Monday, September 29, 2014

'ஸ்ரீ ஜானகியுடன்' ஸ்ரீ ராமரைத் தேடி....

புரட்டாசி சனிக்கிழமை , நாள் முழுவதும் பல வைணவக் கோவில்கள் பார்க்கும் வாய்ப்பு. யாரை விடும் இந்த ஆசை? என்னையும் பிடித்தது.

விடியக் காலையிலேயே எழுந்து, சஹஸ்ர நாமம் சொல்லி எல்லாம் நன்றாகவே ஆரம்பிச்சது. 25 பேர் குழு தாம்பரம் தாண்டிய போது ,  வழியில் இருந்த கொஞ்சம் பாதுகாப்பு கெடுபிடியால், எட்டு மணி தாண்டி விட்டது.
In the Van

செங்கல்பட்டு கோதண்ட ராமர் கோவில், ஆஜானுபாகுவான இராமர், பரத சத்ருக்னருடன்-  முதல் ஆனாலும் நிதானமான  தரிசனம்.




அங்கு உள்ள சனீஸ்வரனை ஆண்ட ஆஞ்சனேயரையும் பார்த்து விட்டு வழியில்  டிபன் சாப்பிட மர நிழலைத் தேடிய போது, பக்கத்தில் உள்ள வினாயகர் கோவிலிலிருந்து "இங்கே சாப்பிடுங்கோ" என்று அன்புடன் அழைத்து, ஒன்றுமே எதிர்பார்க்காமல்  எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது நெகிழ வைத்தது. "ஸ்ரீ ஜானகிக்கே" உரித்தான ஒரு சாதுவான ஆனால் மனமும், வயிறும் நிறைந்த டிபனுக்குப் பிறகு  நடையைக் கட்டியவுடன் கிடைத்த முதல் செய்தி "பொன் பதர் கூடம் கோவில் சீக்கிரமே நடை சாத்தி விடுவார்கள்" என்பது தான்.

வண்டியை நேராக பொன் விளைந்த களத்தூர் செலுத்தி கோவில் எங்கே என்று விசாரித்துக் கொண்டு போனால் , யார் எங்களுக்கு வழி சொன்னாரோ அவரேதான் குருக்கள். பழமையான, மூடி இருந்த சன்னிதியைத் திறந்து, விளக்கேற்றி தல புராணத்தை சற்று விரிவாகவே சொன்னார் இளம் குருக்கள்- சாந்தமாகாத பெருமாள்,  சிங்க முகமில்லாத லக்ஷ்மி நரசிம்மர். மூலவர் எப்படி அங்கு வர விருப்பப்பட்டு கருடன் இந்த ஊரை வட்டமிட்டது போன்றவற்றைச் சொன்னதும்- அதிசயிக்கத் தான் வைத்தது.

Pon Vilaintha Kalathur
அடுத்த வந்த மையூர், படு குட்டியான ஒரு கிராமம். கோவிலுக்கு முன்னே உள்ள தெருவில் இருந்த தாழ்வான கூரையுடன் உள்ள திண்ணை வீடுகள் , கிராம வாழ்க்கைக்கு மனதை ஏங்க வைத்தது.

87 வயது குருக்கள் நிதானமாக , ஆனால் கிரயப்படி, தரிசனம் செய்து வைத்தார்- "முதல்ல ஆம்பிளகளுக்குத்தான் பிரசாதம், பொம்மனாட்டிக்கு ஒரு உத்திரணிதான் தீர்த்தம்" - ஆனால் 'நான் எந்த நேரத்தில் யார் கூப்பிட்டாலும் கோவில் திறந்து பகவானை தரிசிக்கச் செய்வேன்' என்றது கேட்கக் குளிர்ச்சியாக இருந்தது.

