Monday, July 22, 2019

சிரிக்க சிந்திக்க -2019

நகைச்சுவை மன்றத்தில் சிரிக்கத்தான் முடியும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி !!

சபை ஒழுக்கம், நேரம் தவறாமை, சபை நாகரிகம் அனைத்திற்கும் கட்டியம் கூறி, மேற்கோள் காட்டியது ஹியூமர் கிளப்பின் திருவல்லிக்கேணி கிளையின் 36ம் ஆண்டு விழா - இதற்க்கு மேல் சிரிக்கவும் வைத்து திறமை வாய்ந்த சாதனையாளர்களை அழைத்துப் பேசச் சொல்லி சிந்திக்கவும் வைத்தது. 

இளம் வைஷ்ணவி சாந்தியை நிலவ விட்டவுடன் வழக்கமான கலகலப்புடன் 'No one wants to displease anyone by saying what is wrong' ,  'I is' , Pristine  போன்ற உதாரணங்களால் ராமச்சந்திரன் ஐயா சபைக்கு தன் பல வருட பேராசிரியரின்  அனுபவங்களை அடிக்கோடிட்டுக் காட்டினார்  - 'Serial Killer' மூலம் சிரிக்கவும் வைத்தார் .

ஏற்புரை நிகழ்த்திய பலரும் தான் எப்படி இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்தான் என்பதை இரத்தன சுருக்கமாக சொன்னார்கள் 

கண் மருத்துவர் விஜய் ஷங்கர் பெரிய குரலில் எப்படி பல்லாயிரம் பேர்களுக்கு தன் தந்தையின் விருப்பப் படி பார்வை கொடுத்தார் என்பதைக் கேட்க கேட்க அரங்கில் மேலும் பல கண்கள் சொட்டு மருந்து போடாமலே   விரிந்தன .

வழக்கறிஞராகவே பார்த்துப் பழக்கப்பட்ட  சுமதியின் எழுத்துத் திறன் 'கல் மண்டபம் ' என்ற புத்தகம் எழுதும் அளவுக்கு விரிந்தது என்பது பார்வையாளர்களுக்கு மற்றுமோர் ஆச்சரியம் . அன்னாரின் பல குரல் பேச்சுத் திறமையைக்  கேட்டுக் கொண்டே  'மனோரமாவின் கடைசி உரையை'  யூ டியூபில் தேட வேண்டும் என்று பலரும் குறித்துக் கொண்டனர்.

நித்யஸ்ரீ பாடுவதைப் போலவே இனிமையாகப் பேசினாலும் அவரும் மேடையில் இருந்த உன்னி கிருஷ்ணனும் ஓரிரண்டு வரிகளில் அவர்களின் குரல் வளமையைக் காட்டாதது இசை ரசிகர்களுக்கு ஏமாற்றமே 

பின் கர்ஜித்த பர்வின் சுல்தானா என்ற பெண் சிங்கம் வழக்கம் போல் தன் பரந்த அறிவினால் அனைவரையும் பிரமிக்க வைத்தார் . மருந்துக்கடை ஊழியர் எப்படி விபத்தில் சிக்கிய தன் மகனுக்கே காசில்லாமல் மருந்து கொடுக்க மறுத்ததை எண்ணி கதறிய கதையைச் சொல்லி அனைவரையும் அதிர வைத்து Contactக்கும் Connectக்கும் உள்ள வித்தியாசத்தை அருமையாகப் படம் பிடித்துக் காட்டினார்.   "உன் காரணங்களால் இறைவன் உன்னைத் தோற்கடிக்கும் பொழுது காரணங்கள் மேல் ஏன் கோபம் வருவதில்லை" என்று சிந்திக்க வைத்து , முடியவில்லை என்றால் 'வீட்டுக்குப் போய் யோசியுங்கள்' என்று கூறி வீட்டுப் பாடமும் கொடுத்து அசத்தினார் 

