Thursday, October 22, 2015

அமெரிக்காவில் கடந்த சில பக்திப் பாதைகள்

சென்னையில் இருந்தவரை , அவ்வப்போது கோவில்களுக்குப் போவது ஒரு பிடித்த அம்சமான நடவடிக்கையாக இருந்தது. அமெரிக்கா வந்தவுடன் அது இருக்காது என்று எதிர்பார்த்தது தான். ஆனால் இங்கும் , சில சந்துகளிலுருந்து  சாயந்திர வேளை நடையின் பொழுது இந்தியர் வாழும் பகுதிகளில் பஜனை சத்தங்களும் , பிரசாத வாசனைகளையும் உணர ஒரு இனிய அதிர்ச்சி.

சந்திர கிரஹணத்தன்று , சூடாக பிரயாணி விற்பனையாகிக் கொண்டிருக்கும் தெருவுக்குப் போகும் வழியில் பக்தர்களின் ஆக்ரோஷமான ஜால்ரா சப்தங்கள் அவர்களின் பரவச நிலையின் எல்லையைக் காட்டியது.

பிரதான வீதி ஒன்றிலேயே , பழக் கடைகளுக்கும், பல் டாக்டர்களுக்கும் இடையே, கண்ணாடி வழியே கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரித்தது பல கடவுள் சிலைகள்- உள்ளே மங்கலாக குளிருக்கோ இல்லை பக்திக்கோ பட்டுச் சால்வை போர்த்தப்பட்டுத் தெரிந்தன.

விநாயகர் சதுர்த்திக்கு இந்தியர்கள் நிறைய வந்து போகும்  பிரதான  வீதியில் பிளாட்பாரத்தில் ஒரு விநாயகர் சிலையை வைத்து பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் கழுத்தைச் சுற்றி மைக் அணிந்து கொண்டு உரக்க மந்திரங்கள் சொன்ன சாஸ்திரிகள்.

ப்ளஷிங்க் (FLUSHING)   என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோவில் மிகப் பிரசித்தம். சதுர்த்தி முடிந்து சில தினங்கள் கழித்து ஒரு ஞாயிறன்று விநாயகரை வெள்ளித் தேரில் வைத்து வீதி உலா வர விழாக் கொண்டிருந்த இடத்தை அமெரிக்கா என்று நம்பக் கடினமாக இருந்தது. பட்டுப் புடவைகள் சரசரக்க மாமிகள் கோலாட்டம் ஆட, பட்டு வேட்டிகளிலும் , பஞ்ச கச்சத்திலும் மாமாக்கள் மைக் பிடித்து ஸ்லோகங்கள் சொல்ல , பல இந்தியர்கள் உற்சாகத்துடன் தெருவில் நடந்தனர். குடிநீர் , குளிர்பானம், சின்ன மணி பர்ஸ் இப்படி பல இலவசங்களும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அழகான , மிகச் சிறப்பாக பராமரிக்கப்படும் இந்தக் கோவிலில் மக்கள் அமைதியாக வரிசையில் நின்று தரிசனம் செய்தார்கள். முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் சுடச்சுட சாம்பார் சாதம், லட்டு பிரசாதம். உடன் கொடுத்த தயிர் சாதம் கிருஷ்ணருக்கு ரொம்பப் பிடிக்கும் - அவ்வளவு க்ரீம். வந்த கூட்டத்துக்கும் விநியோகிக்கப்பட்ட பிரசாதங்களுக்கும் தெருவில் இருந்த குப்பை மிகக் கம்மிதான். நம்பிக்கையை தள்ளி வைத்து இவ்வளவு கூட்டத்தையும் , தேர் பவனியையும் பராமரித்து பாதுகாப்புக் கொடுத்த அமெரிக்க போலீஸ், அவர்கள் விரும்பும்  பல-மத-நம்பிக்கைக்கு நல்ல உதாரணம்.

Flushing Temple Car


ப்ரிட்ஜ் வாட்டர்  (Bridge Water)

