Thursday, April 16, 2015

தூண்டில் ஜாக்கிரதை

எண்பதுகளில் வலைத்தளங்கள் வந்த புதிதில் வலையில் நுழைய  வருடத்துக்கு 15000 ரூபாய் கேட்டு பாமரனுக்கு ஒரு எட்டாக் கனியாகவே வைத்திருந்தார்கள். அதனூடே தெரிந்த  வியாபாரத்துக்குக்காக, வரும் விளம்பர வருவாய்க்காக பின் மெதுவாக மக்களை வலைத் தளத்தில் உலவ  அனுமதித்து பின் பழக விட்டார்கள்.

மக்களுக்கு வலை என்ற போதை ஏற்றப்பட்டவுடன் எல்லாமே வலைத் தளம் என்றாயிற்று. யூ பி எஸ் சி பரீட்சை முடிவுகளிலிருந்து, வங்கி தேர்வு விளம்பரம், காலியுள்ள இடங்களுக்கான விவரங்கள் வரை எல்லாமே தினசரிகளில் வருவது நின்று போனது. அனைவருக்கும் இன்டெர்னெட் கற்றுக் கொடுத்து, எல்லா விவரங்களையும் அதன் வழியே அனுப்பி, வலை உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்து கொடுத்து, கட்டியவரின் பிரிவைக் கூட தாங்க முடியும் ஆனால் கையளவு உலகத்தைக் காட்டும் கைபேசி கொஞ்ச நாள் கூட இல்லை என்றால் வாழ்வே சூனியம் என்று நம்ப வைக்கும் வரை ஒரு நாடகம் நடத்தி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட இணை பிரியா நட்புக்குத் தான் இன்று விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் எல்லோரையும் சமமாக மதிப்பதா இல்லையா என்ற வாதத்தைத் தொடங்கி மறுபடியும் ஒர் ஏற்ற தாழ்வு நிலைக்கு வித்திட்டிருக்கிறார்கள். ஆம் இன்று பத்தி எரியும் ஒரு சூடான விவாதம் 'இணையச் சமன்' தான்.

இது ஒரு ஆதி கால வியாபார உத்தி, அதற்க்கு நாம் இன்றும் பலியாகிக் கொண்டிருப்பது தான் கொடுமை ! ஐம்பதுகளில் பலகாரக் கடைக்குப் போனால் வரவேற்று உட்கார வைத்து முதலில் ஒரு சின்ன துண்டு இனிப்பையோ அல்லது சூடாக அடுப்பிலிருந்து அப்பொழுது தான் இறக்கிய கொஞ்சம் தூள் பக்கோடாவையோ முதலில் கொடுத்து, வந்த வாடிக்கையாளர்களை தன் வசம் ருசியாக இழுத்த பின் தான் , வியாபார வலையை விரிப்பார்கள்.

இப்படித்தான் நாம் பாட்டுக்கு தேமேன்னு வரும் ஒற்றைச் சானலை வைத்துக் கொண்டு, பாதி நேரம் புரியாத ஜுனூன்களைப் பார்த்துக் கொண்டு புதுமணப் பெண் போல் வெள்ளி இரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்து, ஒளிமயமான ஒலியைக் கண்டு ஜன்ம சாபல்யம் அடைந்து கொண்டிருந்தோம். அப்படிப்பட்டவர்களுக்கு பல சானல்களைக் காட்டி விளையாட்டிலுருந்து , பண வியாபாரம் வரை தொலைக் காட்சி என்றாகி இப்பொழுது ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு பொட்டிகளுடன் அறு நூறு ரூபாய் வரை கொடுக்க வைத்து விட்டார்கள்.

