Sunday, May 19, 2013

அக்கரை

என்னுடைய விபரீதமான ஒரு ஆசையால், மற்றவர்களுக்கும், தமிழுக்கும் வரப்போகும் இம்சையை மறந்து, ஒரு அசட்டுத் தைரியத்தில் நான் தமிழில் வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடமாவதற்க்குள் விளையாட்டாக ஒரு இருபது தொகுப்புகளையும் எழுதி விட்டேன்.  நட்புக்கு இலக்கணமாக உள்ள என் பல நண்பர்களில் சிலர் "உனக்கு இவ்வளவு சரளமாக தமிழில் எழுத வருமா"  என்று வியந்து பாராட்டுக் கடிதமும் அனுப்பினார்கள். இதில் ஒரு தமிழ் எழுத்தாளரும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்ட ஒருவரின் பேரனும் ஆவர். பின்னவர்தான், என்பால் கொண்ட அக்கறையில் எனக்கு ஒரு வித்தியாசமான கூட்டத்திற்க்குச் செல்லுமாறு கை காட்டினார்.

என் மேலும், என் எழுத்தின் மேலும் உண்மையான அக்கறை கொண்ட ஒரு நண்பர், என் முன்னாள் மேலாளர், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் எனக்குக் காட்டிய அந்த பாதையில் சென்றபோது வந்ததுதான் "அக்கரை" கூட்டம்.

மூவரால் தொடங்கிய 'அக்கரை' - ப்ரதி மாதம் மூன்றாம் சனிக்கிழமை எளிய முறையில் கூடி எண்ணங்களைப் பரிமாரிக் கொள்ளும் ஓர் அமைப்பு. ஆங்கிலத்தில் உள்ள "Look before you leap" என்ற எச்சரிக்கையை மறந்து நானும் நேற்று அந்தக் கூட்டத்தில் ஆஜரானேன். எனக்கு சிபாரிசு செய்த நண்பர் வராததால் வெய்யில் மேலும் உரைத்தது.

என்னைத் தவிர அங்கு உள்ள அனேகரும் தமிழுக்கு அதிகம் பரிச்சயம் உள்ளவர்கள் என்று புரிந்தது. அங்கிருந்த சில ப்ரபலங்களை கண்டு கொள்ள முடியாதது  எனக்கும் எழுத்துக்கும் உள்ள இடைவெளியை பறை சாற்றியது.

மிக எளிமையாகத் தொடங்கிய கூட்டம் ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடப் பேச்சு முறையில் நன்றே நடந்தது. கூட்டம் என்னவோ தமிழில் மட்டும்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு, என் தமிழைத்  தூசு தட்டி, கொஞ்சம் சுமாராக என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

ஆனால் பேச்சுக்கள் ஜோக்குக்கும் ஹ்யூமருக்கும் உள்ள வித்தியாசத்தில் தொடங்கி, சூது கவ்விய ஐ பி எல் வரை வந்து  பின் கடைசியில் பேசிய இளைஞரின் அமெரிக்கா வாடைத்தமிழில் தங்கம் ஏன் வாங்கக்கூடாது வரை சென்ற போது ஒரு விரிவான பேச்சுத்திடல் தெரிந்தது. இடையில் வைணவ, சைவ சங்கதிகளையும் அருமையாக விளக்கியவர்களுக்குப் பிறகு வந்த பெண்மணியின் தன் இல்லாத மாமியாரை  நினைவுகூர்ந்ததில் வந்த கண்ணீரில் ஒரு நிஜம் தெரிந்தது.

இந்தியாவில் ஓடும் ஆண் பெயர் கொண்டஒரே நதி ஏன் "க்ருஷ்ணா" இல்லை என்ற விளக்கம் என் போன்ற பாமரனின் புருவங்களை மேலே இழுத்தன

ஒருவர் நாம் கோபப்படும்பொழுது ஏன் உரக்கப் பேசுகிறோம், அன்பாகப் பேசும் பொழுது ஏன் ரகசியக் குரலில் பேசுகிறோம் என்பதையும் அருமையாக விளக்கினார். லால்குடியின் மறைவுக்கிறங்கியதில் இழப்பின் பரிமாணத்தை உணர முடிந்தது.

வயிற்றுப் பசிக்கு போண்டாவுடன் அறிவுப் பசிக்கும் ஒரு கேள்வியை எல்லோருக்கும் கொடுத்து, சரியான விடைக்கு ஒரு பொற்க்கிழியையும் கொடுத்து வந்தவர்களை  உற்ச்சாகப் படுத்தினார்கள்

இப்படியாக ஒரு மணிக்குமேல் நடந்த பேச்சுக்கள் இது என்ன வகை- தமிழார்வமா, பேச்சுத்திறனை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமா என்று வியந்தபோது, அமைப்பாளர் ராணிமைந்தன் வந்து "இது ஒரு நட்பு வட்டம், நம் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்" என்று கை கூப்பி விடை கொடுத்த பொழுது, அடுத்த கூட்டம் எப்போ என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

பேச்சும், அதன் சுதந்திரமும் பல இடங்களிலும் பறிக்கப்படும் நிலையில் இப்படியும் ஒரு அக்கரையா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை

5 comments:

  1. Pirar mel ulla akkarai yaal pirandha akkaraikku ikkaraiyilirundhu (I am in Singapore now) en vanakkangal. Good initiative, I think. I am sure, it would become a good forum for free exchange of assorted views on everything under the Sun. V Rajendran

    ReplyDelete
  2. Sridhar K , May 21, 2013

    "what a pleasant surprise!! Amazing to read Kapali's piece - I wish I could be in Chennai for the AKKARAI meet; may be I will get the opportunity one day.
    Please keep me in this mail loop - looking forward to more of such gems from Kapali....and others who write so well"

    ReplyDelete
  3. Murugan , May 21, 2013
    ஐயா கபாலி அவர்களே அக்கரை சந்திப்பு எங்கே நிகழ்ந்தது என்று சொல்ல வில்லையே ! Very interesting . Please inform details of the venue for June I will try to make it! (As long as I am allowed to be an observer and not compelled to speak!) . . . .

    ReplyDelete
  4. Chidam commented on 20-May-2013:

    " Excellent!!!. Beautifully written blog about Akkarai..... I think it is time for us to claim our legitimate position in world status.... Looking forward ...."

    ReplyDelete
  5. Ramesh Gopalaswamy wrote on May 20th 2013 : "Interesting... Let me know when the next meet is... BTW this looks similar to Toastmasters that was immensely helpful..."

    ReplyDelete