Saturday, April 11, 2015

மறதி

சின்ன வயசிலேயே என் அம்மாவிடம் கேட்ட கேள்வி " ஒருத்தர் இறந்த பின் , அவரை தகனம் செய்து விட்டு வந்தவுடன் ஏன் இனிப்போடு சாப்பாடு போடுகிறார்கள்".

பதில் (வந்ததாக) ஞாபகமில்லை, கேள்வி மட்டும் மனதில் தங்கி விட்டது- அடிக்கடி கேட்டுக் கொண்டதாலும் இருக்கும்.

என் உறவினர் பையன் சிறு வயதில் அகால மரணமடைந்தவுடன் அவரின் வயதான தகப்பனார் அன்று இனிப்புடன் சாப்பிட்டது, இன்னும் கண் முன் வந்து போகிறது. அது தவறா, சரியா என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால் உறுத்தியது. அதே சமயம் , அன்னாள் வழக்குகளில் இருந்த சில சம்பிரதாயங்களுக்கு எங்கோ பதில் உண்டு என்று மட்டும் உள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. அதைத் தேடுவதுதான் கடினமாக இருந்தது.

தேடும் படலத்திந் போது - ஒரு சாரார் ' அது மக்கள் எந்த விதமான உணர்ச்சிகளிலிருந்தும் சகஜ நிலைக்குத் திரும்ப வைக்கும் முயற்சி தான்' என்றனர்.

சிலர் 'வாழ்வின் இன்ப துன்பங்கள்' மாறி மாறி வருவதை உணர்த்தத்தான்' என்றனர்.

'துக்கத்தைப் போக்கி வாழ்வின் நிஜப் பக்கத்துக்கு அழைத்து வரத்தான் உடனே இனிப்பு போடுகின்றனர்" என்றார்கள்.

வந்த பேரிழப்பை மறக்க வைக்கும் முயற்சி என்றார்கள்.

கிணற்றில் விழுந்தவன் ஏறினால் விழுங்கத் தயாராக மேலே காத்திருக்கும்  புலியைக் கண்டு அஞ்சி கீழே உள்ள கொடிய பாம்பினால் இறங்கவும் முடியாமல் புல்லைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது மேலே உள்ள தேனடையிலிருந்து சொட்டிய தேனைச் சுவைத்து வாழ்க்கை எவ்வளவு இனியது என்று நினைத்ததாகச் சொன்ன கதை ஞாபகத்துக்கு வந்தது. துளி  இன்பத்தினால் கூட சூழ்ந்துள்ள அபாயங்களையும், இழப்புகளையும் நொடியில் மறக்க சாத்தியமிருப்பதாக நினைத்திக்கிறார்கள் !

சிறு குழந்தை தன் இள வயது நடவடிக்கைகளை உணராது இருப்பது மறதியாலா அல்லது முதிரும் பருவத்தாலா?.

எழுபதுகளில்  ஒரு முதிர்ந்த அரசியல்வாதி வருமான வரி கட்ட மறந்ததாகச் சொன்னார்.

சில முக்கிய காரியங்களை மறந்து நம் குடும்பத்திலும், அலுவலகத்திலும் வாங்கிக் கட்டிக் கொண்ட நேரங்கள் அனேகமாக எல்லோர் மனதிலும் வந்து போகலாம்.

இந்த மறதி - வரமா, சாபமா?

மறக்காமல் இருக்க இந்த விஞ்யான உலகில் பல உத்திகள் வந்து விட்டன. நீங்கள்  மறந்தாலும் தட்டி எழுப்ப உபகரணங்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் விஞ்யானத்தின் ஆட்சிக்கு உட்படுத்தி விட்டால் ,வாழ்க்கை ஒரு பொம்மாலாட்டமாகி விடுகிறது என்ற இன்றைய வாதத்தையும் ஒதுக்க முடியவில்லை.

சிலவற்றை மறந்தே ஆகவேண்டிய கட்டாயங்களும் இருக்கின்றன.

சமீபத்தில் படித்தது - நம் நெருங்கியவர்களின் மறைவு காலப் போக்கில்,  மொத்தமாக மறக்கப்படா விட்டாலும் நம் நினைவுகளை அந்த இழப்பிலிருந்து மறைக்கத்தான் வேண்டுமாம். தொடர்ந்து ஒருவர் அப்படிப்பட்ட சோகத்திலேயே படையப்பா, நீலாம்பரி போல்,ஆழ்ந்திருந்தால், புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் கூட உள்ளதாக சொல்லப் பட்டிருந்தது !

மறக்கவில்லையென்றால் எப்படி ஒரு நாடு நடத்தப் படும்? அனேகமாக பல பெரிய அரசியல்வாதிகளும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறார்கள். கேட்டால் அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா என்கிறார்கள். அப்படிப் பட்டவர்களை ஒதுக்குவதும் சாத்தியமாகப் படவில்லை, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குறுகிய வட்டத்துக்குள். அனேகமாக கரங்கள் இணைந்து நிற்கும் எல்லா அரசியல்வாதிகள் மேல் உள்ள  ஏதோ ஒரு கறை நம் கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இருந்தும் தேர்தல் சமயங்களில் ஒரு வித மறதி தான் நாம் அறியாமலே இவர்களுக்கு உதவுகிறது.

உறவினர்களிடையோ அல்லது நண்பர்களிடையோ இருந்த பல நாள் பகைகளும், சில காலங்கள் கடந்தால் கரைந்து விடுகிறது, தேவைப் பட்டால் மறந்தும் விடுகிறது.

பெற்றோர்களையும் சுற்றத்தையும் மனம் கவர்ந்தவருக்காக உதறி ஓடியவர்களையும் கூட பல வருடங்களுக்கப்புறம் பார்க்கும் பெற்றோர்கள் எல்லாவற்றையும் மறந்து வாரித்தான் அணைத்துக் கொள்கிறார்கள்.

அரசியலில் கட்சிகள் ஒருவருக்கொருவர் பரிமாரிக் கொண்ட நிந்தனைகள் மறந்துதான் கை கோர்க்கின்றனர், கூட்டணிகள் உருவாக்கப் படுகின்றன.

வல்லரசுகளும் அவ்வப் பொழுது தம் பகைமைகளை மறந்து உலக அமைதிக்காக கை குலுக்கிக் கொள்கிறார்கள்.

தேவைப் பட்ட பொழுது மறக்கத் தான் வேண்டி இருக்கிறது- பகைமையை, இழப்புகளை, வார்த்தைகளை, முறிந்த உறவுகளை. வாழ்வில் முன்னோக்கிச் செல்ல இந்த மறதி தேவையாக இருக்கிறது.

"மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை " என்ற கூற்றில் நிறையவே தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட நேரங்களில் இந்த மறதி ஒரு வரமாகவே உள்ளது

வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுக்காமல், வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுது அடுப்பை அணைக்காமல், சாயந்திரம் சினிமாவுக்கு அழைதுப் போவதாக நேற்று கொடுத்த வாக்குறுதிகள்  போன்ற மறதிகள் சாபமாகின்றன.

இப்படிப்பட்ட மறதிகளிலும் எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதை மறக்காமல் முடிவு செய்து கொண்டால், வாழ்வில் மறக்கப் படவேண்டிய நாட்கள் குறைவே !

No comments:

Post a Comment