Monday, March 4, 2013

விதண்டாவாதம்

ஒவ்வொரு நாளும் , தினந்தோறும் சில சூடான செய்திகள், ஹோட்டல் மெனு போல. இவை இல்லாவிட்டால் பத்திரிகைகள் இல்லை. சிலருக்கு பத்திரிகை இல்லாத நாட்கள்  உதயமாவதே இல்லை. அப்படிப் பலப் பல செய்திகள் தோன்றிக்கொண்டே இருக்கும் இன்னாட்களில், மிதமான சூட்டுடன் தினமும் பரிமாரப்படும் ஒன்று தான் ஒரு மூத்த காந்தியவாதியின் உண்ணா நோன்பு- எதற்க்காக- தனக்கு ஓய்வூதியம் அதிகப்படுத்துபதற்க்காகவோ , முதியவர்களின் சலுகைகளைக் மேலும் கூட்டுவதற்க்காகவோ அல்ல. இக்கால இளைஞர்களின் நலனுக்காக. குடி என்ற ஒரு கொடிய, ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விரும்பி வாங்கித் தக்க வைத்துக் கொண்ட ஒரு பழக்கத்துக்கு எதிராக. அதற்க்கு அரசின் ஆதரவை விலக்கிக் கொள்ள.

எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். அதில் எனக்கு நாட்டமும் இல்லை. அதைச் சாக்கடை என்று நினைக்கவுமில்லை, அப்படி இருந்தாலும் அதைக் கழுவி சுத்தம் செய்ய மனமுமில்லை. காசுக்குச் செய்ய பலர் இருக்க, அவர்களின் பிழைப்பில் மண் போட விருப்பமுமில்லை.

ஆனால் குடிக்கு எதிரான குரல் அரசியலில்லை. இது ஒரு சமூக விழிப்புணர்வு. அவ்வளவு தான். அதையும் மீறி இது குடும்ப நலனுக்காக என்று நினைப்பதால், இந்தப் போரட்டத்தின்பால், என் மனம் இழுக்கப்பட்டது. பல முறை இதிலும், என் மற்ற வலைப் பூக்களிலும் இதைப் பற்றி என் கருத்தை  எழுதி இருக்கிறேன்- திரும்பச் சொல்ல விழயவில்லை.

ஆனால் வேண்டியோ, வேண்டாதையோ, திரும்பத் திரும்ப இது என்னைத் தாக்குகிறது. தொலைக் காட்சியத் திருகினாலே, சில சேனல்களில் கும்மாளங்கள் இருந்தாலும், பல சேனல்களில் குடிபழக்கத்தைப் பற்றி, இதனால் வரும் விளைவுகளைப் பற்றிச் சொல்லி என்னை மிகவும் பயமுறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும், நல்ல வேளை நம் வீட்டில் யாரும் இல்லை என்று சமாதானம் செய்து கொண்டாலும், என் நண்பர்களைப் பற்றிக் கவலைப் படத்தான் வேண்டியிருக்கு (இல்லேன்னா நான் என்ன நண்பன்? )

பல போராட்டங்கள், பல சாலை மறியல்கள், பல கடையடைப்புப் போராட்டங்கள், பல நபர்களால்- இவற்றையெல்லாம் மீறி ஏன் இந்தப் பெரியவரின் போராட்டம் என்னைக் கவர்ந்தது? இவரிடம் சுய நலம் இல்லை, விளம்பர வேட்கை இல்லை. காசுத்தேவை இல்லை. ஒரு அரசியல்வாதியோ அல்லது அரசியல் கட்சியோ போராடினால், உடனே நமக்குத் தோன்றும் அவர்களின் ஆதாயம் இதில் கொஞ்சமுமில்லை. பின் என்னதான் இவரிடம் இருக்கு. ஒரு அக்கரை. சமூக அக்கரை. நம் வருங்கால இளைஞர்கள் மேல் அக்கரை- ஒரு கரிசனம். ஒரு தந்தையைப் போல் பாடு படுகிறார்.

மற்றுமொன்று இவர் கடைப்பிடிக்கும் காந்திய வழி. அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல், உண்மையான ஒரு உண்ணாவிரதம். 

இந்தப் பெரியவர் இப்படி ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க, ஊடகங்கள் பல பேச்சாளர்களைப் பேச வைத்து, கருத்துக்களை பரிமாறி ஒரு நல்ல சூழ் நிலையை உருவாக்கிகொண்டிருக்கிறது- அதுதான் ஊடகங்களிடம் நாம் எதிர்பார்க்கும் ஒரு சேவை கூட. ஆனால் விவாதத்தின் தேவைக்காக சிலரை ஆதரிப்பாளர்களாகவும், சிலரை எதிர்ப்பாளர்களாகவும் வைப்பது, சில நேரங்களில் விபரீதமாக முடிகிறது. உதாரணத்துக்கு, ஒரு விவாதத்தில், ப்ரபல எழுத்தாளர் ஒருவர் எதிரணியில் இருந்தார் என்பதற்க்காகவோ என்னவோ தெரியவில்லை- தன் பங்குக்கு "குடிப்பது ஒரு தனி மனிதரின் உரிமை. இதில் விவாதிப்பதற்க்கு என்ன இருக்கு" என்று ஆரம்பித்தார். உடனே எதிரணி நண்பர் "இவர் எதிரணியில் இருப்பதர்க்காகவே இப்படிப் பேசுகிறார் போலிருக்கு " என்றும் உரைத்தார்.

