Friday, June 7, 2013

ஒரு ப்ரதோஷ நாளில்

ப்ரதோஷ காலத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய் அங்கு ஈசான்ய மூலையில் ப்ரதோஷ ஸ்வாமியிடம் ஆசி வாங்கி வருவது, சில வருஷங்களாக எனக்கு வாடிக்கையாய்ப் போன சமாச்சாரம். ஆனால் எனக்குப் பலர் பல விதமான கோவில்களிலிருந்து  ப்ரதோஷ அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்கள்- குறிப்பாக சுருட்டப்பள்ளி போன்ற கோவில்கள் ப்ரதோஷத்துக்கே ப்ரசித்தி பெற்றது. அதனால் வெகு நாட்களாக ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அது " ஸ்ரீ ஜானகி டூர்ஸ்" வழியாக அமைந்தது.

நேற்று (6.6.2003), நாலு மணிக்கு எழுந்து அவசரமாகக் கிளம்பி லஸ்ஸில் உள்ள ஆபீஸ் வாசலுக்குப் போனால், காத்திருந்தது இரண்டு ஏ.ஸி வண்டிகள். ஓவ்வொத்தராகச் சேர்த்துக் கொண்டு முதல் கோவிலான "மெய்ப்பேடு" சென்றடைந்தபோது மணி 10. பழைய கோவில், யாருமே இல்லை, வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இளம் குருக்கள், 'எனக்கென்ன தெரியும்' என்பது போல் பார்த்து, தீபாராதனை காட்டி அனுப்பினார். ஆமாம் பாவம் அவர் என்ன "கஸ்டமர் சர்வீஸ்" பற்றிய பயிற்ச்சியா எடுத்திருக்கிறார். அங்கேயே வாசலில் ப்ரேக் ஃபாஸ்ட் முடித்துக் கொண்டு, அடுத்த ஊர் "கூவம்" பறந்தோம்.

வழியில் சில பச்சை வயல்கள், நாம் சென்னைக்கு அருகாமையில் தான் இருக்கோமா என்று சந்தேகிக்க வைத்தது. சில அக்ரஹாத்தெருக்கள், திண்ணை வீடுகளைக் கடந்தால் தெரிந்தது பெரிய கோவில். அருகில் அருமையான குளம், வற்றவே வற்றாது என்றார்கள் . இங்கிருந்து தான் சென்னை வரை வரும் கூவம் வருகிறது என்றார்கள்- எது உண்மையோ அந்த திரிபுராந்தக ஸ்வாமிக்கும், திரிபுரசுந்தரி அம்பாளுக்கும் தான் வெளிச்சம். 1921ம் வருஷத்து மணி கோவிலின் பழமையைக் காட்டினாலும், புதிதாகப் பெயின்ட் அடிக்கப் பட்ட வாகனங்கள் கோவிலுக்கு கவனிப்பார் இருப்பதைச் சொல்லியது.

அடுத்துச் சென்ற பேரம்பாக்கம் கோவில் புதிய வண்ணத்துடன், நல்ல காற்றோத்துடன் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. கோவிலின் இளம் குருக்களின் நல்ல சேவையை விட அவருடன் இருந்த குட்டிப் பையனின் சுட்டித்தனமும், அவன் எல்லோருக்கும் ப்ரசாதமும், தண்ணீரும் கொடுத்ததும், அனைவரையும் கவர்ந்தது.

அடுத்தத் தலம் - ஜலனாதீஸ்வரர் கோவில், தக்கோலம். கிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஜலனாதஈஸ்வரர் கோவிலின் சிறப்பம்சம், குரு பகவானின் அபூர்வக் கோலம். தலையை ஒரு புறம் சாய்த்து பக்தர்களின் குறையக் கேட்பதாக ஐதீகம். அங்கிருந்த குருக்கள் அனைவரையும் உட்கார வைத்து சங்கல்பம் செய்து அருமையாக பூஜை செய்தார். மெய்ப்பேடு குருக்கள் சிறுவன் இவரிடம் கொஞ்ச காலம் அப்ரெண்டிசாக இருப்பது பின்னவரின் எதிர்காலத்துக்கு நல்லது. அதென்னவோ படிப்பு, திருமணம் என்ற இரண்டு முக்கிய போஸ்டுக்களை கையில் வைத்திருப்பதாலோ என்னவோ, எல்லா குரு ஸ்தலங்களிலும் நல்ல கூட்டம்.

