Wednesday, March 18, 2015

செல்லாத ஃபோன்

எங்க வீட்டு ஸாஸ்த்ரிகளிடம் 'அவசரத்துக்கு உங்களை கூப்பிடணும்னா வேணும், உங்க செல் ஃபோன் நம்பரைக் குடுங்கோன்னு கேட்டா - ஐயா, நான் செல்லாத ஆசாமி. எனக்கு செல் ஃபோன் கிடையாது' என்பார். உண்மை அது இல்லை - வர லேட்டானா நச்சரிப்பாளோன்னு பயந்து தான் என்று அவரைக் கிண்டலடிப்போம்.

இந்நொரு  கொடுமை செல் ஃபோன் இருந்தும் அது உபயோகப் படாதபோது தான்.

குறிப்பாக வீட்டு அம்மிணிகள், பலர் படுத்துவதுண்டு.

வெளியில் வண்டி ஓட்டிக் கொண்டு போகும் பொழுது, அதை பத்திரமாக கைப்பையின் உள்....ளேளேளே வெச்சுடுவா. எவ்வளவு அலறினாலும் கேட்காது.

வண்டியை விட்டு இறங்கியவுடன், மிஸ்டு காலையாவது பார்த்தால் தேவலை. அதுவும் கிடையாது.

சமீபத்தில் என்னுடைய நண்பனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு அவரது மனைவியை தொடர்பு கொள்ள முயற்ச்சித்த போது, எதிர்கொண்ட உண்மை இது.

அதே போல் வீட்டுக்குப் போனபின், கைப்பேசியை எங்காவது வைத்து விடுவது. அல்லது டீ வீயின் சத்ததில் அது அடிப்பதே யாருக்கும் கேட்பதில்லை.

இன்னும் சிலர் ஆபீசுக்குள் நுழையும் போதே அதன் வாயை அடைச்சுடறாங்க - நல்ல பழக்கம்தான். ஆனால் , ஆபீசை விட்டு வெளியே வரும்போது அதன் வாய்ப் பூட்டை எடுக்க மறந்து, பல கால்களை மிஸ் பண்ணி மிஸஸ் கிட்ட கால் வாங்கி, சில சமயம் ஒரு கால் ஒரு பக்கம் வாங்கி நடப்பவர்களையும் கண்டதுண்டு!

இதே போல் ஒரு திரையரங்குக்குள்ளோ அல்லது கதாகாலட்சேபத்திலோ அல்லது கச்சேரியிலோ இதனால் சில இம்சைகள் வருவதுண்டு.

திரையரங்கிலாவது சினிமாவின் சத்தத்தில் இதன் மணி ஹீனித்திருக்கும். கச்சேரிகளில் பாகவதர் தனி ஆவர்த்தனத்தில் உள்ள பொழுது அடித்தால், மற்றவர்களின் உச்சுக் கொட்டலிலேயே  நமக்கும் ஒரு ஆவர்த்தனம் நடக்கும்.

ஆனல் கதாகாலட்சேபத்திலோ, பிரவசனம் செய்பவர் பக்தியின் உச்சியில் நின்று கொண்டு, நம்மை சொர்க்கத்தின் வாசலில் நிற்க வைத்து என்னவெல்லாம் செய்தால் நம்மை கடவுள் ஏற்றுக் கொள்வார் என்று உரை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இந்த அழைப்பு மணி அழையா விருந்தாளியாக ஒலித்தால் மொத்த சபாவும் திரும்பிப் பார்த்து, கண்களால் எரித்து அப்படியே ரூட்டை மாத்தி நரகத்தின் பக்கம் தள்ளி விடுவார்கள். அதிலும் சில வயதானவர்கள் தத்தம் மக்கள் வாங்கிக் கொடுத்த கைபேசியை அடித்தால் எப்படி எடுப்பது, எப்படி தடுப்பது என்று தடுமாறுவதைப் பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருக்கும். இவர்களுக்கெல்லாம் கைபேசி வாங்கிக் கொடுக்கும் மஹானுபாவர்கள் அதை எப்படி உபயோகிப்பது, கூட்டத்தில் செல்லும் பொழுது எப்படி அதை(யும்) மௌன நிலைக்குத் தள்ளுவது போன்றவற்றையும் கற்றுக் கொடுத்தால் , பெரியவர்கள் ரொம்ப வாழ்த்துவார்கள்.

இன்னும் சிலர் உபன்யாசம் போன்ற லௌகீக முறையைத் தவிர்த்து சொர்க்கத்துக்கு குறுக்கு வழியிலும் போகிறார்கள்- வண்டி ஓட்டும் பொழுது இந்த கைப் பேசியை தோளில் தாங்கி, அந்தப் பக்கம் கேட்பதை காதில் வாங்கி, எதிரில் வரும் வண்டியை மனதில் வாங்காததால். 

கைப்பேசி என்பது ஒரு வரம். யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள ஏதுவான ஒரு பெரிய சௌகர்யம். 

பல வருடங்களுக்கு முன் எங்காவது ஊருக்குப் போனால், முதல் வேலையாக  தங்கும் ஹோட்டலின் டெலிபோன் நம்பரைத்தான் வீட்டுக்குத் தெரியப் படுத்துவேன். அதுவும், என் வயதான அப்பா படுத்த படுக்கையாய் இருந்த பொழுது எங்கே என்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் போய் விடுமோ என்ற பயம் அதிகமாக இருந்தது.

ஒரு அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் தொலை தூரப் பயணம் செய்பவர்கள் திரும்பி வந்து சொன்னால் தான் சௌக்கியம் என்று தெரியும். காசி போன்ற ஷேத்ராடனம் செல்பவர்களை ஏறக்குறைய கடைசி டாட்டாவே சொல்லி அனுப்புவார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். தொலை தொடர்பே இல்லாத காலமது. கடுதாசி எனப்படும் போஸ்ட் கார்டு போட்டால் அது வருவதற்க்குள் அனேகமாக போனவரே திரும்பி இருப்பார்- அவ்வளவு நாள் ஆகும். சில சமயம் வராமலே கூடப் போய் விடும்.

இதையெல்லாம் போக்கிய கைபேசி எவ்வளவு சௌகர்யம்- இப்படிப்பட்ட நண்பனைத் தொலைக்கலாமா?

No comments:

Post a Comment