Tuesday, September 23, 2014

எட்டாத எழுத்துக்கள்

எனக்கு வந்த ஒரு ஈமெயிலில், இன்றைய  தமிழ் புத்தக உலகின் நிலைமயைப் (ரொம்ப மோசம் தான், ஆனால் இன்னும் தெரிந்தவர்களுக்குச் சொல்லி அனுப்பும் நிலை வரவில்லை) பற்றி கவலைப்பட்டு , தமிழ் நாவல்களின் விற்பனையைப் பெருக்குவதைப் பற்றி பலரின் கவலை தோய்ந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

ஒரு புத்தகத்தை அச்சு வடிவில் வெளியிடுவது ஒரு கடினமான முயற்ச்சி என்று தெரியுமே தவிர அதன் வியாபார அந்தரங்கங்கள் எனக்குத் தெரியாததால் சற்று கவனமாகவே சிந்திக்க முயல்கிறேன்.

முன்பெல்லாம் அனேகமாக எல்லா நல்ல புத்தகங்களும் ஒரு கட்டுப்படியாகும் விலையில் கிடைத்தன. 1985ல் சுஜாதாவின் 250 பக்கமுள்ள ' விவாதங்களும், விமர்சனங்களும்' என்ற புதிய புத்தகத்தை இருபது ரூபாய்க்கு வாங்க முடிந்தது. (எங்கள் தேனிலவுக்குப் போகும் வழியில் என் மனைவி  மதுரை இலக்கியப் பண்ணையில் வாங்கி எனக்கு அளித்த பரிசு !)  சில வருஷங்கள் கழித்து  சென்னை புத்தகக் காட்சியில் 'Freedom at Midnight" என்ற பிரபலத்தயும் சுமாரான விலையில் எடுக்க முடிந்தது.

இன்றைய நிலை வேறு. போன வருட புத்தகக் காட்சிக்குப் போய் கிட்டத்தட்ட வெறுங்கையுடனும் , ஏமாற்றத்துடனும் திரும்பினேன். புத்தகங்களை எடுத்து விலையைப் பார்த்ததும் கை சுட்டது.

எண்பதுகளிலேயே திருச்சி பெரிய கடை வீதியில் சுஜாதா, ஆர்தர் ஹெய்லி போன்றோரின் புத்தகங்கள் படு மலிவு விலையில் கிடைத்தன. நான் அங்குள்ள பழைய புத்தகக் கடையில் கண்டெடுத்த பொக்கிஷம் மூன்று ரூபாய்க்கு 'Money Changers" !! இன்றும் , வாசகர்களின் ஆர்வக் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் புண் பட்ட இதயத்தை ஆற்ற பலர் தயராக இருக்கிறார்கள். என்ன முறைதான் சரியில்லை.

பல பிரபலங்களின் வெளியீடுகள் வந்த சில நாட்களிலேயே மலிவான ப்ரிண்ட் வடிவத்தில் சென்னை அண்ணா சாலையில் அங்கு கடந்து செல்லும் காவலர்கள் பார்வையிலேயே கிடைக்கிறது. இது போதாதென்று சட்ட விரோதமாகவும் புத்தகங்களின் மென் பதிப்புகள் pdf  வடிவில் , இணைய தளங்களில் ஏராளமாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றன. பிளாட்பாரத்தில் வாங்குவதற்க்காகவாவது கொஞ்சமாவது செலவழிக்க வேண்டும், ஆனால் இணய தளத்திலிருந்து இறக்குமதி செய்ய எந்த செலவுமே இல்லை.

போன வாரம் சென்னை தி, நகர்  நடைபாதையில் சமீபத்தில் வெளியான சில பிரபலமான புத்தகங்கள், புத்தம் புதிதாக-  கொஞ்ச மட்டமான , ஆனால் படிக்கக் கூடிய  ப்ரிண்டில் - வெகு சல்லிசான விலையில் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். இப்படிப் பட்ட விற்பனையில் அப்துல் கலாம் தொடங்கி ஹேரி பாட்டர் ., ஸ்டீஃபன் கோஹி வரை அனைத்து ஆசிரியர்களுமே பாதிக்கப் படுகிறார்கள். இது போதாதென்று இப்பொழுது ஈ-புத்தகங்கள் வேறு.

இப்படி மொத்த உலகமே அவர்களுக்கெதிரே திரண்டிருப்பதை பார்க்க  பாவமாய்த்தான் இருக்கு. ஆனால் இதை கதாசிரியர்களோ, வெளியீட்டாளர்களோ உணர்ந்தார் போல் தெரியவில்லை. இன்னும் விலை விஷயத்தில்  கொஞ்சம் உயரத்தில் தான் இருக்கிறார்கள்.

திருட்டு டீ வீ டீயால் திரையுலகமே நசித்துப் போகும் அபாயத்தை பார்த்தாவது இவர்கள் கொஞ்சம் யோசனை செய்ய வேண்டும், இறங்கி வர வேண்டும். ஈ புக் போன்ற எத்தனை கவர்ச்சிக் கன்னிகள் வந்தாலும் புத்தகப் பிரியர்கள் இன்னும் அந்தப் ப்ரிண்ட் வாசனைக்கு மயங்கி விலை கொடுக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள், ஆனால் விலையினால் தயக்கம் காட்டுகிறார்கள்.

இதனை உணர்ந்து, புத்தகத் துறையில் உள்ளோர் திருட்டு பதிப்புகள், திருட்டு ஈபுக்குகள் போன்றவற்றை தனக்குச் சாதகமாகத் திருப்ப முயல்வது உசிதம்.

தடாலடியாக விலையைக் குறைத்தால் பாதி பேர் நடை பாதை பக்கம் ஒதுங்கி புத்தகம் தேட மாட்டார்கள். கஷ்டம் தான். ஆனால் காணாமல் போவதை விட இந்த முயற்ச்சி மேல்.

ஈ புத்தகங்கள், பேப்பர் பதிவை விட அதிக விலை என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் இவர்கள் காகிதப் பதிவை நோக்கி ஓடுவார்கள் என்று நம்பினால், கானலைத் தான் துறத்த முடியும்.

இது எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்க வேண்டிய நேரம். திருட்டு டீ வீ டீ போன்ற அனுபவத்தால் தோன்றுவது, இதை சட்டத்தை மட்டுமே வைத்து ஒழிக்க முடியாது என்பது தான் . மேல் மாடியை கொஞ்சம் 'சுஜாதா' த்தனமாக யோசிக்க விட்டால், தங்கி  ரசிகர்களைக் கவர் முடியும். நம்பிக்கை தேவை!

No comments:

Post a Comment