிங், இஞ்சினீயரிங் கோச்சிங்னு காலைல அஞ்சு மணிலேர்ந்து ராத்திரி பன்னெண்டு மணி வரை குழந்தையை பெண்டு எடுத்தபின், ஒரு வழியாக அவன் பீ.ஈ சேர்ந்ததில்தான் எத்தனை த்ருப்தி.

அதை முடித்து பாங்க் மானேஜரோட சண்டை போட்டு அவன் கழுத்துவரைக்கும் லோன் வாங்கி அமெரிக்காவுக்குப் புடிச்சுத் தள்ளியாச்சு. எம். எஸ் முடிந்தவுடன், அவன் இந்தியா திரும்பி வருவானா என்ற சின்ன நப்பாசையை வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளி " அந்த கொழந்தை அத்தனை கடனை அடைக்க என்ன பண்ணும். அங்கதான் வேலை பாக்கணும்"னு சமாதானப் படுத்தியாச்சு.

கொஞ்சம் கடனை அடைத்த பின் பையன் மூச்சு விட்டு, அமெரிக்காவில் வாங்கிய காருக்கும், வாங்கப் போற வீட்டுக்கும் ஏத்தபடி சம்பாதிக்கும்  ஒரு ரோஸியையோ, ஜூலியையோ கல்யாணம் பண்ணிண்டாக் கூட இப்பல்லாம் ஒத்துண்டுடறா. ஒரு  ரெடி மேட் கொசுவப் புடவையுடன் அங்கே போய் , பாப் தலை மருமகள் கொசுவத்துடன் இருக்கும் போட்டோவை ஃபேஸ் புக்குல போட்டாத்தான் ஒரு த்ருப்தி.

ஆனா புள்ள என்ன சொன்னாலும், பேரப் பிள்ளை மேல் அவ்வளவு ஆசை இருந்தாலும் பெரியவர் மட்டும் கங்காதீஸ்வரர் சன்னிதி ஓட்டு வீட்டை விட்டு வர மாட்டேங்குறார் என்பதில் மாமிக்குக் கொஞ்சம் வருத்தம் தான். இருந்தும் அடுத்து வரும் ஆறு மாசத்தை எண்ணியே இந்த ஆறு மாசத்தை ஓட்டரது ஒரு சுகம்னு பேச ஆரம்பிச்சுருக்கா.

எல்லாம் நல்லாப் போயிண்டு இருக்கப்போ, அப்பாக்கோ அம்மாக்கோ உடம்பு முடியலைன்னா, குழந்தைகள் பதறிப் போயிடறது. உண்மையாகவே மனசு தவித்தாலும், உடனே ஒடி வர முடியல்லை- ஆபீஸ் வேலை, லீவு, வீஸா, டிக்கெட் என்று பல தொல்லைகள்.

ஆனால் ஊருல இருக்குறவாளுக்கு என்ன , ஆளாளுக்கு, வாய்க்கு வந்த படி பேசரா- "ஆமாம் ஊருலெ இல்லாத வேலை; எல்லாம் அந்த சட்டக்காரி கொடுக்குர ஸ்க்ரூ, அவன் இனிமே எங்க வரப்போறான்"னு- அந்தக் கொழந்தை மனசு பட்ற பாடு யாருக்குத் தெரியும்.

இவ்வளவு பேசராளே, அந்தக் குழந்தையோட ஒரே ஒரு கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமா.

"நான் பாட்டுக்கு தேமேன்னு , புரசவாக்கம் சன்னதித் தெருல கோலி விளயாடிண்டு இருந்திருப்பேன். என்னப் போய் வலுக்கட்டாயமாய் இரண்டு வயசுலேர்ந்து ஸ்கூல்ல போட்டு, எல்லாத்தையும் படிக்க வச்சு, அமெரிக்காவுக்கும் அனுப்பிச்சேளே. யாராவது ஒரு வார்த்தையாவது என்னைக் கேட்டேளா. நான் அப்பா அம்மா என்னென்ன சொன்னாளோ, அதைத்தானே செஞ்சேன்- அதுதானே படிச்சேன். அது தப்பா"

தெரிஞ்சாச் சொல்லுங்களேன் !