ஜெர்சியிலிருந்து ஒரு மணி தூரத்தில் இங்கு உள்ள இந்தக் கோவிலில் அனேகமாக எல்லா பிரசித்தமான தெய்வங்களின் சந்நிதிகளும் இருக்கின்றன. சில்லென்ற மார்பிள் தரையை அனுபவித்துக் கொண்டே நடந்தால் எல்லா ஸ்வாமிகளும் ஒரு சுத்தமான எண்ணை பிசுக்கு, விபூதி குங்குமம் சிதறாத சூழ்நிலையில் இருப்பதைக் காணலாம் - பெருமாள் , திருப்பதியை நினைவில் கொண்டு வரும் ஒரு ஏழு அடி பிரம்மாண்டம்;  ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியும், அங்கங்கு சத்தியநாராயணா பூஜையும், இங்கு பிரபலமாக இருக்கும் ஸ்வாமினாரயணன், விட்டல் மற்றும் நவ கிரஹங்கள். எல்லா சந்நிதிக்கு முன்னும் ஸ்ரீ ரங்கம் கோவில் தூண்களில் காசு சொருகும் நம்மவர்கள் இங்கு தாராளமாக டாலர்களை தூவி இருந்தார்கள்.  பலி பீடங்கள் இருக்கக் கூடிய  இடங்களில் நம்ம ஊர் வெள்ளை சோற்றுக்கு பதில் காகித கப்பில் பொங்கல் வைத்திருந்தார்கள். குருக்கள் மந்திரங்களைச் சொல்லி , "Anybody else want to do archanaa " என்று கூவி விட்டு  ஹாரத்தி காண்பித்து எல்லோரையும் பரவச நிலைக்குக் கூட்டிச் சென்றார். தமிழ் நாட்டில் கோவில் நடத்துபவர்கள் இங்கு வந்து எப்படி கோவில் வளாகத்துக்குள்ளேயே ஒரு சுத்தமான கழிப்பறையையும் பராமரிக்கலாம் என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
Bridge Water temple

அக்ஷர்தாம் - (Akshardham)

ராபின்ஸ்வில்லே என்னும் இடத்தில் உள்ள 'அக்ஷர்தாம்' உலகிலேயே பெரிய கோயில் என்று வந்த ஒரு செய்தியுடனும், இதே கோவிலை தில்லியில் பார்த்த ஒரு எதிர்பார்ப்புடனும் சென்றேன். ஏக்கர் ஏக்கராக நிலத்தை வளைத்துப் போட்டு, விஸ்தாரமான கார் பார்க் கொடுத்து, ராஜஸ்தான் மார்பிள்களால் இழைத்துக் கட்டப்படும் ஒரு பெரிய இடம். தில்லி அளவு செக்யூரிட்டி கெடுபிடிகள் கிடையாது. செல் போன், ஐ பேட் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லலாம், ஒரு நிலை வரை போட்டோவும் எடுக்கலாம்.
Akshardham

பிரதான மண்டபத்தில் உள்ள மார்பிள் சிலைகள் மேல் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் விளக்குகளின் பளீர் கண்ணைப் பறிக்கின்றது. நாம் உள்ளே நுழைந்து எந்தப் பக்கம் ஆரம்பிக்கலாம் என்று திணறும் போது, அமைதியாக நம் அருகில் வரும் வழி காட்டிகள் எளிய நடையில் அந்த இடத்தைப் பற்றி சொல்கின்றனர் - காசு எதுவும் கொடுக்க வேண்டாம். எப்படி வாசலில் உள்ள இரண்டு தூண்கள் வருபவர்களை பவித்ரமாக்குகின்றன; 250 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் 2700 தொண்டர்களைக் கொண்டு நடக்கும் இந்தப் பணி பத்து சதவிகிதம் தான் முடிந்து இருக்கின்றன; இங்குள்ள 97 தூண்களை அவர்கள் எதிர்பார்ப்புக்குக் கொண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும்... இப்படிப் பல தகவல்கள்.

ஒவ்வொரு தூணிலும் ஒரு கதைக்கான சிற்பங்கள் - மிக நுண்ணியமாக செதுக்கப் பட்டவை. வெகு அழகாக வடிக்கட்ட ஒரு வெண் தாடியை உணர கையை அதனருகில் கொண்டு சென்ற போது, எங்கிருந்தோ புகை மண்டலத்திலுருந்து , கத்தி பட கதாநாயகன் போல் வந்த ஒரு பணியாளர் சிலைகளை தொடக்கூடாதென்றும், எப்படி ஒரு அன்பர் ஒரு சிலையை உடைத்து விட்டார் என்று கையைப் பிடித்துக் கூட்டிப் போய் சிரித்துக் கொண்டே காண்பித்தார் . சிலைகளின் தத்ருபம், புத்திசாலித்தனமாகப் பொருத்தப்பட்ட விளக்குகளின் வெளிச்சத்தில் உள்ள தூண்கள் ...எழுபதுகளின்  'வசந்த மாளிகையை' நினைவுப் படுத்தின .

இவற்றுள் ராமர், வியாசர், துருவர், நாம்தேவ், துக்காராம், திருவள்ளுவர் இப்படி பல தெரிந்த பிரபலமானவர்களைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தால் சிவன், பார்வதி அவர்களின் பிள்ளைகளை வைத்து முருகன் மூத்த பிள்ளை என்று ஒரு கூக்ளி போட்டு சிவன் குடும்பத்தில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தனர்.