ஒரு நல்ல த்ருப்தியோடு புறப்பட்ட வேன்களை, திருவாலங்காடு ரயில்வே கேட் படுத்தியது. பிடிவாதமாக ஏழு வண்டியை அனுப்பிய பின்தான் எங்களுக்குப் பிரியா விடை கொடுத்தது. ஆனால் அந்த 30 நிமிடங்களில் கூட வருபவர்களுடன் நல்ல பழக முடிந்தது. அங்கு பிஸ்கட்டும், நொறுகுகளையும்  வாங்கி எல்லோருக்கும் கொடுத்த ஜானகி டூர் மக்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

திருவாலங்காடு வந்து ஒரு சின்ன அம்மன் கோவிலுக்குப் பின் ஒரு சிம்பிள் ஆனால் சுவையான மதியச் சாப்பாடு. பின் நல்ல வெயிலைப் பொருட்படுத்தாமல் சென்ற ஐந்து சபையில் ஒன்றான ரத்தின சபை திருவாலங்காடு சிவன் கோவில் அருமை. பெரிய ப்ரகாரம், உயர்ந்த மேல் கூரையினால் வந்த சில்லிப்பு வெயிலை மறக்க வைத்தது.  வெளியே வந்தால் வெயில் தாக்கிப் ப்ரகாரம் சுற்றியதில் கால்களைப் புண்ணாக்கியது.

அதற்க்குப்பின் பெய்த மழையைத்தாண்டி ஆந்திராவில் உள்ள சுருட்டப்பள்ளி வந்த போது, அங்கு நேற்றே ப்ரதோஷம் முடிந்ததால் சற்று நிதானமாக அம்மனின் மடியில் தலை வைத்து ரங்கனாதர் போன்ற கோலத்தில் படுத்திருந்த சிவ பெருமானின், அருமையான கோலத்தைப் பார்க்க முடிந்தது. அந்த ஊர் என் தாயாரை நினைவு படுத்தியது. ஒரு காலத்தில் அவர் இங்கு ஒவ்வொரு மாதமும் வருவார்.

அவசரமாக ஒரு காபிக்குப் பிறகு சென்ற "திருக்கண்டிலம்", ஒரு அருமையான கிராமம். நல்ல குளம் எங்களை வரவேற்றது. இந்த நாளின் முழு தாக்கமும் இங்கு கிடைத்தது. நாங்கள் உள்ளே நுழையும் பொழும் சிவனுக்கு அருமையான பாடல்களுடன் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு பெரியவர் சுறு சுறுப்பாக அலைந்து கொண்டிருந்தார். கேட்டபின்தான் தெரிந்தது அவருக்கு வயது 103 என்று !! பின் நடந்த ப்ர்தோஷ ஊர்வலத்தில் நானும் இரண்டாவது சுற்றுக்குத் தோள் கொடுத்தது எனக்கு எதிர் பாராமல் கிடைத்த பாக்கியம். கபாலி கோவிலில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று- அவ்வளவு போட்டி இருக்கும்.

எல்லாவற்றையும் விட சென்னைக்குத் திரும்பும் ட்ராஃபிக் தான் ரொம்பப் படுத்தியது. ஆனால் இதை சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஸ்ரீ ஜானகி டூர்ஸை பாராட்டியே ஆகவேண்டும். ஒரு தனிப்பட்ட அக்கறை, திரும்பும் பொழுது அவரவர் வீட்டுக்கு முடிந்த வரை அருகில், முடியாதவர்களுக்கு தகுந்த வழியனுப்பு, நடுவில் ஒரு வயதானவருக்கு கண்ணில் சொட்டு மருந்து போடும் அக்கறை, சக்கரை இல்லாத காபி, காரம் இல்லாத  வீட்டில் தயாரித்த உணவு, எல்லாவற்றுக்கும் மேலாக உரிமையாளர் ரமேஷ் எல்லா டூருக்கும் கூடவே வந்து, அன்பாகப் பேசுவது - இவையெல்லாம் இன்னும் இவர்களுக்கு உள்ள ஒரு நல்ல எதிர் காலத்தைக் காட்டுகிறது. அதற்க்கு அத்தனை கோவில் சிவன் களும், பெருமாள்களும் உதவுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.



3 comments:

  1. Sunanda commented on 7-June-2013 : "Sir I must say you are articles or shall I say blog? is, extraordinarily good"

    ReplyDelete
  2. Jaishree Chandrasekar commented on 08-June-2013: "Kapalee, read your blog post on the Pradosha visit. Enjoyed it. Will plan to visit these ancient temples soon btw, can u share any contact details of these organizers?"

    ReplyDelete
  3. Guruprasad commented on 08-June-2013: "Interesting article. Surprised to know you could cover up so many places in one day time.
    Pl share me the travel details, if possible"

    ReplyDelete