Saturday, October 3, 2015

முடக்கிய தினத்தில் முடங்காத எண்ணங்கள்

பாரத தேசத்திலிருந்து சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா வந்து சேர்ந்த போது , வெய்யில் நம்ம ஊர் போல இல்லா விட்டாலும் , சமயத்தில் தாக்கியது.

தமிழ் நாட்டில் கரண்ட்டே இல்லாமல் தகிக்கும் வெய்யிலை பார்த்தவர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி. ஆனால் நம்ம ஊரில் வேர்த்து ஊத்தி உடல் கண்ணீர் விட்டு விடும் - இங்கு வியர்வை குறைவு , அதுதான் ஆபத்தும்  கூட.

இருந்தும் பயணம் செய்ய, நடை பயில கொஞ்சம் அனுகூலமாகவே இருந்த சீதோஷ்ணம் திடீரென்று கோபித்துக் கொண்டது போல சட்டென்று சில டிகிரிகள் கீழே விழுந்து அனைவரையும் கம்பளிக்குள் இழுத்தது. ரொம்ப காலமாக இங்கேயே இருக்கும் , 'இதெல்லாம் குளிரா, ஜனவரி , பிப்ரவரி பார்' என்று எக்களித்தவர்கள் கூட நேற்று சரணடைந்து விட்டார்காள் -அவ்வளவு குளிர் , மழை காற்றுடன் சேர்ந்து ! பஹாமாஸைக் குறி வைக்கும் 'யோ க்வின்' என்ற  சூறாவளி, அமெரிக்காவிடம் கொண்ட ஒரு ஊடல் தானாம் இந்த ஒரு டிகிரி குளிர்.

உடனேயே பள்ளிகளை மூடி விட்டார்கள். தெருக்களில் நடமாட்டம் குறைந்து உள்ளூர் ரயில்களையும் குறைத்து விட்டார்கள். பலரும் வீட்டில் அடுத்த மாதம் எடுக்கக் காத்திருந்த ஹீட்டரை திருகி அதன் கணகணப்பில் சுகமாக கால் நீட்டி டீ வீ பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் - நல்ல வேளை இங்கெல்லாம் கரண்ட் போகாதாம். நல்ல மனம் கொண்ட சில கிளையண்டுகள் வீட்டிலேயே வேலை பாருங்கள் என்று சொல்ல,  கொடுத்து வைத்த  சில கம்பெனி ஊழியர்கள்  வீட்டிலேயே இருந்து கொண்டு, மனைவி செய்த சூடான பக்கோடாவை ருசித்துக் கொண்டே, இந்தியாவில் வெந்து கொண்டிருக்கும் மானேஜர்களிடம் கான்பெரென்ஸ் கால் பேசி வெறுப்பேத்திக் கொண்டிருந்தார்கள். குளிர் அதிகப்படுத்திய சோம்பேறித்தனத்தால் சில வீட்டு அம்மாக்கள் சமையலறையை மூட பீட்ஸாக் காரர்கள் கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இதே மழை , குளிர் தானே அவர்களுக்கும் ... ஹூம் ....சிலரின் கஷ்டம் சிலருக்கு ஆதாயம்.

வெளியே சுற்றியே பழக்கப் பட்ட நம்மைப் போன்றவர்களுக்கு மனம் மாட வீதியைத் தேடி ஓட , சில இடங்களில் 'பிசிறி' என்ற SKUNK போன்ற விலங்குகளும் அங்கங்கு தென் பட்டதால் வெளியில் போவது பாதுக்காப்பு கருதி வீட்டால் தடை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட பிசிறிகள் தன் அருகில் யார் வந்தாலும் உடம்பைத் திருப்பி, பின்புறத்திலுருந்து துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு திரவத்தை உமிழ்ந்தால் அதை பெற்றுக் கொள்பவர்கள் தாங்க முடியாத சரும அரிப்புகள் போன்ற உபத்திரவங்களுக்கு ஆளாவார்களாம். வேறு வழியின்றி  வீட்டுக்குள்ளேயே நடை பயில வேண்டி இருந்தது. குளிர் பிரதேசங்களில் உள்ள புத்திசாலி மக்கள் ஏன் த்ரெட்மில் கண்டு பிடித்தார்கள் என்று விளங்கியது. இப்படிப்பட்ட குளிர்கால பயிற்ச்சி நண்பனைத்தான்  நம் மக்கள் சாமர்த்தியமாக ஜிம்களில் வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

டீ வியில்  எவ்வளவு  பணம் கொடுத்தாலும் சொல்ப தமிழ் சேனல்கள் தான் வருகிறது.

காசு கொடுத்து வாங்கும் உள்ளூர் சேனல்களில் வரும் ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற தொடர்களும் கொஞ்ச நேரம் தான் பார்க்க முடிகிறது - ஆனால் அபாரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. பூ சுத்தாமல், கண்ணீர், மாமியார்-மாட்டுப் பெண் கொடுமை இல்லாமல் தொடர்கள் எப்படி எடுப்பது என்று நம்ம மக்கள் கொஞ்சம் கத்துக் கொள்ளலாம். ஆனால் நடு நடுவே வரும் விளம்பரங்கள் என்னவோ நம்ம ஊரே தேவலை என்று எண்ண வைக்கிறது.

