Monday, January 28, 2013

என் பார்வையில் 'கும்கி'


யானையின் கம்பீரத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும். அதனால் கூடிய சீக்கிரம் தூக்கி விடுவார்கள் என்று சொன்னதால் இன்று வலுக்கட்டாயமாக சத்யம் தியேட்டரில் கும்கி படம் பார்த்தேன். எதிர் பார்த்தபடி யானையை வைத்து படம்- ஆனால் எதிர்பாராத விதமாக யானை ஹீரோ அல்ல.

யானை வருது வருது என்றே கதை பண்ணியிருக்கிறார்கள். சில இடங்களில், பகல், இரவு, பகல், இரவு என்று மாற்றி மாற்றி காட்டி திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் கதை  திக்குத் தெரியாமல் அலைகிறது.

ஹீரோ நண்பனுக்கு உதவ கோவில் யானையை வைத்து கண் கவர் ரம்மியமான சூழ்நிலையில் உள்ள கிராமத்துக்கு வந்து அழகிய இளம் கதாநாயகியைப் பார்க்கிறார். காட்டு மக்களின் நம்பிக்கையை ஏமாற்ற முடியாமல் காதலில் சிக்கித் திணறி, டைரக்டருடன் சேர்ந்து திசை தெரியாமல் எப்படி முடிப்பதென்று தெரியாமல் ஓடுகிறார்.

விக்ரம் ப்ரபு நல்ல உயரம், நல்ல நிறம், நடிப்புத் தேவலை. ஆனால் சில இடங்களில் தாத்தா போல் கண்களால் நடிக்க முயல்கிறார்- அதற்க்கு இது ரொம்ப சீக்கிரம். முதலில் நன்றாக நடிக்க வேண்டும். சில இடங்களில் ப்ரமை பிடித்தவர் போல் நிற்க்கிறார். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். ஹீரோயின் லக்ஷ்மி மேனன் அழகாக இருக்கிறார்-15 வயசுக்கு நடிப்பும்  பரவாயில்லை. அந்த காலத்து 'கல்லுக்குள் ஈரம்' அருணா போல் இருக்கிறார்- அவர் போல் காணாமல் போகாமல் இருக்க வேண்டும்.

இமானின் இசை பல இடங்களில் திரும்பிப் பார்க்க வைக்கிறது- சூழ்நிலைக்கேற்ப்ப இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து ரொம்ப சீக்கிரம் வருவது போல் இருந்தது. சில இடங்களில் கொஞ்சம் ஜாரிங்காகவும்  இருந்தது. ஆனால் படத்துக்குப் படம்  இமானின் இசை அழுந்த ஒரு முத்திரயை பத்தித்துக் கொண்டே முன்னேறுகிறது.

'நல்ல  நேரம்' , 'அன்னை ஓர் ஆலயம்' போல் இதில் யானைக்கு நிரைய நடிக்க வாய்ப்பு கொடுக்காமல், கேமராவை வைத்தே கண்ணை உருட்டி இருக்கிறார்கள்.

பாட்டு எடுத்த இடங்கள் அருமை. லொகேஷன் கண்டு பிடித்தவருக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம். எனக்கென்னவோ இந்தப் படத்தில் பாடல்கள், லொகேஷன் தான் ஹீரோ, ஹீரோயின் என்றே தோன்றுகிறது. அந்த அருவி உச்சியில் ஒரு காட்சி, கண்களை விட்டு அகல மறுக்கிறது. காமிராவுக்கு ஒரு முத்தம் கொடுத்தாலும் தகும்- அப்படி விளையாடி இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல் இருக்கு. ஆடுகளம் பார்த்தபின் ஏதோ நாமே கோழிச் சண்டை போட்டது போல் கையில் ரத்தப் பிசு பிசுப்பை உணர முடிந்தது. இதில் அது இல்லை- கையை பிசையத்தான் முடிந்தது. ஆனால் கடைசி யானகள் சண்டை நன்கு எடுக்கப்பட்டிருக்கிறது.

தம்பி ராமையாவின் நகைச்சுவை நன்றாகவே இருந்தது. ஆனால் கொஞ்சம் ஓவர் தொண தொண- விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.  குறைத்திருந்தால் அலுப்புத் தட்டாமல் இருந்திருக்கும் 

முடிவில் காதலை வாழ வைப்பதா, படத்துக்குப் பெயர் வைத்ததால் யானையை உயர்த்துவதா, இல்லை கொஞ்சம் மண்ணின் மணம் பாடுவதா என்று அங்குமிங்கும் அலைந்து , ஒரு குழப்பத்திலேயே நமக்கு விடை கொடுக்கிறார் .

படம் முழுவதும் யானையின் பிளிரல் கேட்டாலும், வெளியே வரும் பொழுது ஒரு நிறைவு இல்லை.

இன்னும் யோசித்திருந்தால், சிவாஜி பேரனுக்கு இன்னும் ஒரு பெரிய சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம். 

கொஞ்சம் அடி சறுக்கி இருந்தாலும் விழவில்லை  -     ஒரு முறை பார்க்கலாம். 

No comments:

Post a Comment