Friday, May 3, 2013

சுஜாதாவைப் போன்ற ஒரு குறிஞ்சி


என்னுடைய முதல் அறிமுகம் சுஜாதா எழுத்துக்கு - 1968 என்று நினைக்கிறேன். குடும்பத்துடன் பழனிக்குப் போயிருந்த பொழுது என் அண்ணா வாங்கிய குமுதத்தில் முதல் முதலாக சுஜாதாவின் கதை படித்தேன். நைலான் கயிறு என்ற ஞாபகம்- அந்த 12 வயதிலும் என்னை சுண்டி இழுத்த வார்த்தைகள்.

அதற்க்கப்புறம் எங்கு போனாலும் சுஜாதா புத்தகத்துக்கான வேட்(கை)டை தான். திருச்சி குல தெய்வம் கோவிலுக்கு போனபின் உடனே மேய ஆரம்பிப்பது, பெரிய கடை வீதியில் உள்ள பழய புத்தகக் கடைகளுக்குத்தான். எத்தனை புத்தகங்கள் நான்கு ரூபாய்க்கெல்லாம் வாங்கி இருக்கேன். பத்து ரூபாய் தாண்டாமல் இருந்தால் அள்ளி விடுவேன். ஒரு தடவை பல கோவில்களுக்குத் தனியாய் பயணித்த போது, திருச்சியில் வாங்கிய இந்தப் புத்தகங்கள் மட்டுமே துணையாய் இருந்திருக்கு.

அந்தத் தனிப்பட்ட நடை - 'ஏறினான்' என்பதை மாடிப்படி போலவே எழுதுவது. ஒரு கதையில் திருகாணி படத்தைப் போட்டு பக்கத்தில் 'யூ' என்று போட்டதில் அந்தக் கால விடலைகளில் பலருக்கு இன்னும் புரியவில்லையாம்!

அந்த ஆல்ரௌண்ட் அறிவு - சுமார் 40 வருஷங்களுக்கு முன்னமேயே ஒரு கம்ப்யூட்டரை எப்படிப் ப்ரொக்ராம் பண்ணி தேவைப் பட்ட கதை வரவழியப்பதென்று- 30% காதல், 35% இளமை, 20% குடும்பம், 10% சண்டை என்று எழுதி அதன் அவுட்புட்டையும் தெரிவித்தார்.

 அவரின் 'கம்ப்யூட்டரே கதை சொல்லு" புத்தகத்தில் சொல்லும் சீ பீ யூ போன்ற டெக்னிகல் ஸமாச்சாரங்களின் விளக்கம் பல இன்ஸ்டிடூட்டுகளை வெட்கப் பட வைக்கும். அன்னாரின் ஃப்ளோ சார்ட்டுக்கான உதாரணத்தை நான் தொடாத  வகுப்பே இல்லை.

தொடாத சப்ஜெக்டே இல்லை எனலாம். அவர் கதையில் வரும் உதாரணங்களிலிருந்து பல சட்ட நுணுக்கங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆர்தர் ஹெயிலி, இர்விங்க் வாலஸ் போன்ற பல ப்ரபலங்கள் கையாண்ட வகையில்,  கதையில் வசந்துக்குச் கணேஷ் சொல்வது போல் படிப்பவர்களுக்கு விவரிக்கும் பாணி அருமை.

கட்டுரைகளில் அவர் அறிவின் ஆழம் இன்னும் தீர்க்கமாகத் தெரியும். அது திரைப் படங்களை விமரிசிப்பதாக இருக்கட்டும், அல்லது புத்தகங்களைப் பற்றியோ, அல்லது கதை எழுதுவது எப்படி என்பதோ எதிலும் ஒரு தீர்க்கம்.

அவரின் நகைச்சுவைதான் அவரை இன்னமும் நெருங்கிய நண்பனாக்கியது. அவரின் பையாக்குட்டி, வசந்த்தின் சவால் - ஆண்கள் செய்வதெல்லாம் பெண்களாலும் செய்ய முடியும் என்று ஒரு பெண் கதாபாத்திரம் சொன்னவுடன்... அவரின் மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்குக்காக இன்னும் பலர் காத்திருக்கிறர்களாம் !

அவரின் இருநூறு புத்தகங்கள் படித்தபின் ஒரு இறுமாப்பிலுர்ந்தேன். இன்டெர்னெட் வந்தப்புரம்தான் தெரிந்தது இன்னும் எவ்வ்வ்வளவு இருக்குன்னு.

எல்லாவற்றையும் எல்லாருக்கும் வாங்கிப் படிக்க சக்தி இருக்காது. இந்த மாபெரும் எழுத்தாளனின் பேனா இன்னும் பலருக்குக் கிட்ட, சில மலிவு விலைப் புத்தகங்களை வெளியிடலாம். ஈ புக் என்ற பெயரில் மோசமான பீ டீ ஃப் களைப் படிப்பதை விட இதைச் செய்யலாம் என்று தோன்றுகிறது

அதிசயமாக அவதரிப்பவற்றை குறிஞ்சிப் பூ பூத்தாற்ப் போல என்பார்கள். குறிஞ்சியாவது 12 வருடங்களுக்கொரு முறை கண்டிப்பாக வரும். சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் அரிய குறிஞ்சி வகை

இன்று சுஜாதாவின் பிறந்த நாள்.. இவர் தன் பிள்ளைகளுக்கு ரங்கனின் ப்ரசாதம் என்ற பெயர் வைத்தது போல், இவர் அப்பா இன்று இருந்திருந்தால் இவருக்கு "எழுத்துப் ப்ரசாத் என்று வைத்திருப்பாரோ !

 அன்னாரின் படைப்புகளை இன்று படிக்க ஆரம்பிக்கும் புதிய ரசிகர்களுக்கு பிறந்த  நாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment