Sunday, July 14, 2013

தந்திக்கு ஒரு பாட்டு


தந்திக் கம்பிகளில் தத்தித் தாவி வரும்  ஒரு செய்தித் துறைவழி இன்று நாள் குறிக்கப் பட்டு, அது குற்றுயிரும், குலையுயிரும் அல்லாமல் நன்றாக சுகமாகவே தன் முடிவை எதிர் நோக்கி உள்ளது. ஆக்கியவன் அழிப்பதில் என்ன குறை இருக்கிறது. இதற்க்கு ஏன் இப்படிப் புலம்புகிறார்கள்? வில்லன் வயதாகி விட்டாலோ, கதா நாயகன் பொலிவிழந்து விட்டாலோ விலகத் தானே வேண்டும்?

தந்திக்கான பயம் போய் ரொம்ப நாளாச்சு. முன்பெல்லாம், இரவு நேரத்தில் எதிர் பாராமல் கதவு தட்டப்பட்டால் வீடே விழித்துக் கொள்ளும். உடனே உறவில் உள்ள அனைத்து பெரியவர்களின் ஞாபகமும் வரும்.

என் முதல் ஞாபகம் - என் அப்பாவுடன் கச்சேரி ரோட் தந்தி ஆபீஸ் போய் என் அக்கா புஷ்பவதியான செய்தியை உறவினர்களுக்கு விரைந்து கம்பி வழியாகத் தெரிவித்து, ஆங்கிலத்தில் ஒரு புது வார்த்தையும் கற்றுக் கொண்டது. ஆம் அப்பல்லாம் அதை விழாவாகக் கொண்டாடும் காலம்- இப்பல்லாம் பெண்களே கையில் கம்பை எடுத்துக்   கொள்வார்கள். பின் என் உறவினரின் அகால மரணத்துக்கு நடு இரவில் தி. நகர் ஆபிஸில் "கார்த்தாலைக்குள்ள போய்டுமா ஸார்".  நன்றாக இருக்கும் நினைவு என் சகோதரன் தனக்குப் பிறக்கும் குழந்தை பற்றிய செய்திக்கு வழி மேல் விழி வைத்துக் இரவெல்லாம் சாக்லேட்டோடு காத்துக் கொண்டிருந்தது. அதென்னமோ தெரியாது- இப்படிப்பட்ட செய்தியெல்லாம் நடு ராத்திரியில்தான் தந்தி மூலம் வரும்.

மொபைல் என்ன, வீட்டுக்கு டெலிபோனே இல்லாத காலமது. கொஞ்சம் கொஞ்சமாக டெலிபோன்களும், செல்களும் வந்த பின்னும், பிடிவாதமாக அரசுத் துறைகளும், வங்கிகளும் தந்தியை விடாமல் பிடித்தாலும், விஞ்ஞானத்தின் அசுர வேகத்துக்கு இடம் கொடுக்க முடியாமல் தந்தியின் இறுதி நாட்கள் அப்பொழுதே தெரிய ஆரம்பித்தன. ஆனால் எப்பொழுது நம் இளையவர்கள் குறுஞ்செய்திகளுக்கு தந்தி பாஷை உபயோக்கிக்க ஆரம்பித்தார்களோ, அப்பொழுதே நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும், தந்தி மறைந்தாலும் அதன் அடுத்த வாரிசு உருவாகிக் கொண்டிருக்கிறது என்று.

வளர்ந்து வரும் முன்னேற்றத்துக்கிடையே உணர்ச்சிகளுக்கு இடம் கிடையாது.  எவ்வளவு நன்றாக வேலை செய்தாலும்- அது மின் விசிறியோ, ஸ்கூட்டரோ, நாமோ, சச்சினோ, கவாஸ்கரோ, கபிலோ - களத்திலுருந்து மறைந்துதான் ஆகவேண்டும்.

அது போலவே, நம் பலரிடையே பல வருடங்கள் வாழ்ந்தும், இக்கால மக்கள் பலருக்குத் தெரியாமல் இருந்தும், நற்பணி புரிந்த தந்திக்கு, இது நாம் விடை கொடுக்க வேண்டிய நேரம் தான்.  இது காலத்தின் கட்டாயமேயொழிய  வேலையில் குறைபாடுகளினால் அல்ல.

யாராவது மறைந்து விட்டால், வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள் - மறைந்தவரே வந்து அந்த வீட்டுக்குக் குழந்தையாகப் பிறப்பார் என்று.

மறைவதற்க்கு முன்னே மறு அவதாரமாக வந்த  தந்தியின் இரட்டைக் குழந்தைகள் தானோ - ஈ மெய்லும், எஸ். எம். எஸ்சும்?

தந்தி தன் அவசரத்தை காட்டி விட்டதோ?


4 comments:

  1. Mr B.N.Murthy responded from Dubai:
    "I liked your mail on Thanthi. Thanks."

    ReplyDelete
  2. Mr K.Narayanan commented :
    "Beautiful one ... Especially the last line .. Current generation cannot relate to what u r saying. But I concur 100% . Invariably telegram was synonymous with some bad news.

    Though we have stopped using it, it does touch a chord inside when one understands that today is the last day"

    ReplyDelete
  3. Dhanasekar Visvanathan posted as "Liked the message..."

    ReplyDelete
  4. Ulagammal Paramasivam responded as "Good one sir.. J "

    ReplyDelete