Wednesday, March 11, 2015

அச்சமுண்டு அச்சமுண்டு !

எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் , ஒவ்வொருவருக்கும் ஒரு செல்ல பயம் உண்டு.
புஷ்டியான பயில்வானுக்கும் பல்லியையோ , கரப்பான் பூச்சியைக் கண்டாலோ பயம் வரலாம்.
கம்பி மீது நடப்பவர்களுக்கும் அடைந்த இடத்தில் பயம் தோன்றக் கூடும். வேகமாகக் கார் ஓட்டுபவர்களுக்கும் உயரத்தைக் கண்டால் பயம் இருக்க வாய்ப்புண்டு.

'தெனாலி' போல் எதைக் கண்டாலும் பயம் இல்லா விட்டாலும், சிலருக்கு சில அனுபவங்கள் மூலம் ஏற்பட்ட பயங்கள் நிறைய இருக்கலாம். எனக்குத் தோன்றிய சில:

விமானத்தில்-

- ஜிவ் என்று விமானம் உயரே எழும் பொழுது வயிற்றில் சுருண்டு எழுமே ஒரு பந்து- வார்னே போட்டது போல் எங்கிருந்து வந்ததென்றே சொல்ல முடியாது !

 - பறக்கும் பொழுது குறுக்கே இன்னொரு விமானம் இல்லை. ஒரு காக்கை கூட வந்து விடுமோ என்று பயம்

- விமானம் தரையைத் தொட்டவுடன், சில சமயம் கொஞ்சம் தாறுமாறாய் ஓடும் பொழுது, நாம் சைக்கிள் கற்றுக் கொண்ட முதல் நாள் ஞாபகம் வரும். ஆனால் பைலட்டின் இடுப்பில் குத்தி நேராக உட்காரச் சொல்ல முடியாமல் நாம் படும் அவஸ்தை நமக்குத் தான் தெரியும் !

சில வருஷங்களுக்கு முன் கயா என்ற புண்ய ஸ்தலத்துக்கு குடும்பத்துடன் போனோம். இரவு ஒன்பது மணிக்குப் போக வேண்டிய ரயில் சரியான நேரமாக 11.45க்குப் போனது. வழி தெரியாத ஊரில் ஒரு ஆட்டோவில் ஏறினால் ஓட்டுனரோ நரைன் கார்த்திகேயன் போல் அந்தச் சந்துகளில் போனது, இன்னும் பயம் விலகவில்லை. பனிரெண்டு மணிக்கு மேல் போலிஸ் சோதனை அதிகமாம், அதற்க்காகத்தான் அவ்வளவு வேகம் என்றார் சிரித்துக் கொண்டே. என்றும் மறக்க முடியாத பயம் !

வருடாந்திர சம்பவமாக நாம் நம் இரத்தம், சர்க்கரை போன்றவைகளை சோதித்து அதை நம் மருத்துவர் பார்க்கும் பொழுது, வரும் பயம் கொஞ்சம் அலாதி. சில சமயம் அவரின் முக மாறுதல்கள் பீதியைக் கிளப்பும். இதே சோதனையின் போன வருட அறிக்கையைக் கேட்டால் இரத்த அழுத்தம் எகிறும். எல்லாவற்றையும் விட நம் மார்பின் புகைப் படத்தை சொருகிய பொழுது டாக்டர்  கை பேசியில் பேசிக் கொண்டே பென்சிலால் கோடு போடுவாரே - அனுபவித்தால் தான் புரியும் !

அவசரமாக  இன்டெர்னெட் மூலம்  நம் வங்கிக் கணக்கினுள் நுழைய முயற்ச்சிக்கும்  பொழுது, திரும்பத் திரும்ப நம் பாஸ்வேர்டைக் கேட்கும் பொழுது வரும் சந்தேக பயம்- எவனாவது உள் பூந்து லவட்டிட்டானோ என்று !

ஏற்கனவே லேட்டு என்று  நம் டிரைவர் விரட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த இரவு நேரத்தில் நம் காரை ஒரு கும்பல் நிறுத்தும் பொழுது ! அப்புறம் தான் தெரியும் அவர்கள் அந்த கிராமத்து வாசிகள் , குறுக்கே விழுந்த மரத்துக்காக வண்டிகளுக்கு உபகாரம் செய்ய நினைத்தவர்கள் என்று !

நமக்குச் சம்பந்தமில்லாத குறுந்செய்திகள் நள்ளிரவிலும் நம் கைபேசியில் வரும் பொழுது . விசாரித்ததில் தெரிய வரும் அந்த ரோமியோ , ஜூலியட்டின் கைபேசி நம்பரை ஒரு எண் பிசகி அடிப்பது !

நம் பெண்ணோ, பிள்ளையோ தினசரி வரவேண்டிய நேரம் தாண்டியும் வராமல் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியாமல் போகும் பொழுது.

நம் வீட்டு கம்ப்யூட்டர் திடீரென்று மக்கர் பண்ணும் பொழுது-  நேற்று முடித்த முக்கிய வேலை அனுப்பப் படாமல் இன்னும் அதில்தான் உள்ளது என்று அப்பத்தான்  நினைவு வரும்.

சென்னை ரங்கனாதன் தெருவில் நடக்கும் பொழுது பாண்டி பஜாரில் நிறுத்திய காரை பூட்டினோமா என்று நினைக்கும் பொழுது.

இப்படியெல்லாம் அவரவர் வாழ்க்கையில் எத்தனையோ பயங்கள்.  அப்படியும் சிரித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
வரும் இடுக்கண்ணை நினைத்தா இல்லை துன்பம் வரும் வேளையிலா!

அவரவருக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment