Friday, September 5, 2014

கண்ணுக்குத் தெரியாத ஆசான்கள்

ஒவ்வொரு செப்டெம்பர் ஐந்தாம் தேதியும் , சர்வபள்ளி ராதாகிருஷ்னன் அவர்களின் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக அனுசரிக்கப் படுகிறது.

இந்நாளில் நமக்குக் கற்றுக் கொடுத்த அனைத்து ஆசான்களுக்கும் , நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.

பள்ளிகளிலும், கல்லூரிகள் மட்டும் தான் நமக்கு ஆசான்கள் இருக்க வேண்டும் என்று தேவை இல்லை. இவற்றைத் தாண்டி , நடந்து வரும் பாதையில் எனக்கு வழி காட்டிய சிலரை நினைவு கூர்ந்து பார்க்க எடுத்த முயற்ச்சி தான் இது:

ஆறாம் வகுப்புப் படிக்கும் போது, உணவு இடைவேளையில் விளையாடும் சடுகுடு சொல்லிக் கொடுத்த முதல் வாத்யார் இல்லாத ஆசான் சங்கர்.

திட்டிக் கொண்டும், இடுப்பில் குத்தி என்னை நிமிர வைத்துக் கொண்டும், மூச்சிரைக்க கூட ஓடி வந்து, இன்றைய பட்டினப் பாக்கத்தில் அன்று சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்த என் அண்ணன்.

வருடாந்திர விடுமுறையின் போது மற்ற விளையாட்டுக்கள் சலித்துப் போக YMIA சேர்ந்து அந்த சில மாதங்களில் நன்கு டேபிள் டென்னிஸ் கற்றுக் கொடுத்த எஸ். ஆர் என்ற ராமச்சந்திரன்.

அந்தக் கால பதினோராம் வகுப்பானாலும் முகமே சுளிக்காமல் எல்லா ஆங்கில வார்த்தைக்கும் அர்த்தம் சொன்ன அப்பா தான் மறக்க முடியாத என் ஆங்கில வாத்தி. அன்று அவர் கற்றுக் கொடுத்த சில வார்த்தைகளை  இன்றைய  அகராதிகளில் தேடிக் கொண்டிருக்கிறேன், ஆனால் கிடைக்கவில்லை- வழக்கொழிந்து விட்டதாம் !!

பௌதீக லேப் உள்ளே ஒன்றும் புரியாமல் ரெசொனஸ் காலம் என்ற உபகரணத்தோடு போராடிக் கொண்டிருந்த போது வலிய வந்து உதவிய சக மாணவன் சௌரி ராஜன்.

பலருக்குக் கசப்பான கணக்குப் பாடத்தை என்னுள் புகுத்தி, அதனால் என்னைச் செழிக்க வைத்த என் அண்ணன் என்னை அசத்திய ஆசிரியர். எனக்குத் தெரிந்து ஆசிரியர் தொழிலுக்குத்தான் வர வேண்டும் என்று, வந்த வங்கி ஆபீசர் வேலையையும் விட்டு உதறிய அவர் தான் , என் நினைவுக்குத் தெரிந்த வரை எங்கள் குடும்பத்தில் தொழில் பக்திக்கு வித்திட்ட ஒரு சரியான முன்னோடி. .

என் புது சுசுகி வந்த பின்னும் தன் வண்டியிலேயே எனக்கு ஓட்டச் சொல்லிக் கொடுத்த நண்பன்  நைனி. பின்னால் ஆங்கிலப் பேராசிரியரான அன்னாரின் பாடம் என்னை அதே சுசுகியை  26 வருஷம் சுகமாக தமிழ் நாடு முழுக்க  ஓட்ட வைத்தது.

வங்கியில் நுழைந்த சில மாதங்களில் அதன் பால பாடங்களையும், வாடிக்கையாளர்களை சமாளிக்கும் திறனையும் ஊட்டிய பல நண்பர்களும் பிற்கால முன்னேற்றத்துக்கு அன்றே விதைத்தனர். அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சில நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்த நெல்லையப்பன் போன்ற அதிகாரிகள் சிலர்.

கும்பகோணத்துக் காவேரியிலும் இறங்க தைரியம் அளித்த மெரீனாவில் நீச்சல் கற்றுக் கொடுத்த ஜூடு ரொசாரியோ என்னை எங்கும் கரையேற்ற உதவியிய நீச்சல் வாத்தியார்.

பல ஆண்டு வங்கியில் உழன்றபின் , மென்பொருள்  நிறுவனங்களில் கால் பதித்த பொழுது, கை கொடுத்த பல உள்ளங்கள் நினைவுக்கு வருகின்றன. வீ எஸ் எஸ் முதல்,  நெட்வொர்க்கில் நகர்ந்து பல உபகரணங்கள் வரை சொல்லிக் கொடுத்து உதவிய எத்தனை உள்ளங்கள், நண்பர்கள். ஐ என் ஆர்களை விட , வாழ்க்கையில் இவை தான் உயர்ந்த, உண்மையான சம்பாத்தியங்கள் !

ஜாவாவிலுருந்து, விசுவல் பேசிக் வரை உரையாடியே உருவேற்றிய அந்த 'வினோத' மான இளைஞர். அவரிடம் பயின்ற பல நாட்களை நான் பல இரவுகளில், பல நாடுகளின் நடு நிசியில் கூட  நினைவு கூர்ந்திருக்கிறேன்.

எல்லாம் போதுமென்று திருப்தியாக ஓய்ந்த பின்னும், வலைகளின் சூட்சுமங்களையும், அதிலுள்ள குற்றங்களை அறிந்து கொள்ளும் போதும் , நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுத்த, இங்கு தன் பெயர் வருவதைக் கூட விரும்பாத சில  'மன்னர்'களும் உண்டு.

இவற்றையெல்லாம் விட, எத்தனை முறைதான் சொல்லிக் கொடுப்பது என செல்லமாகக் கோபித்துக் கொண்டே திரும்பத் திரும்ப ஆண்ட் ராய்ட் போன் மற்றும் ஐபேடிலிருந்து, மேக் மற்றும் ம்யூஸிக் சிஸ்டம் வரை அனைத்திலும்  உள்ள அத்தனை நுணுக்கங்களையும் என் மண்டைக்குள் இன்றும் புகட்ட முயற்ச்சிக்கும்  வீட்டிலேயே உள்ள, பயமுறுத்தாத டீச்சர், என் செல்ல மகள் !!

என் சிற்றரிவுக்கு மேலாக ஒரு அணுவாவது சொல்லிக் கொடுத்த இவர்கள் கூட என் ஆசிரியர்கள்தான்.

இப்படிப்பட்ட  ஆசிரியர்கள் இருப்பதால் தான், சில கரிக்கட்டிகள் பட்டை தீட்டப் பட்டு வைரங்களாகின்றன, சில மக்குகள் மதிக்கப்படுமளவுக்கு முன்னேறுகின்றனர்.

வாழ்க்கையில் கற்றுக் கொடுக்கத்தான் எவ்வளவு பேர் தயாராக இருக்கிறார்கள்.  நமக்குத்தான் பொறுமையும் , அறிவும் தேவை போல.

எனக்குத் தெரியாததைக் கற்றுக் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி !
ஓம் குருப்யோ நமஹ !

No comments:

Post a Comment