Wednesday, September 17, 2014

வளரும் பிள்ளைகள்

என் பொழுது போக்கு வட்டம் , குளத்தில் போட்ட கல்லால் விரியும் வட்டத்தின்  விட்டம்  போல் வளர்ந்து  கொண்டே போகிறது.

முதன்மையாக இருந்த படிப்பது கூட , இப்பெல்லாம், பிறகு வந்த  எழுதுவது, ஆராய்வது, அனுபவிப்பது இவற்றுடன்   தராசில் சமமாக நிற்ப்பது போல் தோன்றுகிறது.

மனத்தில் கனங்கள் குறையக் குறைய, ஆராய்ச்சிப் பார்வையும், ஆராய்ச்சிக்  கூடமும் விரிகிறது. எண்ணங்கள் தெளிவாகின்றன. பதட்டமில்லாமல் நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் நாணயமாக அலச முடிகிறது.

பெண்ணைப் பெற்றுப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். என் தகப்பனார் உள்பட அஞ்சு பெற்றும் ஆண்டியாகிப் போகாமல் குடும்ப ராஜ்யம் நடத்திய பலரைக் கண்டு வியந்திருக்கிறேன்.

பெண் தவிர்த்து, பிள்ளைகள் பிறந்த போது சிரித்த பலர் பிற்காலத்தில், தாய் ஒரு மகன் வீட்டிலும் , தந்தை ஒரு மகன் வீட்டிலும் தனித்தனியே கண்ணீர் விட்டதையும் பார்த்திருக்கிறேன்.

பிள்ளையோ, பெண்ணோ அவர்கள் தனித்து காலூன்றும் வரை பெற்றோர்களுக்குத் தவிப்புத்தான். ஒவ்வொரு வினாடியும் கத்தி மேல் தான் நடக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் , சிராய்ப்பு கொஞ்சமாக இருந்தால் கூட எரிச்சல் என்னவோ பல நாட்களாகும் அடங்க.

அன்று வாட்டியது - வறுமை, அறியாமை
இன்று துறத்துவது - செம்மை, அறிவு

அனேகமாக இன்றைய பெற்றோர்கள், அன்று போல் அல்லாது, ஓரளவு படித்தவர்கள்.

சுமார் சம்பளத்தையும், இரண்டாகப் பெருக்கி , செழிப்பை வரவழைத்துக் கொண்டவர்கள்.

இவ்விரண்டு சுகமும், இக்காலப் பிள்ளைகளுக்கு ஒரு செயற்க்கையான வளத்தை மனதளவில் கூட்டி உள்ளது. இதனால் வந்த முதல் வினை, பிள்ளைகளுக்கு சிக்கனமாக  வாழும் சந்தர்ப்பம் கை நழுவியது. எதிர்பாராத, தாற்காலிக சோதனை வந்தாலும் நொந்து போகிறார்கள்.

இன்று உள்ள சாதனங்கள் தூரத்தைக் குறைத்து, நெருக்கத்தைக் கூட்டி உள்ளன.

மகள் ராத்திரி கம்ப்யூட்டர் க்ளாசிலிருந்து வர லேட்டானாலும் கவலைப் பட வேண்டாம் என்று குறுந்செய்தி சொல்லும்.

தாமதாக வீட்டுக்குத் திரும்பும்  ஆண்களை ராத்திரிக்குப் பண்ணிய சாப்பாட்டு ஐட்டங்களை செல் போனில் படமாகக் காட்டியே ஈர்த்து விடலாம்.

வயதான அப்பாவை பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ், கரண்டு பில் போன்ற சமாச்சாரங்களைக்  கட்ட ஓட வைக்க வேண்டாம். ஆபீஸில் காபி சாப்பிட்டுக் கொண்டே வங்கியிலுருந்து செல் போன் மூலமாகக் கட்டி விடலாம்.

இதெல்லாம் நல்ல முன்னேற்றம் தான். ஆனால் , முன்னேற்றத்தின் விலை?

கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னால் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லிக் கொடுப்பதை,  கேபிள் டீ வீகள், பத்து மணிக்கு மேல் இலவசமாக , பெண்களுக்கு வெட்கமே பட வைக்காமல் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இன்றைய திரைப்படங்கள், தனியாக வரும் போது ஒருவன் மடக்கினால் ஒரு பெண் எப்படி பதிலடி கொடுப்பது என்பதையும் காண்பிக்கிறார்கள். அதோடு நில்லாமல் கொஞ்சம் படித்தவுடன், படிக்காத பெற்றோர்களுக்கு எப்படி கடுக்காய் கொடுப்பது என்பதையும் விலாவாரியாக விவரிக்கிறார்கள்.

அந்தக் காலப் பெண்களை அதிகம் கதைப் புத்தகங்களைப் படிக்காதே என்று போக வரச் சொல்வர்கள். இன்று சொல்வதும் இல்லை, சொன்னால் கேட்பதாகவும் உத்தர வாதமில்லை.