கடைசியில், குறைந்த நேரத்துடன் பேச வந்த புலவர் இராமலிங்கம் ஸ்லாக் ஓவரில் வரும் பேட்ஸ்மன் போல் கொடுத்த நேரத்தில் விளாசியதில், வீட்டுக்குப் போக எழுந்தவர்களும் மீண்டும் அமர்ந்தனர். அதிருஷ்டம் செய்தவர்கள்தான் - இல்லையென்றால் ஒரு அருமையான சர வெடிச் சிரிப்புச் சொற்பொழிவை தவற விட்டிருப்பார்கள் . 'தண்ணீரில் அவர் மூழ்கினாலும் தமிழைக் கரை சேர்த்தவர்' என்று ஒற்றை வரியில் கண்ணதாசனுக்குப் புகழாரம் சூட்டி விட்டு சிந்திக்கவும் வைத்தார் . இதைக் கேட்டபின் மறுபடியும் பேராசிரியர் ராமச்சந்திரனின்  'சென்னையில் தண்ணி தாராளமாகத்தான் கிடைக்கிறது, தண்ணீர் தான் பஞ்சம்'  என்ற வார்த்தைகளை எண்ணி மீண்டும் புன்னகைக்க முடிந்தது  

சொன்னபடி சரியாக நான்கு மணிக்கு ஆரம்பித்து நாங்கள் கொடுத்த நொறுக்கு தீனி வகையறாக்களை மென்று கொண்டே நகைச்சுவையையும் ரசிக்க இதுவே சரியான நேரம் என்று சொல்லாமலேயே ஒரு புரிதலின்படி எட்டு மணிக்கு முடித்த ஒரு ஒழுங்கைப் பாராட்டியே ஆக வேண்டும் . இருந்தாலும் முன்னே பேசியவர்களின் நிதானப் பேச்சை கொஞ்சம் கட்டுப் படுத்தி பின்னவர்களுக்குப் பகிர்ந்தளித்திருந்தால், மற்றவர்கள் நேரமில்லாமல் அவதி பட்டிருக்கவும் வேண்டாம், உறுப்பினர்களின் ஏமாற்றத்தையும் குறைக்க ஏதுவாக இருந்திருக்கும் . முன்னே  பரிமாறிய பாயசத்தை அளவில்லாமல் கொடுத்ததில் பின் வரும் பதார்த்தங்களை சாப்பிட கி வா ஜ சொன்னது போல் இன்னொரு வயிறு தான் தேவை !!

ஆயிரம் நிறைகளிருந்தும் கையளவே  குறைகள் தென்பட்டாலும் சீதாராமன் , சேகரன், கண்ணன் மூவரணியின் கடுமையான உழைப்பினால் பரிமாறிய விருந்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

அதே போல் வந்த உறுப்பினர்களும் மிகுந்த பொறுமையுடன் வரிசையில் ஒழுக்கம் காட்டி நின்று நாம் நினைத்தால் எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்கலாம் என்று காண்பித்தார்கள். உன்னி கிருஷ்ணனின் 'நியாயமா இது நியாயமா , ஆண்டுக்கு ஒருமுறைதான் தெரிவது நியாயமா' என்று யப்பனை நோக்கி கேட்கும் கேள்வி, ஹியூமர் கிளப்புக்கும் சரியாகப் பொருந்தும்.

இவர்களின் பிரமிக்க வைக்கும் அறிவிப்பாகக் காட்டிய அடுத்த ஆண்டு  வருடாந்திர நிகழ்ச்சியாக அறிவித்த ஜூலை 19ம் தேதிக்கு இப்போழுதே மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது   

இவர்கள் நகைச்சுவைத் தரத்தை  சீராகத்தான்  வழங்குகிறார்கள் என்பதற்கான சாட்சி இவர்களின் 2016ம் ஆண்டின் விழாவைப் பற்றிய என் கருத்துக்களை இதைச் சொடுக்கிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்  :  சிரிக்க சிந்திக்க -2016 

6 comments:

  1. Even i need such speech
    Tell me how to enter to hear

    ReplyDelete
  2. Mr.kapli is hero of all like Rajini - in kapali film.👍
    Playing all rounder role in technology, effective English narrative by his passion towards reading.
    Now he proved in Tamil also excellent formulation of pure south side based language.God's gift a lot to him.

    ReplyDelete
  3. "Very Nice, Kapali ..." - R S Ramachandran -227-2019

    ReplyDelete
  4. "Fantastic!!! I like your thamizh blog better than your English one. Not that the latter is in anyway less interesting, but thamizh is always closer to the heart. And I totally envy how beautifully you are getting to spend your retirement life. Not everyone is fortunate and blessed like you. You are my current role model for what I want to do 10 years from now." - Ms Uthra Karthik on 22-July-2019

    ReplyDelete
  5. "I wish you with all my heart that you continue to inspire a lot of people like me😊"- Uthra Karthik - 23-Jul-2019

    ReplyDelete
  6. "Very nice. I admire ur fluency in writing Tamil." - Ms. Padmini Sundaram - 29-July-2019

    ReplyDelete