Sunday, March 10, 2013

கொடிது கொடிது

கொடிது கொடிது வறுமை கொடிது என்ற ஔவையின் நினைவு வந்தது, ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி பார்க்கும் பொழுது.

தினசரிப் பற்றாக்குறையால் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் ஒரு குடும்பமே ஏறக்குறைய தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கருத்து வித்தியாசத்தால் சிறு வயதில் பெற்றோர்கள் பிரிந்ததால் தடுமாறும் குடும்பம்.

கடன் தொல்லையால் பூட்டிய தன் கடையை விட்டு ஓடி முதலாளி ஸ்தானத்திலிருந்து தினக் கூலித்தொழிலாளியான ஒருவர்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு தொல்லை.

'அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்பது போல் பலருக்கு படிக்க முடியாமல் பல தடைகள். பார்த்த பொருளை வாங்கப் போய், இந்தக் காசு இருந்தால் நாளை பால் வாங்கலாமே என்று பின் வாங்கும் சிறுமி.

உண்மையான காரணத்தையும் தன் படிக்கும் ஆவலையும் சொல்லியும் கல்விக் கடன் கொடுக்கும் வங்கி  அதிகாரியின் அலட்சியப் போக்கால் வன்முறையைக் கூட கையாள நினைத்த ஒரு மாணவன்.

பணம், பணம், பணம்..... எங்கு போனாலும் இந்த வைட்டமின் 'ப' வைத் தேடும் ஜனம். நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்? நம் முன்னோர்களும் இதை விடக் குறைவாகத்தான் சம்பாத்தித்தார்கள். நிறையக் குழந்தைகளுடன், உற்றார் உறவினருடன் பெரிய குடும்பங்களை  சமாளித்திருக்கிறார்கள்- எப்படி? நாம் எங்கு தடுமாறுகிறோம்?

நிகழ்ச்சியின் முன் பகுதியில், இன்றைய பொறாமைப் படக்கூடிய ஐ.டியில் உள்ள ஒரு தம்பதியினர் கஷ்டப் படுவதாகச் சொன்னதற்க்கு அவர்களின் காரணம் மாதத் தவணை என்று சொல்லக் கூடிய ஈ.எம்.ஐ. சிக்கனத்துக்காக நகருக்குத் தள்ளி வீடு வாங்கி அதன் முழுப் பலனை அனுபவிக்காமல், டீ.வீ, வாஷிங் மிசினுக்காக மேலும் மாதத் தவணையைக் கூட்டிக் கொண்டு, உடம்புக்கு வந்தால் கூட சமாளிக்க முடியாத அபாயகரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிலர் இப்படி. ஆனால் மற்றொரு பக்கம் நகைக் கடைகளிலும், புடவைக் கடைகளிலும்,  நக்ஷத்ர ஹோட்டல்களிலும் கூட்டத்திற்க்குக் குறைவில்லை. எப்படி வந்தது இந்த எதிர் முனைகள்?

இதில் முக்கியமான அம்சம் 'படிப்பு'. இயற்க்கையிலேயே நன்றாகப் படிப்பவனுக்குப் ப்ரச்சினைகள் குறைவு. கொஞ்சம் சுமாராகப் படிப்பவர்களுக்கு பெற்றோர்களின் வளத்தால் சரியும் அதிர்ஷ்டத்தை சரி செய்தால் பின் அவர்கள் பற்றிக் கொள்கிறார்கள். படிப்பும் இல்லாமல், ஆதரவுக் கரம் நீட்டவும் ஆளில்லாமல் இருப்பவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாக இருக்கு. எப்படியோ முட்டி மோதி படித்து வேலைக்கு வந்தால் ஓரளவு புத்திசாலித்தனமாக இருந்தால் பிழைக்க வழி உண்டு. ஆகையால், இளைஞர்களும், இளைஞிகளும் படிப்பை எக்காரணத்துக்கும் உதாசீனப் படுத்தக்கூடாது.

வேலைக்கு வந்தவுடன் கஷ்டப் பட்டு வந்த பலர் ஜாக்கிரதையாக வாழ்ந்து முன்னேறுகிறார்கள். ஆனால் இப்பொழு பலர் அகலக் கால் வைத்து மாட்டிக்கொள்கிறார்கள். மேலை நாட்டு மோகம், தேவையில்லாப் பழக்கங்கள், சுற்றத்தார் எதிர்பார்ப்பு, வரட்டு ஜம்பம் இவற்றால் உருவாகிறதுதான், இந்தத் தவணை முறைக் கூட்டம்.

இந்தக் கஷ்டங்களெயெல்லாம் சமாளிக்க கொஞ்சம் சமயோசிதம் இருந்தால் போதும். முதல் வழி திட்டமிட்டுச் செலவழிப்பது. பட்ஜெட் போடாமல் உள்ள குடும்பம் சரிவில் ப்ரேக் இல்லாமல் போகும் வண்டி போலத்தான். ஒடும் பொழுது நன்றாகத்தான் இருக்கும் ஆனால் தடங்கல் வரும் பொழுது நிலைகுலையும்.

ஒவ்வொரு செலவின் போதும் ஒரு முறை "இது தேவைதானா" என்று மனைவிடமோ, கணவனிடமோ பேசிப் பின் முடிவு செய்வது நல்லது.

ஒரு எதிர்பாராத சூழ்நிலைக்கு நாம் எந்தளவுக்கு தயாராக உள்ளோம் என்பதை ஒவ்வொரு மாதமும் ஆராய வேண்டும்.

கேளிக்கை, ஆடம்பரம், மகிழ்ச்சி எல்லாம் தேவைதான்- ஆனால் விரலுக்குத் தகுந்த வீக்கம் புரையோடாமல் காக்கும்.

ப்ளாஸ்டிக்கைத் தவிருங்கள்- ஆம் முடிந்தால் க்ரெடிட் கார்டே வைத்துக் கொள்ளாதீர்கள். அதை எப்படி நமக்குச் சாதகமாக உபயோகப்படுத்துவது என்று தெரியாதவர்கள், இதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் வருமானத்தில் குழந்தைகள் படிப்பு, பெரியவர்கள் பராமரிப்பு, மருத்துவச் செலவுகள், பிற்க்காலப் பராமரிப்பு இவையெல்லாம் இல்லையென்றால், எச்சரிக்கையாக இருங்கள்- உங்கள் நீர்க் குமிழி வாழ்க்கையை நினைத்து.

எவ்வளவுதான் யோசித்து, நிதானமாகக் குடும்பம் நடத்தினாலும் எதிர்பாராத செலவுகள் வரத்தான் செய்யும். ஆனால் இப்படி ஜாக்கிரதையாக இருந்தால் அதைச் சமாளிப்பதற்க்கான தைரியம் தானாக வரும்.

ஒன்று நிச்சயம்- நம் முன்னோர்களுக்கு இதை விடப் ப்ரச்சினைகளும், இப்பொழுதை விட அதை சமாளிக்கக் கூடிய சக்திகளும் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் இதற்க்காக யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை!

இந்தத் தேடல் எல்லா மனிதனுக்கும் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களான டாட்டா, பிர்லா போன்றவர்கள் கூட இதைதான் தேடுகிறார்கள், சாதாரண மனிதனும் இதைத்தான்  நாடுகிறான். சிலர் தக்க வைத்துக் கொள்ளப் பாடு படுகிறார்கள். சிலர் வாழ இதைத் தேடுகிறார்கள். உங்கள் கொள்கை, புத்திசாலித்தனம், சாமர்த்தியம், நட்பு, வளர்ப்பு ஆகியவை முடிவு செய்கின்றன  நீங்கள் தேடுபவரா அல்லது அதை வைத்துகொண்டு ஓடுபவரா என்பது.

இந்த மன வருத்தத்திலும், ஒரு வெளிச்சம். பல சௌகர்யங்கள் இருந்தும், எனக்கு வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்று அனத்துபவர்களுக்கு இது ஒரு விழிப்பை ஏற்ப்படுத்தட்டும்- உங்களுக்குக் கீழே எத்தனையோ கோடி. உள்ளதை வைத்து த்ருப்தியாக இருக்கவும்

No comments:

Post a Comment