இவற்றுக்கு நடுவே தவறாமல் நமக்குச் சேவை செய்யக் காத்திருக்கும் காமதேனு தான்  யூ டியூப் - ஜீ பூம்பா போல் எது கேட்டாலும் கொடுக்கிறது.

இன்னாள் வரை யூடியூப் மூலம் முழுசாக ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே பார்த்த எனக்கு இது ஒரு சவாலாகத்தான் இருந்தது. சமீபத்தில் வெளி வந்து அதே சூட்டில் புறமுதுகு காட்டி தியேட்டரை விட்டே ஓடிய  சில படங்களும், இப்பொழுதும் நன்றாகப் பேசப் படும் சில மாதங்களுக்கு முன் வந்த படங்களும் பார்த்த பொழுது வந்த சில எண்ணங்கள் :

முதலில் , காசு கொடுக்காமல் பார்த்த ஒரு லேசான வருத்தம் (குற்ற உணர்ச்சி?)

ரொம்ப ஆர்ப்பாட்டமாக விளம்பரம் செய்யப் பட்ட சில படங்களின் காலணா பெறாத கதைகள் . இப்படிப்பட்ட படங்களை எந்த நம்பிக்கையில் எடுக்கிறார்கள் - உண்மையிலேயே ஓடும் என்ற எண்ணத்திலா இல்லை நம் ரசிகர்கள் இன்னும் முட்டாள்களே- எதைக் கொடுத்தாலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையிலா? பின்னது தான் என்று தோன்றுகிறது.

எதிர்பார்த்து குப்புற விழுந்த சில படங்களை ஆரம்பித்த  அரை மணியிலேயே நாம் ஒதுக்கி எழுந்திருக்கும் பொழுது, அந்தத் தயாரிப்பாளர்களுக்கு அவரைச் சுற்றி உள்ள எவருமே சொன்னதில்லையா , இது எடுபடாது என்று?

சொல்ல பயமா இல்லை உண்மை நண்பர்கள் எவருமே இப்படிபட்டவர்களைச் சுற்றி இருப்பதில்லையா?

பணம் , புகழ் படுத்தும் பாடு எவரையும் உண்மையைச் சொல்ல விடுவதில்லையா?

எனக்கென்னவோ உண்மையாக, வெளிப்படையாக விமரிசனம் செய்யும் ஒரு குழுவை இவர்கள் வைத்துக் கொண்டால் பல நூறு கோடிகளை நட்டத்திலிருந்து காப்பாற்றலாம் , மற்றும் படம் கவிழ்ந்தவுடன் மிரட்டி வாங்கப்படும் நட்டங்களையும் தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது.

இப்படியெல்லாம் படம் எடுத்தால் காசு கொடுத்து போகும் எவனுக்கும் இணைய தளத்தில் இலவசமாகவோ அல்லது திருட்டு முறையிலோ முதலில் பார்த்து விடுவோம் என்று தோன்றுவதில் என்ன அதிசயம்? இந்தக் குளிருக்கு சுகமாக இருந்தாலும், எரிச்சல் அதிகமாகத்தான் இருந்தது.

           -  -  நியூ ஜெர்ஸியின் ஒரு குளிர்ந்த மாலையில் வெளியே போக முடியாது வெதும்பிய மனத்தில்  எழுந்த சிந்தனைகள்  !

9 comments:

  1. "...this article made for a fantastic read. For a few moments, I felt as if I was there in New Jersey. ....
    I completely agree with your thoughts on how no one seems to have warned producers that they were investing on something which would never see success. In fact, just last evening I had this very same thought on the xxx movie..." - Uthra Karthik

    ReplyDelete
  2. "Super. You are making the readers to feel as if they are at Newjercy. Thanks a lot." - Balu Swaminathan

    ReplyDelete
  3. "excellent. nice to read. ...half way through, there are so many compromises that a director makes, on finances, on the story line, on the social reputation of the hero ..., court cases, main story and with so much compromises, the film is at last released. As sujatha once said, no one has still found out the perfect and fail-safe formula that can guarantee a film's success. ..." - Venkataraman Rajendran

    ReplyDelete
  4. "...Your US experience mail is very interesting and when I read that mail I felt as I was U.S," - Srinivasan Venkatachalam

    ReplyDelete
  5. "நண்பரே , நெருடல் இல்லாத தொடராட்சி, நீங்கள் கதை எழுதலாம் போங்க" - Azhagapparaju

    ReplyDelete
  6. "Your writing in Tamizh is improving, day-by-day... Kudos!" - Sundaravaradan Srinivasan

    ReplyDelete
  7. "more informations weekly once pl" - T.R.Venkataraman

    ReplyDelete
  8. "Enjoy the extremities and make your imagination to convert into beautiful writing. All the best .." - Subramaniam Venkatachalam

    ReplyDelete
  9. "kapali, lots of sujatha padithu neengalum thaan jora ezhudhareenga"-Bhageerathi Sundaresan

    ReplyDelete