Saturday, August 16, 2014

காலையில் மயிலை

கிட்டத்தட்ட அறுபது வருஷங்களாக மயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமை இருந்தாலும், இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்குன்னு இன்று மறுபடியும்  தெரிய வந்தது .

அதிகாலை கோவில் என்பது எப்பவுமே எனக்குப் பிடித்த ஒரு விஷயம். ஏற்கனவே நிறைய மார்கழிக் காலைகளைப்  பார்த்திருந்தாலும், இது வேறு அனுபவம்.  எரிக்கும் கோடையானாலும், அந்த அதிகாலை இளங்காற்று வியர்வையை ஓட்டி விடும். அந்த இதமான சில்லிப்பின் அரையிருட்டில், நெய் தீபத்தின் ஒளியில், சாம்பிராணி புகை நடுவில் ஸ்வாமி தரிசனம் என்பது அனுபவித்துதான் தெரிஞ்சுக்க வேண்டியது- படித்தல்ல. அதுதான் இன்று நான் கண்டது.

என் சுந்தரத் தோழன் ஒருவன்  தூண்டுதலினாலே காலை நாலு மணிக்கு எழுந்து , சில மழைத்துளிகளையும் கண்டு கொள்ளாமல், அஞ்சரைக்கு கபாலி கோவில் வாசலில் ஆஜர். சிறு கூட்டம் , வழக்கமாக தினமும் வருபவர்கள் என்று அப்புறம் தெரிய வந்தது.

எத்தனை முறை இந்தக் கோவிலுக்குப் போயிருந்தாலும், இன்று தான் எல்லா ஸ்வாமிக்கு முன் ஒரு அலுமினியக் கதவு இரவில் திரை போல் போட்டிருப்பதைப் பார்த்தேன்

ஓதுவார் திருப்பள்ளியெச்சி பாடி , பள்ளியறைக் கதவைத் திறந்த போது ஈஸ்வரனும் கற்கபமும் அற்புத புஷ்பக் குவியலூடே தரிசனம். அதே நேரம் கற்பகாம்பாள் முன் இருந்த திரையும் விலகி அம்பாளுக்கும் தீப ஆராதனை- மெய் சிலிர்த்தது.

ஒரு ப்ராஜக்ட் மானேஜ்மன்ட் துடிப்புடன்  சில குருக்கள்கள் அருகில் இருந்த ஒரு சின்ன வெள்ளி பல்லக்கை அலங்கரிக்க, அதே நேரத்தில் அம்மன் சன்னிதி வாசலில் ஒரு பசுவையும், கன்றையும் நிறுத்தி அமைதியான கோபூஜை. தீபாராதனை மணி கேட்டு மிரண்ட கன்றை ஒரு தட்டு நிறைய பழம் கொடுத்து அமைதிப் படுத்தினார்கள். இதற்குள், பல்லக்கு தயாராக பள்ளியறையில் ஸ்வாமிக்கு மறுபுறம் இருந்த , ஸ்வாமி பாதத்தை அதனுள் வைத்து எல்லோரும் ஒன்று சேர சிவபுராணம் பாடி கோவிலுக்குள் ஒரு முறை வலம் வந்தது ஒரு புதிய அனுபவம். அப்படியே ஈஸ்வரன் சன்னதிக்குள் போய் உடனே தீபாரதனை செய்ய , அங்கு ஒரு பெரிய ஐதீகம் நிறைவேற்றப் பட்டது. அதாவது, ஸ்வாமியை அம்பாளின் சந்நிதியிலுருந்து  கொண்டு வந்து மீண்டும் அவரின் ப்ரஹாரத்திலேயே சேர்ப்பித்தார்கள்.

இந்தச் சிலிர்ப்பிலுருந்தே இன்னும் விலகாத நிலையில் அருகிலிருந்த வேதாந்த தேஸிகர் கோவிலிலுக்கு நகர்ந்தோம். அங்கும் கோபூஜை நடக்க,  நின்ற கோலத்தில்  பெருமாள் திவ்ய தரிசனம். ஆனால் பெருமாள் கோவிலில் எல்லாமே கொஞ்சம் நிதானமாகத்தான் நகர்ந்தது. அங்கு உணர்ந்த அவசரம் இங்கு காணவில்லை.

பிறகு சாயிபாபா கோவிலுக்கு வந்த போது நன்றாக விடிந்திருந்தது. ஆற அமர சாய் பாதத்தைத் தொட்டு வணங்கி பிரார்த்திக்க முடிந்தது. கொடுத்த சூடான ப்ரசாதத்தை கொஞ்சமாக வாங்கிக் கொண்டு சற்று நேரம் நேற்று ஹிந்துவில் வந்த கோமதி மெஸ்ஸைத் தேடி அலைந்து , பிறகு ராயர் மெஸ் வந்து செட்டில் ஆனோம்.

 பாரிமுனையிலிருந்து வந்திருந்த ஒரு  வணிகக் கும்பல் உள்ளே துவம்சம் செய்யக் காத்திருந்தோம். அப்பத்தான் வாக்கிங் போய் சில கலோரிகளைக் களைந்து, பொங்கல் , மெது வடை மூலமாக இன்னும் ஏகப்பட்ட கலோரிகளைச் சம்பத்தித்து அந்தக் கும்பல்  நகர்ந்தவுடன் உள்ளே போனோம். "வாங்கோண்ணா"வோட கேட்காமலே வைத்த பொங்கலில் ஆரம்பித்து காபியுடன் முடித்து பில்லைப் பார்த்தபோது தான் தெரிந்தது, இங்கு ஏன் இன்னும் கும்பல் என்று ! 'புரசவாக்கத்திலேந்து வரோம் சார்' என்றார் பக்கத்து சீட் காரர்.

வீடு திரும்பும் போது "என்ன ஒரு அற்புதக் காலை" என்று தோன்றியது. ஹரியையும் சிவனையும் பார்த்து மனதை நிறைத்து, வயிற்றையும் நனைத்த இந்த அனுபவம் சென்னையில் இங்கு மட்டும்தான் கிடைக்குமோ என்று கூட வியக்க வைத்தது. தூரத்து கோபுரத்தில் சில தென்னைகளூடே தெரிந்த "மயிலையே கயிலை" என்ற பலகை என் எண்ணத்தை ஆமோதித்தது போலிருந்தது.




No comments:

Post a Comment