Friday, July 5, 2013

கண்ணீர் விட்டோ வளர்த்தோம்

இன்று காலை மெரினா நடைப்பயிர்ச்சியின் போது ஒரு காட்சி. ஒரு முதியவர் கையில் ஒரு முழு ரொட்டியுடன் வந்து உட்கார்ந்து, அங்குள்ள நாய்களுக்கு பிச்சு பிச்சு போட ஆரம்பித்தவுடன். மெதுவாக காகங்களும் கூடின. சற்று தள்ளி கண்ணை பாதி மூடி, கை நீட்டியபடியே உட்கார்ந்திருந்த இன்னொரு முதியவர் இதன் சப்தத்தைக் கேட்டு , உடனே எழுந்து ஓடி வந்து ஒரு ரொட்டித் துண்டைத் தானும் வாங்கிக் கொண்டு போனார். காக்கை, நாய் கூட்டத்துடன் போட்டி போட்டு ஒரு மனிதனும்  சாப்பாட்டை வாங்கிய அந்தக் காட்சி என்னை வேதனைப் படுத்தியது - அப்படி முதன் முதலாக ஓடி வரும் பொழுது அந்த மனிதனின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்று நினைத்தால் " தனி மனிதனுக்கு . .... ." . என்று பாடிய முண்டாசு கவி மனக் கண் முன் வந்து போனார்.

அப்படிப்பார்த்தால் நாம் எல்லோருமே எதற்க்காகவோ கையேந்திக் கொண்டுதான் இருக்கிறோமோ?

நேற்று தொலைக் காட்சியில் ஒரு கிராமம் எப்படி ஒரு குடம் தண்ணீருக்கு அவதிப்படுகிறது என்று காட்டினார்கள்.

தினம் தினம் நாமே மின்சாரம் கிடைக்கப் பல தவங்கள் செய்கிறோம்.

சுதந்திரம் வாங்கிய உடன் என்ன கனவுகள் கண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால்,

கிலோ தக்காளி ஐம்பது ரூபாய் விற்க்கிறது. கறிகாய் வாங்கி இனாமாகக் கொடுக்கப்பட்ட தேங்காய் பத்து ரூபாயாம். ஓசிக்கு வாங்கின ஒடச்ச கடலை பத்து ரூபாய்க்கு மேல்.  ஒரு ரூபாய்க்கு எந்த மரியாதையும் இல்லை. குடிக்கும் தண்ணியை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கு.

முன்னேற்றம் இல்லாமல் இல்லை - வீட்டில் கிடக்கப் பிறந்தவர்கள் என்றழைக்கப் பட்ட பெண்டிரும் அலுவலகம் போகிறார்கள், புருஷனுக்குப் பின்னும் வீடு திரும்புகிறார்கள். இருபதுக்கும் முப்பதுக்கும் பாக்கெட் பால் வாங்கும் இவர்களுக்குத் தாய்ப் பாலின் அருமையும் தெரிவதில்லை. குழந்தைகளுக்குக் காவலிருந்த பெரியவர்கள் முதியோர் இல்லத்தில், பிறந்த குழந்தைகள் க்ரெச்சில் - இருவருக்குமே கவனிக்க ஆளில்லாததால் ! வீட்டைக் காக்க  நாய் வாங்கி வெளியூர் போகும் போது அதற்க்கும் க்ரெச்சுத்தான்.

 இப்படி ஒரு புறம் இருக்க , இன்னும் சிலர் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமல் கூலி வேலைக்கு அனுப்புகிறார்கள்.  ஐந்துக்கும் பத்துக்கும் ஆலாய் பறக்கிறார்கள். அந்தந்த அரசாங்கமோ ஐந்து வருடங்களுக்கொரு முறை இவர்களைப் பற்றி கொஞ்ச நேரம் கவலைப் பட்டு பின் மறக்கிறது.

ஏழைகளை கவனிக்காமலில்லை- பல சலுகைகள், பல முன்னுரிமைகள், பல வசதிகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. இருந்தும் போதவில்லை. எடுத்துச் சொல்ல ஆளுமில்லை- ஏனென்றால் அவர்களெல்லாம் முதியோர் இல்லத்தில் !

சுதந்திரத்துக் முன் என்ன இருந்ததாம்: கட்டுப்பாடு (அன்னிய?), கலப்படமில்லா பண்டங்கள், நற்க்கல்வி, கொஞ்ச படிப்புக்கும் சொல்லத் தயங்காத வேலை, வரும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த உதவிய விலைவாசி, நல்ல சுகாதாரமான  சுற்றுப்புற சூழ்நிலை, இருப்பதைக் கொண்டு வாழும் மன நிம்மதி.

எதற்க்குப் போராடினோம்: தேவையில்லா அன்னிய தலையீடு

கிடைத்தது - சுதந்திர பூமி, சில வருட சுத்த அரசியல் மற்றும் தலைவர்கள்

வேண்டாமல் கிடைத்தது: எல்லாவற்றிலும் அரசியல், சாதிப் ப்ரச்சினைகளை ஊதிப் பார்ப்பவர்கள், லஞ்சம்

இழந்தது:  நிஜ பேச்சுரிமை- உண்மையைப் பேசினால் எங்கிருந்து குரல் வரும் என்று தெரியாது, ஆனால் வரும்.

சில நிஜத் தலைவர்களால் நாடு உண்மையிலேயே முன்னேறியது- தொழில் நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவம், உயர் கல்வி, தொலை காட்சி, கை பேசி, கணினி போன்றவற்றால் உலகமே சுருக்கப் பட்டது

புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தில்  நாடே மயங்கும் பொழுது, சிறுசுகளைக் கேட்கவா வேண்டும். கல்லூரிக்கு வரும் பொழுது கையில் புத்தகம் உண்டோ இல்லையோ, கைபேசி நிச்சயம் உண்டு. என்னது? யார் சொன்னார்கள் அதெல்லாம் தடைப் பட்டவை என்று. இவையெல்லாம் போக இடைப் பட்டதுதான் கல்வியும், கல்லூரியும் !

இப்பெல்லாம் இளைஞர்கள் சினிமா பார்க்கக் கட் அடிப்பதே இல்லை. எதற்க்கு அதெல்லாம். அது தான் 24 மணி நேரமும் தொலை காட்சியில் பார்க்கலாம். இல்லேன்னா மடிக் கணினியில் பார்க்கலாம். அவசரமென்றால் கைபேசியிலேயே பார்க்கலாம் - விஞ்ஞானம் !

படிப்பு வருகிறதோ இல்லையோ, வயசுக்கேத்த விவரங்கள் வர வர சீக்கிரமே தெரிய வருகிறது- உபயம் சுதந்திர இந்தியாவின் முற்ப்போக்குப் பார்வை.  தொலைக் காட்சியில் தெரிவது  எல்லாம் அருகாமையிலே வந்து விடுகிறது. இந்த படிக்கும் நேரத்தில்தான் எத்தனை கவனச் சிதறல்கள் .

எல்லாவற்றையுமே கேள்வி கேட்கும் மனப்பான்மை. எதையுமே ஒத்துக்கொள்ளாத நிலை - குறிப்பாக பெரியவர்கள் . இலை மறைவு காய் மறைவு என்பது மறைந்து போனதால் காதலும் கத்தரிக்காயும் தானே வந்து ஒட்டிக் கொண்டது. சம உணர்வு, பாகுபாடில்லா சமுதாயம் என்று ஏதேதோ சொல்லி எல்லாவற்றையும் உதறி, ஒன்றும் தெரியாத சில அப்பாவிகள் இடியாப்பச் சிக்கலில் மாட்டி, செய்வதறியாது தவித்து  உயிரையும் விடுகிறார்கள்.

இவ்வளவு இருந்தும் படிக்கிறார்கள் - சாதிக்கிறார்கள்- சம்பாதிக்கிறார்கள். ஆனால், சம்பாத்யம் வந்தவுடன் மறந்து விடுகிறார்கள். தன் பெற்றோரை, நடந்து வந்த பாதையை, தன் கடமைகளை, தன் நாட்டையும் ! கையில் கரன்சி வந்தவுடன் உலகமே வேறாகத் தெரிகிறது- எல்லாமே அலம்பி விட்ட மாதிரி இருக்கு.

காசு வந்தவுடன் கண் மூடிப் ப்ரார்த்தித்தால் பரவாயில்லை- அனுபவித்தால் பரவாயில்லை- கண் மூடித்தனமாக் நடக்கிறார்கள். காசுக்காக வந்த கும்பலும் கை கூட,  புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள், வயசுக்கேர்ப்ப மயங்குகிறார்கள். அளவு கடந்து ஆபத்தைத் தாண்டும் பொழுது வரும் அறிவுரைகளயும் புறக்கணிக்கிறார்கள் - மயக்கத்தால்.

தேவையில்லாச் செலவு, அளவுக்கு மீறிய ஆசை, இன்றே அனுபவித்தாக வேண்டிய நிர்ப்பந்தங்கள் - நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கிறது- காசு உள்ளவரை. முன்பெல்லாம் வேலைக்குச் சேர்ந்தால் ரிடயர் ஆகும் வரை அது தான் வேலை. ஆனால் இப்புதிய  நாட்டில் அதெல்லாம் கிடையாது. இரண்டு வருஷத்துக்குமேல் வேலை மாற்றாதவன் இவர்கள் பாஷையில் ஒரு (அப்)பாவி.

இப்படி 'சரிகமப" என்று சந்தோஷமாக ஓடி கொண்டிருந்த சங்கீத வாழ்க்கையில் அடுத்து வருவது - 'ரி'- ரிசஷன், ரிட்ரென்ச்மென்ட் எல்லாம். இந்த 'ரி' யை எதிர்பார்க்காததால், எல்லா சந்தோஷங்களும் ரீவைண்ட்தான் பண்ண முடிகிறது - மனக் கண்ணில். சேமிப்பு இல்லை, சில சௌகர்யங்களுக்கு அடிமைப் பட்டாயிற்று ஆனால் முடியவில்லை, ஈ ம் ஐ தொண்டையைபிடிக்க, நெஞ்சு வலிக்கிறது. எழுந்து பார்த்தால் ஐ. சீ. யூ தான்

என்ன ஆயிற்று? எங்கு தடம் புரண்டோம்? எந்த பருவத்தில் தடம் புறள்கிறோம்? மாணவர்களாகவா, இளைஞர்களாகவா, படித்தவர்களாகவா, பிள்ளைகளாகவா, இந்தியனாகவா?

எது சுதந்திரம் ? எதற்க்கு சுதந்திரம்? இதற்க்கா சுதந்திரம்?

பின் குறிப்பு: இது தொலைகாட்சியிலும், செய்தித்தாள்களிலும் சில நாட்களாக வந்த சில செய்திகளை அறிந்து,  மனம் கலங்கி , குழம்பி  பின் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத, மனம் போன போக்கில் ஒரு ஆதங்கத்தில் எழுதிய கட்டுரை. புரிந்தவர்கள் தோள் கொடுக்கலாம்- உடன் நடக்கலாம், மற்றவர்கள் நகரலாம்.

3 comments:

  1. Anand Sivaraman posted on 6-July-2013:
    "As parents we are the role models for children, we should be able to make the next generation learn from us, guide them to take in good path can be an option"

    ReplyDelete
  2. Bhama Govind posted on 6-Jul-2013 "superb words. No words to express my feelings."

    ReplyDelete
  3. Natarajan S V posted on 6-Jul-2013 "romba romba nalla ezuthierukkirai..."

    ReplyDelete