எது தனி மனித உரிமை, சுதந்திரம்? இவர்கள் என்ன சாப்பாடு சாப்பிடுவதையா எதிர்க்கிரார்கள்? ஒருவன் குடித்து விட்டு , அது அவரை மட்டும் தாக்கினாலே அந்தக் குடும்பத்தினர் சும்மா இருக்க முடியாது. ஏனென்றால், நம் இந்தியக் கலாச்சாரம் அப்படி. நம் குடும்பத்தில் ஒருவர் அவதிப் பட்டால், மொத்தக் குடும்பமே சேர்ந்து , ஒன்று கூடி அவரை அந்தக் கூட்டிலிருந்து விடுவிக்கும்
அக்கறை கொண்ட சமூகம். மேலை நாட்டைப் போல திருமணத்துக்குப் பின் உடனே மனைவியுடன் பிரிந்து சென்று பின் பெற்றோர்கள் தங்கள் வீட்டுக்கு வந்தால் , உறவினர் வருகையாக நினைப்பவர்கள் அல்ல. 

மேலும், குடித்து விட்டு ஒருவன் அவதிப்படும் பொழுது, அவன் குடும்பம் பொருளாதார நிலையால் பாதிக்கப் படுகின்றது.  அவன் தெரு முனையில் விழுந்து கிடக்கும் பொழுது, அவன் குடும்பத்தினர், மான ரீதியாக பாதிக்கப் படுகின்றனர். ஒருவன் குடித்து நோய்வாய்ப்பட்டு அவதிப் படும் பொழுது, அவன் குடும்பமே மன உளைச்சலால் அவதிப் படுகின்றனர்.  

இங்கு நாம் பொதுவாகக் குடிப்பவர்களைப் பற்றிப் பேசினாலும், குடிக்கும் மேல் தட்டு மக்களை விட கீழ்த்தட்டு வர்க்கம் தான் மிகுந்த அவதிக்குள்ளாகிறது. ஒரு பெரிய ஹோட்டலிலோ, கிளப்பிலோ குடித்து விட்டு ட்ரைவர் பத்திரமாகக் கொண்டு வந்து வீட்டில் விடுபவர்களைப் பற்றி அல்ல. தினக்கூலியாக நூறு  ரூபாய் வாங்கி, அதில் பெரும் பகுதியைக் குடித்து விட்டு தள்ளாடிக்கொண்டு வீடு திரும்பும்போது, உலை வைக்கக் காத்திருக்கும் மனைவி, சிறு குழந்தைகளைக் கட்டி பிடித்து அழுவார்களே- அந்தக் குடும்பங்களை நினைத்து. அது அழுகையோ, ஓலமோ அல்ல. அந்தப் பேசப்படாத வசனம் " இந்தப் பாவி இன்றும் காசு கொண்டு வரவில்லை. இன்றும் நீங்கள் பட்டினிதான்" என்று மருகும் போது.

இப்படி ஒரு பழக்கம் தேவைதானா? இதேபோல் உங்கள் மனைவியோ, மகனோ, மருமகனோ குடித்து விட்டு ரோட்டில் கிடக்கலாமா?  இதனால் உங்களுக்கு புற்று நோயோ, காச நோயோ வந்தால் குடும்பம் உங்களைக் கண்டு கொள்ளாமல் விடலாமா?  நீங்கள் மட்டும் குடும்பத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு, உங்களுக்கு நோய் வந்தபின் அவர்கள் உங்களைத் தாங்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா? அதில் என்ன நியாயம் உள்ளது?

ஆனால் என் கவலை இதை விட , இப்படிக் கூட்டம் போட்டு டீ வீயில் பேசும் இந்த அதி புத்திசாலிகளப் பற்றித்தான். இப்படியெல்லாம் பேசி சின்ன வயசுப் பசங்களைக் குழப்பி விட்டு, பின் அவர்கள் குடித்து, கண்ட சித்தாந்தங்களைப் பேசித் திரியும் போது, இந்த மேதாவிகள் காணாமல் போய்விடுகிறார்கள். டீ வீயில் பேசுபவர்களுக்கும் ஒரு சமூக பொறுப்புணர்வு தேவையில்லையா? யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசி விடலாமா? இப்படியே விட்டால் கண்டிப்பாக டீ வீக்கும் சென்சார்கள் தேவைதான்.

இன்னொரு விவாதத்தில் ஒரு குடும்பப் பெண் சொல்கிறாள் " இவர் வீட்டில் குடிப்பதோ அல்லது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பதோ பரவாயில்லை. நானே சில சமயங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் வெளியே குடிக்கக் கூடாது". நம் பெண்களும், அடக்க வேண்டிய சமயத்தில்  எப்படி வளைந்து கொடுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் !

இன்று உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் பாட்டில்களைப் பார்க்கும் உங்கள் மகனுக்கு பின்னால் உங்களுக்கு ஞானோதயமோ, வியாதியோ வந்த பிறகு எப்படிப் புரிய வைக்கப் போகிரீர்கள் இது தப்பு என்று. 


முடிவாக இதே டீ வீயில் மக்களரங்கத்தில் கேட்ட இன்னொரு பெண்ணின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகிறது - " எது தப்பு? நீங்கள் தனியாகச் செய்யும் எந்த ஒரு காரியத்தை  நாலு பேர் முன் செய்யத் தயங்கிகுறீர்களோ, அது தான் தப்பு".  இதற்க்கு விவாத மேடையும், அரை குறை அறிவு ஜீவிகளும் தேவையில்லை. இது உங்கள் வாழ்க்கை, நீங்களே புரிந்து, முடிவெடுத்துக் கொள்ளுங்கள்



No comments:

Post a Comment