அந்தக் கால திரிவைகளை நகர்த்தி, தோய்க்கும் கற்களை காணாமல் போகச் செய்து,  மிக்ஸிகளையும் , வாஷிங் மிஷினையும் கொண்டு வந்தது இந்த அவசரக் கால அனைவருக்கும் அலுவலகம் போகும் குடும்பங்களுக்கும் தேவையான ஒரு வரப் பிரசாதம் தான். ஆனால் இதிலிருந்து உருவாகும் ஒரு பெரிய மின்சாரத் தேவையை கவனிக்கத் தவறி சமாளிக்க முடியாமல் திணறும் போது  தனியார்கள் கேட்ட விலை கொடுத்தால் மின்சாரமும் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

விறகையும், மண்ணெண்ணைகளையும் தொலைத்து சமையல் வாயுவைத் திணித்து, இப்பொழுது அதை ஒரு உருளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தும் தனியாரிடம் வாங்கத் தயார் பண்ணப் பட்டிருக்கிறோம்

இப்படியாக , சும்மா இருந்தவர்களை வசதிகள் , சலுகைகள் காட்டி சொரிந்து விட்டு பின் அதற்க்கும் விலை கொடுக்கும் படி ஒரு கட்டாயத்தை நம்மை அறியாமலே நம் மேல் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்

அறுபகளில் நம் முன்னோர்கள் சொற்ப வருவாயில், குடும்பத்தை முன்னேற்ற படாத பாடு பட்டு கல்வியைக் கொடுத்து, பொருளாதார நிலையில் ஏற்றத்தை கொண்டு வந்ததை மறுபடியும் அதே நிலைக்குத் தள்ளி அந்த இருப்பவருக்கும் இல்லாதவர்களுகும் உள்ள இடைவெளியை தொடர்ந்து இருக்கச் செய்யத்தான் சில நடவடிக்கைகளோ என்று கூட தோன்றுகிறது.

பின் ஏன் இந்த பாகுபாடு?

காசு கொடுத்தால் அதிக வேகம், நிறைய தளங்களுக்கு அனுமதி. ஆனால் நான் சொல்லும், கட்டுப் படுத்தும் வலைத் தளங்களுக்கு மட்டும் தான் போக முடியும்.

காசு கொடுத்தால் தொலைகாட்சியில் நிறைய சேனல்கள், அதனால் தான் ஆயிரக் கணக்கான கோடிகளில் சூப்பர் போட்டிகளை வைத்து, பெயர் தெரியாத சானல்களில் அதைக் காட்டி, நம்மைக் காசு கொடுத்துப் பார்க்கத் தூண்டுகிறார்கள்.

காசு கொடுத்தால் சீரிய கல்வி இல்லையேல் கார்ப்பொரேஷன் பள்ளிதான். அதையும் சீர் செய்ய மாட்டோம், தரத்தை முன்னேர விட மாட்டோம்.

காசு கொடுத்தால் மருத்துவ, இஞ்சினீயரிங் கல்வியில் இடம்.

காசு கொடுத்துச் சேர்க்கும் கல்லூரிகளுக்குத் தான் கடைசி வருடத்தில் கல்லூரிக்கே வந்து பல்லைப் பிடித்துப் பார்த்து வேலை கொடுப்பார்கள். மற்றவர்கள் ?

காசு கொடுத்தால் நல்ல மருத்துவம் இல்லையேல் நலமாகாத பொது மருத்துவ கவனிப்புத் தான்

இப்படி காசு, காசு என்று எதற்கெடுத்தாலும் நோகச் செய்தால், இல்லாதவன் தளர்கிறான், தவறுகிறான்.

நம் தேவைகளை மட்டும் அடையாளம் கண்டு , தேவை இல்லாதவைகளை உணர்ந்து மலிவாகக் கொடுத்து ஆசை காட்டினாலும் உதறினால் தான் இந்த ஆதிக்கத்திலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

வண்ண மயமான , கனஉலகில் மற்றும் தோன்றிக் கொண்டிருந்த காட்சிகளை நேரிலும் விலை கொடுத்து வாங்க முடியும் என்று வியாபாரிகள் நம்மை இழுப்பதைக் கண்டு கொண்டாலே தப்ப முடியும்.

தூண்டிலில் உள்ள புழு மீனின் பசிக்கு அல்ல, மீன் பிடிப்பவனின் ருசிக்காகவே என்று உணர்ந்தால் வலையிலிருந்து தப்ப முடியும்.

இது பசியில் அலையும் மீனை விட ஆசையில் திரியும் மனிதனுக்குத் தான் அதிகம் பொருந்தும்

No comments:

Post a Comment