இந்த இடத்தால் என்ன லாபம் என்றால் ' இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்தும் நம் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட நம் வரலாறு தெரிய வேண்டும் என்பதே ' என்று அந்த வழி காட்டி சொன்னது முற்றிலும் உண்மை என்றே நம்ப வைத்தது. வழக்கம் போல் கோவிலுக்கு மறு புறத்தில் உள்ள கடையில் நம்ம ஊர் பட்சணங்களின் வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது.

ஸ்வாமினாராயன் கோவில்

நம்ம ஊருல அஞ்சு விளக்குன்னு சொல்றமாதிரி , இங்கும் ஐந்து தெருக்கள் கூடும் இடத்தை Five Corner என்றழைக்கிறார்கள். இங்குள்ள ஸ்வாமினாராயன் கோவில் இந்த இடத்தில் பிரபலம் என்றதால்  ஒரு குளிர்ந்த மாலையில் நுழைந்தோம். இந்தியக் கோவில்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசைகள் தான் இருக்கும். ஆனால் இந்தக் கோவிலிலோ நுழைந்தவுடன் தம்பதிகளைப் பிரித்து தனித்தனியாக சாமி கும்பிட வைக்கிறார்கள். இந்தப் பிரிவினை இறுதி வரை வெளியில் வந்து காலணிகளை எடுக்கும் வரை நடப்பது தான் ஆச்சரியம். சரி தரிசனம் பார்த்தது போதும் என்று எழுந்தால் அமுக்கிப் பிடித்து 'இருந்து போகலாமே, இன்னும் அரை மணியில் மகா பிரசாதம் கொடுக்கப் போகிறார்கள்' என்று நம்ப ஊரில் கிரெடிட் கார்ட் வியாபாரி போல் பிடிவாதம் பிடித்தார்கள். அப்படியும் நான் மசியாததால் நைவேத்யத்துக்கு முன்னேயே பிரசாதத்தைக் கையில் திணிக்க ஒரு பரவச நிலையில் வெளியில் வந்தால் போதும் என்று வந்தது ஒரு நல்ல அனுபவம்.

நவராத்திரி

இந்தியர்கள் வெகுவாகப்  புழங்கும் ஒரு தெருவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடக்கப் போவதாக பல வாரங்களுக்கு முன்னேயே சுவரொட்டிகள் மூலம் அறிவித்திருந்தார்கள். இண்டியன் ஸ்டிரீட் எனப்படும் தெருவில் பட்டேல் ஸ்டோர்ஸும் , பிரியாணி அரிசி முதல் அப்பளம், வடாம் வரை அனைத்து இந்திய உணவுகளும் விற்க்கும் இந்தத் தெருவில் மாலை நடை பயிற்ச்சியின் போது பல இந்தியர்களைக் காண முடியும். தெருவின் இரண்டு முனைகளிலும் வண்ண விளக்குகள் மின்னியதைப் பார்த்து ஆஹா என்ன ஏற்ப்பாடு என்று வியந்து அருகே போனவுடன் தான் தெரிந்தது அது பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்ட போலிஸ்கார்கள் என்று. அருகிலுள்ள பெங்காலி ஹோட்டலில் அளவில்லாத சாப்பாட்டை ஒரு கட்டு கட்டி விட்டு வெளியில் வந்தால் குளிர் பிடுங்கித் தின்றது. முகத்தைத் தவிர எல்லாவற்றையும் மூடி அருகில் போனால் பெரிய மேடையில்  இரண்டு பேர் சுமாராகப் பாடிக் கொண்டிருக்க பல இந்தியர்கள்  குளிருக்காகவோ இல்லை பாடுபவர்களுக்காகவோ கையைக் காலை உதறி ஆடிக் கொண்டிருந்தார்கள்- கார்பாவாம் !
Garbha on Indian street

இங்கு ஒண்ணும் நம்ம ஊர் பக்திக்குக் கொஞ்சமும் குறைவில்லை தான் . ஒரு நல்ல சுத்தமான சூழ் நிலையில், வரிசையாக நின்று, அமைதியாக தரிசித்து, டாலர்களை அள்ளிப் போட்டு, பல கோவில்களில் சூடான பிரசாதம் எனப்படும் மதிய உணவையும் முடித்துக் கொண்டு மக்கள் திருப்தியாகத்தான் போகிறார்கள் .

அமெரிக்காவில் வந்து மக்கள் சாமி கும்பிட கோவில்கள் கட்டியதென்னவோ நியாயம் தான் , அதிலும் சுத்தமாக கழிப்பறைகளும் தேவை தான். இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தியவர்கள் ,  இயற்கை உபாதைகளுக்குப் பின் கால் அலம்பவும் ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் பேஷாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment