Saturday, August 3, 2013

கர்நாடகா சுற்றுலா - 2013

"ஆயிரம் கனவுகள் காண்கிறேன், அனந்த கோடி கற்பனைகள் செய்கிறேன்...".

நான்  கண்ட வெகு நாள் கனவான ஒரு கர்னாடகச் சுற்றுலாவுக்கு ஸ்ரீ ஜானகி டூர்ஸ் வழியாக ஒரு நல்ல விடிவு பிறந்தது. எந்த ஒரு கனவுக்கும் வரும் தடங்கல்களைத் தாண்டி 35 பேர் கொண்ட குழு ஜூலை 26ம் தேதி சென்னையிலிருந்து பயணப்பட்டது. ஆரம்பமே டென்ஷன்தான்- இருவர் ரயில் கிளம்பியவுடன் ஒடி வந்து ரன்னிங்கில் ஏறி ரொம்ப நேரம் ரயிலுடன் சேர்ந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். சில ஆரம்ப கால தனிமைக்குப் பிறகு குடும்பங்கள் ஒன்று சேரத் தொடங்கின.

அமைப்பாளர்களின் அருமையான சாப்பாட்டுடன் ஆரம்பித்த பயணம் சின்ன மழைத்துளிகளுடன் தொடர்ந்தது மறுநாள் காலை மங்களூர் வரை. ஒரு அவசரக் குளியலுக்குப் பின் ஆரம்பித்த முதல் தரிசனம் 'கெட்டீல் துர்கா தேவி'. நுழைவாயிலில் அசுர வேகத்துடன் பாய்ந்தோடும் ஆற்றை ஆச்சர்யத்துடன் கடந்தால், கோவிலுள்ளே சாந்தமான அம்மன்.
Ketteel Durga Parameswari Temple

அந்த ஊரின் சிறப்பான உப்பீட்டுடன் (நம்மூர் உப்புமாதான்!)ஒரு சிற்றுண்டிக்குப் பிறகு 'ஹொஸ நாடு அன்ன பூரணி' கோவில். விட்டு விட்டு வந்த மழையுடன் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே போனால் அழகான பூங்காவுடன் ஒரு கோவில். பெரி....ய ஆஞ்ச நேயருக்கு வணக்கம் சொல்லி நகர்ந்தால்  தங்க அன்னபூரணி கையில் கரண்டியுடன் நமக்கு என்றும் அன்னம் கொடுக்கத் தயாராக நின்றாள். அந்த தங்கச் சிலையைப் பார்த்தபின் எப்படி வரும் பசி?
Hosanadu temple entrance

லேசான மழையுடன் பயணித்து, உடுப்பி க்ருஷ்ணனை பார்க்குமுன் அங்கு அமர்ந்து எதையுமே கண்டு கொள்ளாமல் பாடிக் கொண்டே பூ தொடுக்கும் முதிய பெண்களைக் கண்டால் யாருக்குமே சொல்லாமல் பக்தி வரும். குட்டி க்ருஷ்ணனை ஒரு சிறு ஜன்னல் வழியாக சில செகண்டே பார்க்க முடிந்தது. திருப்பதி ஜரகண்டியைப் போல் இங்கும் போலீஸ்காரிகள் கன்னடத்தில் ஏதோ சொல்லி தள்ளிவிட்டார்கள். க்ருஷ்ணர் சன்னிதிக்குப் பிறகு பெரிய வரிசை உள்ள இடம்- இலவச உணவுக் கூடம். ஆனால் சும்மா சொல்லக் கூடாது- கூப்பிட்டு, வற்ப்புறுத்திச் சாப்பிடச் சொல்கிறார்கள்- நாங்கள் தான் நேரம் கருதி சாப்பிடவில்லை.

கோவிலிலிருந்து எங்கள் பஸ்ஸுக்கு வருவதற்க்குள்  பேய் காற்றுடன் ஒரு பெரு மழை அடித்து எங்கள் குடைகளை நிலை குலையச்செய்து, ஐந்து நிமிடத்துக்குள் தொப்பலாக நனைத்தன. கோவர்தன  மலை ஒன்று தான் எங்களை நனையாமல் காத்திருக்கக் கூடும்- ஆனால் மானிடச் செருக்கில் மான் மார்க் குடையை நம்பி யாரும் கண்ணனை அழைக்காததால், அவரும் வரவில்லை.

அடை மழையில் ஒரு சூடான சாப்பாட்டுக்குப் பிறகு அரைத்தூக்கத்தில் கும்பாஷி வினாயகர் கோவிலடைந்தோம். நவீனக் கோவில், அழகான பிள்ளையார், அமைதியான தரிசனம்.

ரொம்பக் கேள்விப்பட்டு எதிர் பார்த்த 'முருடேஷ்வரா சிவன் கோவில்' ஏமாற்றவில்லை. முதலில் ஒரு பதினெட்டு மாடி கோபுரத்துக்குள் லிஃப்டில் ஏறினால், கண் கொள்ளா காட்சி- சுருண்டோடிவரும் அலைகள் ஒரு பக்கம். இன்னொரு புறம் ஒரு ஓங்கி உயர்ந்த சிவன் சிலை- பார்க்கவே ப்ரமிப்பாகவும் ஒர் மயிர்கூச்செரிதலும் இருந்தது.  பின் ஒரு ஐந்து நட்சத்திர வசதி போல் உள்ள அறையில் நுழைவு. இங்கெல்லாம் சீக்கிரமே ஹோட்டல்கள் மூடி விடுவதால் முதலில் டின்னரை முடிக்க ஏற்ப்பாடு- இங்குதான் ஜானகி டூர்ஸின் அனுபவம் தெரிந்தது. டின்னர் சாப்பிட்ட ஹோட்டல் கடலைப் பார்த்து, அலை மேல் உள்ள ஒரு பால்கனியிலிருந்ததால், அங்கு பல அயிட்டங்கள் இல்லையென்று சொன்னதையும் மக்கள் பொருட்படுத்தவில்லை. திரும்பி வந்து நிதானமாக ஹோட்டல் அறையைப் பார்த்தால், பால்கனிக்கு அடியில் வந்து கடலலை தொட்டுத் தொட்டுச் சென்றது. ஓவென்று இரைச்சல் வேறு- சென்னைவாசிகளுக்கு சுனாமி ஞாபகம் வந்தவுடன், அங்கிருந்தவர்கள் அவசரமாகச் சொன்னார்கள் அரபிக் கடலிலில் சுனாமி வராதென்று (அப்படியா?). எது எப்படியோ, இருந்த களைப்பில் 'அந்த அரபிக் கடலோரம் ' படுத்ததுதான் தெரியும், மறு நாள் காலை 3.45 அலாரத்துக்குத்தான் எழுந்தோம்.
Murudeshwara Temple









விடிகாலைப் பொழுதில் அறைக் கதவைத் திறந்தவுடன்  ப்ரம்மாண்டமான சிவ தரிஸனம். இந்த ஒரு ஏற்ப்பாட்டுக்காகவே ஜானகி டூர்ஸுக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம். விடிய விடியப் பயணித்து கொல்லூர் அடைந்த போது, மழை எங்களுடன் ஒட்டிக் கொண்டது. இதுவரை சீக்கிரம் கிடைத்த தரிசனத்தாலோ என்னவோ, அம்மன் கொஞ்சம் காக்க வைத்து பின் நல்லாசி புரிந்தாள். அங்கிருந்து தொடங்கிய பயணம் எங்களை மிகவும் சோதித்தது- மோசமான பாதை, கடுமையான மழை, எதிரில் வரும் எந்த வண்டியும் ஹார்ன் அடிக்கக் கூடாது என்று சபதம் போலும், தூங்க விடாமல் வயிற்றில் புளி கரைந்து கொண்டே இருந்தது. ஒரு சிலருக்கு காலையில் லபக்கிய பூரியும், வடையும் புளிப்பு மிட்டாய்களைத் தேடி நடு நடுவே வண்டி கொஞ்சம் ' நிப்பாட்டுங்கப்பா'க்கப்புறம், ஊர்ந்துதான் போனது. கர்னாடகா போர்டுகள் வேறு சிருங்கேரி இன்னும் 70 KM என்று காட்டி கொஞ்ச நேரத்துக்கப்புறம் 72 KM காண்பித்து படுத்தியது. அடிக்கடி கடக்கும் எல்லா ஆறுகளும் வெள்ளப் பெருக்கில் இருந்ததை தமிழ் நாட்டவர்கள் மிட்டாய்க் கடை போல் பார்த்தார்கள். ஆனால் இன்னமும் கர்னாடகா தண்ணீர் தர மாட்டேன்னு சொன்னா வேறு எதோ உள் குத்து தான் என்பது நிதர்சனம்.

ஒரு வழியாக முக்கி முனகி 2 மணிக்கு ஸ்ருங்கேரி வந்தால் கோவில் சாத்தி விட்டார்கள்- அதனால் என்ன என்று இலவச அன்ன தானக் கூடத்துக்குள் நுழைந்து விட்டோம். ஒரு பெரீரீரீய.... ஹால்- மொத்தம் 2000 பபேர் சாப்பிடலாமாம். தட்டுக்கள் அலம்பி அடுக்கி இருந்ததைப் பார்க்கவே காணக் கண் கோடி வேண்டும். உட்கார வைத்து, தட்டு வைத்து சுமார் இரண்டு அடி மேலிருந்து முதலில் பாயஸம் பரிமாரினார்கள் - ம்ஹூம் - போட்டார்கள். பின் நான் ஒரு நாள் முழுதும் சாப்பிடக் கூடிய அளவு சாதம், முதலில் ரஸம், அப்புறம்தான் சாம்பார், அதன் பின் மோர்- ஆம் எல்லாம் துரித கதியில் யாரும் பேசாமல் சாப்பிட வேண்டும். காய் கிடையாது. எங்கள் குழுவில் உள்ள முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் (அடியேனையும் சேர்த்துத்தான்) கொண்டு சென்ற மிக்ஸர், சிப்ஸ், ஊருகாய்கள் போன்றவை கை கொடுத்தன. கை அலம்பும் போது, வரும் எல்லோருக்கும் சோறு போடும் அந்த உள்ளங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
Srungeri
Plates waiting to Serve










பின் துங்கபத்திரை நதியில் கால் நனைத்து, ஆமை உள்ள இடத்தையும் பார்த்தவுடன் கோவில் திறந்து அழகிய சாரதாம்பாளின் தரிசனம். ஒரு சூடான டீக்குப் பிறகு தர்மஸ்தலா. முருடேஷ்வராவில் உள்ள ஹோட்டலுக்கு இங்குள்ளது கொஞ்சம் ஏமாற்றம் தான் அளித்தது, ஆனால் அதன் காரணம் மறு நாள் தான் புரிந்தது.
Dharmasthala

வழக்கம்போல் மறுநாள்  காலை 3:30 மணிக்கு எழுந்து கிளம்பல்- மழை விடாமல் எங்களுடன் வந்தது. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை தர்மஸ்தலாவில் சில சமயங்களில் திருப்பதி போல் கூட்டம் வரும் என்று- அங்கு செய்திருந்த ஏற்ப்பாடுகள் அதைக் குறித்தன. ஆனால் நல்ல காலமாக அன்று கூட்டமில்லை. எங்கு பார்த்தாலும் தர்மச் சத்திரங்கள்- மக்கள் தங்க. அப்புறம் எப்படி ஹோட்டலைத் தேட. சூப்பர் டிபனுக்கப்புறம், சுப்ரமண்யா.
Subrahmanya

 கொஞ்சம் விட்ட மழை தரிசனம் பெய்யும் பொழுது ஒரு கொட்டு கொட்டி தீர்த்தது. மக்கள் இந்த ஊர்ச் சிறப்பான காபிப் பொடிக்கு விரைந்தனர்- நமக்கு எப்பவுமே லியோதான். அதன் பின் போன கதிரியில் (ஆம் சாக்ஸஃபோன் இடம் தான்) ஒரு அழகான, சுத்தமான கோவில். கதவுகளில் வெள்ளியில் அருமையான வேலைப்பாடு - "போட்டோல்லாம் எடுக்கக் கூடாதுங்க...". கோவிலுக்கு மேல ஒரு மலை- அதில் உள்ள சிவலிங்கத்துக்கு நாமே அங்கு வரும் கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம்.
Kadri

அதற்க்குபின் பார்த்த குத்ரோலி கோகர்ணா - ஒரு ஐந்து நக்ஷத்ரக் கோவில் - அவ்வளவு சுத்தம், அவ்வளவு அழகு, அவ்வளவு வேலைப்பாடுகள்.
Kudroli Gokarna

மங்களூர் மங்களாம்பிகையைத் தரிசித்து எங்கள் சுற்றுலாவை இனிதே முடித்தோம்.

கண்ணில் பட்டதும், பிடித்ததும்:
  • எல்லா கோவில்களிலும் தீர்த்தமும், சந்தனமும்
  • உண்டிகள் நிறைய இல்லை- காசும் கேட்பதில்லை
  • பல கோவில்களில் கழிப்பறைகள் படு சுத்தம்
  • வெல்லம் போடாத சாம்பார், ரசம் கிடைக்கும் ஹோட்டல்கள் பல உள்ளன  
  • எவ்வளவு மழை பெய்தாலும் சாலைகளில் தண்ணீர் நிற்ப்பதில்லை
  • அனேகமாக எல்லாக் கோவில்களுமே நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன
  • சுலபமாகச் சிரிக்கிறார்கள்
  • குழுவிலுள்ள சிலர் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது வாங்கினால் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்ததில் சில உண்மையான உள்ளங்களை அடையாளம் காண முடிந்தது
அமைப்பாளர்கள் ஜானகி டூர்ஸைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது:
  • எல்லா இடங்களிலும் சிறப்பான ஏற்ப்பாடு .
  • முதல் நாள் வீட்டுச் சாப்பாடு, எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து கவனிப்பு.
  • ருசியான ஊருகாயும், புளிக் காய்ச்சலும் கொண்டு வந்த அவர்களின் அநுபவத்தினால் செய்த முன்னேற்ப்பாட்டை பாராட்டியே ஆகவேண்டும். 
  • ஒரு கோவிலுக்குப் போகுமுன் அதன் தல வரலாற்றை டேப்பில் போட்டுக் காண்பிப்பது நல்ல உபயோகமான உத்தி.
  • கண்டிப்பாக இவர்களின் அனுபவத்தால் ஒரு அரை நாளாவது சேமித்திருப்போம்.
எனக்கென்னவோ  இவர்கள் காசுக்கு மட்டுமே இதைச் செய்யவில்லை என்று தோன்றுகிறது. அதை மீறி ஒரு ஆசையும் தெரிகிறது

குறையே இல்லையா எனலாம். யாரிடம் தான் குறை இல்லை. சிலவற்றை இன்னும் நன்றாகச் செய்தால் இன்னும் சிறப்பாக அமையும் . இவ்வளவு நிறைவாகச் செய்தவர்களுக்கு சிறு சிறு குறைகளை வெகு சுலபமாக நிறைவாக்கத் தெரியும்.

குழுவில் உள்ள 33 பேரும் ஸ்ரீ ஜானகி டூர்ஸின் உரிமையாளர்களான ரமேஷ், ப்ரியா தம்பதியர்களை வாழ்த்தியதில் மிகையே இல்லை.

இந்த ஐந்து நாட்களில் கர்னாடகத்தின் பன்னிரெண்டு  ப்ரதான கோவில்களைப் பார்த்ததில் எனக்கு வந்து சேரும் புண்ணியத்தில் நிச்சயம் அவர்களுக்கும் பங்கு உண்டு !

5 comments:

  1. Very vivid description. I went to all these places during March end 2008. Felt like I am re-visiting these places. Wonderful and lively explanation, in a free-flowing style. Good write-up. V Rajendran

    ReplyDelete
  2. Sripriya Ramesh commented on 05-Aug-2013:

    "Thank u so much sir for this excellent blog on our Karnataka tour.

    Your writing is truly superb with excellent flow on tamil....tamil vazga Vallarga :)

    Mikka nandrii "

    ReplyDelete
  3. Muralidharan S posted on 05-Aug-2013:

    Very well written. The blog brought the temples visually....

    ReplyDelete
  4. Elangavan S wrote on 05-Aug-2013:

    "Thank you.
    I too enjoyed the virtual trip and Darshan.
    May I have contact details of “Sri Janaki Tours”. Will try to join in the next tour"

    ReplyDelete
  5. Yes. Really a pleasant trip. I trust now you may have the clear meaning for life and the reason for the presence of human lives. :)

    ReplyDelete