அன்றைய கதாசிரியர்கள் வை மு கோ தொடங்கி , லக்ஷ்மி, சாண்டில்யன் கடந்து  சிவசங்கரி, வாசந்தி, வரை எல்லோரும் ஒரு வரையப்படாத வட்டத்துக்குள்ளேயே உலாவினார்கள்.

பின் வந்த சுஜாதாக்களும் , பாலகுமாரன்களும் தம்மைச் சுற்றி வட்டங்கள் இருந்தாலும்,  அன்றைய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் போல் அவ்வப் பொழுது கோட்டைத் தாண்டிப் போய் வருவார்கள்.

இன்றைய சில எழுத்துச் சித்தாந்தங்கள் இளசுககைக் கவர்ந்தாலும், பெருசுகளுக்கு கலக்கத்தை அதிகம் கொடுக்கின்றன. அனேகமாக முன்பெல்லாம் எவைகளைத் தப்பாக, செய்யக் கூடாததாகக் கருதப்பட்டதோ அவைகளெல்லாம் திருத்தி எழுதப் பட்டிருக்கின்றன. விளையாட்டாகச் சொல்வது வேறு, ஆனால் விட்டில் பூச்சிகளுக்குத் தெரிய வேண்டுமே, இது ஒளியல்ல, வெறும் மினுமினுப்பே என்று!

"எல்லாப் பெண்களுக்கும் முப்பது வயதுக்குப் பிறகு தான் கல்யாணம், அதுவரை முன்பின்னாக இருக்கலாம்..." இப்படி  ஒரு எழுத்து !

எழுதுவது அவர்கள் தொழில்.

அதற்க்கு அவர்களின் உபகரணம் 'எழுத்துச் சுதந்திரம்'.

இன்றைய நிலைமையில் இதற்க்கு எதிராக ஒன்றும் எடுபடாது.

ஆனால் கவலைப் பட வேண்டியவர்களுக்குத் தான் வயிற்றில் அமிலம் வார்க்கும். பேனா பிடித்தவர்களுக்கு கல்லா கட்டினால் சரி.

தொலைக் காட்சியைப் பார்த்தால் கருத்துச் சுதந்திரம்.
புத்தகங்களைத் திறந்தால் எழுத்துச் சுதந்திரம்.

ஆனால் எவற்றுக்குமே எல்லை என்று ஒன்று கண்ணுக்கே படவில்லையே? இது எப்பொழுது ஓயும்?

ஓயுமா?

சுதந்திரம் என்ற வார்த்தையைச் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறோமா? அல்லது தெரிந்தே வினையுடன் விளையாடுகிறோமா??

இவற்றையெல்லாம் எப்படி அந்த பிஞ்சுகளுக்குத் தெரிவிப்பது? முன்பு போல் அதுகளுக்கு நேரம் கூட  இல்லையே?

இந்த எழுத்து என்ற போதையில் மயங்கி விடக் கூடாதே?

இனம் தெரியாமல் எதையோ தேடிக்கொண்டிருக்கும் சின்னஞ் சிரிசுகள் இப்படிபட்ட லாகிரி கருத்துக்களில் தளர்ந்து தவறாக வளைந்து விடக் கூடாதே?

யாருடைய கவலை இது- ஒரு தகப்பனுக்குத்தான் , பெற்ற தாய்க்குத்தான்!

முன்பெல்லாம் உட்கார்த்தி வைத்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பார்கள். இப்பெல்லாம் அவர்களாகவே பார்த்துத் தெரிந்து கொள்ளுகிறார்கள். எந்தப் பக்கம் சாயப் போகிறார்கள் என்பதை கவனிப்பதுதான் பெற்றோர்களின் வேலையாகி விட்டது.

இப்பெல்லாம் பிள்ளைகளை யாரும் வளர்ப்பதில்லை. அவர்களாகவே வளருகிறார்கள்.

சைக்கிள் கற்றுக் கொடுப்பது போல் கூடவே ஓடத்தான் வேண்டும், விழுந்தால் பிடித்துக் கொள்ள.

பின்ன என்ன , கதாசிரியார வரப் போகிறார்?

பெற்றோர்கள் ,பிடித்துக் கொள்ள ஏதுவாக ஒரு கொடி போல், கூடவே செல்கிறார்கள், அவர்கள் தேவைப் பட்டால் சாய்ந்து கொள்ள, பிடித்துக் கொள்ள.

வருங்காலம்,  பிள்ளைகளை விட பெற்றோர்களுக்குத் தான் நிறைய சவால்களை முன்னிருத்தி உள்ளது.

3 comments:

  1. migavum unnmai- Gayathri Vasudevan- 17-Sep-2014

    ReplyDelete
  2. Very good article Nicely written.. - Raghothaman Rao-17-Sep-2014

    ReplyDelete
  3. Well said Kapalee. 100% true.
    As a father of 2 children, I relate to what you have written.
    To this, there is the friends circle which has a multiplier factor .- Narayanan K - 18-Sep-2014

    ReplyDelete