Thursday, August 28, 2014

கஸ்டமரும் கணபதியும்

இன்று காலை மயிலை வழியே போகும் போது ஊரே விழாக்கோலத்தில் இருந்ததது. கடை வீதி முழுவதும் ஜனம் தான்- காலை 11 மணிக்கே. சாதாரணமாக சாயங்காலத்தில் தான் கூட்டம் அம்மும்- இன்று காலையே. தெற்க்கு மாட வீதி முழுக்க ஜனங்களும் அவர்களுக்காக தெரு வியாபாரிகள் போட்ட குப்பையும் !

மாவிலை உதிரிகள், கரும்பிலிருந்து வெட்டப் பட்ட தோகைகள், துயிலுறியப்பட்ட வாழைத்தாரின் கட்டைகள், எப்பொழுதுமே இருக்கும் வாழை இலைகளின் சொச்ச மிச்சங்கள்- இப்படி குப்பை தெருவையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது , இன்று காலை முக நூலில் படித்த வாசகம் தான் ஞாபகத்துக்கு வந்தது.

In UK, people walk to the left of the road.
In India, people walk on what is left of the road

விஷயம் மாட வீதியில்  இல்லை, அதற்க்கு கொண்டு வந்து விடும் சிறு தெருக்களில் தான். இது வரை இருந்ததா என்றே தெரியாமல் இருந்த சின்ன சின்ன பிள்ளையார் கோவில்கள் கூட , பூ பூத்திருந்தது. வெள்ளை அடித்து, பந்தல் போட்டு, தோரணம் கட்டி, பகலிலேயே கலர் கலராக விளக்குகள் எரிய பிள்ளையாரை மாப்பிள்ளை அழைப்புக்கு தயாராகும் மணமகன் போல் ஜோடித்துக் கொண்டிருந்தார்கள். இன்றிலுருந்தே முழங்கத் தொடங்கிய ஒலி பெருக்கிகள் , எம்ஜீ யாரின் "என்னைத் தெரியுமா" என்று அதட்டி சுய அறிமுகம் செய்து கொண்டது. எனக்கென்னவோ அந்தப் பாடல்களெல்லாம்  இதையெல்லாம் மெய் வருத்தம் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்த்து "இவ்வளவு நாள் இங்கேயே தானேப்பா இருந்தேன். இப்ப என்ன திடீர்ன்னு" என்று பிள்ளையார் கேட்பது போல் இருந்தது.

இதில் பல பிள்ளையார் கோவில்களை நான் அனேகமாக தினமுமே பார்த்திருக்கிறேன். கதவு திறக்காமல்,  ஒரு விளக்குக் கூட இல்லாமல் , திறக்காத இரும்பு க்ரில் கதவு வழியாக, முதியோர் இல்லத்து தாத்தா, பாட்டிகள் மாலையில் வரும் உறவினர்களுக்காக காத்திருப்பது  போல் பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால் இந்த  இரண்டு நாட்களுக்கும் அவருக்கு யோகம் தான். அபிஷேகமென்ன, நீலத்தில் வெல்வெட் சொக்காய் என்ன , மணக்கும் பத்திகளென்ன, அவ்வப் பொழுது விளக்குத் திரிகளை தூண்டி அணையாமல் பார்த்து கொள்ளும் மாமிகளென்ன, மணக்கும் சுண்டலென்ன- ஒரே குஷி தான். அவருக்கும் தெரிந்திருக்கும்- இதெல்லாம் ரெண்டு நாள் தான் , அப்புறம் தன்னையும் க்ரெச்சுல கொண்டு போய் விட்டுடுவாங்கன்னு.

இதெல்லாம் பாத்தா, எனக்கு சில வங்கிகளில் வருஷா வருஷம் நடக்கும் 'வாடிக்கையாளர்கள் தினம்" தான் நினைவுக்கு வந்தது.

சாதா நாட்களில் உள்ளே வரும் சில பேரை செல்லமாக பெயர் வைத்து கிட்ட வந்தவுடன் , ப்ளாஸ்டிக் புன்னகை பூப்பார்கள்.

ஒரு கட்டு பாஸ் புக்குடன் வரும் பக்கத்து மளிகைக் கடை பையனை எதிரியைப் போல் பார்த்து "நாளைக்குத்தான் கிடைக்கும்" என்பார்கள். ஆனால் அவனே இன்றைய தினம் கடைசி வரிசையில் வெட்கப் பட்டுக் கொண்டே நாற்காலி நுனியில் உட்கார்ந்து 'கலர்' குடித்துக் கொண்டிருந்தான். விவேக் சொல்வது போல் "அட ஆண்டவா, என்னென்னவோ பண்றாங்களே, இதெல்லாம் அனுபவிக்கறதா, வேண்டாமா" என்று மஹா குழப்பத்தில் இருந்தான்.

எப்பவுமே சாப்பாட்டுக்குக் கிளம்பும் போது வரும் 'கிழம்' என்று செல்லமாக விளிக்கப்படும் பெரியவர், இன்று 'சீனியர் சிடிசன் வரிசையில் முதலாக உட்கார்ந்து, பல் இல்லாத வாயில் ஒட்டு பக்கோடாவை ஊற வைத்துக் கொண்டிருந்தார்.

அன்று வீட்டுக்கு வந்து மணியடித்து "பணம் உங்களுக்கு ஜாஸ்தி கொடுத்த மாதிரி இருக்கு . செக் பண்ணுங்கோ என்று அதட்டலாகச் சொன்ன கேஷியர் , மறுபடியும் இன்று வீட்டுக் கதவைத் தட்டியவுடன் பயந்தே போய்ட்டார். நான் இன்னிக்கு கேஷே எடுக்கலையே" என்று பயந்து சொன்னவரிடம் "இல்லை சார். நாளைக்கு கஸ்டமர் டே. கூப்படலாம்னு வந்தோம்" என்று சொன்னவர்கள் போனப்புறம் , கொஞ்சம் பஃப் அடித்துக் கொண்டார், எகிரிய மூச்சை சரி செய்து கொள்ள.

இதே போல் தான் கணபதியும் இன்று மூலைக்கு மூலை உட்கார்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

என்ன ஒரே வித்தியாசம் தான்.

கணபதி இன்று வந்திருந்து, கடைக்கண் திறந்தால் போதும் என்று சிலர் பய பக்தியுடன் இருப்பார்கள்.

ஆனால், வாடிக்கையாளர்கள், வந்திருக்கும் மேலதிகாரிகள் முன்னே வாய் திறந்து விடுவார்களோ என்ற பயம் சில அலுவலர்களிடையே.

அவ்வளவுதான் !!




No comments:

Post a Comment