Maiyur Temple
Outside Maiyur temple
அடுத்துப் போன 'புக்கத்துறை'- கொஞ்சம் பெரிய கோவில். முன்னமேயே போன் பண்ணியதாலோ என்னவோ ரொம்ப அன்பாக வரவேற்று, சிறப்பு அபிஷேக பூஜை முடிந்த ஆரத்தியுடன், சுடச் சுட சக்கரைப் பொங்கல் கொடுத்த - அனுபவம் நினைக்கும்போதே இனிக்கிறது. அங்குள்ள ஆஞ்சனேயர் கொஞ்சம் கொஞ்சமாக வளருவதைக் கண்டு நெடு நெடுவென்று நிற்கும் 'புண்டரீக வரதனை'ப் பார்த்து எல்லோரும் ஒரு பரவஸ நிலை அடைந்து தாமாகவே "குறையொன்று மில்லை" பாடியது ஒரு நல்ல அனுபவம்.

வளரும் ஆஞ்சனேயர்
புக்கத்துறை

அங்கிருந்து கிளம்பி  வண்டியில் உள்ள டீ வீ டீயில், சன் சிங்கரில் குழந்தைகள் பெரியவர்களை விட அதிகம் கொடுத்த உடல், முக பாவனைகளை வியந்து, கவலையும் பட்டுக் கொண்டே வந்ததில் வெய்யில்உரைக்கவே இல்லை. 

கோர்ட்தீர்ப்பு வர ஆரம்பித்த பொழுது நாங்கள் சென்னையிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தள்ளி உள்ள  தென்னாங்கூர் என்ற ஒரு திருத்தலத்தில்,  சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். விவரங்கள் தெரியத் தெரிய, நடக்கும் கலவரங்கள் செல் போன் மூலம் கசியக் கசிய கிலி அதிகரிக்க, ஆண்டவனை நோக்கி கைகளும் தானாக உயரத் தொடங்கியது.

பலவாறு குழம்பினாலும் தென்னாங்கூரில் காலடியெடுத்து வைத்தாயிற்று- பாண்டுரங்கனைத் தரிசித்து விட்டே போகலாமென்று எடுத்தது ஒரு நல்ல முடிவுதான். புரட்டாசி சனியாதலால் திருமலை வேங்கடமுடையானின் அலங்காரம். திருப்பதி போகாமலே தரிசனம் கிடைத்து லட்டும் சாப்பிட்ட திருப்தியுடன் வெளியே வந்தோம்.

தென்னாங்கூர்
தென்னாங்கூர்



வளரும் நிலவரத்தைக் கருதி மீதமிருந்த கூழமந்தலும், உத்திரமேரும் அமைதியாகக் கைவிடப் பட்ட தீர்மானம், மெஜாரிடியில் பயத்துடன் வென்றது

சிலர் இப்பொழுது சென்னை போக வேண்டம் , கொஞ்சம் இருட்டிய பிறகு போகலாம் என்றார்கள். 

சிலர் இப்பொழுதே கிளம்பி எவ்வளவு தூரம் முடியுமோ அவற்றை வெளிச்சம் இருக்கும் போதே கடந்து விடலாம் என்றார்கள்.

 ட்ரைவரோ வண்டி எடுக்க மாட்டேன் என்றார். அதையும் மீறி வற்புறுத்தினால், வழியில் ஏதேனும் ஆபத்தென்றால், நான் இறங்கி ஓடி விடுவேன் என்று பயமுறுத்தினார் கடமை உணர்ச்சி மிக்க ஓடினார் - இல்லை ஓட்டுனர் !

எல்லாவற்றையும் சமாளித்து, ட்ரைவரை கொஞ்சம் மசிய வைத்து ஐந்து மணிக்குக் கிளம்பி, வழியில் எதிர் பார்த்தளவுக்கு ஏதுமில்லை என்றாலும் கொஞ்சம்  திகிலான பயணம் தான் .  கிராமங்களில் வண்டி வேகம் குறையும் பொழுது, அங்குள்ள லுங்கி இளசுகள் வண்டிக்குள் கூர்ந்து நோக்கும் பொழுது, வயிற்றில் சுரந்த அமிலங்கள்  நிறைய. நடுவில் சில குப்பைகள் புகைந்து கொண்டிருந்தன. சில தெரு விளக்குகள் நொறுக்கப் பட்டிருந்தன- ஆனால் இதெல்லாம் நாங்கள் அங்கு கடக்கு முன்னே நடந்த சம்பவங்கள் போல. 

விஷயம் வந்து கொஞ்ச நேரம் ஆனதால், அங்கெங்கே சில காக்கிகளும், தொப்பிகளும் தென்பட்டது கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. உத்திரமேரூரைக் கடக்கும் போது, குவிக்கப் பட்டிருந்த போலீஸ் "எங்கும்  நிக்காமல் போய்ட்டே இருங்க" என்று அன்புடன் வலியுறுத்தினார்கள்.

வழக்கமாக ஜெக ஜோதியாக மிளிரும் செங்கல்பட்டு -சென்னை நெடுஞ்சாலை விளக்கில்லாமல் இருளில் அழுது வடிந்தும் விரட்டிய வண்டி  செங்கை டோல் வந்ததும் தான் மூச்சு சீரானது. 

தாம்பரம், குரோம்பேட்டை போன்ற எல்லா பெரிய பஸ் ஸ்டாண்டிலும் மக்கள் வெள்ளமாயிருந்தார்கள்- பஸ்களைத் தான் காணோம்

பார்த்த எல்லா நாராயண அவதாரமும் கூட வர, கண்ணன் சாரதியாக ட்ரைவர் ஆக, மாமிகளின் பஜனைக்கும் மற்றவர்களின் அமைதியான ஆனால் பயம் கலந்த வேண்டுகோளுக்கும் பலன் கிடைக்க ஒரு வழியாக ஏழு மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தோம். தெருக்கள் என்னவோ இரவு பதினோரு மணி போல் காட்சியளித்தது.

தைரியமாக மந்தைவெளியில் இறங்கி 'நம்ப ஏரியாவில ஒண்ணும் பயமில்லை " என்று சொன்னப்போ பிள்ளையார் கோவில் குருக்கள் சொன்னார் " சாயந்திரம் எதையோ போட்டு கொளுத்தினார்கள் " என்று.

ஓம் நமோ நாராயணா !!


7 comments:

  1. SriPriya Ramesh commented : "Thanks sir. ...ur writing style is so gud as usual...made us feel as if v were with u in ur travel...a pic perfect writing keep writing more "

    ReplyDelete
  2. Bharathkumar Beekay commented : "Kapali keep writing and posting. The other side of u is even better than the banker or software guy. Love it good work man"

    ReplyDelete
  3. Lakshmi Narayanan commented : " Kapali you are born to write. Bank and software are lesser ones for you !"

    ReplyDelete
  4. Raghothaman Rao commented : "அருமையான, பகதி ரசம் ததும்ப எழுதப்பட்ட, கட்டுரை ..கடைசி பாராக்களில் பரப்பன அக்ராஹர செய்திகள் சற்று பயத்தை கிளப்பியது. An unexpected turn of events and a fitting climax!

    பரணிதரனுக்கு அடுத்து ஒரு தரணிதரன்....நீர்தான்.

    'வைணவ' தலத்துக்கு போகும் வழியில் ' சைவ ' உணவு உண்ணும் வருணனைகள் ஜோர்....முன்னது கண்ணிலும் பின்னது நாவிலும் நீரை வரவழைத்தது.

    வாழ்க உமது தமிழ்...தமிழ் இனி அமோகமாக வாழும்! பக்தியும்தான்!

    ReplyDelete
  5. Mantralaya Lavanya commented : " Good One.. So it was thrilling experience.. Thank god you all reached safe! "

    ReplyDelete
  6. Ramesh Viswanathan commented : " Super sir Kalakal."

    ReplyDelete